தோழிகள் அறைக்குள் அழைத்துச் சென்று அடிப்பட்ட காயத்திற்கு மருத்திட்டு, “நான் உனக்கு எத்தனை முறைச் சொன்னேன். கல்யாண ஏற்பாடு நடக்கும் போதே வருணை வந்து பேசச் சொல்லுன்னு. கடைசி நிமிஷம் வரைக்கும் வராம, தேவனை அனுப்பி வச்சிருக்கார். உன்னைப் பற்றி அக்கறை அவருக்கு இல்லாதப்போ எதுக்கு அவருக்காக நீ இந்த அடி வாங்குற?” தோழி பட்டக் காயத்தைப் பார்க்க முடியாமல் சுபா ஆத்திரத்தில் கத்தினாள்.
“அவர் சூழ்நிலை என்னன்னு தெரிஞ்சும் அவரைப் பேசுறதில் என்ன இருக்கு? அதான், அவருக்குப் பதில் தேவாவை அனுப்பியிருக்கார்.” உடல் முழுவதும் செந்நிறமாக மாறி தீயாக எரிந்து கொண்டிருக்க, திவ்யாவின் குரலின் ஒலி பாதாளத்திலிருந்து ஒலித்தது.
“உன்னால் பேசக்கூட முடியலை அப்படியிருந்தும், பைத்தியக்காரி மாதிரி பேசுற. வருண் வர வேண்டிய இடத்துக்கு வேற யார் வந்து பேசினாலும் ஏற்றுக்கமாட்டாங்க. நாளைக்கு என் சூழ்நிலைத் தாலி கட்ட வர முடியலைன்னு தேவாவை கட்டச் சொன்னா ஒத்துக்குவியா?” வருணின் செயல் சுபாவை எரிமலை ஆக்கியிருந்தது.
“என்ன பேசுற சுபா? அவ ஏற்கனவே நொந்து போயிருக்கா. நீ வேற ஏன் இப்படிப் பேசுற?” நந்தினி இடையிட்டுக் கேட்க,
“வேற எப்படிப் பேசச் சொல்ற? அவரிடம் திவ்யாவுக்குக் கல்யாணம்ன்ற பதற்றம் இல்லையே? அவர் வராம வேறொருத்தனை அனுப்பு வைக்கிறதுதான் காதலின் லட்சணமா? ராகுல் இவளுக்காகப் பேசினதைக் கேட்டதானே? இப்படிப்பட்ட மாப்பிள்ளைத் தேடினாலும் கிடைக்காது. வருணைவிட ராகுல் எவ்வளவோ மேல்.”
“ராகுல் நல்லவர்தான் அதுக்காகக் காதலித்த வருணை ஏமாற்றச் சொல்றியா? இவ அம்மா, அப்பா பண்றத் தப்புக்கு இவங்க ரெண்டு பேரும் தண்டனை அனுபவிக்கனுமா?” சுபாவின் பேச்சில் நியாயம் இருந்தாலும் நந்தினிக்கு அது சரியென்று தோன்றவில்லை.
“குடும்பத்தை எதிர்த்து வர முடியாதவன் எதுக்குக் காதலிக்க ஆசைப்படனும்? இன்னைக்குக் கல்யாணத்தை நிறுத்த முயற்சி பண்ணவ, முன்னாடியே செய்திருக்கலாமில்ல?” இருவரின் வாக்குவாதம் முற்றுவதைக் கண்ட திவ்யா இடைப் புகுந்து, இருவரையும் சமாதானம் செய்து, வீட்டுக்குப் போகலாம் எனக் கூறும் நேரம், திருமணி அதிரடியாக உள்ளே நுழைய, திரும்பவும் அடிக்க வந்திருக்கிறார் என நினைத்த தோழிகள் அவளை மறித்து நின்றார்கள்.
