குறைந்தது இரண்டு நாட்களாவது மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டுமென்று மருத்துவர் சொல்ல, அதன் பின்னே வீடு வந்து சேர்ந்தாள்.
ஹாலில் அமர்ந்திருந்த சோமசுந்தரத்தின் பார்வையில் அவளின் ஆடைகளில் படிந்திருந்த இரத்தகறை படவே, என்னவென்று விசாரித்தவரிடம் சுருக்கமாக கூறி முடித்தவள் எப்போதும் போல தன் அறைக்கு சென்று அடைந்து கொண்டாள்.
அசதி தீர குளித்து முடித்துவிட்டு வந்தவளுக்கு மீண்டும் அந்த பூனைகுட்டியின் நினைவு வரவே, மருத்துவருக்கு அழைத்து அதன் உடல்நலனை விசாரித்துவிட்டு வைத்தவளுக்கு அன்று இரவு உறக்கமே வரவில்லை அந்த பூனை குட்டியை நினைத்து.
எப்போது விடியும் என்று காத்திருந்தவள், காலையிலேயே கிளம்பி காரை கிளப்பி கொண்டு செல்ல, பால்கனியில் நின்றபடி செல்லும் மகளையே பார்த்து கொண்டிருந்தார் சோமசுந்தரம்.
ஐந்தாண்டு காலமாக இந்த மாதிரியான ஒரு மாற்றத்தைதானே அவளிடம் அவரும் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தது.
நேற்றெல்லாம் மயக்க நிலையிலேயே இருந்த பூனை குட்டி, இன்று பயமில்லாமல் தன் கடல் நீல நிற விழிகளை உருட்டி உருட்டி அவளை பார்த்ததோடு, “மியாவ்” என்று மெலிதாக சத்தம் எழுப்ப, அதை மெல்ல தடவி கொடுத்தாள் அத்ரித்தா.
தன் வலிகளையெல்லாம் மறந்துவிட்டு தடவி கொடுத்தவளின் கரத்தை முன்னிருகால்களாலும் பற்றி கொண்ட அந்த பூனை குட்டி, அவளின் விரலை பற்கள் படாமல் கடித்து விளையாட, அத்ரித்தாவோ தன்னையும் மறந்து சத்தம் போட்டே சிரித்துவிட்டாள் அதன் செயலால்.
“யூ நாட்டி கிட்டன்” என்று சிரித்துகொண்டே ஆள்காட்டி விரலால் அதன் மூக்கை அவள் தொட, பூனை குட்டியோ முன் போலவே அவள் விரலை பற்றிகொண்டு விளையாட ஆரம்பித்து விட்டது.
அடுத்த இரண்டுநாட்கள் அவள் அதிகம் இருந்தது என்னவோ அந்த பூனைகுட்டியுடன் தான். அவளுக்கே புதிதாகதான் இருந்தது அவள் செயல்கள் யாவும்.
ஏதோ ஒரு ஈர்ப்பு அதனிடம் அவளுக்கு. அதிகம் பிடித்திருந்தது. அதனுடன் இருக்க, விளையாட பிடித்திருந்தது. அதன் துருதுருவிழிகளும், அது செய்யும் சேட்டைகளும் அவளை இன்னும் அதனிடம் ஈர்த்ததென்றே சொல்லலாம்.
ஓரளவு சரியானபின் பூனைகுட்டியை தான் நடத்திவரும் பெட் கேரில் வைத்து பார்த்து கொள்வதாக மருத்துவர் சொன்னபோது அத்ரித்தாவோ ஓரே அடியாக மறுத்துவிட்டாள்.
அவளுக்கு தெரியும்.. அவளால் இனி அந்த பூனை குட்டியை பிரிவதென்பது முடியாத காரியம் என்று.
வீட்டினரிடம் கூட எதுவும் கேட்காமல் மருத்துவரிடம் ஒன்றிற்கு மூன்று முறை அதற்கு தேவையான விவரங்களையெல்லாம் கேட்டுதெரிந்து கொண்டவள் அதன் பின்னே, பூனைகுட்டியை தன்னுடன் வீட்டிற்கு எடுத்து சென்றாள்.
