ஷவரின் அடியில் அலுப்பு தீர குளித்து முடித்தவன், எப்போதும் போல பால்கனியில் நின்று கொண்டு பரபரப்பாக இயங்கிகொண்டிருந்த அந்த சாலையையேதான் வெறித்து பார்த்து கொண்டிருந்தான்.
வெறித்து பார்த்து கொண்டிருந்தவனின் முகமோ மெல்ல மெல்ல இறுகி போனது கடந்த கால நிகழ்வுகளை நினைத்து.
என்னதான் யாரும் தொடமுடியாத உயரத்திற்கு அவன் உயர்ந்து நின்றாலும், ஏதோ ஒரு வெறுமை அவன் மனம் முழுவதும் ஆக்கிரமித்திருந்தது.
அது சிறுவயது முதல் இப்போது வரை அவன் சுமந்துக்கொண்டிருக்கும் தந்தை பெயர் தெரியாதவன் என்ற சிலுவை தரும் பாரமா..? இல்லை நோயின் பிடியிலிருந்த தாயை காப்பாற்ற முடியவில்லையே என்ற குற்ற உணர்வா..? ஏதோ ஒன்று நாளுக்கு நாள் அவன் மனதை இரும்பாய் இறுக வைத்து கொண்டே இருந்தது.
“அழகா இருந்தா மட்டும் போதாது. அந்த அழக வச்சி நாலு பேரை மயக்க தெரிஞ்சியிருக்கணுமே தவிர இப்படி மூக்கறுபட்டு வந்து நிற்க கூடாது.” என்று நேஹா-வை தருண் காய்ந்து கொண்டிருக்க, அவளோ தன் கையிலிருந்த கட்டையே வெறிக்க பார்த்து கொண்டிருந்தாள்.
இன்றளவும் திரைத்துறையில் ஜாம்பவானாக ஒளிர்ந்து கொண்டிருக்கும் மூத்த நடிகர் சூரியபிரகாஷின் தவ புதல்வன் தான் தருண்.
படிப்பில் நாட்டமில்லாமல் தந்தையை பின் பற்றி திரைத்துறைக்கு வந்தவன், அந்த துறையில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க அதிகம் எல்லாம் மெனக்கெடவில்லை.
காரணம் சூரியபிரகாஷின் மகன் என்ற அடையாளமே வாய்புகளை அவனுக்கு வாரி வழங்கியது.
என்னதான் கஷ்டபடாமல் திரைத்துறைக்குள் அவன் நுழைந்திருந்தாலும், திறமை என்ற ஒன்று இருந்தால்தானே மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியும். திரைத்துறையிலும் கோலொச்சி நிற்க முடியும்.
அந்த விதத்தில் அவனும் திறமை வாய்ந்த நடிகனே.
திரைத்துறையில் தன் தந்தையின் இடம் அடுத்து தனக்கு தான் என்று கற்பனை உலகில் அவன் மிதந்துகொண்டிருந்த சமயத்தில்தான், ஆதித்யதேவின் வருகை அவனின் கனவு கோட்டையையே ஆட்டம் காண வைத்திருந்தது.
எங்கே தேவ் தனக்கு போட்டியாக வளர்ந்து விடுவானோ என்ற பயத்தில் தருண் தன் செல்வாக்கையும், சினிமா அரசியலையும் வைத்து அவன் வளர்ச்சியை தடுப்பதாக நினைத்து அவனுக்கு வரும் பட வாய்ப்புகளையெல்லாம் தட்டிபறித்தான்.
அத்தோடு நில்லாமல் அவன் படம் ரிலீஸ் ஆகும் போதெல்லாம் வேண்டுமென்றே ஏதாவது பிரச்சனையை ஏற்படுத்தி ரிலீஸ் தேதியையும் ஒத்திவைத்தான்.
ஆனால் அவன் என்ன சூழ்ச்சி செய்தபோதும் தேவ் தன் திறமையால் தருணை பின்னுக்கு தள்ளி முன்னேறி சென்றதோடு, திரைத்துறையில் யாரும் தொட முடியாத உச்சத்தை அடைய, அதுவரை அவனுக்குள் இருந்த போட்டி பொறாமை என்ற அடுத்த கட்ட நகர்விற்கு சென்றது.