இருவரையும் முறைத்த திருமணி, “அவளிடம் சொல்லுங்க. காலையில் குறிச்ச முகூர்த்தத்தில் கல்யாணம் நடக்கும். தயாரா இருக்கச் சொல்லுங்க. என் தூரத்துச் சொந்தமான அக்கா மகனைப் பேசி முடிச்சிட்டேன்.” தோழிகள் அதிர்ச்சியில் சிலையானார்கள். ஆனால், திவ்யா இதை எதிர்பார்த்தே இருந்ததால், எந்தவிதச் சலனமும் இல்லாமல் அசைவற்று இருந்தாள்.
திருமணியிடம் நந்தினி பேசப் போக, அவள் கையை நீட்டியவர், “நான் கைக்காட்டுறவனுக்குக் கழுத்தை நீட்டிக் குடும்பம் நடத்தச் சொல்லு. இல்லை, இப்பவே இந்த நிமிஷமே கட்டியிருக்கிற சேலையோட வெளிய போகச் சொல்.” ஒரு தந்தையாக இல்லாமல் யாரோபோல் கூறினார்.
திருமணியின் முடிவைக் கண்டு அவர் பின்னாடியே வந்த அம்பிகா, “ஐயோ! நீங்க பார்த்திருக்கிற மாப்பிள்ளையைவிட, அவ காதலிக்கிறவனுக்கே முடிக்கலாம். வேண்டாங்க. கோபத்தில் தப்பானவனுக்குக் கட்டி வச்சு அவ வாழ்க்கையை நரமாக்கிடாதீங்க.” அடிவாங்கும் போது இறங்காத தாயின் மனம், திடீர் மாப்பிள்ளையின் குணம் தெரிந்ததால், மகளுக்காக மனம் தடம் மாறி நின்றது.
அம்பிகாவும் சேர்ந்துதானே திவ்யாவின் காதலுக்கு எதிர்ப்புக் கொடிக் காட்டினார். இப்ப என்ன இவரே பச்சைக் கொடிக் காட்டுகிறார் என ‘ஙே’ என திவ்யாவுடன் தோழிகளும் முழித்தார்கள்.
“வேற என்ன செய்யச் சொல்ற? மண்டபம், சாப்பாடுன்னு கொடுத்த பணத்தைத் திரும்பத் தரமாட்டேங்கிறான். கல்யாணம் நின்னுப் போச்சுன்னு பாதிப் பணமாவது தரலாமில்ல. எல்லாத்துக்கும் காரணம் இவதானே அப்ப அவளே அனுபவிக்கட்டும். அப்பத்தான் நம்ம வலி என்னன்னுத் தெரியும்.”
“அதுக்காக எல்லாக் கெட்டப் பழக்கமும் இருக்கிறவனுக்காக் கொடுப்பீங்க? பொம்பளைச் சகவாசம் வேற இருக்கு.” வெடவெடத்துப் போனார்கள் மற்ற மூவரும்.
“திவ்யா, நீ கிளம்பு இப்படிப்பட்ட ஒருத்தனைக் கல்யாணம் செய்து வைத்து, உயிரோட சமாதி வைக்க நினைச்சிட்டார். அதுக்கு நடுத் தெருவில் நின்னு பிச்சையெடுக்கலாம்.” நந்தினி, திவ்யாவை வெளியேற்ற அவளுடன் சுபாவும் சேர்ந்து மண்டபத்தைவிட்டு வெளியில் வந்தார்கள்.
கோபம் இருக்குமிடம் குணமிருந்தாலும் விவேகமும் இருக்கனும். ஆத்திரத்தில் வெளியில் அழைத்து வந்து விட்டார்கள். ஆனால், திவ்யாவை எங்கே அழைத்துச் செல்வது என்ற குழப்பம் இருவருக்கும் மனதில் தாளம் போட்டது.
அதிகாலை ஐந்து மணிக்கு நடுத் தெருவில் மூவரும் திக்குத் தெரியாமல் நின்றனர். நந்தினியும் சுபாவும் தங்கள் பெற்றோர்களைக் கைப்பேசியில் அழைத்து விபரங்களைக் கூறி திவ்யாவை வீட்டிற்குக் கூட்டி வர உத்தரவு கேட்டார்கள்.
