தமிழ் வாழும் தலைநகரம், வந்தாரை வாழ வைக்கும் சென்னை மாநகரம், சூரியனின் உக்கிர தாண்டவம் தலை விரித்து ஆடும் பங்குனி மாதத்து பிற்பகல் நேரம். மின்சார ரயிலில் அமர்ந்தால் உடல் வெந்து விடும் அளவு சூடு எங்கும் வியாபித்திருந்தது. நேரமோ மதியம் இரண்டு மணியை நெருங்கிக் கொண்டிருக்க, கூட்டம் பெரிதாக இல்லை. ஒருசில பெண்கள் மட்டுமே, அவர்களும் பெரும்பாலும் நின்றிருந்தனர். ஓடிவந்து ஏறி இருக்க உடல் நனைத்த வியர்வையும் உள்ளம் கொண்ட மெல்லிய கோவமும் குறைய, கதவின் ஓரமே காற்று வாங்க நின்றிருந்தாள் வேதா. அருகில் எதோ பாடல் கசியும் ஒலி.
என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் பேரும்என்னடிஎனக்குச்சொல்லடிவிஷயம் என்னடி
நெஞ்சைத்தொட்டுப்பின்னிக் கொண்ட கண்ணன் ஊரும்என்னடிஎனக்குச்சொல்லடிவிஷயம்என்னடி
அன்பே ஓடி வா அன்பால் கூட வா ஓ பைங்கிளிநிதமும்
என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் பேரும்என்னடிஎனக்குச்சொல்லடிவிஷயம்என்னடி
ஸ்வர்ணலதாவும் எஸ்.பி. பாலசுப்ரமணியமம் பாடல் வரிகளில் லயித்து உணர்ந்து உருகிக் கொண்டிருந்தனர். வேதாவும் பாடல் வரிகளை உணரத் தொடங்கி விட்டாளோ? பற்பல எண்ணங்கள் வட்டமிட பின்னால் சாய்ந்து தேன் தென்றலாய் காற்று வந்து தீண்டும் சுகம் கூட மறந்து நின்றிருந்தாள்.
அழகாய் ஆரம்பித்துக் கனவுகளாய் விரிந்த நாள். ஆனால் அதன் சுகத்தை அனுபவிக்க விட்டார்களா? அவசர அவசரமாகப் பெண் பார்க்கவென ஆட்கள் வருவதாக அம்மா வரச்சொல்லி இருக்க, எப்படியோ தன் நிலைமையை துறைத் தலைவரிடம் சொல்லி விடுப்பு பெற்றிருந்தாள். திருமண வயது பெண்ணின் தாய் என்பதாலோ என்னவோ துறைத் தலைவரும் மறுப்பு சொல்லாது அனுமதி அளித்திருந்தார். இந்த அவசர முடிவுகள் ஏனோ வேதாவிற்கு என்றுமே இனிப்பதில்லை. அதற்காக பூமாதேவியின் பொறுமை கொண்ட ரகம் இல்லை. தீர்க்கமாக யோசித்து முடிவு செய்யும் இளம் பாவை. இருபத்தாறு வயது, திருமண சந்தையில் இவளின் பெயரும் இடம் பிடித்து சில மாதங்கள் ஆகின்றன. அளவான உயரம் திருத்தமான முகம் மாநிறம். நிறத்தை குறை என்று சொல்ல முடியாத அளவு வாடாப்புன்னகை தவழும் இதழ்கள், அவளின் அழகை இன்னும் இன்னும் மெருகூட்டும்.
மின்சார ரயிலின் கதவின் ஓரம் நின்று இருந்தவளுக்கு இன்றைய காலை நிகழ்வுகள் எல்லாம் மீண்டும் மீண்டும் மனதில் அலை அலையாய் வட்டமிட்டது. கல்லூரிக்குத் தயாராகி வந்து உணவருந்தும் நேரம்:
“வேதாம்மா ஜாதகம் ஒன்னு வந்திருக்கு டா. அம்மா நேத்து பொருத்தம் கூட பார்த்து நல்லா இருக்குன்னு சொல்றா.” என்று பேச்சைத் தொடங்கினார் அப்பா ஸ்ரீநிவாசன், அரசாங்க வங்கியில் மேலாளர். செட்டிநாட்டில் பிறந்து படித்துவளர்ந்திருந்தாலும் கடந்த பல வருடங்களாய் சென்னையை வாழ்விடமாகக் கொண்டு வாழும் ஒரு அன்பான அப்பா. ஒரு மகளும் மகனும் என அளவான இந்தக் கூட்டின் தலைவர்.