ஆத்மனிடம் காட்டியபோது அவனோ பெரிதாக எந்த ஆர்வமும் காட்டவில்லை.
சோமசுந்தரம் மகளின் சந்தோஷம் தான் முக்கியம் என்று அவள் ஆசைக்கு தடைவிதிக்கவில்லை.
இருள் படர்ந்திருந்த தன் வாழ்வில் சிறு ஒளிகீறலாய் வந்த அந்த பூனை குட்டிக்கு ‘ஆரா’ என்று பெயர்வைத்து அன்போடு வளர்த்து வந்தாள் அத்ரித்தா.
ஆரம்பத்தில் புது இடம், புது மனிதர்களை பார்த்து பயத்தில் விடாமல் கத்திக்கொண்டிருந்த ஆரா அவளின் அருகாமையால் மெல்ல மெல்ல சகஜநிலைக்கு திரும்பியது.
அவளின் கரிசனத்தாலும், அன்பாலும் ஆராவின் உடல் நிலையிலும் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது.
ஒரு கால் இல்லாததால் ஆரம்பத்தில் எழ முடியாமல் அவதிபட்ட ஆரா பின் மற்ற மூன்று கால்களின் உதவுயுடன் மெல்ல எழ ஆரம்பித்ததோடு நொண்டி நொண்டி நடக்கவும் ஆரம்பிக்க, அத்ரித்தாதான் அதிகம் சந்தோஷபட்டு போனாள்.
அவளோடு விளையாடுவதும், அவள் மடியில் படுத்துகொள்வதும் என்று எந்நேரமும் ஆரா அவளையேதான் சுற்றி சுற்றி வந்தது.
எந்த அன்பு அவள் மனதை சுக்குநூறாக உடைத்ததோ.. அதே அன்பு உடைந்திருந்த அவள் மனதை மெல்ல மெல்ல ஒட்டவைத்தது ஆரா-வின் உருவில்.
அன்பு ஏற்படுத்திய காயத்திற்கு மருந்தும் அன்புதானே.
ஏன் அன்பு என்பது ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதன் மீது மட்டும்தான் வர வேண்டுமா..? நிச்சயமாக இல்லை…
அன்பு என்பது ஒரு உண்ணதமான உணர்வு. அது யார் மீது எப்போது வேண்டுமானாலும் வரலாம்.
அதற்கு பாலினம் தெரியாது.. உயர்திணை அஃறிணை தெரியாது.. நல்லவர் கெட்டவர் தெரியாது… ஆம் அன்பிற்கென்று எந்த வரையறைகளும் கிடையாது.
அன்பு அடுத்தவர் முன் நம்மை மண்டியிடவும் வைக்கும்.. வெட்கம் விட்டு கையேந்தவும் வைக்கும்.
அந்த அன்பிற்கு தெரிந்ததெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.. எவ்வளவு காயத்தை கொடுத்தாலும் அது திருப்பி அன்பை மட்டும்தான் கொடுக்கும்…
ஆரம்பத்தில் கண்டுகொள்ளாத ஆத்மன் கூட நாளடைவில் ஆராவுடன் அதிகம் ஒன்றிபோனான்.
சொல்லபோனால் செல்லபிராணி என்ற நிலையை தாண்டி அந்த வீட்டில் ஒரு அங்கத்தினராகவும், அனைவருக்கும் செல்ல பிள்ளையாகவுமே வலம் வந்தது ஆரா.
அதேசமயம் ஆரா செய்யும் சேட்டைகளும் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டேதான் போயின.
குளிக்கலாம், பெட் கிளினிக் போகலாம் என்று சொல்லிவிட்டால் போதும் அன்றைய நாள் முழுவதும் யார் கண்களிலும் படாமல் எங்காவது சென்று ஒளிந்துகொள்ளும்.
அவளின் ஆடையை கடித்திழுத்து தன்னுடன் விளையாட அழைக்கும். அவள் தூங்கும் போது அவள் முகத்தை நக்கிவிடும்.
