மறுநாள் திட்டமிட்டபடி ரம்யாவுடன் கிளம்பத் தயாரானாள் வேதா. இளம் பச்சை நிறத்தில் அடர் பச்சை மற்றும் சிவப்பு வண்ண நூல் வேலைப்பாடுகள் நிறைந்த சுடிதாரில் மிதமான ஒப்பனையுடன் வந்தாள். அவள் தயாராய் வரவும் ரம்யாவும் வர அம்மா அப்பாவிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினாள்.
“ஹாய் வேதா, எல்லாம் ஓகேவா” என்று உறுதிப் படுத்திக் கொண்டான் பிரகாஷ்.
“எல்லாம் ஓகே அண்ணா”
“ரிக் ஒரு அவுட்டிங் போறதுக்கெல்லாம் இவளோ சீன் போடாத. பாவம் அர்ஜுன். உன்னைக் கடத்த அவன் பட்ட பாடு?”
“அப்புறம் நீ இல்லாமலா, நீ தானே ஸ்பெஷல் இன்னைக்கு.”
“நான் ஸ்பெஷலா? ஏன்கா?”
“இல்லை, புது ஜோடின்னு சொன்னேன் ரிக்.” தான் உளறி விட்டதை ஒருவாறு சமாளித்தாள்.
“ஹேய் நீயே அவளைக் குழப்பாத. அங்க நம்ம டீம்ல இருக்கவங்க மட்டும் தான் டா. நிறைய பேர் எல்லாம் இல்லை. பயப்படாத. அர்ஜுன் இருக்கான் பார்த்துப்பான்.”
“எஸ் ரிக், அர்ஜுன் செம. யு ஆர் சோ லக்கி.” மீண்டும் மீண்டும் ரம்யா உளரத் தொடங்க பிரகாஷ் பேச்சை மாற்ற எண்ணி,
“ஏய் ரம்யா என்ன எப்பவும் அவளை ரிக் ரிக்னு சொல்ற?” அதி முக்கியக் கேள்வியைக் கேட்டான் பிரகாஷ்.
“அதுவா, இன்னும் இந்தக் காலத்துக்கு தகுந்தாப் போல மாறாம இருக்காளா. அதனால ஆதி வேதமான ரிக்கோட பேரையே இவளுக்கு வச்சுட்டேன்.” என்று விளக்கினாள் ரம்யா.
“அக்கா நீங்க நினைக்கிறது போல இது அம்மா அப்பாவுக்குப் பயம் இல்லக்கா. அவங்க சொல்றது பழைய காலப் பழக்கமா இருந்தாலும் அதுவும் எனக்கு நல்லதுன்னு நானே விரும்பி ஏத்துக்கிட்டது. இனி நீங்க ஒன்னும் கவலைப்பட வேண்டாம் க்கா. இனி எல்லாமே மாறிரும் போல.” நாணமுடன் பேசியவள் முகம் ரம்யாவைப் பார்க்க மறுத்து, வெளியுலகை ரசிக்கத் தொடங்கியது.
சிறிது இடைவெளி விட்டு ரம்யா பேச்சைத் தொடங்கினாள்.
“ரிக், கல்யாணப் புடவை எல்லாம் எடுக்கப் போனீங்களே என்ன ஆச்சு சொல்லவே இல்லை. உனக்குப் பிடிச்சதை எடுத்தியா? இல்லை அதுவும் மத்தவங்க செலெக்ஷன்தானா?”
“மத்தவங்களும் இல்லை என்னைப் பெத்தவங்களும் இல்லக்கா, எல்லாம் எனக்குப் பிடிச்சது மட்டுமே எடுத்தோம்.”
“அட, சொல்லு சொல்லு என்ன நடந்துச்சு?” ரம்யா ஆர்வமுடன் பேச விவரிக்கத் தொடங்கினாள் வேதா.
