இருந்தும் பிரச்சனை என்று ஒன்று இருந்தால் அதற்கான தீர்வும் இருந்துதானே ஆகவேண்டும்.
அந்த தீர்வு என்ன என்பதுதான் இப்போது அவளின் யோசனையாக இருந்தது.
தன் இழப்புகளையெல்லாம் திருமணத்தின் மூலம் சரிசெய்தவனுக்கு, மேற்கொண்டு அவளையும் அவள் குடும்பத்தாரையும் காயப்படுத்துவதால் என்ன கிடைக்கபோகிறது..? என்பதுதான் இப்போது அவளுடைய கேள்வி.
“என்னை காயப்படுத்துறதால உனக்கு என்ன கிடைக்கபோகுது..?” என்று அவனிடமே கேட்டும் விட்டாள் அவள்.
தீர்வு என்னவென்று தெரிந்து விட்டால் அதற்கேற்றார் போல் அவளும் தன்னை ஆயத்தப்படுத்தி கொள்வாள் அல்லவா. அதனாலேயே அவளும் வெளிப்படையாகவே அவனிடம் கேட்டுவிட்டாள்.
“என்ன புரியலையா..?” என்று கேட்டு நக்கலாய் சிரித்தவன்,
அவள் கன்னத்தில் உருண்டு திரண்டிருந்த கண்ணீர் துளியை சிண்டுவிரலால் வழித்தெடுத்ததோடு, “என் வலிக்கான மருந்து இந்த கண்ணீரும், இந்த கண்ணீர்-ல இருக்கற வலியும்தான்.” என்றவன், பின் அவள் விழிகளை கூர்ந்து நோக்கி
“இந்த ஆதித்யதேவ் கிட்ட ஏன் வச்சிக்கிட்டோம்னு நினைச்சி நீ உயிரோட மொத்தமா உடைஞ்சி விழணும். அத பார்த்து நான் அனுஅனுவா இரசிக்கணும்.” என்று கொஞ்சமும் இரக்கமில்லாமல் சொல்லிவிட்டு அவன் செல்ல,
அவள் தான் அவன் சொன்ன வார்த்தைகள் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து வெளிவரமுடியாமல் சிலையாய் சமைந்து போய் நின்றாள்.
மின்விளக்குகளாலும், பூந்தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது அவர்களின் வரவேற்பு நடக்கும் அந்த உயர்தர திருமண மண்டம்.
திரைப்பிரபலங்கள் அனைவரும் வருகை புரிந்த வண்ணம் இருக்க, மேடையில் நின்றவாறே அவர்களையெல்லாம் பார்த்து இருகரம் கூப்பி தேவ் வரவேற்றுகொண்டிருக்க அப்போதுதான் மேடைக்கு வந்து சேர்ந்திருந்தாள் அத்ரித்தா.
இருவரின் ஜோடி பொறுத்தத்தையும் பார்த்து வந்திருந்தவர்கள் கைதட்டி ஆரவார சத்தம் எழுப்ப, யாரையும் பார்க்க பிடிக்காமல் தலை குனிந்துகொண்டாள் அவள்.
பின் “வந்திருக்கிறவங்களுக்கு வணக்கம் சொல்லு” என்று அவளுக்கு மட்டும் அவன் கேட்கும் படி சொல்ல,
இரு கரம் கூப்பி தலையை நிமிர்ந்தியவளுக்கோ தன் கண்களையே நம்ப முடியவில்லை, முன்னிருக்கையில் வரிசையாக நிமிர்ந்து அமர்ந்திருந்த சோமசுந்தரம், ஆத்மன் மற்றும் இனியனை பார்த்து.
விழிகள் கலங்க “அப்பா…” என்று சத்தமில்லாமல் அவள் இதழ்கள் முனுமுனுக்க, சோமசுந்தரமோ பதிலுக்கு மகளை பார்த்து புன்னகை புரிந்தாரே தவிர வேறெதுவும் பேசவுமில்லை அங்கிருந்து எழவும் இல்லை.
மூவருக்கும் என்ன ஆனதோ என்று காலை முதல் தலையை பிய்த்துகொண்டவளுக்கு இப்போதுதான் மனம் சற்று ஆறுதல் அடைந்தது அவர்கள் மூவரையும் பார்த்த பின்.