ஒன்றிரண்டு நாட்கள் தங்கிச் செல்வதென்றால் பரவாயில்லை. திருமணம் நின்று பெற்றவர்களைப் பிரிந்து வருபவளை எப்படி அழைப்பது? இதனால், வேறு பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடுமோ? என்ற எண்ணம் அவர்களைச் சம்மதிக்க மறுப்பு கூற வைத்தது.
நந்தினியும் சுபாவும் அவசரப்பட்டு விட்டோமோ கையில் சல்லிக் காசு கூட இல்லாமல், இவளை எங்கு யாரிடம் நம்பி விட்டுச் செல்வது? இருவரும் தலையைப் பிய்த்துக் கொள்ளும் நிலைக்கு வந்தார்கள். கரைக்கு வந்த மீனாகத் தத்தளித்துக் கொண்டிருந்த நேரம், அவர்கள் அருகில் ஒரு கார் வந்து நிற்க, அதிலிருந்து மூவர் கீழே இறங்கி இவர்களைச் சுற்றி நின்றார்கள்.
திடீரென்று வந்து நின்ற காரிலிருந்த மூவர் சுற்றி நின்றதும் திகைத்துப் பயத்தில் நடுங்கினாலும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் தைரியத்தை வரவழைத்த நந்தினி, “யார் நீங்க? ஏதாவது வம்பு பண்ணீங்க போலீசைக் கூப்பிடுவோம்.” மனதுக்குள் நடுங்கினாலும் குரலில் வீராப்புத் தெரிந்தது.
மூவரும் எள்ளலாகச் சிரிக்க, “எங்க கூப்பிடுங்க பார்க்கலாம்.” எனக் கைப்பேசியைத் திவ்யாவிடம் கொடுத்து பேசச் சொன்னான். தயக்கத்துடன் கைப்பேசியைக் காதில் வைத்தவளுக்கு எதிர் திசையில் பேசிய குரலைக் கேட்டதும், முகம் அல்லி மலராக மலர்ந்தது.
தோழிகள் இருவரையும் காரில் ஏறச் சொன்னவள் தானும் ஏறினாள். இருவரும் தயங்க, “காரில் போயிட்டே பேசலாம்.” திவ்யாவின் பேச்சுக்கு மறு பேச்சில்லாமல் ஏறினார்கள்.
ஆறு பேரையும் சுமந்தக் கார் ஓடத் தொடங்கியது. இதையெல்லாம் மண்டபத்தில் இருந்து பார்த்திருந்த அம்பிகா யாரோ கடத்தி செல்கிறார்கள் என நினைத்துப் பதறியடித்து ஓடி வந்தார். ஆனால், கார் சிட்டாகப் பறந்து சென்றது.
திருமணி அவரைப் பிடித்து நிறுத்தி, “இன்றோடு அவ செத்துப் போயிட்டா. இனிமே அவளுக்காக நீயும் நானும் கவலைப்பட வேண்டாம். நாம உயிரோடு இருக்கிற வரை சந்தோஷமா இருக்கலாம்.” போகும் மகளைவிட அவர் நினைத்தது நடக்கவில்லை என்ற கோபமும் பிடிவாதமும் அதிகமிருந்தது.
தனக்கு இருக்கும் குணம்தானே தன் மகளுக்கும் இருக்கும் என்பதை எப்படி மறந்து போனார்? வெளியே போகச் சொன்னால் என்ன செய்வாள்? என்று நினைத்தவருக்குத் தான் ஊட்டி வளர்த்தத் தைரியம் அவளிடம் இருப்பதையும் மறந்துதான் போனார். திவ்யாவை யாரும் கடத்தி செல்லவில்லை என்பதை அறிந்தே அம்பிகாவை விடாமல் தன் கைகளுக்குள் பிடித்து வைத்திருந்தார்.