“சரிப்பா பாருங்க, உங்களுக்கு எல்லாம் ஓகேன்னா எனக்கு சொல்லுங்கப்பா. அப்புறம் நான் யோசிச்சு முடிவு சொல்றேன். ஆனா கண்டிப்பா எனக்கு பிடிச்சா தான் ஒத்துக்குவேன். நீங்க தான் உங்க சீத்தாஆஆ கிட்ட பேசணும்.” குடும்பத்தில் மூத்த பெண் இவள்தான். எல்லோரும் பொறியியல் படிப்பு என்று இருக்க இவள் கணிதத்தில் பட்டம் பெற்று இன்று, ஆவடியில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் கணித விரிவுரையாளர்.
“எனக்கும் காதுல கேக்குது டி, உனக்கு பிடிக்காம கைய கால கட்டியா நான் தள்ளி விடப்போறேன். ஜாதகம் பொருத்தமா இருக்கு. இனிமேதான் குடும்பத்தை பத்தி எல்லாம் விசாரிக்கணும். மாப்பிள்ளை வீட்டுல போட்டோ இன்னும் கொடுக்கல போல. ஆனா அழகான பையன், நல்ல குடும்பம்னு வேணி அக்கா தான் சொன்னாங்க. அவங்களுக்கு பழக்கமானவங்க போல. ஹ்ம்ம் பார்ப்போம்.” பெருமூச்சுடன் அம்மா சீதா அரசாங்கப் பள்ளி ஆசிரியையாய் இருந்தவர். உடல் நிலை ஒத்துழைக்க மறுக்க கர்பப்பை புற்றுநோயின் அறிகுறி என மருத்துவம் சொல்ல, ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறியப்பட்டதால் சிகிச்சை செய்து சரி செய்திருந்தனர். ஆனாலும் பிள்ளைகளின் பயமும் கணவரின் கவலையும் இவரையும் தொற்றிக் கொள்ள இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றிருந்தார்.
“என்னம்மா காலைலே பெருமூச்சு விட்றீங்க. வேதா கல்யாண விஷயமா?” அரைகுறையாக காதில் விழுந்த செய்திக்குச் சம்மன் இல்லாமல் ஆஜர் ஆனான் தம்பி ஜீவானந்த். சென்னையின் மிகப் பெரிய பல்கலைக்கழகத்தில் இயந்திரப் பொறியியல் இரண்டாம் ஆண்டு மாணவன்.
“டேய் ஜீவா உனக்கு காலேஜ் இல்லையா? இப்பதான் தூங்கி எழுந்து வர்ற” வேதா.
“அடியே அக்கா நான் எல்லாம் ஸ்டுடென்ட், எங்களுக்கு சில பல லீவு இருக்கும். உன்னைய மாதிரி டீச்சரம்மா இல்ல நான். நேத்து அண்ணா யூனிவர்சிட்டி கப் கிரிக்கெட் செமி பைனல் மேட்ச் போனதால இன்னைக்கு கொஞ்சம் லேட்டாப் போனால் போதும். தோத்துட்டு வந்தாத்தான் லீவு போட முடியாது. நாங்க தான் அடிச்சுத் தட்டித் தூக்கிட்டோமே. அது வேற கை, கால் எல்லாம் செமையா வலிக்குது. அம்மா, எனக்கு இன்னைக்கும் நீ செய்வியே நாத்தமா ஒரு எண்ணையைப் போட்டு மசாஜ் அது செஞ்சு விடுங்கம்மா.” ஜீவா
“என் நாட்டு மருந்தை நாத்த மருந்துன்னு சொல்லிக்கிட்டு ஏன் வரணும்?” என்றார் சீதா.
“அம்மா அம்மா அப்படி எல்லாம் சொல்லிடாதிங்க, ப்ளீஸ் ம்மா. கை கால் எல்லாம் நல்லா இருந்தாத்தான் வேதா கல்யாண வேலை எல்லாம் அப்பாவுக்கு கஷ்டம் கொடுக்காம நானே தனியா செய்ய முடியும்.”
“ஆனா ஒன்னும்மா என் கல்யாணம் எல்லாம் இப்படி ஆடம்பரமோ ஆர்ப்பாட்டமோ இல்லாம, சட்டுன்னு பொண்ணைத் தூங்கினோமா ரிஜிஸ்டர் ஆபீஸ்ல போய்க் கையெழுத்தைப் போட்டு மாலையை மாத்தினோமான்னு எளிமையா முடிச்சுடனும். சும்மா வெட்டி செலவு பண்ணக் கூடாது.” ஆருடம் சொன்னான் ஜீவா.