அவர்கள் மூவரையும் பார்த்தபின்னால்தான் அவளுக்குள்ளும் ஒருவித தெளிவு பிறந்தது.
பேசாமல் அவன் பற்றிய உண்மையை இப்போது அனைவரிடமும் சொல்லிவிட்டால்தான் என்ன..? என்று கூட தோன்றியது அவளுக்கு.
அவர்கள் மூவர் உயிருக்கும் ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயத்தினால்தானே காலையில் அவள் பிரஸிடம் உண்மையை மறைத்து பொய் சொன்னது கூட. ஆனால் இப்போதுதான் அவள் கண் முன்னிலையிலேயே மூவரும் நலமுடன் இருக்கிறார்களே. இப்போது உண்மையை சொல்ல ஏன் பயப்பட வேண்டும்.
அப்படியே உண்மையை சொல்லும் தன்னை இத்தணை பேர் முன்னிலையில் அவனால் என்ன செய்துவிடமுடியும்..? என்றெல்லாம் அவள் மூளை வேக வேகமாக கணக்கு போட்டு கொண்டிருக்க,
அதேநேரம் அவள் கழுத்தில் அணிந்திருந்த தாமரைபூ மாலையை சரிசெய்வது போல அவள் காதருகே குனிந்தவன்,
“எதாவது செய்யணும்னு நினைச்ச அவங்களுக்கு பின்னாடி இருக்கற மூணு பேரும் சத்தமே இல்லாம அந்த மூணு பேர் கதையையும் முடிச்சிடுவாங்க.” என்றவனை அதிர்ந்து பார்த்தவள் அப்போதுதான் கவனித்தாள் அவர்கள் மூவருக்கும் பின்னால் மிக நெருக்கமாக அமர்ந்திருந்த அவனின் கைகூலிகளை.
அவள் என்ன நினைத்து கொண்டிருக்கிறாள் அவனை பற்றி. யாருக்கும் எந்த விதத்திலும் சந்தேகம் வராத அளவிற்கு பார்த்து பார்த்து காய் நகர்த்துபவன் இந்த விஷயத்தில் மட்டும் எப்படி கோட்டை விடுவான் என்று அவள் நினைத்தாள்.
வந்திருப்பவர்கள் யாரும் பெண்வீட்டார் குறித்து கேள்வியெழுப்பி விட கூடாது என்பதற்காகத்தானே அவர்கள் மூவரையும் அனைவரின் பார்வைக்கும் படுமாறு அவன் அமர வைத்திருப்பது கூட.
வந்திருந்த திரைப்பிலங்கள் அனைவரும் மணமக்களை வாழ்த்தி பரிசு பொருட்களை கொடுத்து சென்ற வண்ணமாக இருக்க, மாலையும் கழுத்துமாய் அவன் அருகில் நின்றுகொண்டிருந்த அத்ரித்தாவையேதான் கலங்கிய விழிகளோடு பார்த்து கொண்டிருந்தான் இனியன்.
அவள் வேண்டுமானால் அவனை காதலிக்காமலேயே இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருக்கலாம். ஆனால் இனியன் அப்படி இல்லையே.
என்று அவளை பார்த்தானோ அன்று முதலே அவளை அவன் மானசீகமாக காதலித்து வந்தான்தான்.
அதனால் தானே காதலை சொல்லாமல் எடுத்த எடுப்பிலேயே நேரிடையாக அவளிடம் அவன் திருமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டது கூட.
தான் மனதார காதலித்த பெண் வேறொருவனுக்கு மனைவியாகி இருப்பதை மனதில் வலிகளோடு பார்த்து கொண்டிருந்தான் இனியன்.
பார்த்து கொண்டிருப்பதை தவிர வேறென்ன செய்ய முடியும் அவனால்..? வேறெதுவும் செய்ய முடியாத அளவிற்கு அவன் தான் சூழ்நிலை கைதியாய் இருக்கிறானே.
விழிகளில் வலியுடன் அவன் அவளையே பார்த்திருக்க, அத்ரித்தாவின் பார்வையும் அவ்வப்போது அவன் மீது படிந்தவாறு இருக்க, அதையும் குறித்து வைத்து கொண்டான்தான் தேவ்.
