அலங்கரிக்கபட்டிருந்த அந்த மணமேடையில் மணப்பெண் கோலத்தில் அழுது வடிந்த முகத்துடன் ஒரு பிணைகைதி போல அமர்ந்திருந்தாள் அத்ரித்தா.
ஒரு மணிநேரத்தில் தன் வாழ்க்கை மொத்தமாய் மாறிபோகும் என்று நிச்சயம் அவள் எதிர் பார்க்கவில்லைதான்.
இத்தனைக்கும் இதற்கு முன்னால் அவனை அவள் பார்த்தது கூட கிடையாது. ஏன் அவன் யாரென்று கூட அவளுக்கு தெரியாது. சொல்லபோனால் நேற்றுதான் அவனை பற்றி ஓரளவு அவள் அறிந்திருந்தது கூட.
அதுவும் ஆத்மன் சொல்லிதான். அவன் ஒரு நடிகன் என்றும், மக்கள் மத்தியில் அதிக பிரபலம் என்றும்.
இத்தனை வருடகாலமாக யாரை தங்களின் குடும்ப நண்பராக நினைத்திருந்தாளோ.. அந்த ஐ.ஜி-யே சோமசுந்தரத்தின் நெற்றிபொட்டில் துப்பாக்கியை வைத்தபடி இருக்க, கனத்த இதயத்துடன் தந்தையை பார்த்தவளின் கண்களிலிருந்து கண்ணீர் துளிகள் உருண்டோடின.
அந்த ஆதித்யதேவ் அறைந்த அறையில் ஆத்மன் ஒருபக்கம் மயங்கி கிடக்க, இனியனோ உடலில் செலுத்தப்பட்டிருந்த போதை ஊசியின் தாக்கத்தால் எழுந்திரிக்கவும் முடியாமல், கண்முன்னே நடக்கும் அநியாயங்களை தடுக்கவும் முடியாமல் தரையில் உழன்று கொண்டிருந்தான்.
தன் ஒருத்தியின் பிடிவாதம் மூவரையும் எந்த அளவிற்கு காயப்படுத்தியிருக்கிறது என்று நினைக்கும் போதே அவளுக்குள் அதிகம் வலித்தது.
அதேசமயம் அவளும் வேண்டுமென்றே எதையும் செய்யவில்லையே… தன்னுடைய இழப்பிற்கான நியாயத்தைதானே அவனிடம் அவள் கேட்டாள். அதுஎப்படி தவறாகும்..? அப்படியே தவறாக இருந்தாலும் அதற்காக அவன் கொடுக்கும் தண்டனை சற்றும் ஏற்புடையது இல்லைதான்…
திருமணத்திற்காக வந்திருந்த இருவீட்டினரின் சொந்த, பந்தங்கள் அனைவரும் போலீசாரால் வெளியேற்றபட்டு மண்டபம் முழுமையும் அவனுடைய கட்டுப்பாட்டிற்கு கீழ் இருக்க, இங்கிருந்து தப்பித்து செல்வது கூட அரிது என்றுதான் தோன்றியது அவளுக்கு.
அத்தோடு தப்பிக்கும் எண்ணம் அவளுக்குள் வராத அளவிற்கு அல்லவா அவளை அவன் பயமுறுத்தி வைத்திருக்கிறான்.
மணமகன் கோலத்தில் ஆண்மையின் இலட்சணமாய் தன்னருகில் அமர்ந்திருந்தவனை விழிகள் கலங்க அவள் பார்க்க, அவனோ தன் பார்வையாலேயே அனைவருக்கும் கட்டளையை பிறபித்துகொண்டிருந்தான்.
என்னதான் அவன் இதழ்களில் ஒருவித புன்னகை அரும்பியிருந்தாலும், அவன் கண்கள் முழுவதும் நிரம்பியிருந்த குரூரத்தை அவளும் கவனிக்கவே செய்தாள்தான்.
அவன் பக்கத்திலேயே நின்றுக்கொண்டிருந்த தேஜ், “தேவ்” என்று மெல்லிய குரலில் அவனை அழைக்க, என்ன என்பது போல அவனை பார்த்தான் தேவ்.
