முகத்தில் வந்து விழுந்த கூந்தல் கற்றைகளை அவ்வப்போது காதுக்குப் பின்னால் ஒதுக்கி விட்டபடி அலைபேசி வழியே உரையாடிய வண்ணம் மின்தூக்கியை விட்டு வெளியேறியவளின் முகத்தில் எரிச்சல் மண்டியிட்டுக் கிடந்தது.
வெயிலில் அவதிப்பட்டு விட்டு வந்திருந்த கடுப்பில், “சரி, அப்பறமா பேசுறேன்..” என்று கூறி அழைப்பைத் துண்டித்தவள் சாற்றப்பட்டிருந்த வீட்டின் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தாள்.
தலை வலிப்பது போலிருக்கவும், கைப்பையைத் தூக்கி ஓரமாக எறிந்து விட்டு கண்களை இறுக மூடிக் கொண்டு சோபாவில் தொப்பென்று விழுந்தவள், உடலை அப்படியும் இப்படியுமாய் அசைத்து சோம்பல் முறித்தவாறே,
“சரண்..” என்று சத்தமாய் குரல் கொடுத்துப் பார்த்தாள்.
கண்கள் இருட்டிக் கொண்டு வந்து, இந்த உலகமே தலை கீழாய் சுழலுவதாய் பிரமை!
இந்த களைப்பும், தலை கிறுகிறுப்பும் வெகு நேர அலைச்சலால் வந்ததெனப் புரிந்து கொண்டவள், தன் அழைப்புக்கு எந்தவித பதிலும் கிடைக்கவில்லை என்பதை சற்றுத் தாமதமாகத் தான் யோசித்தாள்.
“சரண்ண்!!” மீண்டுமொரு முறை அழைத்துப் பார்த்தாள்.
எந்த சத்தமும் இல்லை உள்ளிருந்து! கடுகடுத்த முகபாவனையோடு, “இவ எங்கே போய் தொலைஞ்சாளோ..” என சலித்துக் கொண்டவள் சோபாவில் கால்களை அகட்டி சௌகரியமாக சாய்ந்தாள்.
திறந்திருந்த வாசல் கதவு வழியாக வீட்டினுள் நுழைந்த மென் காற்று மேனியை வருடிச் செல்லும் போது சுகமாய் உணர்ந்தவள் கூடவே நாசியைத் துளைத்த வித்தியாசமான பேர்ஃபியூம் வாசனையை மூச்சிழுத்து சுவாசித்தாள்.
“இந்த ஸ்மெல் எப்படி?” என முணுமுணுத்து யோசனையில் புருவம் நெறித்தவள் எதையோ யோசித்தவளாய் பட்டென்று கண்களைத் திறக்க, கைகளை வெற்று மார்புக்குக் குறுக்காகக் கட்டியபடி அவளையே குறுகுறுவென்று பார்த்திருந்தது, ஆறடிக்கு மேலாக உயர்ந்து வளர்ந்திருந்த ஒரு நெடிய உருவம்!
“ஆஆ..” என பயத்தில் தொண்டைக் கிழியும் அளவுக்கு சத்தமாக கத்தியவள் தன்னை கண்களில் அனல் தெறிக்க முறைத்துக் கொண்டிருந்தவனிடம்,
“நீ எப்படி இங்கே? இங்கே என்ன பண்ணுற?” என்று எரிந்து விழுந்தாள்.
“எக்சியூஸ் மீ!” என புருவம் தூக்கியவனின் கேலிக் குரல் அவளுக்குள் பயபந்தை உருட்டி விட, ஆழமாக மூச்சை இழுத்து வெளியேற்றியவாறு எதேர்ச்சையாகக் கண்களை சுழற்றிய போது தான், தான் வந்து நுழைந்திருப்பது தன் பிளாக்கோடு ஒட்டியிருந்த மற்றொரு பிளாக் என்ற உண்மை உறைத்தது.
மூச்சடைக்கும் உணர்வில், மற்றது மறந்து சட்டென்று எழுந்து நின்றாள் நந்தினி.