அவன் சொல்லி முடிக்க வானத்து தேவதைகள் எல்லாம் அவன் மேல் பூமாரி தூவி ‘தாதாஸ்த்து’ என ஆசிர்வதித்திச் சென்றன. சொல்லியவன் அறிந்து சொன்னானோ இல்லை தன வருங்காலம் இப்படித்தான் என உணர்ந்து சொல்லினானோ தெரியாது. ஆனால் அவன் சொல்லிய வார்த்தைகள் சத்தியம் என அங்கு இருந்த நால்வரும் அன்று உணரவில்லை. அதை அவர்கள் உணரும் நேரம் ஒவ்வொருவரின் மனநிலையும் ஒவ்வொரு விதமாய் மாறிப் போகும் காலத்தின் கோலத்தால்.
“நல்லா பேசக் கத்துக்கிட்ட டா ஜீவா நீ” சொன்னார் அப்பா.
“என் பேரைச் சொல்லிச் சொல்லியே நீ நல்லா என்ஜாய்ப் பண்ணு டா.”
“சரி நீ சாப்பிட்டு கிளம்பு வேதம்மா அவன் கூட வெட்டி பேச்சுப் பேசாம. அம்மா கைக்கு போட்டோ வரட்டும் அதைப் பார்த்து மத்ததெல்லாம் எல்லாம் அப்புறம் பேசிக்குவோம்.”
அவர்கள் உணவருந்த அமர்ந்த நேரத்தில் ஜீவா அம்மாவிடம் விசாரணையைத் தொடர்ந்திருந்தான். அதில் அவன் சொன்ன அர்ஜுன் என்ற பெயர் மட்டும் இவள் காதுகளைத் தீண்டி கருத்தில் பதிந்து போனது. கல்லூரிப் பேருந்தில் அமர்ந்திருந்த போதும் ஒரு சில முறை நினைவடுக்குகளில் மின்னலாய் மின்னி மறைந்தது அவளின் செவி தீண்டிய நாயகனின் நாமம். அதன் இனிமையோ இல்லை குளுமையோ இன்னும் அழகாய் விரிந்து போயின வேதாவின் செவ்விதழ்கள்.
மங்கையர் மயங்கும் மாயக் கண்ணனும் மயங்கிய பெயர் அல்லவா அர்ஜுன். பாவம், பருவம் வந்த பவள மங்கையின் மனதை மயக்க எத்தனை மணித்துளிகள் ஆகும் அவனுக்கு? காதில் விழுந்ததும் கருத்தில் பதிந்து கண்ணிமைக்கும் நேரத்தில் கடத்தி விட்டான் கல்யாணக் கனவுகளை.
இந்த இனிமை எல்லாம் மதியம் அவளின் கைபேசி சிணுங்கும் வரையில் தான். திடீரென மதியம் உணவு இடைவேளையில் அம்மாவிடமிருந்து அழைப்பு. தேவையில்லாமல் அழைத்து விசாரிக்கும் அம்மா அல்ல. காரணங்கள் இல்லையெனில் நலம் விசாரிக்கும் அழைப்புகள் எல்லாம் அவரிடத்தில் இராது.
“ஹலோ அம்மா என்னமா இந்த நேரத்துல போன்?
“வேதா காலைல ஒரு ஜாதகம் வந்துருக்குன்னு சொன்னேல்ல அவங்க இன்னைக்கு சாயங்காலம் பொண்ணு பார்க்க வரவான்னு கேக்குறாங்க டா. மதியத்துக்கு உன்னால லீவு போட்டு வர முடியுமா?”
“என்னம்மா விளையாடறிங்களா? பாதில என்ன சொல்லி லீவு போட? திடீர்ன்னு இப்ப என்னம்மா அவசரம். காலைல கூட நீங்க பெருசா ஒன்னும் சொல்லலையே?”
“வேணி அக்கா அவங்ககிட்ட ஜாதகம் பொருத்தமா இருக்குன்னு சொல்லி போட்டோ கேட்டுருப்பாங்க போல, அவங்க பொண்ணு வீட்ல இருக்கா இன்னைக்கு ராத்திரி மறுபடி பெங்களூருக்குப் போயிருவா. அதனால போட்டோவை எடுத்துட்டு நேர்லயே பொண்ணு பார்க்க வரவான்னு கேட்டாங்க போல டா. அதான் நான் உன்னை கேட்டு சொல்றேன்னு சொல்லியிருக்கேன். கட்டாயம் இல்ல டா. ஆனா முடிஞ்சா கேட்டுட்டு வரப் பாறேன்.”