“என்னப்பா மணி உன் பொண்ணு இப்படிப் பண்ணிட்டா? நிராதரவா விட்டுப் போன அந்த மாப்பிள்ளை வீட்டுக்காரங்க முன்னாடிக் கல்யாணத்தை முடிக்க நினைச்ச. தம்பி நீ கேட்டியேன்னு, என் பையனைக் கல்யாணம் செய்து வைக்கச் சம்மதிச்சேன். உன் பொண்ணு இப்படி அசிங்கப்படுத்திட்டாளே. நாங்க எப்படி ஊருக்குள்ள தலை நிமிர்ந்து நடக்க முடியும்?” திடீர் மாப்பிள்ளையின் அம்மா கூற,
“முதல்ல உங்க பையனை ஆடாம நிற்கச் சொல்லுங்க. அவனைப் பிடிக்கவே ரெண்டு பேர் தேவைப்படுது. இதில் ஊருக்குள்ள தலை நிமிர்ந்து நிற்கிறதைப் பற்றிப் பேச வந்துட்டீங்க.” ஆத்திரத்தில் வெறுப்பை உமிழ்ந்தார் அம்பிகா.
“என்ன அம்பிகா பேச்சு வித்தியாசமா இருக்கு? நீ உன் பொண்ணை வளர்த்த இலட்சணம் சிரிப்பாச் சிரிக்குது. என் பையனைப் பற்றிப் பெரிசாப் பேச வந்துட்ட. ஓடிப் போனவளுக்கு வக்காலத்து எதுக்கு?”
“என் மக ஓடிப் போனாலும் யார் குடியையும் கெடுக்கலை. ஆனால், இவன் எத்தனை பொண்ணுங்க வாழ்க்கையைச் சீரழிச்சிருக்கான். தெரிஞ்சும் என் பொண்ணை எப்படிக் கட்டி வைக்க முடியும்?” தன் கணவனிடம் காட்ட முடியாத கோபத்தை நாத்தனாரிடம் காட்டினார்.
“உன் பொண்ணு மட்டு யோக்கியமா? உன் மகளும் என் மகனும் ஒரே இனம்தான். அதான், ரெண்டுக்கும் சரியாப் போகும்னு கல்யாணம் பண்ண நினைச்சேன். நீ என்னமோ கற்புக்கரசியைப் பெற்ற மாதிரி குதி…”
வார்த்தைகளை முடிக்கும் முன் திருமணியின் சத்தம் ஓங்க, “அக்கா, பணம் வீணாப் போகுதேன்னு கோபத்தில் உன் மகனுக்குத் திவ்யாவை முடிக்க நினைச்சேன். அதுக்காக என் மக சோரம் போனவன்னு நினைச்சிராதே. அவளைப் பற்றி ஒரு வார்த்தைத் தப்பாப் பேசின, நான் மனுஷனா இருக்கமாட்டேன்.”
திருமணி தனக்குச் சாதகமாகப் பேசுவான் என நினைத்தவர், அம்பிகாவிடம் அதிகமாகப் பேசிவிட்டார். ஆத்திரம் உச்சியில் இருந்தாலும் பெற்ற மகளைத் தவறாகப் பேசியதும் அதே கோபம் தடம் மாறிச் சென்றது.
“அம்பிகா வேண்டாம்னு சொல்லியும் நீ கேட்டதுக்குச் சம்மதிச்சேன். உன் புத்தியைக் காட்டிட்டல்ல. இன்னும் பத்து நிமிஷத்தில் அத்தனை பேரும் வெளிய போயிருக்கனும்” ஆக்ரோஷமாக நின்ற திருமணியைக் கண்டதும் கண் மூடித் திறப்பதற்குள் மாயமாகினார்கள்.
திவ்யாவைப் பற்றித் தவறாகப் பேசியதும், தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பதை உணர்ந்த திருமணி, நிதானமாக ராகுலிடம் பேசியிருக்கலாமோ? எனக் காலம் கடந்து யோசித்தார். ஆத்திரம் தன் கண்ணை மறைத்துவிட்டதாக எண்ணியவருக்குப் பயன்தான் என்ன?