“போயும்! போயும்! இந்த பொறுக்கி பய வீட்டுக்குள்ள வந்து புகுந்திருக்கேனே..” என வாய் விட்டுப் புலம்பியவள் அங்கிருந்து நகரப் போக, அவளை விரைந்து நெருங்கியவனின் முகத்தில் கோபம் தாண்டவமாடியது.
“ஏய்! என்ன சொன்னே? பொறுக்கியா.. நான் எந்த ரோட்டுலயாவது பொறுக்கிட்டு இருந்ததை நீ பார்த்தியா?” என சீறியவனை கடைக் கண்ணால் ஏறிட்டவள்,
“உன்னைப் பத்தி எதுவும் தெரியாதுனு நினைச்சியா நீ?” என்று தனக்குள் புலம்பியபடி பின்னால் நகர்ந்தாள்.
அந்தப் புலம்பலும் கூட எதிரில் இருந்தவனின் செவிகளில் தெளிவாய் விழுந்தது.
பற்களை நறநறவென அரைத்தவாறு ஏதோ கூற வாயெடுத்தவன் தன்னைத் தாண்டி வெளியே ஓட முற்பட்டவளின் கையைப் பற்றி இழுத்து, அவளைத் தன்னருகே நிறுத்தினான்.
“விடு! ப்.. பொறுக்..”
“அடிங்.. சொல்லிட்டே இருக்கேன்.” என அவளின் பேச்சில் இடையிட்டுக் கத்தியவன் அவளை சற்று நெருங்கி,
“பொறுக்கி பொறுக்கினு சொல்றேல.. பொம்பளைங்க கிட்ட அப்படி என்னத்த பொறுக்குவேன்னு உனக்கு செயல்முறை விளக்கத்துல செய்து காட்டிடவா?” என்று வினவினான் கேலியாக!
அதிர்ச்சியில் மூச்சு விட மறந்தவள், இடையோடு கட்டியிருந்த டவலில் கை வைத்துக் கொண்டு தன்னைப் பார்த்து வில்லச் சிரிப்பொன்றை உதிர்த்துக் கொண்டிருந்தவனைக் கண்டு பின்னகர,
“ச்சு! பயந்துட்டியா?” என்று கேட்டபடி அவளின் இருபக்கத் தோளில் கை வைத்துப் பின்னால் தள்ளி அவளை சோபாவில் வீழ்த்தினான் ஆடவன்.
#துளி 02
சிறியவளைக் காணாத பதற்றத்தில் வியர்த்து, விறுவிறுக்க கதவைத் தாண்டி வெளியே ஓடி வந்த நந்தினி, எதிர் பிளாக்கில் தங்கியிருக்கும் ஆடவனின் கையில் அவள் விளையாடிக் கொண்டிருப்பது கண்டுவிட்டு பற்களை நறநறத்தாள்.
“போயும்! போயும்! இவன் கைலயா பொம்மி குட்டி சிக்கணும்?” என வாய் விட்டுப் புலம்பியவள் வேக நடையிட்டு அவனை நெருங்கி வர,
“நான் சொன்னேனே பேபி? அது இவங்க தான்!” என நந்தினியைக் கை காட்டி பொம்மியின் காதில் ஏதோ கிசுகிசுத்தான் ரிஷி.
அவள் வரும் வரை கை கொட்டி பால்பற்கள் தெரியும்படி அழகாக சிரித்துக் கொண்டிருந்த பொம்மி, இப்போது அவளை நோக்கிக் கை நீட்டி தூக்குமாறு செய்கை செய்தபடி வீறிட்டு அழ ஆரம்பித்து விடவே,
“ச்சு! ச்சு! அழாதடா கண்ணு..” என்று கொஞ்சியவாறு குழந்தையைப் பறிக்காத குறையாகத் தன் கைகளில் வாங்கிக் கொள்ள,
“ரொம்பத் தான்!” என நொடித்துக் கொண்டான், அவளையே மார்புக்குக் குறுக்காகக் கை கட்டி அழுத்தமாகப் பார்த்தபடி..