“நீ இந்த கல்யாணத்த பண்ணிதான் ஆகணுமா…? இத தவிர வேற ஆப்ஷனே இல்லையா..தேவ்?” என்று இறுதியாக ஒரு முறை அவனிடம் கேட்டு பார்க்க,
பிடித்துவைத்திருந்த மஞ்சள் பிள்ளையாரின் மேல் அர்ச்சதையை போட்டவாறே விழிகள் இடுங்க அவனை பார்த்து முறைத்தான் தேவ்.
“தலைக்கு மேல வெள்ளம் போனதுக்கப்புறமும் வேடிக்கை பார்த்துட்டு இருக்க சொல்றீயா..?” என்று கோவமாக அவனை பார்த்து கேட்டவன்,
“எல்லாத்தையும் சரிபண்ணனும்னா இத நான் பண்ணிதான் ஆகணும்” என்றவனின் முகமோ இறுகிபோனது நடந்த நிகழ்வுகளை நினைத்து.
செய்திதாள், தொலைக்காட்சி மற்றும் இணையதளம் என்று அனைத்திலும் அன்று இரவு முதல் அவனே ஹாட் டாப்பிக்காக இருக்க இது எதுவுமே தெரியாமல் அயர்ந்து உறங்கிகொண்டிருந்தான் ஆதித்ய தேவ்.
அடுத்தநாள் மதியம் தாண்டியும் அவன் எழாமலே இருக்க, அவன் எப்போது எழுவான் என்று ஒருவித பதற்றத்துடனே அறையை அளந்துகொண்டிருந்தான் தேஜ்.
அவனை அதிகம் காக்க வைக்காமல், முகத்தை மூடியிருந்த போர்வையை விலக்கிய தேவ்-விற்கு கண்களை திறக்க கூட முடியவில்லை அந்த அளவிற்கு தலை பாரமாக இருந்தது.
நெற்றி பொட்டை அழுத்திவிட்டவாறே மெல்ல எழுந்து அவன் அமர, “ஆர் யூ ஓகே தேவ்..?” என்று கேட்டவாறே அவன் அருகில் வந்தமர்ந்தான் தேஜ்.
“டிரக் கலந்த ஜீஸ்-அ குடிச்சதாலதான் உனக்கு இப்படி இருக்கு. நீ முதல்ல இத குடி. யூ ஃபீல் பெட்டர்” என்றவாறே லெமன் ஜீஸ் இருந்த கிளாசை அவன் முன் தேஜ் நீட்ட, அதை வாங்கிகொண்ட தேவ் யோசனையோடே ஜீஸ்-ஐ குடிக்கவும் ஆரம்பித்திருந்தான்.
அவன் குடித்து முடிக்கும் வரை பொறுமை காத்தவன், “நேத்து என்ன நடந்துதுன்னு உனக்கு நியாபகம் இருக்கா தேவ்..?” என்க,
யோசனையோடே இருக்கு என்பது போல தலையை மேலும் கீழுமாக ஆட்டியவன், பார்ட்டிக்கு சென்றது முதல் நேஹா-வை கவனித்தது வரை சொல்ல, அனைத்தையும் கேட்டுமுடித்தவன், “அதுக்கப்புறம் தேவ்..?” என்றான் விழிகளில் ஆர்வம் தேக்கி.
புருவம் சுருக்கி புரியாமல் தேஜ்-ஐ பார்த்த தேவ்-வின் காதுகளை அப்போதுதான் அடைந்திருந்தது வெளியிலிருந்து வந்த பேரிரைச்சல் சத்தம்.
“என்ன சத்தம் இது..?” என்று கேட்டவாறே எழுந்து சென்று மூடியிருந்த திரையை தேவ் விலக்க போக,
எங்கே அவனுக்கு எதிராக நடந்துகொண்டிருக்கும் போராட்டத்தை அவன் பார்த்துவிடுவானோ என்ற பதற்றத்தில் “நோ தேவ்” என்று அவசரமாக அவன் கரத்தை பற்றி தடுத்தான் தேஜ்.