எங்காவது அவள் சென்று விட்டு வந்தாளோ ஓடி வந்து அவள் நாசியோடு நாசியை வைத்து நுகர்ந்து விட்டு, முத்தமிடு என்பது போல அவள் வாயருகே தலையை தாழ்த்தி காட்டும்.
அத்ரித்தா எங்காவது வெளியில் கிளம்பினாலோ என்னை விட்டு போகாதே என்பதுபோல் ஷாலின் நுனியை வாயால் கவ்வி கொண்டு தொங்கலாடும்.
காரை பார்த்துவிட்டால் போதும் ஓடி சென்று காரில் அமர்ந்து கொள்ளும் காரில் போகவேண்டும் என்பது போல.
என்னதான் ஆரா சகஜமாக ஓடியாடி விளையாடினாலும்… ஒரு கால் இல்லாமல் தாவும் போதும், ஓடும் போதும் அதற்கு ஏற்படும் அசௌகரியத்தை அத்ரித்தாவும் கவனிக்கவே செய்தாள்.
அந்த மாதிரியான சூழ்நிலையில்தான் விபத்து போன்றவைகளில் கால்களை இழந்த விலங்குகளுக்கு செயற்கைகால் பொருத்தும் வீடியோ ஒன்றை பார்த்தவள், அதற்கான முயற்சியில் இறங்கிய போதுதான் திரிபுராவையும், இனியனையும் அவள் சந்தித்தது கூட.
திரிபுரா திருமணம் கூட செய்து கொள்ளாமல் தெருவில் அனாதையாக சுற்றி திரியும் மற்றும் விபத்தில் அடிப்பட்டு உறுப்புகளை இழந்த விலங்குகளை சென்னைக்கு அவுட்டரில் லீசுக்கு இடம் வாங்கி பராமரித்து வருபவர்.
இனியன் பெயருக்கேற்றார் போல இனியவனாகத்தான் இருந்தான். ஐ.டி துறையில் வேலை பார்த்தாலும், புளூ கிராசில் ஒரு உறுப்பினராக இருந்து கொண்டு கிடைக்கும் நேரங்களில் தன்னால் ஆன உதவிகளை வாயில்லாத ஜீவராசிகளுக்கு செய்து வருவதை வழமையாக கொண்டிருப்பவன்.
ஆராவிற்கு செயற்கை கால் பொருத்துவதற்கு கூட இனியன்தான் அவளுக்கு அதிகம் உதவி செய்தது.
இப்படித்தான் அவர்கள் இருவருக்கும் இடையேயான நட்பும் ஆரம்பமானது.
ஆராவைபோலவே இங்கு பல ஜீவராசிகளுக்கு உதவி தேவைப்படுவதை அவர்கள் இருவரின் மூலமாகவும் அறிந்தவள் தானும் அந்த ஜீவராசிகளுக்கு உதவுவதென்று முடிவு செய்தாள்.
ஒரு மனிதனுக்கு எப்படியும் இன்னொரு மனிதனின் உதவி கிடைத்துவிடும்… ஆனால் இந்த வாயில்லாத ஜீவன்களுக்கு.? என்ற கேள்விக்கு தன்னையே பதிலாக்கி கொண்டாள் அத்ரித்தா.
அவர்கள் இருவருடனும் இணைந்து இரவு நேரங்களில் சாலைகளில் சுற்றி திரியும் நாய் மற்றும் பூனைகளுக்கு விபத்து ஏற்படுவதை தவிர்க்க அவைகளுக்கு ஒளிரும் கழுத்துபட்டை அணிவிப்பதும், தன்னார்வ குழுக்கள் மூலமாக விபத்தில் அடிப்பட்ட ஜீவராசிகளுக்கு உடனுக்குடன் மருத்துவசிகிச்சை அளித்து அதன் உயிரை காப்பாற்றுவதும், சாலையோரம் சுற்றி திரியும் ஜீவன்களுக்கு கோடை காலங்களில் தேடி சென்று தண்ணீர் மற்றும் உணவு அளிப்பதென்று என்று தன் கடந்த கால வலிகளையெல்லாம் மறந்து முழு நேரமும் அவைகளுடனேயே இருந்தாள்.
