இதுவரை கைபேசியில் சேர்ந்தால் போல் ஒரு பத்து நிமிடம் கூட பேசி இராத மகள் இன்று முதல் முதலாக கைபேசி எடுத்துக்கொண்டு அவள் தோட்டம் சென்ற போது தன்னிடம் பேசி தான் முடியாது என்று சொன்னதும் மகளிடம் பேச பாண்டி தான் அழைத்து இருக்கிறான்.. என்பதை தெரிந்து கொண்டார் கோமதி..
அதை பார்த்த பூமணியும் கோமதியிடம் கூறினார்..
“ பாண்டி தம்பி தான் பேசுது போல.. அதுக்கு நம்ம மீனாவ ரொம்ப புடிச்சிருக்கு போல.. யாரும் எதிர்பாராத சம்பந்தம் கோமதி.. நல்லா யோசிச்சுக்கோ.. பாண்டி ரொம்ப பழக்கவழக்கத்துல எல்லாம் நல்ல மாதிரி.. நமக்கு பக்கத்து ஊரு வேற.. ஒரு பொண்ணுக்கு முதல் முதல் வரும் கல்யாண பேச்சை தடை செஞ்சோம்னா உடனே அடுத்த பேச்சு அமையும்.. சிலருக்கு ரொம்ப வருஷமாகும்.. அதை எல்லாம் நாமளே பார்த்து தெரிஞ்சுக்கிறோம்.. 18 வயசுல நம்ம மீனாக்கு கல்யாண பேச்சு வருதுன்னா எனக்கு என்னமோ தட்டிக் கழிக்க வேண்டாம்.. செய்து வைக்கலாம் என்று தோணுது.. இங்கிருந்து படிக்க போறது கல்யாணம் பண்ணி அங்க போய் படிக்க போறா.. இல்ல தம்பி தான் இங்கேயே இருக்கிறதா இருந்தாலும் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லைன்னு சொல்லுது தானே..
நீ யோசிக்காம வேண்டாம்னு சொல்றது எனக்கு என்னமோ தவறுன்னு தோணுது.. உன் பொண்ணும் வந்து இந்த கல்யாணத்தை நடத்தலாம் மா என்று தான் சொல்ல போறா.. எனக்கு அப்படித்தான் தோணுது.. அப்படி உன் பொண்ணு சொன்னா நீ என்ன பதில் சொல்ல போற?.. ” என்று பூமணி பேசி முடிக்கவும் சரியாக மீனாட்சியும் அங்கே வந்து சேர்ந்தாள்..
“ அம்மா லதாவோட அண்ணன் தான் பேசினார்.. வீட்ல இன்னும் கொஞ்சம் கலந்து பேசிட்டு நாளைக்கு நல்ல பதிலா சொல்ல சொல்றார்.. ” என்று கூறிவிட்டு அலைபேசியை தாயின் கையில் கொடுத்து விட்டு அங்கிருந்து அவளது அறைக்கு சென்று விட்டாள்..
தாயை இதற்கு எவ்வாறு சம்மதிக்க வைப்பது என்று தான் ஜோசித்தாளே தவிர தனக்கு இதில் சம்மதமா?.. இல்லையா..? என்பதை துளியும் அவள் யோசிக்கவில்லை..
இப்படியே அன்று இரவு கடந்து அவன்
கூறிய ஞாயிற்றுக்கிழமையும் வந்தது..
விடிந்ததும் அவள் வழமையாக செய்யும் வேலைகள் அனைத்தையும் செய்து விட்டு தாய்க்கு சமையலிலும் உதவி செய்துவிட்டு சரியாக காலை உணவு நேரம் முடிந்ததும்.. மதிய உணவு வேலைக்கு மாலதியையும் அன்பழகனையும் பார்த்துக் கொள்ளும்படி விட்டுவிட்டு தாயையும் பாட்டியையும் விட்டுக்குள் அழைத்துச் சென்றாள்..