“அங்க நான் தேடுற சிவப்பு தவிர மத்த எல்லா ஷேட் சிவப்பும் இருந்ததுக்கா. அதுல பாதி சேலையைக் கட்டி வேற பார்க்கச் சொல்லிட்டாங்க. என்னால அத்தை கிட்ட அழுத்தி சொல்லவும் முடியல. அவங்களும் பொறுமையா தேடிப் பார்த்தாங்க.
ஒன்னும் செட் ஆகாம, அவங்களுக்குப் பிடிச்சதே எடுப்போமான்னு யோசிச்சேன். நல்ல வேலை கடைசியா ஆனந்தி எடுத்துக் கொடுத்தா. நான் கேட்ட கலர். அப்படியே நிச்சயப் புடவையும் எடுத்துட்டு வந்துட்டோம்.”
“சொல்லுங்க அர்ஜுன்” பதட்டமாய் அவள் சொல்லி முடிப்பதற்குள் அவன் ஒரு அறையின் முன்பு நின்று கதவைத் திறந்தான்.
“உள்ள வா வேதா.” அவள் தயங்கவும் மீண்டும் அழைத்து அவள் உள்ளே வர அறைக் கதவைத் தாழிட்டான்.
“என்ன அஜூ சொல்லுங்க” பயமா? தயக்கமா? பிரித்தறிய முடியாத குரல்.
அவள் கேள்விக்கு பதில் சொல்லும் முன் அங்கிருந்த அலமாரியிலிருந்து ஒரு பரிசுப் பையை எடுத்தது நீட்டினான்.
“என்ன பயம் உனக்கு. என் கூட வரும் போதே. இதைக் கொடுக்கத்தான் கூட்டிட்டு வந்தேன். பிரிச்சுப் பார்த்து பிடிச்சுருக்கான்னு சொல்லு.”
வேதா அந்தப் பரிசுடன் அங்கிருந்த கட்டிலில் அமர்ந்தாள்.
“என்ன இது திடீர்ன்னு கிப்ட் எல்லாம்?”
“சும்மா, நீ பிரிச்சுப் பாரு முதல்ல. பார்த்துட்டு சொல்லு.” அஜூவின் இதமான பார்வை அவள் மேல் படிந்தது. அவள் மெல்ல பையின் மேல் இருந்த வண்ணக் காகித உரையைப் பிரித்தாள். உள்ளே இருந்த பெட்டியைக் கண்டவுடன் தெரிந்தது அது அவளுக்கான உடை என.
“அஜூ, டிரஸ் இருக்கா? சேலையா?”
“பிரிச்சாத் தெரிஞ்சிடும். பாருடா.” அவனும் இலகுவாக அவள் அருகிலேயே கட்டிலில் அமர்ந்து கொண்டான்.
பிரித்துப் பார்க்க உள்ளே முழு உயர அனார்கலி வகை சல்வார். அடர் நீல நிறத்தில் சிவப்பு நிற அழகிய நூல் வேலைப்பாடுகள் செய்யப் பட்டிருந்தது. கண்களும் முகமும் மலர “வாவ் சூப்பர் செலெக்ஷன் உங்களுது. ரொம்ப அழகா இருக்கு. எனக்கு ரொம்ப பிடிச்ச கலர். எனக்கு ப்ளூ பிடிக்கும்ன்னு எப்படித் தெரியும் உங்களுக்கு? டிரஸ் அளவும் கரெக்ட்டா இருக்கு.” சொல்லிக் கொண்டே உடையை மெல்ல விரிக்க உள்ளே இன்னும் ஒரு சிறிய பரிசுப் பேட்டி. அதில் உடைக்குப் பொருத்தமான அணிகலன்கள் இருந்தன.
“பிடிச்சிருந்தாவா? ரொம்ப ரொம்ப அழகா இருக்கு. தாங்க் யூ” அவன் முகம் பார்த்துச் சொல்ல, முதல் தனிமையின் ரசாயன மாற்றங்கள் அவன் முகத்தில்.