அத்தோடு நில்லாமல் அவைகளுக்கு தேவையான மருத்துவசிகிச்சைக்கும் ஏற்பாடு செய்தவள்,
வாய் பேச முடியாத அந்த ஜீவன்களின் கண்களை படித்தே அவைகளின் தேவைகளை புரிந்துகொள்ளும் அளவிற்கு முன்னேறியும் போனாள்.
அதேசமயம் அந்த ஜீவன்களும் அவள் மீது அன்பு பாராட்டவே செய்தது. எங்கு அவளை பார்த்துவிட்டாலும் சரி ஓடி வந்து எம்பி, நாவால் நக்கி அவள் மீதான அன்பை வெளிப்படுத்தும் போதெல்லாம் அவள் மனம் அடையும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
ஒரு காலத்தில் அறைக்குள்ளே அடைந்திருந்தவள் இன்று புது உலக காற்றை சுவாசிக்க ஆரம்பித்திருந்தாள்.
மற்றவர்களின் முகத்தை பார்த்து கூட பேசாதவள் இன்று தானாக சென்று அனைவரிடமும் பேசினாள். அதிலும் இனியனுடனான அவள் நட்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டேதான் சென்றது.
அவன் சொல்லிதான் பாதியில் விட்ட கல்லூரி படிப்பை கூட அவள் முடித்தது.
அதற்கு அடுத்த மூன்றாண்டு காலங்கள் அழகாகவும், அமைதியாகவும் கழிய, அன்று அவளிடம் தனியாக பேச வேண்டுமென்று இனியன் அழைத்திருக்க அவளும் கிளம்பிசென்றாள்.
எப்படி சொல்வதென்று சில கணங்கள் தயங்கியவன், ‘திருமணம் செய்து கொள்ளலாமா..?’ என்று நேரிடையாகவே அவளிடம் கேட்டு விட, அத்ரித்தா மறுக்கவும் இல்லை அதேசமயம் தன் சம்மதத்தை அவனிடம் தெரிவிக்கவும் இல்லை.
அவளை பொறுத்தவரை இனியன் அவளுக்கு ஒரு நல்ல நண்பன். சொல்ல போனால் அவளுக்கு கிடைத்த முதல் நட்பு கூட அவன் தான்..
அப்பட்பட்டவன் திடீரென்று திருமணம் பற்றி கேள்வியெழுப்பிய போது அவள் கொஞ்சம் தடுமாறிதான் போனாள்.
மறுப்பதற்கு அவளிடம் காரணங்கள் இல்லை என்றாலும் அவர்களுக்கு இடையேயான நட்பை அடுத்த கட்ட நிலைக்கு எடுத்து செல்வதற்கான காரணங்கள் அவளிடம் நிறையவே இருந்தன.
இந்த மூன்றாண்டு காலங்களில் அவனிடம் எந்த ஒரு குறையையும் அவள் கண்டதுமில்லை… அடுத்தவர் சொல்லி அவள் கேட்டதுமில்லை.
அவளை போலவே யோசிப்பவன்.. சில சமயங்களில் அவளுக்கும் சேர்த்து யோசிப்பவன்.. சொல்லபோனால் அவள் முன் கண்ணாடியாக இருப்பவன்.
என்னதான் அவன் மீது அவளுக்கு காதல் இல்லையென்றாலும் ‘நீ எப்படி இருக்கிறாயோ அப்படியே உன்னை ஏற்றுக்கொள்கிறேன்’ என்று சொல்லும் ஆண்மகனை எந்த பெண்ணிற்குதான் பிடிக்காது. அவளுக்கும் பிடித்திருந்தது.
இருந்தும் தந்தையிடம் பேசுமாறு அவள் தன் சம்மதத்தை மறைமுகமாக சொல்ல, அவனும் அடுத்த நாளே சோமசுந்தரத்திடம் பேசினான்.
வசதி வாய்ப்பில் தங்கள் உயரத்திற்கு முன் அவன் குறைவே என்றாலும் மகளின் சந்தோஷத்திற்காக சோமசுந்தரமும் சம்மதம் தெரிவித்தார்.
