நாளை மறுநாள் திருமணம் என்பதால் செயற்கை மின்விளக்குகளால் அந்த பங்களா ஜொலித்து கொண்டிருக்க,
“ஆரா…. ஆரா….” என்று சத்தம்போட்டு அழைத்தவாறே அந்த பங்களாவின் ஒவ்வொரு பகுதியிலும் தேடி அலைந்து கொண்டிருந்தாள் அத்ரித்தா.
அவள் மட்டும் அல்ல அந்த பங்களாவில் பணிபுரியும் வேலையாட்கள் அனைவருமே எவ்வளவு தேடி பார்த்தும் ஆரா கிடைக்கவில்லையென்று கையைவிரித்துவிட, அத்ரித்தாவிற்கு இப்போது கண்களைதான் கரித்து கொண்டு வந்தது.
“ஆரா… நீ எங்கதான் இருக்க ஆரா… ஆரா….?” என்று மீண்டும் ஒரு முறை சத்த போட்டு கத்திபார்த்தவளுக்கு இப்போது அழுகைதான் வந்தது ஆரா-வை காணவில்லையே என்று.
இறுதியாக ஒரு மணிநேரத்திற்கு முன்புகூட தன் அறையில் பார்த்தது நினைவிற்கு வர, மீண்டும் ஒரு முறை தன் அறைக்கு சென்று தேடி பார்த்தாள்.
ஆனால் அங்கு ஆரா இருப்பதற்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல் போகவே சோர்ந்து போய் படுக்கையில் அமர்ந்தவளுக்கு அடுத்து என்ன செய்வதென்றும் தெரியவில்லை.. ஆராவை எங்கு சென்று தேடுவதென்றும் தெரியவில்லை.
‘ஒருவேளை ஆராவிற்கு எதாவது ஆகியிருக்குமோ..?’ என்று நினைக்கும் போதே அவளுக்குள் ஒரு வித பயம் ஊற்றெடுக்க, அடுத்து அவள் சென்று நின்றது என்னவோ அவள் தந்தை சோமசுந்தரத்தின் முன்புதான்.
“ப்பா… ஆரா-வ காணோம் பா..” என்று சொல்லும் போதே மீண்டும் அவள் விழிகள் கலங்கி போயின.
அதுவரை பார்த்துகொண்டிருந்த ஃபைலை மூடி மேஜையின் மீது வைத்தவர் மகளின் அருகில் சென்றார்.
“கல்யாணபொண்ணு இப்படி கண்ண கசக்கிகிட்டு இருக்கலாமா.. அத்ரி..?“ என்று கேட்டவாறே அவளின் கண்ணீரை துடைத்துவிட்டவர்,
“ஆரா உன்ன விட்டு எங்கயும் போகமாட்டாடா. இங்கதான் எங்கயாவது இருப்பா..? இல்ல அசதியில எங்கயாவது தூங்கிகிட்டு இருப்பா… அப்படியே எங்கயாவது போயிருந்தாலும் வந்துடுவா அத்ரி.. நீ முதல்ல ரிலாக்ஸ்-ஆகு” என்றார் அவளை ஆசுவாசப்படுத்தும் விதமாக.
இல்லை என்பது போல தலையை இருபுறமும் ஆட்டியவள், “என் ஆரா இவ்வளோ நேரம் என்ன விட்டு பிரிஞ்சி இருந்தது இல்லப்பா. எனக்கு என்னவோ பயமா இருக்கு. அவளுக்கு எதாவது ஆகியிருக்குமோன்னு.” என்று குரல்களில் ஒருவித நடுக்கத்துடன் சொன்னவள்,
“ஐ.ஜி அங்கிள்-க்கு போன் பண்ணி கம்பிளைண்ட் கொடுங்கப்பா. ஆரா-வ தேட சொல்லுங்கப்பா… பிளீஸ் பா” என்று அழுதுகொண்டே கெஞ்சும் மகளுக்கு எப்படி புரியவைப்பதென்று தெரியாமல் பரிதவித்துபோய் நின்றார் சோமசுந்தரம்.