அர்ஜுன் என்ற பெயரின் மந்திரமோ அல்ல இதுதான் அவளின் வாழ்வின் வழியோ, ஏதோ ஒன்று அவளை “சரிம்மா கேட்டுட்டு வர்றேன். அப்படி வர முடியலைன்னாலும் கூப்பிட்டு சொல்றேன். ஆனா இதெல்லாம் ரொம்ப ஓவர் ம்மா. இப்படி மதிய நேரத்துல என்னைப் பொண்ணு பார்க்கன்னு லீவு போட்டுட்டு வர சொல்லுறது. இன்னைக்கு இல்லாட்டி இன்னொரு நாள் பாக்கலாம் தானே? எரிச்சல் வருது உங்களோட”
“என்ன ரிக் என்ன கடுப்பா பேசிட்டு இருந்த அம்மாகிட்ட? எதுவும் ஸ்பெஷல் நியூஸா?” ரம்யா அக்கா. வேதாவைவிட இரண்டு வயது மூத்தவள் என்றாலும் பணியிடத்தில் நல்ல தோழி.
“அக்கா பொண்ணு பார்க்க வராங்க இப்பவே வான்னு சொல்லுராங்கக்கா. என்ன ப்ளானிங்கோ, ஒன்னும் சரியில்ல.”
“சொல்லவே இல்ல ரிக் நீ. மாப்பிள்ளை எந்த ஊரு என்ன செய்யிறார்?”
கேள்வி வந்த அந்த நொடி மனதிற்குத் தெரியுமே அவனது பெயர் மட்டும். அர்ஜுன் என்று சத்தமாய் உச்சரிக்கத் தடை என்ன? வெட்கமா? இது என்ன, இத்தனை ஆண்டுகளாய் உணராத புது உணர்வு. ஒருவேளை இவன் தானா? மனம் மயக்கும் என் மணாளன். கண்கள் இன்னும் காணாத ஒருவன். அவன் என்னைக் கண்டிருப்பானா? எண்ணங்கள் பின்னிடமனம் சிந்திக்க வந்த வார்த்தைகளை மாற்றி வேறு பதில் சொல்லத் தொடங்கினாள்.
“எனக்கும் எதுவும் தெரியாதுக்கா, காலைல தான் அப்பா முதல் தடவையா என்கிட்ட ஒரு மாப்பிளை சொல்லிருக்காங்கன்னே சொன்னாங்க. இதுக்கு முன்ன எல்லாம் மாப்பிள்ளை பேச்சு அம்மா அப்பாக்குள்ளயே முடிஞ்சிடும். இப்பதானே என் வரைக்கும் வருதுன்னு நெனச்சேன். அதுக்குள்ளே இப்ப பொண்ணு பாக்கணும்ன்னு சொல்றாங்க.”
“ரிக் போய் நம்ம தலைகிட்ட பேசிப்பாரு. இனி உனக்கு கிளாஸ் கூட இல்ல தானே. கண்டிப்பா விடுவாங்க. சிலதெல்லாம் நம்ம ப்ளானிங்ல நடக்காது.”
“அது தான் அக்கா எனக்கும் கொஞ்சம் கோவமா வருது.”
“ஹா ஹா ஹா, வேதாக்கு கோவமா? பார்க்க அப்படி எதுவும் தெரியலையே ? சின்ன சின்ன வெக்கமில்ல என் கண்ணுக்குத் தெரியுது. கூடவே டன் டன்னா கனவும்.”
“அக்கா” சிணுங்கினாள் சின்னவள்.
“ஹ்ம்ம் எங்க வேதத்தை விளங்கிக்க ஆள் வரப்போறாரு”
“இனி காலேஜ் பஸ் கூட இருக்காது, ட்ரைன்லதான் நான் போகணும்” நொந்து கொண்டாள் வேதா, ரம்யாவின் கிண்டலை ஒதுக்கி.
“இதெல்லாம் ஒன்னும் இல்ல, நீ போ போய் மேம்கிட்ட சொல்லிட்டு கிளம்பு”
பெருமூச்சுடனும் ஏன் இந்த அவசரம் என்ற மெல்லிய கோவத்துடனும் சென்றவள் அனுமதி பெற்று ஆட்டோ ஏறி பின் ஓட்டமும் நடையுமாய் ரயில் நிலையம் வர, வண்டி சரியாக நடைபாதையில் வந்து நின்றது. ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் வேகம், ஓடி வந்து ஏறி இருந்தாள் வேதா. வியர்வை வழிய மூச்சு முட்ட மீண்டும் கோபம் மெல்ல தலை தூக்கியது.