ஒரு பக்கம் ஆட்டம், பாட்டம், டீ.ஜே என்று வரவேற்பு விழா களைகட்டி கொண்டிருக்க, வருகை புரிந்த விருந்தினர்கள் அனைவரையும் பார்த்து பார்த்து தேஜ் கவனித்து கொண்டிருக்கும் போதுதான் தருணும் அங்கு வருகை புரிந்திருந்தான்.
தருணை கவனித்த தேஜ் கண்களாலேயே தேவ்-விற்கு குறிப்பு கொடுக்க, அவனும் அவனை எதிர்கொள்ள ஆயத்தமானான்.
அவன் திருமணத்திற்கு பின்னால் இருக்கும் சூழ்ச்சிகளை கண்டுபிடிப்பதற்காக இங்கு வந்த தருணுக்கோ முதல் இருக்கையில் அமர்ந்திருந்த இனியனை பார்த்ததும் அதிர்ச்சிதான்.
“இவன் எப்படி இங்க..?” என்று தீவிரமாக யோசித்தவனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை.
பின் அவனிடம் பேச்சி கொடுத்து பார்க்கலாம் என்று நினைத்தவாறே இனியனின் அருகில் அவன் செல்ல,
அதேநேரம் “ஹாய். தருண்..” என்று சிரித்து கொண்டே கை அசைத்த தேவ்-வின் செயலால் அதிர்ந்துதான் போனான் தருண்.
அவன் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு முன்பே, “மேல வா” என்று தேவ் மீண்டும் சத்தம்போட்டு அவனை அழைக்க, அவனும் வேறு வழியின்றி மேடையேறினான்.
“வாழ்த்துகள்” என்றவாறே கையிலிருந்த கிஃப்டை தருண் நீட்ட, யாரும் எதிர்பார்க்கா வண்ணம் சட்டென்று தேவ் அவனை கட்டியணைத்து கொள்ள தருணு-க்குதான் அவன் செயல்கள் யாவும் புதிதாகவும், புதிராகவும் இருந்தது.
பிடித்தம் இல்லையென்றாலும் வேறு வழியின்றி அவனும் அவனை கட்டியணைத்து கொண்டான்.
திரைதுறையில் எலியும் பூனையுமாக இருக்கும் இவர்களின் அந்யோத்தை பார்த்த சக கலைஞர்களோ சத்தம் போட்டு கைதட்டி ஆரவாரப்படுத்த, அந்த அழகிய காட்சியை நிரூபர்களும் புகைப்படம் எடுத்து கொண்டனர்.
“எனக்கு கிஃப்ட் கொடுத்த உனக்கு நான் பதில் கிஃப்ட் கொடுக்க வேண்டாமா தருண்..?” என்று தருணில் காதில் கிசுகிசுத்தபடி அவனை விட்டு விலகிய தேவ் அவனை பார்த்து கண்சிமிட்டிவிட்டு, நேராக டி.ஜே நடக்கும் இடத்திற்கு செல்ல அனைவரின் கண்களும் அவன் மீதேதான் படிந்திருந்தது அவன் என்ன செய்ய போகிறான் என்று.
நிச்சயம் அவன் தனக்கு எதிராக ஏதோ செய்ய போகிறான் என்று புரிந்தாலும் அவன் என்ன செய்ய போகிறன் என்பதுதான் தருணி-ன் மனதிற்குள்ளும் ஓடிகொண்டிருந்தது.
காரணம் அவன் அவனுக்கு இழைத்திருக்கும் கொடுமைகள் ஏராளம். இதில் அவன் எதை மோப்பம் பிடித்து வந்திருக்கிறான் என்று நினைக்கும் போதே தருணுக்குள்ளும் லேசாக பயம் எட்டி பார்க்கத்தான் செய்தது.
யோசனையோடு மேடையிலிருந்து கீழே இறங்கிய தருணை பார்த்தவாறே டி.ஜே-விடமிருந்து மைக்கை வாங்கிய தேவ்,
“ஹலோ எவ்ரி ஒன்.. அந்த விழிப்புணர்வு வீடியோ-ல இன்னும் ஒருத்தருக்கும் முக்கிய பங்கு இருக்கு” என்று க்கு வைக்க ஒருவித பதற்றத்துடன் தேவ்-ஐயே பார்த்துக்கொண்டிருந்தான் தருண்.