அவனின் பதற்றத்தையும், அவசரத்தையும் கவனித்தவன் புருவம் சுருக்கி என்ன என்பதுபோல பார்க்க,
“அது ஒன்னுமில்லை தேவ்..” என்று இழுத்தவனுக்கு அவனிடம் எப்படி விஷயத்தை சொல்வதென்றே தெரியவில்லை. தெரியவில்லை என்றாலும் சம்மந்தபட்டவனிடம் சொல்லித்தானே ஆகவேண்டும்.
“காலையிலேந்தே உன்ன பார்க்கறதுக்காக பிரஸ்-ம்.. பப்ளிக்-ம் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க…” என்று நிறுத்தியவன், “ஹால்-ல ஐ.ஜி கூட உனக்காகதான் ரொம்ப நேரமா காத்துக்கிட்டு இருக்காரு” என்றான் வேறு எங்கேயோ பார்வையை பதித்தபடி.
ஒரு நடிகரின் வாழ்வில் இதெல்லாம் சகஜமான ஒன்று என்பதால் தேஜ்-ன் வார்த்தைகளை தேவ் பெரிதாக எடுத்துகொள்ளவில்லை.
“இது எப்பவும் நடக்கறதுதன தேஜ்.” என்று இயல்பாக சொன்னவனுக்கு தெரியவில்லை அவர்கள் அனைவரும் என்ன காரணத்திற்காக அவன் வீட்டின் முன் குழுமியிருக்கிறார்கள் என்று.
“ஐ திங் ஈவினிங் நடக்கபோற கட்சி மீட்டிங் பத்தி பேசத்தான் ஐ.ஜி வந்திருப்பாரு. வெயிட் பண்ண சொல்லு தேவ்.. நான் ஃப்ரஷ் அப் ஆகிட்டு ஃபைவ் மினிட்ஸ்-ல வந்துடறேன்” என்று கூறியவாறே குளியலறை நோக்கி சென்றவனை.
“தேவ்” என்று தடுத்து நிறுத்தினான் தேஜ்.
திரும்பி நின்று என்ன என்பது போல அவன் தேஜ்-ஐ பார்க்க, அவனோ இழுவையாக “அவர் அதுக்காக வரல…” என்க.
“வேற..?” என்றான் ஒன்றை புருவம் உயர்த்தி தேவ்.
கண்களை இறுக்கமாக மூடி ஒரு ஆழ்ந்த பெருமூச்சை விட்டவன், “உன்ன அரெஸ்ட் பண்ண வந்திருக்காரு” என்று தேஜ் சொல்லி முடித்ததுதான் தாமதம், அவன் கூறியதை கேட்டு அந்த அறை அதிர சத்தம் போட்டே சிரித்து விட்டான் தேவ்.
“என்ன தேஜ்.. பிடிக்காதுன்னு சொல்லிட்டு நேத்து பார்ட்டில எனக்கு தெரியாம நீ எதும் டிரை பண்ணியா…?” என்று கேட்டு விட்டு மீண்டும் அவன் சிரிக்க,
மேற்கொண்டு எதுவும் பேசாமல், அந்த அறையிலிருந்த டி.வி-யை ஆன் செய்து, நியூஸ் சேனலை தேஜ் வைக்க, அதுவரை தேவ்-வின் முகத்திலிருந்த சிரிப்போ மெல்ல மெல்ல காணாமல் போனது அதில் ஒளிபரப்பாகிகொண்டிருந்த செய்திகளை பார்த்து.
அவனை கைது செய்ய சொல்லி அவன் வீட்டின் முன் குழுமியிருந்த போராட்டகார்களும், அந்த போராட்டகாரர்களுக்கும் அவன் இரசிகர்களுக்கும் இடையே நடந்த மோதல்களும், அந்த மோதலின் விளைவால் அவன் உருவபொம்மை எரிக்கப்படுவதும், என்று அனைத்தையும் தொலைக்காட்சி வாயிலாக பார்த்து கொண்டிருந்தவனுக்கு, அரெஸ்டி-ற்கான காரணம் தெரியவந்த போது,
கழுத்து நரம்புகள் புடைக்க கோவத்தில் “வாட் த ****” என்று கத்தியே விட்டிருந்தான் ஆதித்யதேவ்.