எல்லா வகையிலும் முயன்று தோல்வியை தழுவியவன், இறுதியாகதான் அந்த ஆயுதத்தை கையில் எடுத்திருந்தான்.
என்னதான் திரைத்துறையில் தேவ் பத்து வருடங்களாக இருந்தாலும் இதுநாள் அவனை பற்றி சிறு வதந்தியோ, கிசுகிசுப்போ வந்தது கிடையாது. சொல்லபோனால் அப்படி வரும் அளவிற்கு அவன் நடந்துகொள்ளவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.
அப்படிபட்டவனை அனைவரின் முன்னிலையிலும் ஒரு பெண் பித்தனாக காட்சியக படுத்திவிட்டால் நிச்சயம் தேவ் அதளபாதாளத்திற்கு செல்வது உறுதி என்று நினைத்த தருண், அதற்காக தேவ் உடன் நடிக்கும் நடிகைகளை வைத்து காய் நகர்த்தினான்.
என்னதான் ஆரம்பகாலத்தில் தருணின் செயல்களை தேவ் பெரிதாக எடுத்துகொள்ளாமல் இருந்தாலும், ஒரு கட்டத்தில் அவன் செயல்கள் எல்லை மீறிவிட பின் நாளில் தேவ்-ம் திருப்பி கொடுக்க ஆரம்பித்திருந்தான்.
நிச்சயம் இது தருணின் வேலை என்று தெரிந்து தான் தேவ் இன்று நேஹாவை பலமாக கவனித்தது கூட.
இந்த மாதிரியான சூழ்நிலையில்தான் தேவ்-ன் அரசியல் பிரவேச செய்தி ஏற்கனவே அவனுக்குள் எரிந்துகொண்டிருக்கும் ஆற்றாமைக்கு மேலும் எண்ணெய் ஊற்ற,
ஸ்டுடியோவில் தனக்கான அறையில் அதீத கோவத்தோடு குறுக்கும் மறுக்குமாக அவன் நடந்து கொண்டிருந்த சமயத்தில்தான், கையில் கட்டுடன் அவன் முன்னால் சென்று நின்றாள் நேஹா.
இம்முறையும் தன் திட்டம் தவிடுபொடியாகி இருக்க, அந்த கோவத்தைதான் நேஹா-வின் மீது பாய்ச்சி கொண்டிருந்தான் தருண்.
“பெரிய புடுங்கி மாதிரி சொல்லிட்டு போன.. அவன மயக்கி காட்டுறன்னு.. இப்போ என்னாச்சி..?” என்றவனின் கேள்விக்கு நேஹா மௌனத்தையே பதிலாக தர, அவன் கோவமோ மீண்டும் தேவ்-ன் புறம் தான் திரும்பியிருந்தது.
“என்னைக்கு என் அப்பா இடத்த புடிச்சானோ அன்னைக்கே நான் அவன கொண்ணு பொதச்சியிருக்கணும். தப்பு பண்ணிட்டேன். எங்கிருந்தோ வந்த அனாதை பயலாம் அரசியலுக்கு வந்தா நாமலாம் என்ன நக்கிக்கிட்டு போறதா..” என்று வார்த்தைகளை கடித்து துப்பியவன்,
“டேய் ராகவ்…” என்று கர்ஜிக்க, அவன் முன் வந்து நின்றான் அந்த பெயருக்கு சொந்தகாரனான அவனுடைய பர்சனல் செக்கரட்ரி.
“நீ என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது… நாளைக்கு அவனுக்கு சீட் கிடைக்க கூடாது.” என்று கர்ஜித்தவன் அவன் விழிகளை கூர்ந்து நோக்கி “நான் என்ன சொல்லவரேன்னு உனக்கு புரியுதா..?” என்க, அவனோ புரிந்தவன் போல கோவில்மாடு கணக்காக தலையை மட்டும் ஆட்டினான்.