அவர் அமைதியாகவே நின்றிருக்க, “ப்பா..” என்று அவரின் கையை பிடித்து உலுக்கியவள்,
“என்னப்பா அமைதியாவே இருக்கீங்க… போன் பண்ணுங்கப்பா…. ஆரா-வ தேட சொல்லுங்கப்பா.. எனக்கு என் ஆரா வேணும் ப்பா..” என்று அழுதுகொண்டே சொன்னவள், ஓடி சென்று படுக்கையின் மீது கிடந்த கைபேசியை எடுத்து அவர் முன் நீட்ட,
அதை வாங்கிகொண்ட சோமசுந்தரமோ மகளையும், கைபேசியையுமே மாறி மாறி பார்த்தார்.
நிச்சயமாக அவருக்கு தெரியவில்லை அவளுக்கு எப்படி எடுத்து சொல்லி புரியவைப்பதென்று. இருந்தும் ஒரு தந்தையாக அவளுக்கு புரிய வைக்க வேண்டியது அவருடைய கடமையாயிற்றே.
“ப்பா…” என்றவளின் அழைப்பால் மீண்டும் சுயத்திற்கு திரும்பியவர்,
“அத்ரிமா” என்றவாறே அவளின் தோள்களைபற்றி இருக்கையில் அமரவைக்க, அவளோ விழிகள் உருட்டி அவரையேதான் பார்த்து கொண்டிருந்தாள்.
அவள் விழிகளையே சில கணங்கள் ஆழ பார்த்திருந்தவர், “பூனை-அ கண்டுபிடிக்க சொல்லிலாம் கம்பிளைண்ட் கொடுக்க முடியாதுடா.” என்றார் தெளிவான குரலில்.
ஆம் அவள் இவ்வளவு நேரம் தேடி அலைந்தது, அழுதது எல்லாம் அவள் வளர்த்து வரும் பூனை-க்காக.. இல்லை இல்லை…
கடந்தகால வலிகளிலிருந்து அவளை மெல்ல மெல்ல மீட்டெடுத்து இன்று அவள் வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கைக்கு ஆதாரமாக இருக்கும் அவளின் ஆராவிற்காகத்தான்.
ஒருவரின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் யார் மூலமாக வந்தால் என்ன…? அவள் வாழ்க்கையில் அந்த நல்ல மாற்றம் ஆரா என்னும் பூனையால் வந்திருந்தது. அவ்வளவே.
சொல்லபோனால் அத்ரித்தா ஒரு விலங்கு நல ஆர்வலர். அந்த அடையாளத்தை அவளுக்கு கொடுத்தது கூட அவளின் ஆராதான்.
சோமசுந்தரம் சென்னையில் விரல்விட்டு எண்ணகூடிய தொழிலதிபர்களில் ஒருவர்.
தொழிலை மென்மேலும் விரிவுபடுத்துவதிலேயே சோமசுந்தரம் பிஸியாகிவிட, குடும்பத்தையும் மகள் அத்ரித்தா மற்றும் மகன் ஆத்மனை பார்த்துக்கொள்ளும் முழு பொறுப்பும் அவரின் துணைவியார் சந்தியாவிடமே ஒப்படைக்கபட்டிருந்தது.
அதற்கேற்றார் போல சந்தியாவும் குடும்பத்தையும், குழந்தைகளையும் கண்ணும் கருத்துமாகவேதான் பார்த்து வந்தார்.
‘அன்பு என்ற ஒற்றை ஆயுதம் போதும் இந்த உலகை வெல்ல’ என்று சொல்லி சொல்லி இருவரையும் வளர்த்ததாலோ என்னவோ, அத்ரித்தா தன் ஒட்டுமொத்த அன்பையும் சந்தியாவின் மீதே வைத்திருந்தாள்.
சொல்லபோனால் சந்தியாவும் அப்படித்தான். திருமணமாகி கிட்டத்தட்ட ஐந்தாண்டுகள் போரட்டத்திற்கு பின் பிறந்த குழந்தை என்பதால் அத்ரித்தா மீது எப்போதும் ஒருவித தனி பாசம் அவருக்கு உண்டு.
அதன் விளைவாக அத்ரித்தா எப்போதும் அவரையேதான் சுற்றிகொண்டு திரிந்தாள்.
அதிலும் அவருக்கு சிறு தலைவலி என்றால் கூட அத்ரித்தா துடிதுடித்து போவாள்.. அந்த அளவிற்கு அவர் மீது தன் உயிரையே வைத்திருந்தாள் அத்ரித்தா.