“ அம்மா எனக்கு என்னமோ கொஞ்சம் இந்த கல்யாணத்துக்கு நீங்க சம்மதிக்கலாமோனு தோணுது.. பாவம் அவர் ரொம்ப கஷ்டப்பட்டுட்டார்.. அவரோட லதா மட்டும் தான் கொஞ்சம் பேசுவா.. அவங்க அம்மாவும் மத்த தங்கச்சியும் இல்லாம இருக்கும்போது தான் லதா நல்ல சாப்பாடு கொடுத்து அவரோட கொஞ்சம் சிரிச்சு பேசுவா.. இதை லதாவே என்கிட்ட சொல்லி இருக்கிறா..
நல்லபடியா ஒரு குடும்பத்தில் போய் நான் வாழணும்னு நீங்க ஆசைப்படுவீங்க.. அதுல என்னம்மா பெருமை இருக்கு.. நீதான் வேணும் உன்னோடு வாழ்ந்தா தான் நான் சந்தோஷமா இருப்பேன்னு நினைக்கிற ஒரு மனுஷனுக்கு வாழ்க்கை கொடுத்து சந்தோஷமா வாழ வைக்கிறதுல தானேமா உங்க பொண்ணுக்கு பெருமை இருக்கு..
எனக்கு கல்யாணம் பண்ணுற வயசு இல்ல தான்.. ஆனா.. எல்லாத்தையும் பிரிச்சு பாக்குற பக்குவம் இருக்கு.. நீங்க என்ன எல்லாம் எனக்கு சொல்லிக் கொடுத்து இருக்கீங்க.. கல்யாணம் பண்ணி இங்க இருக்க விரும்பினாலும் இருக்கலாம்.. என்று அவர் சொல்றார்.. அது மரியாதையும் இல்ல.. முறையும் இல்ல.. நான் கல்யாணம் பண்ணி சந்தோசமா வாழ்வேனான்னு எனக்கே தெரியாது.. ஆனா உங்க மக எதிலுமே தோத்துப்போக மாட்டா.. அந்த கவலையை உங்களுக்கு தரவே மாட்டேன்.. கல்யாணம் பண்ண முதல் இங்கிருந்து படிக்க போறேன்.. கல்யாணம் பண்ணி அங்க போய் படிக்க போறேன்.. படிப்புக்கு எந்த தடையும் இருக்கக் கூடாதுன்னு நான் அவர்கிட்ட தெளிவா பேசிட்டேன்.. பிளீஸ் சம்மதம் சொல்லுங்க அம்மா..” என்றாள்..
“ நீ அங்க போய் எவ்வளவு கஷ்ட படுவேன்னு தெரியுமா பாப்பா?.. அவங்க உன்ன ரொம்ப கஷ்டப்படுத்துவாங்க பாப்பா..
உனக்கு அதெல்லாம் தாங்கி கிட்டு இருக்கணும்னு தலையெழுத்தா என்ன?..
பொண்ணுங்களை ஊதாரியா வளர்த்தது அவங்க அம்மாவோட தப்பு.. அதை தட்டிக் கேட்காதது அவரோட தப்பு.. மொத்த குடும்பமே சேர்ந்து தப்பு பண்ணிட்டு.. இப்ப அந்த குடும்பத்தை திருத்துவதற்கு நீ வேணும்னு சொன்னா இது எந்த வகையில் சேர்த்தி எனக்கு தெரியல.. ஊதாரி குடும்பங்களை திருத்தி நல்வழிப்படுத்தவா நான் என் பொண்ண பெத்து வச்சிருக்கேன்..? அந்த தம்பி ஏதாவது சொன்னாரா?.. நான் அவங்க அம்மா கிட்ட பேசவா?..
உன்னை ரொம்ப கட்டாயப்படுத்தறார்ன்னு சொல்லவா?.. நான் சம்மதம் இல்லன்னு சொன்னதுக்கு பிறகு சின்ன பொண்ணு கிட்ட என்ன அவருக்கு பேச்சு வேண்டி கிடக்கு?..
நீ என்னதான் சொன்னாலும் எனக்கு இதுல சம்மதம் இல்ல பாப்பா.. அப்படியே நீ அவரை கல்யாணம் பண்ணிக்க தான் போறேன்னா.. நான் தடுக்க மாட்டேன்.. ஆனா மனம் உகந்து சந்தோசமா நான் அந்த கல்யாணத்தை பண்ணி வைக்க மாட்டேன்..
நான் பண்ணி வைக்காட்டி ஒருவேளை உன்னை பிடிக்கிறதால அவன் கடத்திட்டு போய் கல்யாணம் பண்ணிட்டானா?..