அவன் முக மாற்றம் அவளின் இதயத் துடிப்பை அதிகரிக்க அவளின் வசீகரிக்கும் புன்னகையை நாணம் வெல்ல, கண்கள் மெல்லத் தாழ்ந்தன.
அவளின் உணர்வுகளை அவனும் உணர்ந்தான் போலும். மெல்ல எழுந்தான்.
“நீ இந்த டிரஸ் மாத்திக்க, நான் ரம்யாவை அனுப்பி வைக்கிறேன். இங்க நான், இதெல்லாம் சரியில்ல” கைகள் தன்போல் தலையைக் கோதிக் கொண்டன. அவனின் அவஸ்த்தை அவனின் குரலில் தெரிய, அவள் பதில் சொல்லுமுன்னே அறையை விட்டு வெளியேறி இருந்தான்.
சிறிது நேரத்தில் ரம்யாவும் வர வேதா ஆடை மாற்றிக் கொண்டாள். அதனுடன் அவன் பரிசளித்த வெள்ளைக் கற்கள் பதித்த சிறிய அட்டிகை, அதே வெள்ளை நிறக் கற்கள் பதித்த காதணிகள் அனைத்துக்கும் மேலாய் அவள் என்றுமே அணிந்திருக்கும் அவளின் அழகுப் புன்னகை இன்று இன்னும் வசீகரமாய் அழகாய் நீண்டிருந்தது.
மொத்தத்தில் அந்த அழகி இன்று அர்ஜுன் மயக்(ங்)கும் பேரழகியாய் மாறியிருந்தாள்.
மீண்டும் இருவரும் நண்பர்கள் இருக்கும் இடம் வந்தனர்.
வேதாவின் கண்கள் இயல்பாய் அர்ஜுனைத் தேட, அவனும் இவளைத்தான் பார்த்திருந்தான்.
மெல்ல இவளருகில் வந்தவன் அவள் கைகளுடன் கைகள் கோர்த்துக் கொள்ள, மங்கைக்குள் மெல்லிய மத்தாப்புக்கள்.
இருவருக்கும் பேச்சுக்கள் இல்லாத மோன நிலை. சுற்றுப்புற ஒலிகளெல்லாம் இவர்களின் செவிகளைத் தீண்டிய கணமே மரணித்திருந்தது. உலகம் வண்ணமயமாய் இவர்கள் இவருக்காக மட்டுமே ஒளிர்வதாய் ஒரு மயக்கம் இருவருக்குள்ளும்.
நேரம் மெல்லக் கரைய, அர்ஜுன் தனக்கான தருணத்திற்காகக் காத்திருந்தான். நண்பன் ஒருவன் எல்லாம் தயார் எனக் குறிப்பு சொல்லிச் சென்றான்.
வேதாவின் கைகளைப் பற்றியிருந்த அர்ஜுன் அவளிடம், “வேதா வா வெளில நம்ம ஒரு வாக் போயிட்டு வரலாம்.” என அழைத்தான்.
“இல்லடா, நம்ம மட்டும் போகலாம் வா.” காதல் மந்திரத்துக்குக் கட்டுப் படாதவர் யார்? வேதாவும் கட்டுப்படத் தொடங்கி விட்டாள்.
கைகள் கோர்த்துக் கொள்ள மெல்ல இருவரும் விடுதியின் பின்புறம் கடற்கரை நோக்கி நடக்கத் தொடங்கினர்.
அந்தி மாலை நேரம். செவ்வரியோடிய மஞ்சள் வானம். சித்திரையின் வெப்பம் தாண்டிய மெல்லிய கடற்காற்று. கடல் அலைகளின் இனிய கானம். யாரும் இல்லாத் தனிமை. மயங்கி நிற்கும் மனநிலை இருவரிடமும்.