அதேநேரம் அவன் பதற்றத்தை மிகைப்படுத்துவது போல தேவ் “தருண்” என்று நிறுத்த, தருணுக்கோ பயத்தில் முகத்தில் வியர்வைதுளிகள் அரும்ப ஆரம்பித்திருந்தது.
அவன் கூறியதை கேட்டு வந்திருந்த அனைவரும் தேவ்-ஐயும் தருணையுமே மாறி மாறி பார்த்திருக்க, உள்ளுக்குள் பயம் இருந்தாலும் தன்னை இயல்பாக காட்டிகொள்ள அதிகம் முயற்சித்து கொண்டிருந்தான் தருண்.
அவன் தவிப்பை உள்ளூற இரசித்தவாறே தேவ் “யெஸ்.. அந்த வீடியோ-க்கு ஸ்கிரிப்ட் எழுதனதே நம்ம தருண்தான்” என்று அந்த பிரச்சனையில் அவனையும் இழுத்து மாட்டி விட்ட, அவன் கூறியதை கேட்டு தருண் முகத்தில் ஈயாடவில்லை.
இருந்தும் அமைதி காத்தான். பின் அவனால் தனக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று கத்தவா முடியும்..? அப்படியே கத்திவிட்டால் அதன் பின் வால் பிடித்து கொண்டு வரும் பிரச்சனைகளில் அவன் தலையும் சேர்ந்துதானே உருளும். அதனாலேயே அவன் அமைதி காத்தான்.
தேவ் கூறியதை கேட்டு அனைவரும் தருணுக்கு வாழ்த்து தெரிவிக்க போலியான புன்னகையோடே அனைவரின் வாழ்த்தையும் எதிர்கொண்ட தருண்,
இனியும் இங்கிருப்பது சரியன்று என்று அங்கிருந்து நகர முற்படும் போதுதான் ஜீஸ் கிளாசுடன் அவன் வழிமறித்து நின்றான் தேஜ்.
என்ன என்பது போல தருண் அவனை முறைத்து பார்க்க, தேஜோ கையிலிருந்த ஜீஸ் கிளாசை அவன் முன் நீட்டி “ஜீஸ்” என்க,
அவனோ, “நோ நீட்” என்றான் எரிச்சல் மிகுந்த குரலில்.
“ஏன் வேண்டாம்…” என்று நிறுத்தியவன் பின் ஏதோ நினைவு வந்தவனாய் “ஓ.. உன்ன மாதிரி இதுல ஹெராயின் கலந்திருப்போம்-னு நினைக்கிறீயா..?” என்று குத்தலாக கேட்டவனை, தருண் கோவக்கனலோடு பார்த்திருக்க, அப்போதுதான் அங்கு வந்து சேர்ந்தான் தேவ்.
“என்ன தருண் ரொம்ப ஷாக் ஆகிட்ட போல..?” என்று கேட்டவாறே அவன் அருகில் வந்தவன்,
“இனி அடிக்கடி ஷாக் ஆகுவ, இப்படி” என்றவன் ஏதோ ஒரு பத்திரத்தை அவன் முன் நீட்ட,
யோசனையோடே அதை வாங்கி படித்தவனின் முகமோ கோவத்தில் கன்றி போனது.
எந்த பிரபல இயக்குனரின் படத்தில் நடிக்க வேண்டுமென்று ஆரம்ப காலத்தில் சிபாரிசு செய்ய சொல்லி தன் தந்தையிடம் சண்டையிட்டானோ, அந்த இயக்குனரின் படத்தில் நடிக்க இரண்டு வாரத்திற்கு முன் தான் அவனுக்கு அழைப்பு வந்திருந்தது.
இன்னும் இரண்டு நாட்களில் பட பூஜை என்ற நிலையில், சம்மந்தபட்டவனிடம் ஒரு வார்த்தை கூட கேட்காமல் படத்திலிருந்து அவனை நீக்கியிருந்ததோடு அவனுக்கு பதிலாக படகுழுவினர் தேவ்-ஐ ஒப்பந்தம் செய்திருக்கும் அக்ரீமெண்ட் டாக்குமெண்ட்தான் அது.