அதற்காக அவனுக்கு வசதி வாய்ப்பே இல்லை என்றும் முடிவு கட்டிவிடமுடியாது.
திருமணத்திற்கு பின் அவள் வீட்டில் அவள் இருந்தது போல இருக்க வேண்டும் என்பதற்காகத்தானே கையில் இருந்த சேமிப்புகளையெல்லாம் போட்டு சிறிய அளவில் அவன் கம்பெனி ஆரம்பித்திருப்பது கூட.
அதன்பின் ஒரு நல்ல நாள் பார்த்து பெண்பார்க்கும் படலம்.. நிச்சயம் என்று நாட்கள் அழகாய் நகர, தங்கள் வாழ்க்கையின் அடுத்தகட்ட அத்தியாத்தை எதிர்நோக்கி ஆவலோடு காத்திருந்தனர் இருவரும்.
ஆனால் அந்த அத்தியாயம் அவர்கள் நினைப்பது போல் இருக்கபோவதில்லை என்பதை அந்நேரத்தில் அவர்கள் இருவருமே அறிந்திருக்கவில்லை.
இன்று கூட இருவருக்கும் காலையில் நலுங்கு வைக்கப்பட்டு, அன்று மாலையே மெஹந்தி ஃப்ங்ஷனும் ஏற்பாடு செய்யபட்டிருந்தது.
ஆட்டம் பாட்டம் எல்லாம் முடிந்து வந்திருந்த விருந்தினர்கள் அனைவரையும் வழியணுப்பி விட்டு, “ஆரா” என்று அழைத்தவாறே அதற்கான உணவுடன் அறைக்குள் வந்தவள், அப்போதுதான் ஆரா-வின் படுக்கை காலியாக இருப்பதை கவனித்தாள்.
காலை முதலே வீட்டிற்கு சொந்த பந்தங்கள் வந்த வண்ணமாக இருந்ததால், ஆரா அவள் அறையிலேயேதான் அடைந்திருந்தது.
அத்தோடு ஆரா இப்போது நிறைமாதமாகவும் இருப்பதால் அவளும் அதை அதிகம் தொந்தரவு செய்யவில்லை.
தன் அறை முழுவதும் தேடிபார்த்தவள், வழமையாக ஆரா அமர்ந்து வேடிக்கை பார்க்கும் பால்கனி பகுதி சென்று பார்த்தாள். அங்கேயும் ஆரா இல்லாமல் போகவே, பின் வீடு முழுவதும் தேட ஆரம்பித்தாள்.
அவள் ஒரு முறை அழைத்தாலே எங்கிருந்தாலும் ஓடி வந்து அவள் முன்னால் நிற்கும் ஆரா.. ஒரு மணிநேர தேடலுக்கு பின்னும் வராமல் போகவே ஒருவித பயமும் பதற்றமும் அவளை தொற்றிகொண்டது.
நடந்த விபத்தில் பின் பகுதியில் அதிகம் அடிப்பட்டதன் விளைவால் இரண்டு முறை கருத்தரித்தும் கருச்சிதைவு ஏற்பட்டுவிட இப்போதுதான் ஆரா மீண்டும் கருத்தரித்திருந்தது.
அதுவும் எப்போது வேண்டுமானாலும் குட்டி போடலாம் என்ற நிலையில்போய் காணவில்லையென்றால் யாருக்குதான் நெஞ்சம் பதறாது.
“அப்பா.. பிளீஸ் அவ ஆரா..” என்று அவள் திருத்தி சொல்ல,
“சரிடா.. உனக்கும் எனக்கும் ஆரா… ஆனா மத்தவங்க பார்வைக்கு..?” என்று கேள்வியெழுப்பியவர்,
“நீ முதல்ல ரிலாக்ஸ் ஆகு அத்ரி. சில சமயங்கள்-ல நம்ம கண்ணுக்கு முன்னாடி இருக்கறத கூட நம்ம பதற்றம் மறைச்சிடும். இன்னும் ஒரு தடவை நாம எல்லா இடத்துலயும் தேடி” என்றவர் முடிக்கும் முன்பே,
“இல்லப்பா நான் எல்லா இடத்துலயும் தேடிட்டேன் ப்பா” என்றாள் அவசர அவசரமாக.