“ஆரா..” என்று அருகில் சென்று அத்ரித்தா அழைத்தபோதும், ஆரா எழாமல் படுத்தே இருக்க,
“என்ன அலையவிட்டுட்டு அப்படி என்ன தூக்கம் உனக்கு..?” என்று கேட்டவாறே ஆராவை தூக்கியவள் அப்போதுதான் கவனித்தாள்.
அதன் வாய் மற்றும் நாசி வழியாக வந்து உறைந்து போயிருந்த இரத்தத்தை.
“ஆரா… என்னாச்சி உனக்கு.. ஆரா“ என்றவாறு அதன் உடலை உலுக்கி பார்த்தவள், இதயம் இருக்கும் பகுதியில் கைவைத்துப்பார்த்தாள்.. துடிப்பு இல்லாமல் போகவே, அதன் நாசியில் கை வைத்துபார்த்தாள் அதனிடம் சுவாசமும் இல்லை.
துவண்டு போயிருந்த ஆராவின் உடலில் எந்தவித அசைவும் இல்லாமல் இருக்க், அதை தன் நெஞ்சோடு அணைத்து கொண்டு, “ஆரா..” என்று கத்தினாள் அத்ரித்தா.
ஆம் அவள் ஆரா அவளை விட்டு திரும்பி வரமுடியாத தூரத்திற்கு சென்றிருந்தது தன் குட்டிகளுடன்.
எந்த ஆரா சந்தியாவின் இழப்பிலிருந்து அவளை மீட்டெடுத்து, அவளுக்கென்று புது உலகத்தையும், உறவுகளையும் உருவாக்கி கொடுத்ததோ அந்த ஆரா இனிமேல் அவள் உலகில் இல்லை.
ஆராவை நெஞ்சோடு அணைத்தபடி அவள் நின்ற நிலையை பார்த்து இனியனின் கண்களுமே குளமாகிதான் போயின.
பாசம் வைத்தவர்களுக்குதானே தெரியும் பிரிவின் வலி எத்தகைய தாக்கத்தை உள்ளுக்குள் ஏற்படுத்துமென்று.
அன்பு வைத்தபின் அது மிருகமாக இருந்தால் என்ன..? மனிதனாக இருந்தால் என்ன..? இழப்பின் வலி என்னவோ ஒன்றுதானே..!
அழுதுகொண்டே அதன் மேடான வயிற்றை தடவிக்கொடுத்தவளின் கரங்கள் இப்போது நடுங்கின, இதுபோல் அவள் தடவிகொடுக்கும் போதெல்லாம் அவள் கரத்தை முட்டும் குட்டிகளின் அசைவு இப்போது இல்லாததை கண்டு.
ஆரா கருவுற்றதுமுதல் அதை கண்ணும் கருத்துமாக பார்த்துகொண்டது, அதன் குட்டிகளுக்காக எதிர் பார்ப்புடன் அவள் காத்திருந்தது எல்லாம் இதற்காகத்தானா..?
இரண்டாவது முறையாக மீண்டும் அதே அன்பு அவளை காயப்படுத்தியிருக்க, இம்முறை அதிகம் வலித்தது அவளுக்கு.
இம்முறை அழுகையை விட கோவம்தான் வந்தது அவளுக்கு. ஆராவை கண்ணில் காட்டிய அந்த காலத்தின் மீது கோவம். அதன் மீது அளவுக்கு அதிகமாக அவள் வைத்த அன்பின் மீது கோவம். அதை கவனிக்க தவறிய தன் மீது கோவம் என்று மொத்த கோவத்தையும் தன் மீதே பாய்ச்சிகொண்டாள் அத்ரித்தா.