அதில் இருப்பதை பார்த்தவனுக்கோ உள்ளுக்குள் அப்படியொரு வலி.
அவன் பட வாய்ப்புகளை இவன் பிடுங்கியபோது தேவ்-விற்கும் இப்படித்தானே வலித்திருக்கும். அந்த வலியை நீயும் அனுபவிக்க வேண்டுமென்றுதான் அவன் பாணியிலேயே தேவ் அவனை திருப்பி அடித்தது.
அவனின் இறுகிய முகத்தை ஆழ்ந்து பார்த்த தேவ், “உனக்கு ஒரு குட்டி கதை சொல்லட்டுமா தருண்..?” என்று கேட்டவனை, தருண் முறைத்து பார்க்க, இதழ்களில் மென்சிரிப்புடன் தேவ்-ம் கதையை சொல்ல ஆரம்பித்திருந்தான்.
“ஒரு காட்டு-ல ஒரு திருட்டு நரி இருந்துச்சாம். அந்த நரி-க்கு சிங்கம் போல காட்டு-க்கு அரசன் ஆகணும்னு ரொம்ப நாள் ஆசை. அந்த ஆசை-அ நிறைவேத்துறதுக்காக அந்த நரியும் என்னன்னவோ பண்ணி பார்த்துச்சாம்.
ஆனா ஒரு நரி-அ அரசனா ஏத்துக்க மாட்டோம்னு மத்த காட்டுவிலங்குகள் சொன்னதால அந்த நரி என்ன பண்ணுச்சாம்… சிங்கம் மாதிரி வேஷம் போட்டுட்டு போய், ‘இனி நான் தான் உங்க புது அரசன். நான் சொல்றததான் நீங்க எல்லாரும் கேட்கணும்னு’ அதிகாரமா சொன்னுச்சாம்.
அதை கேட்ட மத்த காட்டு விலங்குகளும் சரி-ன்னு சொல்ல நரி-க்கு சந்தோஷம் தாங்க முடியல. சந்தோஷத்துல அந்த நரி போட்டு இருக்கற சிங்க வேஷத்த மறந்து பழக்க தோஷத்துல ஊ.. ஊ..-ன்னு ஊளை யிட, இது சிங்கம் இல்ல நரி-ன்னு தெரிஞ்சிகிட்ட காட்டு விலங்குகள் அத அடிச்சி காட்ட விட்டே துரத்திடுச்சாம். உயிர் பொழச்சா போதும்னு ஓடி வந்த நரிக்கு அன்னைக்குதான் ஒரு உண்மை புரிஞ்சிதாம்.
காட்டு-க்கு அரசன் ஆகணும்னா சிங்கம் வேஷம் போட கூடாது. சிங்கமாவே பொறக்கணும்-னு” என்று நிறுத்தியவன் அவனின் கூரிய விழிகளை கூர்ந்து நோக்கி,
“ஸோ த மாரல் ஆஃப் த ஸ்டோரி ஈஸ் இந்த காட்டுக்கு ஒரே அரசன் இந்த தேவ் மட்டும்தான். நரியெல்லாம் நாட்டாம பண்ணனும்-னு நினைச்சா இப்படிதான் அசிங்கபட்டு நிக்கணும்.” என்று அழுத்தம் திருத்தமாக சொல்ல,
கோவக்கணலோடு அவனை பார்த்த தருண் கட்டுக்கடங்காத கோவத்துடனே அங்கிருந்து வெளியேறியும் இருந்தான்.
அவன் அருகில் இல்லாத நேரத்திலாவது அவர்களிடம் சென்று பேசலாம் என்று அவள் நினைத்தாள். ஆனால் அதற்கும் வழியில்லாமல் அவனுடன் நடித்த சக நடிகைகள் அவளை சூழ்ந்து கொண்டு,
“எங்கு பார்த்தீர்கள்..? யார் முதலில் காதலை சொன்னது..?” என்றெல்லாம் கேட்டு அவளை துளைத்தெடுக்க, அவர்களின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அவள்தான் விழி பிதுங்கி போனாள்.
அதன் பின்னும் அவள் எவ்வளவோ முயன்று பார்த்தாள்தான். ஆனால் அவர்கள் அருகில் செல்ல கூட அவன் அவளுக்கு வாய்ப்பு தரவே இல்லை.