அப்புறம் நமக்கு ஏன் அந்த வம்பு.. நானே என் பொண்ணுக்கு நல்லபடியா கல்யாணம் பண்ணி அனுப்பி வைக்கிறேன்.. அங்க போய் வாழும் சாமர்த்தியம் உன் கையில தான்..” என்று கூறி தன்னிடம் கெஞ்சி கேட்கும் மகள் தலையை தடவி விட்டு தாயின் கை பேசியிலிருந்து அவனுக்கு அழைத்து திருமணத்திற்கு சம்மதம்.. இன்று மாலையே பெண்பார்க்க வருமாறு கூறினார்..
“ ரொம்ப நன்றி அத்தை.. மீனு குட்டியை இந்த அஞ்சு வருஷம் நான் பிரிஞ்சு இருந்தாலும்.. அதுக்கு பத்து மடங்கா நான் ஊருக்கு வந்ததும் தாங்கு தாங்குனு தாங்கி சந்தோஷமா நாங்க வாழ்வோம்… அதை நீங்க பார்க்க தான் போறீங்க.. குடும்பத்துக்காக இந்த அஞ்சு வருஷத்தை என் வாழ்க்கையில் நான் தியாகம் பண்றேன்.. அதுக்கும் சேர்த்து நாங்க திகட்டத்திகட்ட சந்தோசமா வாழ்வோம்..
பொண்ணு பாக்குறது எல்லாம் வேணாம் அத்தை.. நான் நேரமாவே கல்யாணத்துக்கு எல்லா ஏற்படும் பண்ணி வச்சிட்டேன்..
புதன் கிழமை காலையில 9:00 மணியில் இருந்து பத்து முப்பது வரைக்கும் நல்ல நேரம் இருக்கு.. மீனுக்குட்டி கூட ஒரு வார்த்தை என்ன பேச வச்ச அந்த முத்து மாரியம்மன் கோவிலில் அந்த தாயோட ஆசீர்வாத்தோட அங்கேயே எங்க கல்யாணத்தை வச்சுக்கலாம்..
நான் லதா கிட்ட மீனாக்கு வாங்கி இருக்கிற புடவை கொடுத்துவிடுவேன் அதற்கு ஏற்ற பிளவுஸ் தைக்க சொல்லுங்க.. அதுக்கு தேவையான எல்லாம் கொடுத்துவிடுறேன்.. ” என்று அவரிடம் கூறிவிட்டு அவன் நம்பிக்கை பொய்க்கவில்லை என்ற சந்தோசத்தோடு அடுத்த சவாரி சென்றான்..
ஞாயிற்றுக்கிழமை மாலை அவன் வீட்டில் வைத்து அவளுக்கும் திருமணத்தில் சம்மதம்.. புதன்கிழமை இருவருக்கும் கட்டாயம் திருமணம் நடக்கும்.. முடிந்தால் வந்து கலந்து கொள்ளுமாறு வீட்டில் கூறினான்..
வழமையாக காலேஜ் செல்வது போன்று திங்கள் செவ்வாய் கிழமையிலும் காலேஜ் சென்றாள் மீனாட்சி..
இதோ விடிந்தால் திருமணம் எனும் நிலையில் அனைத்தையும் அவனே முன் நின்று செய்தான்..
புதன் கிழமை அழகாக விடிந்தது..
குறித்த நேரத்தில் இருவருக்கும் திருமணமும் நடந்தது..
திருமணத்திற்கு என்று வந்து நின்ற பாண்டியின் குடும்பத்தை பார்த்த கோமதி அவர்கள் நடவடிக்கையை வைத்து மகள் அங்கு நன்றாக வாழப் போவதில்லை என்பதை தெரிந்து கொண்டார்..
இதற்குத்தான் திருமணம் வேண்டாம் என்று மறுத்தேன்.. ஆனால் இந்த பெண் கேட்டால் தானே.. ஒத்தைப்பிடியாக சம்மதம் வாங்கி விட்டாள்.. அந்த குடும்பத்தில் சிக்கி என்ன பாடுபடப் போகிறாளோ..? என்ற கவலை அப்போதே அவருக்கு ஆரம்பித்தது..
