அர்ஜுன் வேதா திருமண நாளின் அழகிய விடியல். சுற்றம் சூழ வந்து மண்டபம் நிறைந்திருந்தது. மங்கள வாத்தியங்களின் ஒலி, அதை மிஞ்சும் மின்னும் மஞ்சள் விளக்குகளின் ஒளி, எங்கும் நிறைந்திருந்த பலவித வாசனை எனத் திருவிழாக் கோலம் பூண்டிருந்தது அந்த இடம்.
எங்களின் இல்லத்தின் தலை மகன் திருமணம் என மகிழ்ச்சி பொங்க நின்றனர் அருணாச்சலம் சாகரி தம்பதியினர். எங்களின் இன்ப துன்பத்தில் இனி இவளும் இணைந்துவிட்டாள் என ஊரார்க்குச் சொல்லும் விழா.
தங்களின் வாழ்நாள் சாதனை என தங்களின் செல்ல மகளை ஸ்வர்ணாம்பிகையாய் அலங்கரித்திருந்து அழைத்து வந்தனர் ஸ்ரீனிவாசன் சீதா தம்பதியினர். மகளின் திருமணம் அவர்களின் வாழ்வைக் கண்ணாடியாய் ஊராருக்குக் காட்டும் விழா.
மண்டபம் எங்கும் புன்னகை முகங்கள் நிறைந்திருந்தது.
அனைவரும் பார்த்துப் பிரமிப்புக் கொள்ளும் அளவிற்குச் சிறப்பான வாழ்வை என மகளுக்குத் தந்து விட்டேன் எனச் சீதாவின் மனதில் தோன்றிய பெருமை, முகத்திலும் பரவி இருந்தது.
உச்சி முதல் பாதம் வரை எனத் தங்க வைர நகைகள், உற்றார் உறவுகள் கண்டு வியக்கும் அளவுக்குச் சீர்வரிசை என சபை நிறைந்து இருக்க, சகாரியின் மனது ‘நான் நினைத்ததைப் போல் என் மகனுக்கு நல்லதொரு வாழ்வைத் தந்துவிட்டேன்’ என மகிழ்ச்சிக் கூத்தாடியது.
தான் விரும்பி வாங்கிய சிவப்பு வண்ண பட்டுடுத்தி மணப்பெண் அலங்காரத்தில் தேவதையாய் இருந்தவளை மணமேடைக்கு அழைத்து வந்தனர்.
ஆறடி ஆணழகன் அர்ஜுன் மணமகனாய் வெண் பட்டுடுத்தி அமர்ந்து அருகில் வந்த அவனின் தேவதையைப் பார்த்துப் புன்னகைத்த நொடி பொக்கிஷப் புகைப்படமாகப் பதிவாகியது.
மத்தளம் கொட்ட வரி-சங்கம் நின்று ஊத
முத்து உடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்
அன்று ஆண்டாள் கண்ட கனா; இன்று வேதா காணும் நிஜம். மத்தள மேளம் முழங்க, சுற்றம் சூழ்ந்து வாழ்த்து மழைத் தூவ இருவர் வாழ்வும் இனி ஒன்றாய் இணைந்து விட்டதாய் மங்கள நாணை இணைத்து மூன்று முடிச்சிட்டு அவளைத் தன் மனைவியாய் ஏற்றான் அர்ஜுன். சம்பிரதாய நிகழ்வுகள், சடங்குகள் என அந்தக் காலை வேலை கடகடவெனக் கரைந்திருந்தது.
களைத்து நின்ற மணமக்களை சில நிமிடமேனும் ஓய்வு வழங்க எண்ணி மணமகனின் அறையில் அமர வைத்தனர்.
“ரொம்ப டையர்டா இருக்கா வேதா?”
“இல்லங்க நான் ஓகேதான்.” பதில் கண்களைப் பார்த்துச் சொன்னாலும் அதில் வெட்கம் அப்பிக் கிடந்தது. தனியே அமர்ந்திருந்தாலும் அவர்கள் தனிமையாய் அமர்ந்திருக்கவில்லை.
“என்ன டி சக்கரக்கட்டி மரியாதை எல்லாம் நிறைய வருது.”
அவன் அப்படிக் கேட்டதும் இருவர் நினைவுகளும் நேற்றைய இரவுக்குப் பயணித்தது.