“நீ ஏன் ஆரா இங்க வந்த..? இப்படி உன்ன பறிகொடுக்கதான் நான் உன்ன காப்பாத்துனேனா..?” என்று தேம்பி அழுபவளை தேற்றும் விதமாக அவள் தோளை தொட்டான் இனியன்.
அவன் தொடுகையை உணர்ந்து திரும்பி அவனை பார்த்தவள், “ஆரா-க்கு ரொம்ப வலிச்சியிருக்கும் இல்ல இனியன்… நான் எப்படியும் காப்பாத்த வருவன்னு அது நினைச்சியிருக்கும் இல்ல… இனியன். தப்பு என்னோடதுதான். நான் கவனிச்சிஇருக்கணும். நான் தான் ஆரா-வ கொன்னுடேன். நான் தான் என் ஆராவ கொன்னுட்டேன்” என்றெல்லாம் பிதற்றுபவளை தேற்றுவழித்தெரியாது அவன் நின்றுகொண்டிருக்க, அப்போதுதான் எங்கு தேடியும் ஆரா கிடைக்காமல் அங்கு வந்து சேர்ந்தான் ஆத்மன்.
அவள் கையிலிருந்த ஆரா-வை கவனித்தவாறு வந்த ஆத்மன், “இங்கதான் இருந்தாளா..?” என்று கேட்டபடி அவள் அருகில் சென்று நிற்க, அவளின் ஒட்டுமொத்த கோவமும் இப்போது ஆத்மன் புறம்தான் திரும்பியது.
அதுவரை கையில் ஏந்தியிருந்த ஆரா-வின் உடலை இனியனின் கைகளில் ஒப்புவித்தவள், அடுத்த கணமே ஆத்மனை அறைந்தும் இருந்தாள்.
கன்னத்தில் கைவைத்தவாறு, “அக்கா..” என்று அவன் அதிர, அவன் சட்டையை கொத்தாக பற்றியவள்,
“ஏன் இப்படி பண்ண ஆத்மன், உன் ஒருத்தனோட அஜாக்ரதையால இப்போ நாலு உயிர் போயிடுச்சி..” என்றவள் அழுதுகொண்டே கத்த, அப்போதுதான் இனியன் கையில் ஆரா உயிரற்று இருப்பதை கவனித்தான்.
“ஆரா-வோட இந்த நிலமைக்கு நீ மட்டும்தான் காரணம் ஆத்மன். நீ மட்டும்தான். நீ தான் ஆரா-வ கொண்ணுட்ட. நீ தான்” என்றவள் அழுதுகொண்டே ஆவேசமாக அவன் முகத்திற்கு முன் ஆள்காட்டிவிரலை நீட்ட,
“காரணம் ஆத்மன் இல்ல அத்ரித்தா” என்ற இனியனின் குரல் கேட்டு அவன் புறம் திரும்பியவளிடம், தன்னிடமிருந்த வீடியோ ஆதாரத்தை காட்டினான் இனியன்.
நேஹாவிடமிருந்த வீடியோ ஆதாரங்களையெல்லாம் அழித்துவிட்டு கார் பார்கிங் பகுதியை வந்தடைந்தவனுக்கு அவன் காரை கண்டுபிடிப்பதே பெரிய சவாலாகதான் இருந்தது அவன் இருந்த நிலையில்.
பின் ஏதோ நினைவு வந்தவனாய் கோட் பாக்கெட்டிலிருந்த கார் கீ-யை எடுத்து கீ-ரிமோட்டை அழுத்த, நான் இங்கு இருக்கிறேன் என்பது போல சத்தம் எழுப்பியது அவன் கார்.
“ஓ… நீ அங்க இருக்கியா..?” என்று முனகியவாறே தள்ளாடிய நடையுடன் காரின் அருகில் சென்றான்.
போதையின் உச்சத்தால் நிதானத்தை மொத்தமாகவே இழந்திருந்தவனுக்கு, கீயை நுழைத்து கார் கதவை திறப்பதற்கே சில கணங்கள் பிடித்திருந்தன.
ஒரு வழியாக திறந்து ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து அவன் காரை ஸ்டார்ட் செய்ய, அவன் காரோ ஸ்டார்ட் ஆகமாட்டேன் என்பது போல அடம்பிடித்தது.