“நான் தான் சொல்லிருக்கேனே குட்டிமா. மனுஷங்க கிட்ட போனா தான் விளையாட்டு காட்டி சிரிக்க வைப்பாங்க; பொம்மிக்கு நிறைய பொம்மைலாம் வாங்கித் தருவாங்க. ஆனா நீ பாரு! தெரிஞ்சிக்கிட்டே போய் பெரிய பிக்காச்சு கையில் ஏறி உக்காந்திருக்க..” என புலம்பலாகக் கூறிய நந்தினியை முறைத்துப் பார்த்தவனுக்கு நல்ல நேரம் ‘பிக்காச்சு’ எனும் பொம்மியின் மழலை மொழிக்கு அர்த்தம் தெரியாமலே போனது! இல்லையேல் நந்தினியை நோக்கி ஆவேசமாகப் பாய்ந்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
“விடுடா செல்லம், இங்க ஒரே கொசுத் தொல்லையா இருக்கு. நாம உள்ள போய்டலாம் என்ன?” என்று கேட்டபடி பொம்மியின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டவள்,
“துஷ்டனைக் கண்டா தூர விலகணும்; சாத்தானைக் கண்டா அப்பால போனு விரட்டி விட்டுடனும். இதை விட்டுட்டு, அவங்க கிட்டலாம் இளிச்சிட்டு போக கூடாதும்மா..” என போற போக்கில் பொம்மிக்கு அறிவுரை கூறுகிறேன் என்ற பெயரில் பார்வையாளனாய் நின்றிருந்தவனின் இரத்த அழுத்தத்தை எகிற வைத்து விட்டு சென்றிருந்தாள்.
•••••••••
ஏதோ யோசனையில் மூழ்கி இருந்தவனை இயல்புக்கு மீட்டு வந்தது, சரண்யாவின் அழைப்பில் தான்!
“என்னாச்சு சார்? பலத்த யோசனைல இருக்கீங்க போலருக்கு!” என்று கேட்டவளையும், இருளை கை நீட்டிக் காட்டி, “பிக்காச்சு, பிக்காச்சு” என தொண்டைக் கிழியக் கத்தி அழுது கொண்டிருந்த பொம்மியையும் மாறி மாறிப் பார்த்தவன்,
“அப்படின்னா என்ன?” என்று கேட்டான் சந்தேகமாக..
“அதுவா? பொம்மிக்கு பிசாசுனு சொல்ல வராது சார். அதான் நந்தினி எப்போ பாரு பிக்காச்சு கார்ட்டூன் பார்க்கிறதால பிசாசுக்கு பதிலா பிக்காச்சுனு சொல்ல பழகிட்டா. பொம்மி ரொம்ப பயந்துருவா அந்த பேரைக் கேட்டதும்!”
பற்களைக் கடித்தான் ஆடவன்.
என்னைக் காட்டியா குழந்தையிடம் பிசாசு என அறிமுகம் செய்து வைத்தாள் எனப் பொருமியபடி நந்தினியைத் திட்டித் தீர்க்க எழுந்த நாவை அடக்கிக் கொண்டு பிளாக்கினுள் நுழைந்தவன், மறுநாள் காலையில் பொம்மியைத் தூக்கப் போனதும்,
“ம்மா.. பிக்..கா.ச்சு..” என்ற வீறிட்டு அழுதவளைக் கண்டு நந்தினியின் மீது வெறியாகிப் போனான் என்றால், அது மிகையில்லை!
#துளி 03
அந்த அபார்ட்மெண்ட் வீட்டின் வாசல் நிலைப்படியில் சாய்ந்தவாறு சரண்யாவின் வருகைக்காக காத்திருந்தவளின் பார்வை, எதிர் பிளாக்கை திறந்து கொண்டு வெளியேறியவளில் பதிந்தது.
முழங்காலுக்கு சற்று உயர்ந்த ஸ்லீவ்லெஸ் ப்ளேயார்ட் ஸ்கர்ட் ட்ரெஸ் ஒன்றை அணிந்திருந்தவளின் முடி கழுத்தைத் தாண்டி வளரவில்லையோ அல்லது வளர்ந்ததைத் தான் ‘பேஷன்’ என்ற பெயரில் கத்தரித்துக் கொண்டாளோ, தெரியவில்லை!
உதட்டுச் சாயத்தின் தயவால் இரத்தச் சிவப்பு நிறமாக மாறியிருந்த இதழ்களோடு பார்க்க பார்பி பொம்மை போல் காட்சி அளித்தவளின் முகம் மேக்கப்பில் பளபளத்தது.