அர்ஜுன் மெல்ல தன் இடக்கரம் கொண்டு அவளின் வலக்கரம் பற்றிக் கொண்டான். அவள் கைகளில் தெரிந்த வெப்பமே அவளின் நிலையைச் சொல்லியது.
“என்ன வேதா அமைதியா வர்ற?”
“ஹ்ம்ம் இல்ல,” ஏதோ சொல்லத் தொடங்கியவள் அப்பொழுதுதான் அந்தக் காட்சியைக் கண்டாள்.
இவர்களுக்கு வலப்புறத்தில் சிறு குடில். முக்கோண வடிவில் மூன்று குச்சிகள் ஊண்டி வெள்ளை நிற அலங்காரத் துணியால் சிறு குடில் போன்று அமைத்திருந்தனர்.
கடலை நோக்கி இருவர் மட்டுமே அமரும் அளவு இடம். கீழும் வெள்ளை நிறக் கம்பளம் விரித்து இருந்தனர். அதன் மேல் சிறிய தலையணைகள்.
ஓரிரு மெழுகுவர்த்திகள், இன்னும் சில நிமிடங்களில் அவைகளின் தங்க நிற ஒளி பன்மடங்காய்த் தெரியும்.
குடிலின் முக்கோண உச்சியில் பல வண்ணப் பூங்கொத்து.
வேதாவின் கால்கள் இயல்பாய் அதை நோக்கித் திரும்பியது. கண்கள் அந்தக் காட்சியை அருகில் காண, முகம் கேள்வியாய் அர்ஜுனைப் பார்த்தது.
“நமக்காகத்தான், எப்படியிருக்கு?” மென்குரலாய் ஒலித்தது அவன் கேள்வி.
“என்ன அஜூ இதெல்லாம்? எல்லாமே ப்ரி பிளான்ட்டா?” வார்த்தைகளில் தடுமாற்றம். அவனைப் பற்றிய கைகளில் இன்னும் அழுத்தம்.
“வேதாவுக்கு ஒரு குட்டி சர்ப்ரைஸ்.” அவள் வார்த்தைகள் இன்றி இருக்க, குடிலுக்கு அருகில் கூட்டிச் சென்றான்.
“இனி ‘வில் யூ மேரி மீ’ன்னு கேட்டா நல்லா இருக்காது. ஆனா இந்த இடம், இந்த நேரம், இந்தத் தனிமை உன் கூட இருக்க இந்த அஜூ எல்லாம் உனக்காக மட்டும் தான் வேதா.”
அவன் வலக்கரத்தில் இப்பொழுது வைரம் பதித்த மோதிரம். விழிகள் இரண்டும் உறவாட, அவள் வலக்கை விரலில் மோதிரத்தை அணிவித்தான். கூடவே சிறப்புப் பரிசாய் அவள் கைகளில் சில முத்தங்கள்.
முதல் முத்தம், ஆணின் முதல் தீண்டல். அவளின் நிலை உறை நிலையா? இல்லை உருகும் நிலையா?
“பேசமாட்டியா? பிடிக்கலையா?” குழப்பம் அவன் குரலில்.
குடிலில் அமர்ந்தனர். மெழுகுவர்த்திகள் இருந்து வந்த நறுமணம் இன்னும் அவ்விடத்தை இனிமை ஆக்கியது.
அவன் அருகில் அவள். பின்னிய கைகளுக்குப் பிரியும் எண்ணமில்லை போலும். மீண்டும் சில நிமிட மௌனம். உள்ளம் ஒருவரை உணரும் போது வார்த்தைகள் அனாவசியம் ஆகிவிடும்.
அவன் கண்கள் அவளை மட்டுமே காண அவளின் கண்களோ பொங்கிப் பெருகும் கடல் அலைகளின் மேல்.
மெல்ல மெல்லச் சூரியனின் ஒளி குறைய, இந்த நறுமணம் தரும் பொன்னொளி இருவர் உணர்வுகளையும் கடல் அலையாய் ஆர்ப்பரிக்கத் தொடங்கியது.