ஐந்தாறு முறை முயற்சி செய்தும் கார் ஸ்டார்ட் ஆகாமலேயே இருக்க, கோவத்தில் “ஷிட்” என்று தன் பலம் கொண்டவரை ஸ்டியரிங்கில் ஓங்கி ஒரு குத்து குத்தினான்.
பின் மெல்ல இறங்கி தட்டு தடுமாறி காரின் முன் பகுதிக்கு சென்றவன் பேனட்டை திறந்து எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்தான்.
ஆனால் போதையின் உச்சத்தில் இருந்தவனுக்கு எல்லாமே மங்கலாக தெரிய, தலையை இருபுறம் ஆட்டிவிட்டு மீண்டும் இருக்கையில் சென்று அமர்ந்தவன் அப்போதுதான் பின்னிருக்கைக்கு கீழ் “மியாவ்” என்று சத்தம்போட்டுகொண்டிருந்த பூனையை பார்த்தான்.
எப்போதும் போல் வாயிலில் நிறுத்தபட்டிருந்த காருக்குள் சென்ற ஆரா, இருக்கைக்கு கீழேயே உறங்கி விட, ஆத்மனும் அதை கவனிக்காமல் காரை எடுத்திருந்தான்.
காரில் சென்று பழக்கபட்டதால் ஆராவும் அமைதியாகவே காருக்குள் இருந்துவிட, பார்ட்டிக்கு செல்லும் அவசரத்தில் கார் கண்ணாடியை ஏற்றிவிடாமலேயே சென்றிருந்தான் ஆத்மன்.
வெகுநேராமாக காருக்குள்ளேயே அமர்ந்திருந்த ஆரா என்ன நினைத்ததோ காரிலிருந்து கீழே குதிக்க, அதேநேரம் காரை பார்கிங்கில் விட வந்த ஒருவர், அது காருக்குள் ஏற முயற்சிப்பதாக நினைத்து துறத்திவிட,
பயத்தில் ஓடிய ஆராவோ அங்கு நிறுத்தபட்டிருந்த தேவ்-வின் காருக்கு கீழ் சென்று டயரை ஒட்டி அமர்ந்து கொண்டது.
வெகு நேரமாக அங்கேயே அமர்ந்திருந்த ஆரா-விற்கு பிரசவலி ஏற்படவே, அவர்கள் கார் இருக்கும் பகுதிக்கு சென்ற ஆராவால் அதீத வலியாலும், பொருத்தபட்டிருந்த செயற்கை காலாலும் தாவி ஏற முடியாமல் போனது.
அவர்கள் காரையே அது சுற்றி சுற்றி வந்து கத்தி கொண்டிருந்த சமயத்தில்தான் தேவ்-ம் கார் பார்கிங் பகுதியை வந்தடைந்திருந்தான்.
கார் ஸ்டார்ட் ஆகாததால் அவன் கார் கதவை திறந்து கொண்டு இறங்க, இடம் தேடி அலைந்து கொண்டிருந்த ஆராவோ அது சமயம் என்று காருக்குள் ஏறி பின்னிருக்கைக்கு கீழ் சென்று அமர்ந்து கொண்டது.
மீண்டும் அவன் இருக்கையில் வந்து அமர, ஆரா-வோ வலியால் “மியாவ்.. மியாவ்” என்று சத்தம்போட்டு கத்த அப்போதுதான் காருக்குள் இருந்த பூனையை கவனித்தான் தேவ்.
“ஏய் ச்சீ… வெளியில போ…“ என்று அவன் துரத்திய போதும் கண்களில் ஒருவித கெஞ்சலுடன் நகராமல் அங்கேயேதான் இருந்தது ஆரா. என்ன செய்ய அதன் குட்டிகளுக்காக அது அங்கேயே இருந்தாக வேண்டிய சூழ்நிலை.