அதேநேரம் அவன் அருகில் வந்து நின்ற நேஹாவோ “தருண் பிளீஸ்.. கடைசியா எனக்கு ஒரே ஒரு வாய்ப்பு மட்டும் கொடு.. இன்னைக்கு நைட் நடக்கபோற பார்ட்டியில நான் அந்த தேவ்-அ எப்படியும்..” என்றவள் சொல்லி முடிக்கும் முன்பே,
“கிழிச்சிடுவ நீ…” என்றவனின் வார்த்தைகளால் அவளுக்குதான் ஒருமாதிரியாகி போனது.
இருந்தும் “தருண்..” என்றவள் ஆரம்பிக்க,
“அவனாவது கையிலதான் கோடு போட்டான்… நான் உன் மூஞ்சிலேயே கோடு போட்டுடுவேன். என்ன போடவா..?” என்று கேட்டவாறே அவளை நோக்கி அவன் ஒரு எட்டு வைக்க, அவளோ வேண்டாம் என்பது போல தலையை இடவலமாக அசைத்தவாறே பின்னோக்கி நடந்தாள்.
“இனி இந்த மூஞ்ச நான் பார்க்கவே கூடாது… கெட் லாஸ்ட்” என்றவன் அதிகாரமாய் அவளை பார்த்து சொல்ல, அவளோ தயக்கத்துடனே அங்கிருந்து வெளியேறினாள்.
எவ்வளவு நேரம் அப்படியே நின்றிருந்தானோ, வேலையாள் பார்ட்டிகான ஆடையுடன் வந்து அவனை அழைக்க, அதன் பின்னே சுயத்திற்கு திரும்பியிருந்தான் தேவ்.
ஆடையை வாங்கி கொண்டு கிளம்பி அவன் கீழே செல்ல, தேஜோ அவனுக்கு முன்பே ரெடியாகி அவன் வருகைக்காக காத்து கொண்டிருந்தான்.
அவனைப் பார்த்து மெலிதாக புன்னகைத்தவாறே தேவ் காரில் அமர்ந்து காரை ஸ்டார்ட் செய்ய, போனில் பேசியவாறே காரில் சென்று அமர்ந்தான் தேஜ்.
தேவ்-வின் காரியதரிசி என்பதால் தேஜ் எப்போதும் போனும் கையுமாகத்தான் இருப்பான்.
அந்த நான்கு தளங்கள் கொண்ட பார்ட்டி ஹாலின் பார்கிங் பகுதியில் காரை நிறுத்திவிட்டு இருவரும் வி.ஐ.பி-க்கான பார்டி ஹால் இருக்கு நான்காம் தளத்திற்கு செல்ல, பார்டியும் களை கட்ட ஆரம்பித்தது.
பார்ட்டிக்கு வந்திருந்த திரைபிரபலங்களிடம் நட்பு ரீதியாக சிறிதுநேரம் பேசியிருந்துவிட்டு, இருவரும் இருக்கையில் சென்று அமர, தேஜோ பார்வையாலே தேவிடம் பரணியை சுட்டி காட்டினான்.
முற்றிய மதுபோதையில் தன்னையும் மறந்து இரண்டு பெண்களுடன் அவன் ஒட்டி, உரசி ஆடிக்கொண்டிருக்க அதைத்தான் தேவிடம் தேஜ் காட்டியது கூட.
பரணி மட்டுமல்ல அங்கு வருகை புரிந்திருந்த பலரும் அவன் நிலையில் இருந்தனர் என்றுதான் சொல்ல வேண்டும்.
மது, மாது, டீஜே, ஆட்டம், பாட்டம் என்று அனைவருமே கொண்டாட்டத்தில் மூழ்கி போயிருந்தனர். திரைத்துறையினரின் பார்ட்டி என்றால் சொல்லவா வேண்டும்.
ஆனால் அந்த கொண்டாட்டங்கள் எதிலும் கலந்துகொள்ளாமல் இவர்கள் இருவர் மட்டும் எப்போதும் போல ஒதுங்கியே அமர்ந்து கொண்டனர்.
“கமான் தேவ்” என்று கையிலிருந்த மதுகோப்பையை உயர்த்தி காட்டி ஆடிகொண்டே பரணி அவனை அழைக்க,
“நோ தேங்க்ஸ்” என்றான் தேவ்-ம் சத்தமாக.