உண்மையிலேயே மீனாட்சி சொக்கநாதர் போன்று அவர்கள் ஜோடி இருந்ததை அங்கு கோவிலுக்கு வந்திருந்தவர்கள் பார்த்து கூறி மனதார வாழ்த்தினார்கள்..
ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்ள பல முட்களான பாதைகளை கடந்து தான் ஆக வேண்டும்..
வருமானத்தில் குறை இல்லாதவர்களுக்கு ஏதோ ஒரு குறை இருக்கும்..
பிள்ளை செல்வங்களோடு சந்தோஷமாக இருப்பவர்களுக்கு வருமானத்தில் குறை இருக்கும்..
சிலருக்கு அனைத்தும் இருக்கும் ஆனால் மனதில் ஒரு அமைதி நிம்மதி இருக்காது..
இது போன்று பல வலிகள் நிறைந்த பாதைகள் கடந்து தான் இந்த மீனாட்சியும் செந்தூரப் பாண்டியனும் வாழ்க்கையில் இன்பம் காண போகிறார்கள்..
கோவில் சுற்றி வந்து அவள் காலில் மெட்டி அணிவித்ததும் கோவில் சடங்குகள் முடித்து. நேரடியாக மீனாட்சி வீட்டிற்கு சென்று அங்கே சடங்குகள் செய்து அவனது வீட்டுக்கு அழைத்துச் சென்றான்..
அந்த வீட்டில் உழைக்கும் ஒரே ஆண் மகன் அவனுக்கே மரியாதை இல்லாத போது எங்கே அவளுக்கு மரியாதை கிடைக்கப் போகிறது..
லதா தான் ஆராத்தி கரைத்து அண்ணனுக்கும் தனது தோழிக்கும் ஆராத்தி எடுத்து உள்ளே அழைத்துச் சென்றாள்..
அதற்கு புதுமண தம்பதிகள் உள்ளே சென்றதன் பின் லதா தாயிடமும் அக்கா தங்கையிடம் வாங்கிய திட்டுகள் கொஞ்சம் இல்லை..
வீட்டைப் பார்த்ததுமே அவர்களின் வாழ்க்கை நிலை எவ்வாறு இருக்கிறது என்பதை கோமதி தெரிந்து கொண்டார்..
தன் மகள் கஷ்டப்படுவதை யாராலும் தடுக்க முடியாது.. என்பது அவர் மனதில் நன்றாகவே தோன்றி விட்டது..
எந்த ஒரு திருமண கலையும் அந்த குடும்பத்திலும் வீட்டிலும் இல்லை..
லதா தான் வந்தவர்களுக்கு காபி டீ பலகாரம் என பார்த்து பார்த்து அனைத்தையும் பாண்டியின் உதவியோடு செய்தாள்..
மற்ற மூன்று பேரும் யாருக்கு வந்த விருத்ததோ என்று ஒதுங்கி இருந்தார்கள்..
அன்று மாலை வரை முள்ளின் மேல் இருப்பது போன்று கோமதி அங்கே இருந்து விட்டு மகளையும் மாப்பிள்ளையும் அழைத்துக் கொண்டு அவர்களது வீட்டிற்கு சென்று விட்டார்..
துரித கதியில் மாப்பிள்ளைக்கு விருந்து தயாரித்து மகளையும் மாப்பிள்ளையும் உணவருந்த வைத்துவிட்டு அவர்களுக்கான இரவு சடங்கும் ஏற்பாடாகியது..
அவளின் அறையில் அவளுக்காக அவன் காத்திருந்தான்..
சாந்தி முகூர்த்ததுக்கு என குறித்து கொடுத்த நேரத்தில் அங்கே வந்து சேர்ந்தாள் மீனாட்சி..
அவன் நினைத்தது போல் அவர்கள் வாழ்க்கை ஆரம்பமாகும்..என அவன் காத்திருந்தான்.. ஆனால் அவன் வாழ்க்கையில் இன்னும் பல சோதனைகளையும் சிக்கல்களையும் பார்க்க வேண்டும்..
அதன்பின் தான் அவன் வாழ்க்கை அவன் கையில்.. என தீர்மானித்த விதி அவர்களைப் பார்த்து எள்ளி நகையாடியது..