மாலை நான்கு மணிக்குத் தொடங்கிய நிகழ்வுகள். நிச்சயம் அதனுடன் திருமண வரவேற்பு என நீண்ட நேரம் நின்றிருந்தாள்.
தெரிந்த தன் உறவுகளைக் காண்பதா? இல்லைப் புது உறவைத் தர வந்தவர்களை நினைவில் கொள்வதா? இல்லை எல்லோர் பார்வையும் தன் மேல் பதிய, அது தரும் தயக்கங்களும் கூச்சங்களும் என அதை நினைப்பதா? கால்களும் சற்று நேரம் ஓய்வுக்காகக் கெஞ்சத் தொடங்கியது. அதில் மணப்பெண் அலங்காரம் அணிகலன்கள் வேறு. மிக மிக அசதியாய் இருந்தது.
வேதா எல்லாம் முடித்துத் தனதறைக்கு வந்ததும் குளித்து உடை மாற்றி வந்தாள். நல்ல வேலையாக வீட்டில் அணியும் இரவு உடை எடுத்து வந்திருந்தாள். இளமஞ்சள் நிறப் பூக்கள் வரைந்த பனியன் மற்றும் சாம்பல் நிறக் கால்சட்டை. மெல்ல மின்விசிறியின் கீழ் அமர்ந்து தலையைக் காயவைக்கத் தொடங்கினாள்.
கதவு தட்டும் ஓசை கேட்டது. எழுந்து கதவருகில் சென்றவள்
அவள் சொல்லிமுடிக்கும் முன்பே, பின்னாலிருந்து வந்திருந்தான் அர்ஜுன்.
“நீ வெயிட் பண்ணு ஜீவா இப்ப வந்துருவேன். ஆனந்தியைத் தனியா விட்டுடாத. பார்த்துக்க.” சொல்லியபடிக் கதவை மூடித் தாளிட்டு விட்டு அறைக்குள் வந்தான்.
“அஜூ என்ன இது, யாருக்காவது தெரிஞ்சா தேவை இல்லாத சீன் ஆகும்.”
“சக்கர, நாளைக்கு நமக்குக் கல்யாணம் டி.”
“ச்சு, நா என்ன சொல்றேன், நீங்க என்ன பேசுறீங்க?”
“சரி சரி டென்ஷன் ஆகாத. அப்பறம் அன்னைக்கு பீச்சுல என்னைத் தனியா விட்டுவிட்டுப் பயந்து ஓடுனியே அப்படி இன்றைக்கும் ஓடிடுவ.” சத்தமாய் சிரித்தான் அர்ஜுன்.
“அன்னைக்குக் கொஞ்சம் படபடன்னு ஆயிடுச்சு.” உளறினாள் பெண்.
“அப்ப இன்னைக்கு பட பட எல்லாம் இல்லையா?”
“இன்னைக்கு என்ன டென்ஷன், டையர்ட் மட்டும் தான். அன்னைக்கு நீங்க, அப்படிக் கிட்ட வந்து, கையில வேற … முத்தமெல்லாம் … அதனால பயந்துட்டேன்” அன்றைய நினைவின் பதட்டத்தில் மீண்டும் உளறினாள் நங்கை.
“யோசிச்சு சொல்லு டி சக்கரக்கட்டி, இன்னைக்கு எந்த பதட்டமும் இல்லையா”
“ஹையோ, நான்தான் சொல்றேனே எனக்கு இப்ப எதுவும் இல்லைன்னு. அப்புறம் ஏன் அதையே கேட்கிற அஜூ?” சொல்லி முடித்த கணம் அவனின் இறுகிய அணைப்பில் நின்றாள்.
அவன் கண்கள் அவளை மீண்டும் ஒருமுறை இன்னும் ஆழமாய் அளவிட்டது. இப்போது தான் குளித்திருப்பாள் போலும். தலையில் ஈரம் இன்னமும் மிச்சமிருக்க, அவள் மேல் வந்த சந்தன வாசம் இன்னும் இன்னும் அவளை நெருங்கத் தூண்டியது.
இடையைச் சுற்றி இருந்த கைகளில் அவளின் உடல் வெப்பம் தாக்க, வெந்து தணியக் காத்திருந்தது அவன் இளமைக் காடு.