அதுவரை அனைவரையும் விழிகள் விரிய பார்த்துகொண்டிருந்த தேஜ் “என்னமா வாழறானுங்க பாரேன்..” என்க.
“ஏன்… வேணும்னா நீயும் போய் வாழு… யார் உன் கைய புடுச்சி தடுத்தா..” என்றான் பதிலுக்கு தேவ்.
அவன் கூறியதை கேட்டு “ச்சீ” என்று முகம் சுளித்தவன், “இந்த கருமத்தலாம் எப்படிதான் குடிக்குறானுங்கனே தெரியல…” என்றவாறு முகத்தை சுளித்தவன்,
அங்கு டிரிங்க்ஸ் சப்ளை செய்துகொண்டிருந்தவனை அழைத்து, அவன் காதில் ஏதோ கிசுகிசுக்க, அவனோ அடுத்த சில நிமிடங்களிலே அவன் சொன்ன மாம்பழ ஜீசுடன் அவர்கள் முன் வந்து நின்றான்.
பெரும்பாலும் இது மாதிரியான பார்டிகளில் இருவரும் ஜீஸ் மட்டும்தான் அருந்துவர்.
இரண்டு ஜீஸ் கிளாசையும் கையில் எடுத்தவன், அதில் ஒன்றை தேவ்-விடம் கொடுத்துவிட்டு மற்றொன்றை குடிக்க போகும் தருணத்தில்தான் போனில் மீண்டும் அவனை அழைத்திருந்தார் தொண்டைமான்.
எப்படியும் இங்கிருந்து பேசினால் பாட்டு சத்தத்தில் எதுவும் காதில் விழாது என்பதால், தேவ்-விடம் கண்ஜாடை காட்டிவிட்டு அந்த பார்ட்டி ஹாலிலிருந்து தேஜ் வெளியேற,
அவன் சென்று மறைவதையே பார்த்து கொண்டிருந்த தேவ், அந்த பழச்சாற்றை மெல்ல அருந்த ஆரம்பித்தான்.
பழச்சாற்றின் சுவை வித்தியாசமாக இருந்தாலும், அந்த ருசி பிடித்துபோக ஒரே மிடறில் கிளாசிலிருந்த மொத்த பழச்சாற்றையும் காலி செய்தவன், தேஜ் வைத்துவிட்டு சென்ற கிளாசையும் காலி செய்தான்.
அவனை கவனித்துகொண்டிருந்த டிரிங் சப்ளையர் “ஒன் மோர் சார்..?” என்று கேள்வியெழுப்ப, ஆமாம் என்பது போல தலையை அசைத்தவனின் கால்களோ அங்கு ஒலித்து கொண்டிருந்த பாடலின் இசைகேற்றவாறு தாளம் போட ஆரம்பித்திருந்தது.
டிரிங் சப்ளையர் மீண்டும் கொண்டு வந்து கொடுத்த பழசாற்றையும் ஒரே மிடறில் குடித்து முடித்தவனுக்கு ஏதோ சிறகுகள் இன்றி வானத்தில் பறப்பது போன்ற ஒரு உணர்வு.
இத்தனைவருட காலமாக மனதில் தேக்கிவைத்திருந்த இறுக்கம் எல்லாம் காணமல் போய் மனது லேசானது போல் இருக்க, அமர்ந்த நிலையிலேயே பாடலுக்கு ஏற்றவாறு உடலை அசைத்து கொண்டிருந்தவனின் இதழ்கள் ஒலித்துக் கொண்டிருந்த பாடலை முனுமுனுக்கவும் ஆரம்பித்திருந்தது.
தன் உடல் கொஞ்சம் கொஞ்சமாக போதைக்கு அடிமையாகி கொண்டிருப்பது கூட தெரியாமல் அவன் இருக்க, அதுவரை அவனையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துகொண்டிருந்த நேஹா-வின் இதழ்களிலோ வெற்றி புன்னகை எட்டி பார்த்தது.
எப்படியும் இன்று தான் பட்ட அவமானங்களுக்கெல்லாம் அவனை பழிதீர்த்தாக வேண்டும் என்று நினைத்தவள், தருணின் அசிஸ்டண்ட் ராகவின் உதவியோடு டிரிங்க சப்ளை செய்யும் ஒருவனை விலைக்கு வாங்கி அவன் மூலமாக இருவர் குடிக்கும் பழசாற்றில் போதை மருந்தை கலந்திருந்தாள்.