ஐந்தாண்டுகளாக மனிதர்களுடன் நெருங்கி பழங்கியதால் எல்லா மனிதர்களுமே அன்பானவர்கள் என்று அது நினைத்து விட்டது போலும். ஆனால் இங்கு ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு வகையான மிருகம் என்று பாவம் அது அறிந்திருக்கவில்லை.
என்ன செய்தும் அது இருக்கைக்கு கீழேயே அமர்ந்திருக்க, முகத்தில் அருவெறுப்பை உமிழ்ந்த படி அதை தூக்கி அவன் வெளியில் விட,
ஆராவோ விட்ட வேகத்திலேயே மீண்டும் காருக்குள் நுழைய, தேவிற்-கு கோவம்தான் வந்தது.
இப்படியே சில கணங்கள் நீடிக்க, “யூ ஹெல்” என்று பற்களை கடித்தவன், காருக்குள் நுழைய முயன்றதை, “ச்சீ… போ”’ என்றவாறு உதைத்து தள்ள, அவன் உதைத்த வேகத்தில் ஆரா அங்கு நிறுத்தபட்டிருந்த காரின் டயரில் மோதியது.
எங்கே மறுபடியும் வந்துவிடுமோ என்று அவசரமாக காருக்குள் ஏறி கதவை சாற்றிகொண்டவன், அதன் பின் அதை திரும்பி கூட பார்க்கவில்லை.
ஸ்டார்ட்-ஆகி நகர்ந்த கார் மீண்டும் நின்றுவிட, முற்றிய மது போதையில் ஸ்டியரிங் மீதே சரிந்துவிட்டான் தேவ்.
போன் பேசிவிட்டு வந்த தேஜ், தேவ்-வை காணாமல் தேடி அலைந்து கொண்டிருக்கும் போதுதான் அங்கு டிரிங் சப்ளை செய்துகொண்டிருந்தவன் மூலமாக தேவ் எமெர்ஜென்சி எக்ஸிட் வழியாக சென்றதை அறிந்தவன், அந்த வழியாக செல்லும் போதுதான் மயங்கி கிடந்த நேஹாவை பார்த்தான்.
நேஹா-வை இந்நிலையில் பார்த்தவனுக்கு ஏதோ சரியில்லை என்று மனதிற்கு படவே, வேகமாக கார் பார்கிங் பகுதிக்கு விரைந்து சென்றான்.
ஸ்டியரிங் மீது சரிந்துகிடந்த தேவ்-ஐ பார்த்தவனுக்கு அப்போதுதான் அப்பாடா என்றிருந்தது. இருந்தும் இங்க என்ன நடந்திருக்கும் என்ற யோசனையோடு நின்றிருந்தவனின் பார்வையில் ஆங்காங்கே பொறுத்தபட்டிருந்த கேமராக்கள் கண்களில் பட, சர்வர் அறைக்கு விரைந்தான்.
நேஹாவிற்கும் அவனுக்கும் இடையே நடந்த வாக்குவாதங்களை ஓரளவு சி.சி.டி.வி மூலமாக அறிந்தவன், தேவ்-வின் நலன் கருதி பணம் கொடுத்து அவர்கள் இருவரும் இருந்த ஃபுட்டேஜ்களை மட்டும் டெலிட் செய்ய சொன்னவன், அதன் பின்னே தேவ்-ஐ அழைத்து கொண்டு அங்கிருந்து கிளம்பியிருந்தான்.
ஆராவை தேடும் பொருட்டு ஃபுட்டேஜ்களை இனியன் செக் செய்துகொண்டிருக்கும் போதுதான் அவன் ஆராவை எட்டி உதைப்பதை பார்த்தான்.
அந்த காட்சிகளை தன் செல்போனில் சேமித்துகொண்டவன் அதை அவளிடம் காட்டுவதற்காகதான் மூச்சி வாங்க ஓடி வந்தது கூட.
வீடியோ மூலமாக அனைத்தையும் அறிந்து கொண்டவளுக்கோ அவன் மீது அத்தனை கோவம்.
நான்கு உயிர்களின் இறப்பிற்கு காரணமான அவனை கொன்றால் கூட தன் ஆத்திரம் தீராது என்றுதான் தோன்றியது அவளுக்கு.