ஆம் அவளின் உலகமே அவளின் தாயார் சந்தியா தான். அதனாலேயே வெளிஉலகத்தை பற்றியெல்லாம் அவள் அதிகம் யோசித்ததும் இல்லை.. தெரிந்து கொள்ள முற்பட்டதுமில்லை.
தனக்கு தேவையான அன்பும், பாசமும் தன் தாயிடமிருந்தே கிடைத்துவிட்டதால் அத்ரித்தா பெரிதாக தனக்கென நட்பு வட்டங்களைகூட உருவாக்கி கொண்டதில்லை.
அவளை பொறுத்தவரை அவளுக்கு எல்லாமே அவள் அம்மா சந்தியாதான்.
எல்லாமே நன்றாக போய்கொண்டிருந்த தருணத்தில்தான் எதிர்பாராமல் நடந்த நிகழ்வொன்று அத்ரித்தாவின் மனநிலையை அப்படியே புரட்டி போட்டிருந்தது.
அவள் கல்லூரி இரண்டாமாண்டு படித்துகொண்டிருக்கும் சமயத்தில்தான் அவளும், அவளுடைய தாயார் சந்தியாவும் உறவினர் ஒருவரின் இல்ல விழாவிற்கு சென்று விட்டு திரும்பிகொண்டிருக்கும் போதுதான் அந்த துயர சம்பவமும் அரங்கேறியிருந்தது.
மதுபோதையில் லாரியை ஓட்டிவந்த ஓட்டுநர் போதையின் உச்சத்தில் முன்னால் சென்றுகொண்டிருந்த அவர்களின் கார் மீது மோத, அவர்கள் காரோ விபத்துக்குள்ளாகி போனது.
நடந்த கோர விபத்தில் கார் டிரைவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட, உயிருக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றாலும் அடிபட்ட அதிர்ச்சியில் மயங்கி இருந்த அத்ரித்தா அப்போதுதான் மெல்ல கண்விழித்தாள்.
“ம்மா…” என்று அழைத்தவாறே தட்டு தடுமாறி எழுந்தவளுக்கு இருளில் ஒன்றுமே கண்களுக்கு புலப்படவில்லை.
இருந்தும் “ம்மா… ம்மா… எங்க இருக்கீங்க..?” என்றவாறே நாலாபுறமும் பார்வையை தீட்டி பார்த்தாள்.
அதேநேரம் “அத்ரி” என்ற சந்தியாவின் மெல்லிய முனகல் சத்தம் கேட்கவே, சத்தம் வந்த திசையை நோக்கி சென்றவள், இரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிகொண்டிருந்த சந்தியாவை பார்த்ததும் “ம்மா…” என்று கதறியே விட்டாள்.
“ம்மா.. எழுந்திரிங்க ம்மா..” என்று அவரை உலுக்கியவளுக்கு பதற்றத்தில் அடுத்து என்ன செய்வதென்றே தெரியவில்லை.
பின் ஏதோ நினைவு வந்தவளாய் கார் இருக்கும் பகுதிக்கு விரைந்துசென்று கைபேசியை தேடி எடுத்தாள். நடந்த விபத்தில் போனும் உடைந்து போயிருக்க யாரையும் அவளால் தொடர்புகொள்ளவும் முடியாமல் போனது.
நள்ளிரவு நேரம், ஹைவே பகுதி என்பதால் அந்நேரத்தில் யாரிடம் சென்று என்ன உதவியை அவளால் கேட்க முடியும்..?
இருந்தும் அந்த வழியாக அரிதாக சென்ற வாகனங்களை தடுத்து நிறுத்த அவளும் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தாள்தான். ஆனால் யாருமே வாகனத்தை நிறுத்த கூட முன் வரவில்லை.
எந்த வழியும் புரியாமல் அடுத்து என்ன செய்வதென்றும் தெரியாமல், “ம்மா…” என்று அழுதவள், சந்தியாவையேதான் சுற்றி சுற்றி வந்தாள்.
அதேசமயம் அவரும் எவ்வளவு நேரம்தான் தன் உயிரை இழுத்துபிடித்து கொண்டிருப்பார்..
கையசைவால் அவளை தன் அருகே அழைத்து, அவள் மடியில் தலைசாய்த்தவர், அவளை பார்த்தவாறே தன் உயிரை துறந்துவிட,
“ம்மா….” என்று அலறியே விட்டாள் அத்ரித்தா…
பின் “ம்மா…. ம்மா….” என்று அழுதவாறே அவரை எழுப்பும் பொருட்டு அவரின் கன்னங்களை தட்டி பார்த்தாள். ஆனால் எந்த பயனும் இல்லை.