யோசனைகளில் மூழ்கிப்போனதில் அப்போதுதான் தான் வருவதை அம்மாவிற்கு அழைத்துச் சொல்லாதது நினைவுக்கு வர கைபேசியில் அழைத்தாள் அம்மாவிற்கு.
“இல்லம்மா ஆட்டோல வந்து இப்ப ஆவடில ட்ரெயின் ஏறிட்டேன். இன்னும் கால் மணி நேரத்துல வீட்ல இருப்பேன்.”
“ஏன் வேதா ட்ரைன்ல வர்ற? கொளுத்துற வெயில்ல. ஆட்டோலே வீடு வரைக்கும் வர வேண்டியது தானே. ஆனாலும் உங்கப்பாவை விட நீ கொஞ்சம் கஞ்சந்தான் டி. முகமெல்லாம் சோர்ந்து இருந்தா பொண்ணு பார்க்கும் போது நல்லவா இருக்கும்? அங்க இருந்து கிளம்பும் போதே சொல்லி இருந்தா ஆட்டோல வான்னு சொல்லியிருப்பேன் இல்ல. பாதி தூரம் வந்துட்டு சொல்ற.”
“அம்மா, என்னம்மா உங்க பிரச்சனை? நான் வேணும்ன்னா இப்படியே திரும்பி போயிடவா?”
“எதுக்குடி உனக்கு இவ்வளவு கோவம் வருது. நான் தான் முடியலைன்னா வர வேண்டாம் நான் பார்த்துக்கிறேன்னு சொன்னேனில்ல. இப்ப கிளம்பி வந்துட்டு ஏன் என் மேல கோவப்பட்ற?? “
“இந்த சூட்டுக்கு இன்னும் கடுப்பு வருதும்மா. சரி வைங்க சீக்கிரம் வந்துருவேன். வேற எதுவும் வேணுமாம்மா?”
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நீ பார்த்து கவனமா வீட்டுக்கு வா”
கைபேசியை நிறுத்தியிருந்தார் சீதா.
“ச்ச வீட்ல பூ இருக்காது, வாங்கீட்டு வாடின்னு இந்த அம்மா சொல்லுவாங்கன்னு பார்த்தா ஒன்னும் சொல்லாம வச்சுட்டாங்க.”
இன்னும் ஒரு துளி கோபம் ஏறியது. ஆனாலும் இதெல்லாம் ஏன்? இந்த கோபம் தேவையற்றது. இந்தப் பயணம் கூட அவள் நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம். ஆனாலும் வீட்டிற்கு வருகிறாள். அதிலும் பூ வாங்கச் சொல்லாதது வேறு குறையாய் போனது வேதாவிற்கு. நிதானமாய் அவளின் இயல்பிலிருந்து யோசித்தால், தானும் இந்த சூழலில் விரும்பி மாட்டிக் கொள்ளும் விஷயம் விளங்கி இருக்கும். மனம் சிந்திக்க மறக்க, கோபமாய் தன்னை வெளிப்படுத்த முயல்கிறாள் மங்கை.
ஒரு வழியாக அம்பத்தூர் நிறுத்தத்தில் இறங்கி மறக்காமல் பூவும் வாங்கிக்கொண்டு வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தாள். இன்னமும் மனம் தெளியவில்லை. ஏன் இந்த அவசரம் என்ற கேள்வியோடு அர்ஜுன் நாமம் மீண்டும் மீண்டும் காதில் ஒலிக்க, பொசுக்கும் வெயில் கூட பனி சிந்தும் மேகமாய் மாற ஏதோ ஒரு இதமான கனவுகள் சூழ நீண்டு விரிந்த இதழ்களுடன் வேதாவின் புது வாழ்விற்கான பயணம் தொடங்கியது.
நாமும் ஆவலுடன் அவளின் பயணத்தை காண எதிர் நோக்கிக் காத்திருப்போம்.
சேலை கட்டிப் போகும் மேகம் பார்த்தேன்
சோலைப் பூவை மாலை ஒன்று கேட்டேன்
மனதிலே மனதிலே புது அலைகள் அடித்தது
விழியிலே விழியிலே பொன்மீன்கள் துடித்தது
காதல் வருக வருக இவள் நாணம் ஒழிக ஒழிக
(பாடல் வரிகளும் படமும் கீழே
என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட – உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன்)