ஒலித்து கொண்டிருந்த பாடலை வைப் செய்தபடி அமர்ந்திருந்தவனுக்கு, போதையின் உச்சத்தால் கண்கள் மங்கலாக தெரிய ஆரம்பிக்க, கண்களை இறுக மூடி தலையை இருபுறமும் ஆட்டிவிட்டு மீண்டும் கண்களை திறந்து பார்த்தான்.
தெளிவாக தெரிந்த உருவங்கள் மீண்டும் மங்கலாகவே தெரிந்தது.
உடம்பெல்லாம் மறுத்து போனது போன்ற ஒரு உணர்வு. கை, கால்கள் அவன் பேச்சை கேட்க தவறியது. போதையில் சிவந்திருந்த அவன் கண்களும் அவனையும் மீறிகொண்டு சொருக ஆரம்பிக்க ஒருகட்டத்தில் தேவ்-ஆல் அமர்ந்திருக்க கூட முடியாமல் போனது.
ஒரு கையால் தலையை தாங்கிபிடித்த படி, ‘தனக்கு என்ன ஆனது…? தனக்குள் என்ன நடக்கிறது..?’ என்று புரியாமல் தவித்து கொண்டிருந்தவனின் பார்வையோ அப்படியே நின்றது.
அவன் முன்னால் வரிசையாக காலியாக இருந்த பழச்சாறு அருந்திய கிளாஸ்களை பார்த்து.
இதை குடித்த பின்தான் தனக்குள் இந்த மாற்றங்கள். அப்படியானால் இதில் யாரோ.. ஏதோ…” என்று வேகவேகமாக கணக்குபோட்ட அவன் மூளைக்கு, நாளை தனக்கு கிடைக்கபோகும் அங்கீகாரத்தை தடுக்க யாரோ செய்த சதி என்று நன்றாகவே புரிந்தது.
நாளை அவன் வாழ்கையில் எவ்வளவு முக்கியமான நாள் என்பதை அவனும் அறிவான் தன்.
அவன் வாழ்வில் ஒரு புதிய பயணத்திற்கான அடித்தளம் அமைக்கபட உள்ள சூழ்நிலையில்போய் முற்றிய மது போதையில் இருக்கும் அவன் புகைபடமோ அல்லது வீடியோவோ மக்களின் பார்வைக்கு சென்றுவிட்டால் அது என்னமாதிரியான விளைவுகளை அவனுக்கு ஏற்படுத்தும் என்பதை அவனும் அறியாமல் இல்லை.
தானாக தேடி செல்லாவிட்டாலும் தன்னை தேடி வந்த அரசியல் அங்கீகாரம் அடுத்தவர்களின் சூழ்ச்சியால் தன் கைநழுவி செல்வதை துளியும் அவன் விரும்பவில்லை.
அத்தோடு ஒவ்வொரு பேட்டியிலும் தன் இரசிகர்களிடம் போதைபழக்கம் கூடாதென்று அறிவுரை கூறிவிட்டு இப்போது இதென்ன..? என்று எள்ளி நகையாடுபவர்களுக்கு அவனால் என்ன பதில் சொல்ல முடியும்..?
பத்தாண்டுகள் மூச்சி விடாமல் அவன் ஓடியதெல்லாம் இப்படியொரு அவப்பெயரை சுமப்பதற்காகத்தானா..?
“கூடாது..கூடாவே கூடாது…” என்று தனக்குதானே தீர்க்கமாக சொல்லிகொண்டவன்,
தட்டு தடுமாறி பக்கத்திலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து, அதிலிருந்த தண்ணீரை வேகமாக தன் முகத்தில் அறைந்து பார்த்தான் அப்போதும் பலனில்லை.
கொஞ்சம் கொஞ்சமாக சுயத்தை இழந்துகொண்டிருக்கும் தனக்கு இனி தேஜ்-ஆல் மட்டுமே உதவ முடியும் என்று நினைத்தவனின் இதழ்கள் “தேஜ்” என்று முனுமுனுக்க, அவன் பார்வையோ தேஜ் சென்ற வாயிற்பகுதியின் மீதே நிலைத்திருந்தது.