“கண்ணத்தொறங்க மா… என் கிட்ட பேசுங்கம்மா… உங்க அத்ரிக்கிட்ட பேசுங்கம்மா…. என்ன விட்டுட்டு போகாதீங்க ம்மா… நான் அப்புறம் உங்ககிட்ட பேசவே மாட்டேன் ம்மா… வேக் அப் ம்மா” என்று அவர் உடலை உலுக்கி கதறி அழுதவள் ஒருகட்டத்தில் கற்சிலையாக அங்கேயே சமைந்தும் போனாள்.
அந்த நிகழ்விற்கு பின் அத்ரித்தா மொத்தமாகவே உடைந்து போயிருந்தாள்.
சரியாக உண்பதில்லை, உறங்குவதில்லை திக் பிரம்மை பிடித்தவள் போல தன் அறையிலேயே தன்னை சிறை வைத்து கொண்டாள்.
சில சமயங்களின் கண்களால் பார்த்த ஒன்றை மனது ஏற்றுகொள்ள அடம்பிடிக்கும். அவள் மனம் கூட அடம்பிடித்தது அவர் இனி இல்லை என்பதை ஏற்றுகொள்ள மாட்டேன் என்று.
யாரை தன் உலகமாக நினைத்து இத்தனை காலங்கள் வாழ்ந்தாளோ, அவர் இனி அவள் உலகில் இல்லை என்பதை அவளால் ஜீரணித்து கொள்ளவே முடியவில்லை.
அவரை காப்பாற்ற முடியவில்லையே என்ற குற்ற உணர்வு ஒரு பக்கம் அவளை காயப்படுத்தியது என்றால்… அன்று தனக்கு யாரும் உதவவில்லையே என்ற கோவம் ஒட்டு மொத்த மனித சமூகத்தின் மீதும் அவளுக்குள் ஒருவித வெறுப்பைதான் ஏற்படுத்தியிருந்தது.
அன்று யாராவது ஒருவர் அவளுக்கு உதவி இருந்தால் கூட இன்று அவள் தன் தாயையும் இழந்திருக்க மாட்டாள், தன்னையும் இந்த அளவிற்கு வருத்தி கொண்டிருக்க மாட்டாள்.
சோமசுந்தரமும் மகளிடம் எவ்வளவோ பேசி பார்த்துவிட்டார். ஆத்மனை தேற்றியவரால் அத்ரித்தாவை தேற்ற முடியவில்லை.
அவளுக்காக பிஸ்னசையெல்லாம் ஓரம் கட்டிவிட்டு முழு நேரமும் அவளுடனேயே இருந்தார். ஆனால் அவளோ தனக்கு யாருமே வேண்டாமென்று சந்தியாவின் நினைவுகளுடன் தன்னை தனிமைபடுத்தி கொண்டாள்.
தன் கண் முன்னிலையிலேயே சந்தியா உயிரை விட்டது வேறு அவள் மனதை வெகுவாக பாதித்திருக்க, சோமசுந்தரமும் அவளை கவுன்சிலிங், சைக்கார்டிஸ்ட் என்று எங்கெங்கோ அழைத்து சென்று பார்த்து விட்டார்.
ஆனால் அவள்தான் யாரிடமும் வாயை திறப்பதில்லை என்று பிடிவாதமாகவே இருந்துவிட்டாள்.
இந்த ஐந்தாண்டுகளில் எந்த ஒரு நிகழ்வுமே சந்தியாவின் நினைவுகளிலிருந்து அவளை மீட்டெடுக்கவில்லை.
இப்படியே ஐந்தாண்டுகாலங்கள் கழிந்திருக்க, அன்று சந்தியாவின் நினைவுநாள் என்பதால் எப்போதும் போல தனியாக விபத்து நடந்த பகுதிக்கு கிளம்பி சென்றாள் அத்ரித்தா.
இந்த ஐந்தாண்டுகளில் அவள் வெளியில் செல்வது என்றால் அது இந்தநாள் மட்டும் தான். அதுவும் தனியாகதான்.
விபத்து நடந்த பகுதிக்கு வந்து காரை சாலையோரமாக நிறுத்தியவளுக்கு அன்று நடந்த நிகழ்வுகள் எல்லாம் கண்முன்னே படமாக ஓட, அவளையும் மீறிகொண்டு அவள் விழிகளோரம் கண்ணீர் துளிர்த்தது.