“சி.சி.டி.வி-ல செக் பண்ணியா…?” என்றவரின் கேள்விக்கு, “ப்ச்” என்று தலையில் கை வைத்தவள்,
பின் அவர் அறையில் இருந்த லேப்டாபின் முன் அமர்ந்து ஒரு மணிநேரத்திற்கு முன்பான சி.சி.டி.வி ஃபுட்டேஜ்களை பார்த்து கொண்டிருக்கும் போதுதான் இனியனும் அவளை போனில் அழைத்திருந்தான்.
விஷயம் கேள்விபட்டு அடுத்த ஐந்து நிமிடங்களில் அவனும் அங்கு வந்து சேர்ந்துவிட, இருவரும் சேர்ந்தே புட்டேஜ்களை பார்வையிட்டனர்.
நிதானமாக ஃபுட்டேஜ்-களை பார்த்துகொண்டிருக்கும் போதுதான் அவள் அறையிலிருந்து வெளிவந்த ஆரா, நேராக கார்டன் பகுதிக்கு சென்று அங்கிருந்த புல்வெளியில் உருண்டு புரண்டு படுத்திருந்ததும், அதன் பின் வாயிற்பகுதியில் சிறிதுநேரம் அமர்ந்திருந்தது அங்கிருந்த அவர்களின் காரில் ஏறிக்கொள்ள, அதை பார்த்தவளுக்கோ அப்போதுதான் உயிரே வந்தது போல இருந்தது.
விரைந்து கார் இருக்கும் பகுதிக்கு சென்றவளுக்கு ஏமாற்றம்தான் அங்கு கார் இல்லாததை கண்டு.
பின் டிரைவரை அழைத்து விசாரித்த போதுதான் காரை ஆத்மன் எடுத்து சென்றிருப்பது தெரிய வர, உடனே அவனுக்கு அழைத்தாள்.
இரண்டு மூன்று முறை அழைத்தபிறகுதான் அவள் அழைப்பை ஏற்றிருந்தான் ஆத்மன்.
எடுத்த எடுப்பிலேயே “எங்கடா இருக்க..?” என்றவளின் கேள்விக்கு, மறுமுனையில் இரைச்சல் கலந்த பாடல் சத்தம் மட்டுமே கேட்க, இப்போது அத்ரித்தாவிற்கு எரிச்சல்தான் வந்தது.
பின் இனியன் தான் அவளிடமிருந்து போனை வாங்கி ஆத்மனிடம் பேசிவிட்டு வைக்க, அத்ரித்தாவோ என்ன என்பதுபோல அவனை பார்த்தாள்.
அவர்களின் திருமணத்தையொட்டி அவனுடைய தோழமைகளுக்கு பார்ட்டி கொடுத்து கொண்டிருப்பதாக இனியவன் மூலம் அறிந்தவளுக்கு ஆத்மன் மீது கோவம்தான் வந்தது.
‘லைசன்ஸ் இல்லாமல் யாரைகேட்டு காரை எடுத்து சென்றானென்று…?‘
அத்தோடு காருக்குள் இருக்கும் ஆராவிற்கு என்ன ஆனதோ என்ற பயமும், பதற்றமும் அதிகரிக்க, இனியவனின் காரிலேயே ஆத்மன் இருக்கும் அந்த உயர்தர பார்டி ஹாலுக்கு விரைந்து சென்றனர்.
ஆத்மனை தேடிகொண்டு இனியன் இரண்டாம் தளத்திற்கு செல்ல, அத்ரித்தாவோ நேராக கார் பார்கிங் பகுதிக்கு தான் சென்றாள்.
அது நான்கு தளங்களுக்கும் பொதுவான கார் பார்கிங் என்பதால், நிறையவே கார்கள் அணிவகுத்து நிற்க, வெகு சிரமபட்டே அவர்கள் காரை கண்டுபிடித்தவளுக்கு மீண்டும் ஏமாற்றம்தான் ஆரா காருக்குள் இல்லாததால்.