தேஜ் வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் போகவே, அவனை போனில் தொடர்பு கொள்ள நினைத்து பாக்கெட்டில் கையை விட்டவனுக்கு அப்போதுதான் கைபேசியை எடுத்துவரவில்லை என்பது நினைவிற்கு வந்தது.
“ஷிட்” என்று முன்னுச்சியை கோதிகொண்டவன், சுற்றும் முற்றும் பார்த்தான்.
அனைவருமே போதையின் உச்சத்தில் உழன்றுகொண்டிருக்க, நிச்சயம் தன்னை யாரும் கவனிக்க மாட்டார்கள் என்றுதான் அவன் நினைத்தான்.
ஆனால் நேஹாவோ மார்பின் குறுக்கே கைகளை கட்டியபடி அவனையேதான் பார்த்துகொண்டிருந்தாள் கேமராவின் வாயிலாக.
முழுவதுமாக போதை தன்னை ஆட்கொள்வதற்கு முன் இங்கிருந்து கிளம்புவதுதான் சரி என்ற முடிவுக்கு வந்தவன், இருக்கையிலிருந்து மெல்ல எழ முற்பட்டான்.
அவன் எழ முற்பட்டாலும் அவன் கால்கள் அதற்கு ஒத்துழைக்கவில்லை. இருந்தும் சோர்ந்து போகாமல் பக்கத்திலிருந்த இருக்கையை ஆதாரமாக பற்றிகொண்டு மெல்ல எழுந்து நின்றான் தேவ்.
பார்ட்டி ஹாலுக்கு வந்த வழியாகவே சென்றால் நிச்சயம் கேமரா கண்களில் சிக்க நேரும் என்பதால், அவசரகாலத்தில் வெளியேறும் வழியாக கார் பார்கிங் பகுதிக்கு செல்வதென்று முடிவு செய்தான்.
அனைவரும் கொண்டாட்டங்களில் பிசியாக இருக்க, அவர்களின் மீது ஒரு பார்வையை பதித்தவாறே, மெல்ல மெல்ல நகர்ந்து எக்சிட் பகுதியை அடைந்தான் தேவ்.
அது அவசரகாலங்களில் வெளியேறும் வழி என்பதால் கார்பார்கிங் பகுதிக்கு செல்ல நான்கு தளங்களையும் படிகள் மூலமாகதான் கடந்து செல்ல வேண்டியிருந்தது.
படியின் பக்க கம்பிகளை பிடித்துக்கொண்டு தள்ளாடியபடி அவன் இறங்கி கொண்டிருக்கும் போதுதான்,
“மே ஐ ஹெல்ப் யூ ஏ.டி..” என்று கேட்டவாறு அவன் முன்னால் வந்து நின்றாள் நேஹா.
முதலில் அவள் முகம் மங்கலாக தெரிந்தாலும் பின் அவளை கண்டுகொண்டவனின் முகமோ அருவெறுப்பை உமிழ்ந்தது.
“என்னாச்சி ஏ.டி உன் சிங்க நடைக்கு..?” என்று நக்கலாக கேட்டுவிட்டு அவள் சிரிக்க, அவன் முகமோ கடுகடுவென மாறியது.
“எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல.. உனக்கு ஹெல்ப் பண்றதால..” என்றவாறே அவன் கரத்தை அவள் பற்ற,
“நோ நீட்” என்றவாறு அவள் கரத்தை தட்டிவிட்டவன், அவளை கடந்து செல்ல முற்படும்போதுதான், அவன் வலதுகால் அவனின் இடதுகாலில் இடித்து இடறியதில் நிலைத்தடுமாறி கீழே விழபோனவனின் இடையை இலாவகமாக வளைத்து இழுத்து அவள் அணைத்த வேகத்தில் அவன் தலை எதேர்ச்சையாக அவள் மார்பின் மேல் சரிய,
வெகு நேரமாக இதற்காகத்தான் காத்திருந்தவள் போல, அந்த காட்சியை தன் செல்போனில் செல்ஃபி எடுத்து கொண்டாள் நேஹா.