“ம்மா… நீங்க எங்க இருக்கீங்க ம்மா… என்னையும் உங்க கூட கூட்டிட்டு போய்டுங்க. நீங்க இல்லாம என்னால வாழ முடியாது மா… எனக்கு இங்க எதுவுமே பிடிக்கல… யாரையுமே பிடிக்கல… எனக்கு நீங்க வேணும் ம்மா… நீங்க மட்டும்தான் வேணும் ம்மா…” என்று சொல்லிகொண்டே அழுதவளுக்கு உள்ளுக்குள் அப்படியொரு வலி.
பின் எவ்வளவு நேரம் அங்கேயே இருந்தாளோ, மீண்டும் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருக்கும் போதுதான் சாலையோரத்தில் ஏதோ ஒரு வாகனத்தில் அடிப்பட்டு, இரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த பூனை குட்டியை பார்த்தாள்.
மேற்கொண்டு செல்ல மனமில்லாமல் காரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு அதன் அருகே சென்று பார்த்தாள்.
அதன் வயிற்றுபகுதி மேலும் கீழுமாக ஏறி இறங்கியபடி இருக்க அந்த பூனை குட்டி இன்னும் உயிருடன் தான் இருக்கிறது என்பதை உறுதிசெய்து கொண்டாள்.
‘அன்பு, கோவம், வலி, வருத்தம், ஏக்கம், பிரிவு எல்லாம் மனிதர்களுக்கு மட்டுமல்ல இந்த உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்குமே உண்டு” என்று சந்தியா சொன்ன வார்த்தைதான் அந்நேரம் அவள் நினைவிற்கு வந்து போனது.
ஆம் அதுதானே நிஜம்… உருவ அமைப்பை வைத்து மனிதன் வேண்டுமானால் ஜீவராசிகளை ஒரறிவு முதல் ஆறறிவு வகைப்படுத்தி பார்க்கலாம்..
ஆனால் இயற்கை..! இயற்கையின் கண்ணோட்டத்தில் மனிதன் உட்பட அனைத்து ஜீவராசிகளும் ஆத்மாவாக மட்டும்தானே அடையாளம் காணப்படும். அதைத்தானே பகவத்கீதையும் நமக்கு சொல்கிறது.
எந்த ஜீவராசியாக இருந்தால் என்ன..? உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் ஒரு உயிரை காப்பாற்றுவதுதானே ஒரு நல்ல மனிதத்திற்கு அழகு. அதைத்தானே சந்தியாவும் அவளுக்கு சொல்லி கொடுத்திருந்தார்.
ஈ, எறும்பு தண்ணீரில் விழுந்து தத்தளித்தாலே அவளால் தாங்கி கொள்ள முடியாது. அப்படிப்பட்டவளால் எப்படி மற்றவர்களை போல கண்டும் காணாமல் கடந்து செல்ல முடியும்…
அத்தோடு இரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிகொண்டிருந்த அந்த பூனை குட்டியை பார்க்கும் போதெல்லாம் அன்று அவர்களுக்கு நடந்த விபத்து மட்டும்தான் அவள் நினைவிற்கு வந்து போனது.
இதே மாதிரிதானே அன்று அவள் அம்மாவும் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
அன்று அவளுக்கு உதவ மறுத்தவர்கள் செய்த அதே தவறை இன்று அவள் செய்ய விரும்பவில்லை.
அதிகம் யோசிக்காமல் வெள்ளை மற்றும் பிஸ்கட் நிறத்தில் இருந்த அந்த பூனை குட்டியை சட்டென்று கையில் எடுத்தவளுக்கு தன்னையும் அறியாமல் கைகள் நடுங்கியதோடு, கண்களும் மெல்ல கலங்கி போயின.
இழந்தவர்களுக்கு தானே தெரியும் ஒரு உயிரின் இழப்பு எவ்வளவு வலியையும், தாக்கத்தையும் ஏற்படுத்துமென்று.
எப்படியாவது அதை காப்பாற்றி விடவேண்டும் என்பது மட்டும்தான் அந்நேரம் அவள் மனதிற்குள் ஓடி கொண்டிருந்தது.