வரவேற்பு முடிந்த கையோடு அவளையும் அழைத்து கொண்டே வீடு திரும்பியவன், “என்னோட ரூம்-க்கு வா” என்று கூறிவிட்டு செல்ல, அவளுக்குதான் தூக்கி வாரி போட்டது அவன் வார்த்தைகளால்.
நான் எதற்காக அவன் அறைக்கு செல்ல வேண்டும் என்ற யோசனையோடும், ஒரு வித பதற்றத்துடனேயே அவள் நின்றிருக்க,
“அவன் சொன்னது காதுல விழலையா..?” என்று கேட்டு வந்த தேஜ் அவளை தேவ்-ன் அறை வாசலில் விட்டுவிட்டுதான் நகர்ந்தான்.
பயத்துடனும், பதற்றத்துடனும் அவன் வாசல் முன்பு நின்று கொண்டிருந்தவளுக்கு கதவை திறக்கவே மணம் வரவில்லை.
திறக்கும் தைரியமும் அவளுக்கு இல்லை.
இன்றைய இரவு அவனுடன் அவன் அறையில் என்று நினைக்கும் போதே பயத்தில் அவள் இதயகூடு சில்லிட்டது.
அதற்காக இங்கேயே அவள் நின்றிருக்கவும் முடியாதே. இன்னும் சற்று நேரத்தில் அவனே அவளை தேடி கொண்டு வந்தாலும் ஆச்சரியபடுவதற்கில்லைதான்.
பின் எதற்கு வம்பு என்று மனதை திடப்படுத்திகொண்டு அறை கதவை திறந்தவள் மீண்டும் அதிர்ச்சியில் உறைந்து போய்தான் நின்றாள் பூக்களால் அலங்கரிக்கப்ட்டிருந்த கட்டிலையும், அந்த கட்டிலின் நடுமத்தியில் கையில் மல்லிகை பூ-வை சுற்றியபடி கண்மூடி படுத்திருந்தவனை பார்த்து.
ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலையாலும், அவர்கள் மூவரின் உயிரையும் காப்பாற்றும் பொருட்டுதான் அவள் அவனை திருமணம் செய்து கொண்டாளே தவிர விருப்பப்பட்டு அல்லவே.
ஒருவேளை அதே அடக்குமுறையை இதற்கும் அவன் கையாண்டால் கன்னியவள் நிலைதான் என்னவோ..?
மேற்கொண்டு உள்ளே செல்ல மனமில்லாமல் அவள் கால்கள் பின்னோக்கி நகர,
அதேநேரம், “உள்ளவா-ன்னு சொன்னாதான் உள்ள வருவியா..?” என்றான் எரிச்சல் மிகுந்த குரலில் விழிகளை திறக்காமலேயே அவன்.
அவன் வார்த்தைகளை கேட்டு திடுக்குற்றவள், தன்னையும் மீறி கொண்டு உள்ளே சென்றுவிட, அந்த தானியங்கி கதவோ தானாக மூடிக்கொள்ள அத்ரித்தாவிற்குதான் உள்ளுக்குள் இதயம் படபடவென அடித்து கொண்டது.
சகல வசதிகளுடன் விசாலமாக இருந்த அவன் அறையை விழிகளில் ஒருவித கலவரத்துடன் பார்த்திருந்தவளுக்கு அந்த ஏ.சி அறையிலும் பயத்தில் வியர்த்து வழிய முந்தியால் துடைத்து கொண்டாள்.
அதே நேரம் விழி திறந்து மெல்ல எழுந்து அமர்ந்தவனோ, கையில் சுற்றியிருந்த மல்லிகை சரத்தை முகர்ந்தவாறே, கிரக்கமாக அவளை ஏகத்திற்கும் ஒரு பார்வை பார்க்க, அவன் பார்வையை எதிர்கொள்ளமுடியாமல் அவளோ தலையை தாழ்த்தி கொண்டாள்.