எல்லாமே கணப்பொழுத்தில் நடந்தேறியிருக்க, “ச்சீ” என்று முகம்சுளித்தவாறு அவளை விட்டு விலகும்சமயத்தில் தான் அவள் தூக்கிபிடித்து கொண்டிருந்த செல்போனை கவனித்தவனுக்கு அப்படியொரு கோவம் அவள் மேல்.
“நீ என்ன பண்ற நேஹா..?” என்று கோவத்தில் பற்களுக்கு இடையில் அவன் வார்த்தைகளை கடித்து துப்ப,
“ஏன்..? நான் என்ன பண்றன்னு இன்னும் உனக்கு புரியலையா ஏ.டி..?” என்று கேட்டு சத்தம் போட்டு சிரித்தவள்.
அவன் போதையில் இருக்கும் போது எடுத்த வீடியோவையும், சற்று முன் எடுத்த புகைப்படத்தையும் அவனுக்கு காட்ட, அதையெல்லாம் பார்த்தவனுக்கோ அவளை கொலை செய்யும் அளவிற்கு அவள் மீது கோவம் தான் வந்தது.
“இந்த வீடியோவும், ஃபோட்டோவும் போதும் நாளைக்கு உன் தலையெழுத்த மாத்தி எழுத…” என்றவள், அவன் முகத்தை கூர்ந்து நோக்கி,
“என்ன மாத்தி எழுதட்டுமா ஏ.டி..?” என்றாள் இப்போது அவனை மிரட்டும் தோணியில்.
உன் மிரட்டலுக்கெல்லாம் நான் அப்பாற்பட்டவன் என்பது போல, “போன்-அ கொடு நேஹா” என்றான் அவனும் மிரட்டலாக.
“கொடுக்கலனா என்ன பண்ணுவ ஏ.டி..? ஆ.. என்ன பண்ணுவ.? உன்னால என்ன பண்ண முடியும்..?” என்று கேட்டவள்,
அவன் இருக்கும் நிலையில் நிச்சயம் அவனால் தன்னை எதுவும் செய்யமுடியாது என்ற தைரியத்தில் அவள் இருக்க, அவனோ சட்டென்று போன் வைத்திருந்த அவள் கரத்தை இறுக பற்ற பெண்ணவள்தான் மிரண்டு போனாள்.
போதையில் இருந்தாலும் அவன் பிடி இரும்பாய் இறுகிகொண்டே போக, “என் கைய விடு ஏ.டி” என்றவளின் வார்த்தைகளையெல்லாம் பொருட்படுத்தாமல் அவள் கையிலிருந்த போனை பறிப்பதிலேயே குறியாய் இருந்தான் அவன்.
அவளும் போனை கொடுக்க மாட்டேன் என்பதில் பிடிவாதமாய் இருக்க, இருவருக்குமான கைகலப்புதான் முற்றிபோனது.
அவள் மீது அதீத கோவத்தில் இருந்தவன் ஒரு கட்டத்தில் தன் பலம் கொண்டவரை அவளை எட்டி தள்ள, நிலை தடுமாறி கீழே விழுந்தவளின் தலையோ பக்கவாட்டிலிருந்த படிகட்டு கம்பிகளில் பலமாக இடித்தது.
இடித்ததில் அவள் மயங்கி சரிய, மூச்சி பேச்சியின்றி கிடந்தவளை பார்த்து “செத்து தொலை” என்று கோவமாக சொன்னவன், அந்த போட்டவையும், வீடியோவையும் டெலிட் செய்யும் பொருட்டு அவள் பிடியிலிருந்த செல்போனை பிடுங்கி ஆன் செய்தான்.
அது லாக்கில் இருக்கவே, தன் பலம் கொண்டவரை அந்த போனை தூக்கி எறிந்தான். அவன் எறிந்த வேகத்தில் அது சூரைதேங்காய் போல நாலாபுறமும் சிதறி விழுந்தது.
சிதறிவிழுந்த பாகங்களிலிருந்து மெமரிகார்டை தேடி பிடித்துஎடுத்தவன் அதையும் உடைத்தெறிந்துவிட்டு, கார்பார்கிங் பகுதி நோக்கி விரைந்தான்.