அவன் அவஸ்தைகள் அவளைப் பற்றவில்லை போலும். அவளின் எண்ணமெல்லாம் அடுத்து என்ன செய்வானோ என்னும் ஆராய்ச்சியில் மட்டுமே. சோர்ந்து சிவந்த அவளின் கண்கள் தூக்கத்திற்கு ஏங்கியது. அவன் கை பட்டு அவள் உடல் சிலிர்க்க மறந்து உறக்கத்திற்குக் கெஞ்சியது.
“அன்னைக்கு மிஸ் பண்ணினதை இன்னைக்கு மிஸ் பண்ணாம குடுத்திடவா?” மயக்கும் குரல் அவனது.
“ப்ளீஸ் விடுங்க அஜூ” நெளிந்தாள் வேதா.
“இன்னைக்கு ஒரு நாள் மட்டும், அதுவும் உனக்காகத்தான் விடறேன். நாளைக்கு நீ என்ன செய்யிறேன்னு பார்க்கிறேன். ” மிரட்டலாய் கூறியபடி அவளை விடுவித்தான். மெல்ல நடந்து வந்தவன் அங்கிருந்த கட்டிலில் அமர்ந்து அவளையும் அருகில் அமர்த்திக் கொண்டான்.
“இப்ப என்ன பண்ணாங்க உன்னை? எதுக்கு இவளோ டென்ஷன் உனக்கு?”
“ஹையோ பாப்பா, இப்படி டென்ஷன் ஆகாம கொஞ்சம் நான் சொல்றதைக் கேளு டா. நீயா எதுவும் வேணும்ன்னு கேட்டாலும் இப்ப உன்னைத் தொந்தரவு பண்ண வரல.”
“நான்.. அதை விடுங்க, … நீங்க சொல்லுங்க” மீண்டும் உளறல்.
“உனக்கு என்ன பயம்? ஏன் இன்னைக்கு ஈவினிங்ல இருந்து பதட்டமாவே இருந்த?”
“அப்படி எல்லாம் எதுவும் இல்ல. புதுசா நிறைய ஆளுங்க, எல்லாரும் நம்மளையே பார்க்கவும் கொஞ்சம் பதட்டமாய் போச்சு.”
“அதெல்லாம் தேவையே இல்லடா. நாளைக்குக் காலையில எந்த பயமும் பதட்டமும் இல்லாம, என் சக்கர எப்பவும் போல சிரிச்ச முகமாத்தான் வரணும். இதைச் சொல்லத்தான் வந்தேன்.”
“இதை நீங்க போன்லயே சொல்லிருக்கலாமே?”
“அதுக்குள்ளே நீ தனியா இருக்கன்னு உன் தம்பி உளரீட்டானே. அப்புறம் நான் எங்க போன் பேச, நேராவே வந்துட்டேன்.” பேசியபடியே எழுந்து கொண்டான்.
“குட் நைட் டா, ஸ்வீட் ட்ரீம்ஸ்.” சொன்னவன் அவளின் முகத்தை ஒரு நொடி கைகளில் ஏந்தி நெற்றியில் முத்தமிட்டுச் சென்றிருந்தான்.
அவனின் அந்த சிறு தீண்டலுக்கு இவ்வளவு சக்தியா? அவளின் அத்தனைச் சோர்வும் பயமும் கல்யாணக் கலக்கங்களும் காணாமல் போய்விட்டன.
மீண்டும் மனதிலும் உடலிலும் இனிமை சேர, எப்போதும் புன்னகைக்கும் உதடுகள் இப்பொழுது இன்னும் நீண்டு விரிந்திருந்தது. அந்தப் புன்னகையுடன் அவளைத் தூங்கமும் தழுவியது.
நேற்றைய இரவின் இனிமையை இவர்கள் மீண்டும் ஆசை போட்ட அந்த நேரம், அறையில் சந்தித்துக் கொண்ட இன்னும் இரு ஜோடிக் கண்களுக்கும் அதே நேரத்தின் சுருள் படம் நினைவுப் பெட்டகத்தில்.
கல்யாண மேடையின் பூ அலங்காரத்தைப் மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தான் ஜீவா.
‘ஏ காத்தாடி போல ஏன்டி என்ன சுத்துற
சூ மந்திர காளி போட்டு சுத்த வைக்கிற
என்னாடி வுட்டுபுட்டா ரொம்ப பேசுற
கண்ணாடி நெஞ்சு மேல கல்ல வீசுற’
அவனின் அலைபேசி அழைக்கத் தொடங்கியது. யார் என்று பார்க்க, அர்ஜுன் அழைத்துக் கொண்டிருந்தான்.