கீழுதட்டை அழுந்த கடித்தபடி அவளையே சிலகணங்கள் பார்த்திருந்தவன், “ஹே டிராமாகுயின்” என்றவாறு அவளை சொடுக்கிட்டு அழைக்க, அவளும் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“அதுதான் பாத்ரூம். சீக்கரமா போய் ரெஃப்ரஷ் ஆகிட்டுவா.. எனக்கு டைம் வேஸ்ட் பண்ண சுத்தமா பிடிக்காது. மேக் இட் ஃபாஸ்ட்” என்று அவசரப்படுத்த, அவளுக்குதான் அவன் வார்த்தைகளின் தாக்கத்தால் வயிற்றுக்குள் புளி-யை கரைத்தது.
பயத்தில் எச்சிலை கூட்டி விழுங்கியபடி அவள் தேங்கி நின்றிருக்க, “காது-ல விழலையா..?” என்றான் இப்போது கோவம் தொணிக்கும் குரலில்.
“நான் ஏன் ரெப்ஃப்ரஷ்..” என்று ஆரம்பித்தவள் அவன் பார்த்த பார்வையில் வாயை இறுக்கமாக மூடிகொள்ள,
படுக்கையிலிருந்து எழுந்து தன் முழு உயரத்திற்கு நிமிர்ந்து நின்றவனோ, “ஏன் இந்த செட்டப்-லாம் பார்த்துமே உன் மரமண்டைக்கு விளங்கலையா..? இன்னைக்கு நமக்கு ஃப்ஸ்ட் நைட்-னு” என்க,
“ஃப்ஸ்ட் நைட்டா..?” என்றாள் அதிர்ச்சாய் அவள்.
அதிர்ச்சியில் விழிகள் விரித்து நின்றவளை ஏளனமாய் ஒரு பார்வை பார்த்தவன், “ஆக்சுவலி எனக்கு இதுதான் ஃப்ஸ்ட் நைட்” என்று நிறுத்தியவன், அவளை ஆழ்ந்து பார்த்தவாறே “வாட் அபவுட் யூ..?” என்றான் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றும் விதமாக.
இனியனை மனதில் வைத்துகொண்டு அவன் கேட்கும் கேள்வி அவளுக்கு மட்டும் புரியாதா..? என்ன..?.. அவன் கேள்வியால் அதிர்ந்து போய் நின்றவளின் கண்களிலிருந்து கண்ணீர்துளிகள் அரும்பின.
அவளின் கண்ணீரை பார்த்தவனுக்கோ மேலும் அவளை சீண்ட வேண்டும் போல இருக்க அவளருகில் சென்றவன்,
“ஆமா.. உங்க இரண்டுபேருக்கும் நடுவுல இருக்கற காதல் எப்படி..? காவிய காதலா… இல்ல காமம் நிறைந்த காதலா..?” என்று மீண்டும் வார்த்தை என்னும் அம்பை கொண்டு அவன் தாக்க, அவளுக்குள்ளும் அவன் வார்த்தைகள் சுருக்கென்று தைக்கவே செய்தது.
இருந்தும் அவள் அமைதியாகவே இருந்தாள்.
அவன் தான் முன்னமே சொல்லியிருக்கிறானே உன் வலியும், கண்ணீரும்தான் எனக்கு வேண்டுமென்று.
அதற்காக அவன் எந்த எல்லைக்கும் செல்வான் என்பதும் அவள் அறிந்ததே.
வழிந்தோடிய கண்ணீரோடு மௌனமாய் நின்றுகொண்டிருக்கும் அவளை பார்த்து மனதிற்குள் சிரித்து கொண்டவன்,
ஒற்றை விரலால் அவள் மோவாயை நிமிர்த்தி,
“கட்டுன புருஷன் பக்கத்துல நின்னுகிட்டு அவனையே பார்த்துட்டு இருக்க… அவ்வளோ பிடிக்குமா அவன..?” என்றவனின் கேள்வி கூடை நெருப்பை வாரி அவள் மேல் கொட்டியது போல இருந்தது.
அத்தோடு அவன் கேட்பது போல அவள் என்ன அவனை மட்டுமா பார்த்தாள். அவர்கள் மூவரையும் தானே பார்த்தாள்.
அவனின் கேள்விக்கு பதில் சொல்ல அவள் விரும்பவில்லை. கேள்வியே தவறாக இருக்கும் பட்சத்தில் அவள் எதற்காக பதில் சொல்ல வேண்டும். அத்தோடு அவனிடம் தன்னை நிரூபிக்க வேண்டிய அவசியமும் அவளுக்கு இல்லை.