மெல்லிய ஒலியாய் தூரத்தில் கேட்கிறது பாடல் ஒன்று.
“சக்கரக்கட்டிக்கு என்ன யோசனை.” அவளின் முகம் பார்த்து மௌனம் கலைக்க முயல்கிறான். சிறு நெருக்கம் அவன் உடல் மொழியில்.
“எதுவுமே தோணலை. இந்த நிமிஷம் உங்களைத் தவிர. ” கண்கள் அவனில் கலக்க மெல்லிய இசையாய் அவளின் வார்த்தைகள்.
“ஆனா எனக்கு நிறைய தோணுது. சொல்லவா?”
“ஹ்ம்ம்”
“உன் ஒற்றைச் சொல் கவிதையாய்த் தெரியும் அளவு இருக்கிறது, காதல் போதை.”
“சொந்தமா இல்ல இதுவும் இலக்கியத்துல சுட்டதா?”
“இது சொந்தம் இல்ல. ஆனா சுட்டதும் இல்ல, என் தோழி பவித்ரா கிட்ட உனக்காகக் கேட்டு வாங்கினது.”
“மறுபடியும் சொல்லுங்களேன்.”
“உன் ஒற்றைச் சொல் கவிதையாய்த் தெரியும் அளவு இருக்கிறது, காதல் போதை.” நிச்சயம் இந்தக் குரலில் போதை தான்.
இருவரின் சுவாசமும் இணையும் தூரம். அவன் மூச்சின் வெப்பமே அவளைச் சுட்டுவிடும் அளவு நெருக்கம். அவள் ஏதோ மந்திரத்துக்குக் கட்டுப் பட்டவளாய் அவன் பிடியில். இடைவெளிகள் இன்னும் குறைகிறதோ? இருவர் மனதிலும். மனதில் மட்டுமா?
யாரோ இவன் யாரோ இவன் என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன் அன்பானவன்.
உன் காதலில் கரைகின்றவன் உன் பாா்வையில் உறைகின்றவன்
உன் பாதையில் நிழலாகவே வருகின்றவன்
என் கோடையில் மழையானவன் என் வாடையில் வெயிலானவன்
கண் ஜாடையில் என் தேவையை அறிவான் இவன்
எங்கே உன்னை கூட்டிச் செல்ல சொல்வாய் எந்தன் காதில் மெல்ல
என் பெண்மையும் இளைப்பாறவே உன் மாா்பிலே இடம் போதுமே
ஏன் இன்று இடைவெளி குறைகிறதே மெதுவாக இதயங்கள் இணைகிறதே
உன் கைவிரல் என் கைவிரல் கேட்கின்றதே…
எங்கோ தூரத்தில் நா. முத்து குமாரின் கற்பனையில் வந்த இந்த வரிகளுக்கு சைந்தவியும் ஜி.வி பிரகாஷ் குமாரும் உயிர் கொடுத்து உருகிக் கொண்டிருந்தனர். மெல்லிதாய் மீண்டும் மீண்டும் நிற்காது கேட்ட அந்தப் பாடலின் ஒலியில் இவர்களின் ஊனும் உணர்வுகளும் கரைந்து வழிந்த நொடிகளில், அவனின் அந்த நெருக்கம் தந்த மயக்கத்தையும் தாண்டி அவளின் உள் உணர்வுகள் விழிக்கத் தொடங்கின.
(திரைப்படம்: சாமி – பாடல்: இதுதானா இதுதானா
திரைப்படம்: உதயம் NH4 – பாடல்: யாரோ இவன் யாரோ இவன் )
இந்த அத்தியாயத்தில் இடம் பெற்ற சங்கப் பாடலுக்கான இணைய இணைப்பு, என் முகவுரையில் இடப்பட்டுள்ளது.