“நான் அவன் மேல கம்பிளைண்ட் ஃபைல் பண்ண போறேன்.” என்றவள் தீர்க்கமாய் சொல்ல, வீடியோவை பார்த்துகொண்டிருந்த ஆத்மனோ அதிர்ச்சியாய் அவளை பார்த்தான்.
“அக்கா.. அவர் யாருண்னு தெரியுமா உனக்கு..? அவர்தான் ஏ.டி. க்கா. நம்ம சினி இண்டஸ்டிரீல டாப் ஒன் ஆக்டர்” என்றவன் சொல்லி முடித்ததுதான் தாமதம்..
“ஏ.டி-னா பெரிய கொம்பா…?” என்றாள் ஆக்ரோஷமாய்.
“அவன் யாரா வேணும்னாலும் இருந்துட்டு போகட்டும்.. என் ஆரா-வோட சாவுக்கு காரணமானவன நான் சும்மா விட போறது இல்ல” என்றவள் அவனை விட போவதில்லை என்பதில் உறுதியாக இருந்தாள்.
ஒருவர் மீது வைக்கும் ஆதீத அன்பு அவர்களை எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் அழைத்து செல்லுமாம். ஆம்.. அவளையும் அழைத்து சென்றது பின்நாளில் நடக்கபோகும் களேபரங்களை பற்றியெல்லாம் யோசிக்கவிடாமல்.
“ஐய்யோ அக்கா… உனக்கு புரியல, அவன் பெரிய செல்பிரட்டி.. அவனுக்கு ஒன்னுன்னா இங்க கலவரமே நடக்கும்” என்று அவளுக்கு புரியவைக்க முயற்சி செய்து கொண்டிருந்தான் ஆத்மன்.
“என்ன பெரிய செலிபிரட்டி…” என்று மீண்டும் ஆக்ரோஷமாக கேள்வி எழுப்பியவள்,
“ஆக்டிங்கும் ஒரு புரொஃப்ஷ்னல். அவ்வளோதான். வாங்குற காசுக்கு நடிக்கிறவன தலையில தூக்கி வச்சிக்கிட்டு கொண்டாட என்ன அவசியம் இருக்குன்னு சத்தியமா எனக்கு புரியல” என்றாள் ஆதங்கத்துடன்.
என்னதான் எடுத்து சொன்னாலும் அவள் புரிந்து கொள்ள போவதில்லை என்ற முடிவுற்-கு வந்த ஆத்மன் இனியன் புறம் திரும்பி,
“மாமா… நம்மளால அவன எதுவும் பண்ண முடியாது. அப்படியே பண்ணனும்னு நினைச்சா.. அது நம்மளதான் அதிகம் பாதிக்கும்” என்று நிதர்சனத்தை புரிய வைக்க முயற்சி செய்து கொண்டிருந்த ஆத்மன் அந்த ஏ.டி-யின் உயரத்தை நன்றாகவே கனித்திருந்தான்.
“மாமா.. ஐ ஹோப் யூ அண்டர்ஸ்டாண்ட். நீங்களாவது அக்காவுக்கு சொல்லி புரியவைங்களேன்” என்க,
நடக்கும் அனைத்தையும் ஒரு பார்வையாளராக பார்த்து கொண்டிருந்த இனியனோ, “ம்.. கண்டிப்பா புரியவைக்கணும் தான்” என்று நிறுத்த, ஆத்மனின் முகத்திலோ ஒரு வித தெளிவு பிறந்தது. அதுவும் சில நிமிடங்கள்தான்.
“அத்ரி-க்கு இல்ல அந்த ஏ.டி-க்கு… இந்த உலகத்துக்கு… அப்புறம் இந்த உலகம் மனுஷங்களுக்காக மட்டும்தான்னு நினைக்கிற சில மனுஷ மிருகங்களுக்கு” என்று கோவமாக சொல்ல, பிரச்சனை பெரிதாவதை நினைத்து அதிர்ச்சியாய் இருவரையும் பார்த்தான் ஆத்மன்.