அவன் அவளை அடிக்கவில்லை, அவளிடம் அத்துமீறவும் இல்லை இருந்தும் அவளுக்கு வலித்தது அவன் வார்த்தைகளின் வாள் வீச்சால்.
இனியும் இங்கிருப்பது சரியன்று என்று குளியலறைக்கு செல்ல முற்பட்டவளின் கரத்தை பற்றி தடுத்து நிறுத்தியிருந்தான் ஆதித்யதேவ்.
அவனின் தொடுகையால் திடுக்குற்றவள் கலங்கிய விழிகளோடு திரும்பி அவனை பார்க்க அவனோ, “பதில் சொல்லு” என்றான் கொஞ்சமும் இரக்கம் இல்லாமல்.
என்ன பதில் சொல்ல முடியும் அவளால்..? அவள் என்ன காதலித்தா அவனை திருமணம் செய்துகொள்ள சம்மதித்தாள். அவள் இனியனை திருமணம் செய்து கொள்ள சம்மதித்ததே அவள் உலகத்தோடு அவன் உலகம் ஒத்துபோனதால் மட்டும்தானே.. இதில் எங்கு இருக்கிறது அவன் சொல்லும் படியான காதல்.
இதையெல்லாம் சொன்னால் நிச்சயம் அவன் நம்ப போவதில்லை.. அத்தோடு அவனை நம்பவைக்க வேண்டிய அவசியமும் தனக்கு இல்லை என்றுதான் தோன்றியது அவளுக்கு.
கண்களை மூடி ஒரு ஆழ்ந்த பெருமூச்சி விட்டவள், “சைக்கோதனமான கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல என்ன அவசியம் இருக்கிறது” என்றாள் அவன் பிடியிலிருந்து தன் கரத்தை விடுவிக்க முயற்சித்தபடி.
“ஓ. அப்போ என்ன சைக்கோ-ன்னு சொல்ற..?” என்றவன் அவள் கரத்தை இழுத்த வேகத்தில் அவளோ அவனின் திண்ணிய மார்பில் மோதி நின்றாள்.
மோதிநின்றவள் தப்பித்து போகாவண்ணம் இரு கரங்களாலும் அவளை அவன் சிறைசெய்திருக்க, அவன் செயலால் பெண்ணவள்தான் அதிர்ந்து போனாள்.
“என்ன இது.. என்ன விடு ஏ.டி” என்றாவாறே அவன் பிடிக்குள் அவள் தவித்துகொண்டிருக்க,
“சைக்கோ-க்கு சாம்பிள்” என்றவன், அடுத்து கணமே அவள் இதழ்களை தன் இதழ்களால் சிறை செய்திருக்க, அவன் செயலால் அவள்தான் அரண்டு போனாள்.
அவனின் இரும்பு பிடிக்குள் கட்டுண்டு இருந்தவளின் நகக்கீறல்களையெல்லாம் பொருட்படுத்தாமல் அவன் அவளின் பட்டு இதழ்களில் ஆழ்ந்த முத்த யுத்தம் நடத்தி கொண்டிருக்க, அவள்தான் அனல்மேல் இட்ட புழுவாய் துடி துடித்து போனாள்.
ஒரு கட்டத்தில் போராடி தோற்றுபோனவளின் கண்களிலிருந்து உதர்ந்த சூடான கண்ணீர்துளிகள் அவன் கன்னத்தையும் சேர்த்து நனைக்க, அதன் பின் தான் தன் பிடியிலிருந்து அவளுக்கு விடுதலை கொடுத்திருந்தான் ஆதித்ய தேவ்.
விட்டால் போதுமென்று அவள் குளியலறைக்குள் தஞ்சமடைந்திருக்க,
காலையில் அவள் பேசிய பேச்சிற்கு இந்த தண்டையே போதுமென்ற மனதிருப்தியோடே படுக்கையில் சென்று விழுந்திருந்தான் ஆதித்ய தேவ்.
அவனை பொறுத்தவரை அவளை காயப்படுத்த வேண்டும். அவள் வலிகளை இரசிக்க வேண்டும். அதற்காக எந்த எல்லைக்கும் செல்லலாம் என்பது அவன் வாதம்.