காரை கிளப்பிகொண்டு பக்கத்திலிருந்த மருத்துவமனைக்கு சென்றவளுக்கு தெரியவில்லை மனிதர்களுக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவமனையில் விலங்குகளுக்கு மருத்துவம் பார்க்கமாட்டார்கள் என்று.
பின் மருத்துவமனை வாட்ச்மேன் மூலமாக பக்கத்திலிருக்கும் கால்நடைமருத்துவமனை விலாசத்தை பெற்று கொண்டு அதிவேகமாக அங்கிருந்து காரை கிளம்பியவள், அடிக்கடி பக்கத்து இருக்கையில் கிடத்தியிருந்த பூனையை .ஒரு பார்வை பார்த்தவாறே காரை செலுத்தினாள்.
என்னதான் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்துவிட்டாலும், ஒருவித பதற்றத்துடன்தான் மருத்துவர் அறைக்கு வெளியில் அமர்ந்திருந்தாள் அத்ரித்தா.
அதிகம் அவளை காக்கவைக்காமல் பூனைக்குட்டிக்கு சிகிச்சை கொடுத்த மருத்தவர் வெளியில் வந்து உயிருக்கு இனி எந்த ஆபத்தும் இல்லை என்று கூற, அத்ரித்தாவிற்கு அப்போதுதான் உயிரே வந்தது போல இருந்தது.
இருப்பினும் அந்த பூனைகுட்டிக்கு பின்பகுதியில் அதிகம் அடிப்பட்டிருந்ததாலும், அதன் பின்னங்காலில் ஒருகால் நசுங்கியிருப்பதாலும் அந்த காலை நீக்குவதை தவிர வேறு வழியில்லை என்று மருத்துவர் சொன்னபோதுதான் அவளுக்கு சங்கடமாகிபோனது.
இருந்தும் அதை மறைத்துகொண்டு “நான் போய் பார்க்கலாமா..டாக்டர்..?” என்று கேட்வளுக்கு அவரும் சரி என்க, மனதை திடப்படுத்தி கொண்டு உள்ளே சென்றாள் அத்ரித்தா.
சீரான மூச்சி காற்றை இழுத்துவிட்டபடி மருந்தின் வீரியத்தால் அந்த பூனைகுட்டி கண்கள் மூடிய நிலையில் படுத்திருக்க மெல்ல அதனருகே சென்றாள்.
அதன் முன்னங்கால் ஒன்றில் டிரிப்ஸ் ஏறிக்கொண்டிருந்தது.
தலையை சாய்த்து சாய்த்து அந்த பூனை குட்டியையே சிலகணங்கள் பார்த்திருந்தவளுக்கு அதை தொட்டு பார்க்க வேண்டும் போல இருந்தது.
மெல்ல கையை அதன் அருகே கொண்டு சென்றவள், என்ன நினைத்தாளோ உடனே கையை பின்னுக்கு இழுத்து கொண்டாள்.
இப்படியே சில கணங்கள் நீடிக்க, பின் ஒரு முடிவு எடுத்தவளாய் அதன் முதுகுபகுதியை மெல்ல தொட்டாள்.
பஞ்சினை தொட்டது போல மிருதுவாகவும், மென்மையாகவும் இருக்க, லேசாக அதன் முதுகு பகுதியை மென்மையாக வருடிவிட்டாள்.
அவளின் தொடுகையை உணர்ந்தது போல அந்த பூனை குட்டியும் உடலை லேசாக அசைக்க, இருகரங்களாலும் வாயை மூடிகொண்டவளுக்கோ அப்படியொரு அழுகை.
அது அழுகை என்று சொல்லிவிட முடியாது.. இங்கு வருவதற்கு முன்னால் வரை எந்த ஒரு அசைவும் இல்லாமல் இருந்த உடம்பில் அசைவை உணர்ந்ததால் வந்த ஆனந்த கண்ணீர் அது. ஒரு உயிரை காப்பாற்றி விட்டோமே என்ற மனநிம்மதியில் வந்த கண்ணீர் அது.
அந்த உணர்வையெல்லாம் வெறும் வார்த்தைகளால் வடித்து விடமுடியாது.
ஐந்தாண்டு காலமாக மனதில் இருந்த நெருடல் கொஞ்சம் கொஞ்சமாக குறைவது போல இருந்தது அவளுக்கு. பெரிதாக எதையோ சாதித்துவிட்ட திருப்தி அவள் மனம் முழுவதும் நிரம்பியிருந்தது.