கார் கதவின் கண்ணாடி கீழ் இறங்கி இருக்கவே, ஒருவேளை அது வழியாக வெளியில் சென்றிருக்குமோ என்று நினைத்தவள் “ஆரா” என்று அழைத்தவாறே சுற்றும் முற்றும் தேடி கொண்டிருக்கும் போதுதான் இனியன் ஆத்மனுடன் அங்கு வந்து சேர்ந்தான்.
“என்னாச்சி க்கா..?” என்று கேட்டவனிடமிருந்து வந்த நெடிய மது வாடை ஏற்கனவே எரிந்து கொண்டிருக்கும் அவளுக்குள் எண்ணெய் ஊற்ற, அவன் கன்னத்தில் அவள் ஓங்கி ஒரு அறை விட, அதை பார்த்த அவனுடைய நட்பு வட்டங்களோ ஒரு அடி பின்னுக்கு தள்ளி நின்று கொண்டனர்.
“குடிச்சியிருக்கியாடா…?” என்று கேட்டவாறே கோவமாக அவன் சட்டையை பற்றியவள்,
“என்ன பழக்கம் ஆத்மன் இதெல்லாம்..? யார்கிட்ட கத்துகிட்ட நீ..?” என்று கேட்க ஆத்மனோ தலையை தாழ்த்திகொண்டான்.
“என்ன பாரு ஆத்மன்” என்றவள், “யார கேட்டு நீ கார்-அ எடுத்துட்டு வந்த…? கார்-அ எடுக்கும் போது அதுக்குள்ள என்ன இருக்குனு-லாம் பார்க்க மாட்டியா..? ஆரா காணாம போனதுக்கு நீ மட்டும்தான் ஆத்மன் காரணம்.. நீ மட்டும்தான்” என்று சொல்லும் போதே அவள் குரல் உடைய, பின் இனியன்தான் அவளை சமாதானப்படுத்தினான்.
தன் பங்கிற்கு காருக்குள் தேடிப்பார்த்த ஆத்மனுக்கு வரும் வழியில் இரண்டு நண்பர்கள் வீட்டில் காரை நிறுத்தியது நினைவிற்கு வர,
ஒருவேளை அங்கு எங்காவது இறங்கி இருக்குமோ என்று நினைத்தவன் இனியனிடம் சொல்லிவிட்டு, காரை எடுத்துகொண்டு விரைய,
அத்ரித்தாவும், இனியனும் கார்பார்கிங் பகுதியில் தேட ஆரம்பித்திருந்தனர்.
அங்கு பொறுத்தபட்டிருந்த சர்வைலன்ஸ் கேமாராக்களை கவனித்த இனியன், காரிலிருந்து ஆரா இறங்கியாதா..? இல்லையா..? என்பதை அறிந்துகொள்வதற்காக அவளிடம் சொல்லிவிட்டு சர்வர் அறைக்கு செல்ல,
“ஆரா” என்று சத்தம்போட்டவாறே அந்த கார்பார்கிங் முழுவதும் தேடி அலைந்தாள் அத்ரித்தா.
ஒருவேளை இங்கிருக்கும் காரில் மோதி ஆராவிற்கு அடிப்பட்டு இருக்குமோ என்று நினைக்கும் போதே அவளுக்கு கண்கள் கலங்க, ஒவ்வொரு காரின் அடியிலும் குனிந்து குனிந்து பார்த்தாள்.
அப்படி பார்த்து கொண்டிருக்கும் போதுதான், சற்று தூரத்தில் ஒரு காரின் டயரை ஒட்டி ஆரா படுத்திருப்பது போன்று இருக்க, ஓடிச்சென்று பார்த்தவளுக்கோ உள்ளுக்குள் அத்தனை சந்தோஷம்.
ஆம்.. யாரை இவ்வளவு நேரமாக தேடி அலைந்து கொண்டிருந்தாளோ, அவளின் ஆராதான் அங்கே படுத்திருந்தது.
“ஏய் ஆரா… நீ இங்கதான் இருக்கியா..?” என்றவாறே அருகில் சென்ற அத்ரித்தா ஆராவை தொடவும், மூச்சி வாங்கியபடி இனியன் அவள் முன்னால் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.