அவளைப் பார்க்கும் போது தன்னை மீறி எழும் பரிதாபத்தை மறைக்க நினைக்காமல் முகம் கோணியவள்,
“ஹாய்..” என தன்னைப் பார்த்து இதழ் விரியப் பந்தா காட்டாமல் கை அசைத்தவளைப் பார்த்து கடமைக்கே புன்னகை சிந்தினாள்.
முடியை கைகளால் வாரியபடி நந்தினியை நோக்கி ஒயிலாக நடந்து வந்தவள், “ஐம் லிண்டா..” என தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள,
‘என்ன அண்டாவோ..’ என நினைத்து சிரிப்பு பீரிட்டாலும் அதை இதழுக்குள் அடக்கிக் கொண்டவள், பதிலுக்கு தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை. ஏனோ அதில் பிடித்தம் இருக்கவில்லை அவளுக்கு.
“உங்க பிளாக்’கு எதிர்த்தாப்ல தான் நான் குடி வந்திருக்கேன். இனிமே அடிக்கடி சந்திக்கும் வாய்ப்புகள் ஏற்படலாம். அதனால தான் இப்போவே செல்ப் இன்ட்ரோ தந்தேன்..” என முறுவலோடு கூறியவளின் குரலில் கள்ளம் இருப்பதாய் தெரியவில்லை நந்தினிக்கு.
“உங்களை சந்திக்கிறதுல ரொம்ப சந்தோசம்ங்க..” என்று கூறியவள் ஆர்வம் தாளாமல்,
“நீங்க மட்டும் தானா? இல்லனா..” கேட்க வந்ததைக் கேளாமல் பாதியிலே நிறுத்திக் கொண்டாள்.
“நோ! என்னோட பேப்(babe)பும் என்கூட தான் இருக்காரு..”
“ஓஓ..” என்றவள்,
“ஊப்ஸ்! சாரி! நான் பேப்’னு சொன்னது என்னோட பார்ட்னரைத் தான் டியூட்! அவரை அப்படியே கூப்பிட்டு பழகிட்டேனா.. அதான் மாத்திக்க முடியல. நாங்க இப்போ லிவிங் ரிலேஷன்ஷிப்ல இருக்கோம்..” என வெட்கப்பட்டபடி உரைத்தவளை திகைப்புடன் ஏறிட்டாள்.
மிகச் சாதாரணமாக தங்களது உறவைப் பற்றி சொல்லி விட்டாளே என்ற சிந்தனையில் உலன்றவள் அப்போது தான் வீட்டை சாற்றிக் கொண்டு வெளியேறியவனைப் படு கேவலமாக பார்த்து வைத்தாள்.
‘பொறுக்கிப் பய! ரொம்ப நல்லா தான் பிளான் பண்ணிருக்கான். கலியாணம் பண்ணிக்கிட்டா வாழ்க்கை பூரா மல்லுக்கட்டனும் எங்குறதால லிவிங்ல வாழ்ந்துட்டு, இந்தப் பொண்ணை ஈஸியா கழட்டி விட்டுரலாம்னு முடிவு பண்ணிருக்கான் போல..’ என்று யோசித்தவளின் இதழ்கள் அதிருப்தியில் சுழிந்தன.
அவனை ஒரு மாதிரியாகப் பார்த்து வைத்தவள் லிண்டாவிடம் ஏதோ கூறவென வாய் திறந்த நேரத்தில்,
“நேரமாச்சு லிண்டா, வா!” எனக் கூறி அவளின் கைப்பற்றி இழுத்தான், வந்தவன்.
சிறு தலை அசைப்புடன் தன்னிடமிருந்து விடைபெற்று கொண்ட பெண்ணை பாவமாகப் பார்த்திருந்த நந்தினி எதேர்ச்சையாக அவளின் கைப்பற்றி இருந்தவனைப் பார்க்க, சட்டெனத் திரும்பிப் பார்த்து மையலாகக் கண் சிமிட்டினான் அவன்!
அதிர்ந்து விழித்தவளின் செவ்விதழ்கள் விரிந்து, “பொ.று..க்கி!” என வெறுப்புடன் முணுமுணுத்தன.