******
காரில் ஏறிய பிறகுதான் மூவரும் ராகுலின் நண்பர்கள் என்று தெரிந்தது. மண்டபத்தில் இருந்த சூழ்நிலையால் ராகுலின் அருகில் நின்றிருந்தவர்களைக் கவனிக்காமல் விட்டிருந்தனர். வருண்தான் நண்பர்களை அனுப்பி அழைத்து வரச் சொல்லியிருப்பான் என எண்ணியவர்களுக்கு ராகுல் அழைத்து வரச் சொன்னது அதிர்ச்சியை அளித்தது.
“இந்த நிலைமையிலும் வருண் வரலை. ராகுல்தான் உனக்காக வந்திருக்கார். அவரை வேண்டாம்னு சொன்னது ரொம்பத் தப்பு திவ்யா. இப்படி எதுக்கும் உதவாதக் காதலைக் கட்டிகிட்டு ஏன் அழற?” சுபா மீண்டும் தன் பாட்டை ஆரம்பித்தாள்.
“இவ என்னடாக் காதலுக்கும் உதவிக்கும் வித்தியாசம் தெரியாதவளா இருக்கா. உனக்குக் காதல்னா என்னன்னு புரிய வைக்க ஒருத்தன் வருவான் உன்னிடம் அப்போ பேசிக்கிறேன்.” என்றவளின் வாயை சுபா மூட,
“நாங்க மூனு பேர் இருக்கோம். எந்த ஆட்சேபனையும் இல்லைன்னா. உங்க தோழிக்குப் புரிய வைக்க நாங்க தயார். எங்க மூனு பேரில் யாரைப் பிடிச்சிருக்குன்னு சொல்லச் சொல்லுங்க.” காரை ஓட்டிக் கொண்டிருந்த ஆதன் கண்ணாடியில் பார்த்தபடிச் சொல்ல,
“முதலில் காரை முன்னாடிப் பார்த்து ஓட்டுங்க. ஏற்கனவே ஒருத்தி படுறபாடு போதாதா? நான் வேற மாட்டிட்டு முழிக்கனுமா? போதும்டா சாமி.” எனத் தலைக்கு மேல் கையைத் தூக்கினாள் சுபா.
சுபாவின் பின்னாடி அமர்ந்திருந்த ரஞ்சித், அவள் காதருகில் வந்து, “கல்யாணத்துக்கு முன்னாடிக் காதலிச்சாதானே பிரச்சனை. நாம கல்யாணம் செய்துட்டுக் காதலிக்கலாமா?” என்றவனைத் திரும்பி பார்த்தவளின் முகம் கோபத்தில் செவ்வானமாகச் சிவக்க, அவள் பார்வையின் உக்கிரம் தாங்காமல் தன் விழிகளை வெளியில் சுழல விட்டான்.
சுபா ரஞ்சித்தை முறைப்பதைக் கண்ட நந்தினி, என்னவென்ற தொனியில் திவ்யாவை பார்க்க, ரஞ்சித் கேட்டதைப் பற்றிச் சொல்லவும், அவனைத் திரும்பிப் பார்த்த நந்தினி, “பேச்சுக்குச் சொன்னேன். உடனே காதலைச் சொல்வீங்களா? இனிமே இதுக்கு என்ன குதி குதிக்கப் போறாளோ?” எனச் சுபாவை எள்ளலாகக் குனிந்து பார்க்க, தன் ஒற்றை விரலைத் தூக்கிக் காட்டினாள் சுபா.
சிறு புன்னகையோடு சுபாவை அருகில் வரச் சொல்லி, “என்ன இருந்தாலும் அவர் காதலைச் சொன்னதும், மனதில் பட்டாம் பூச்சி பறக்க ஒவ்வொரு நரம்புகளும் தேனாகத் தித்திக்குமே!” நந்தினி அவள் காதில் கிசுகிப்பாகக் கேட்க, தலையில் சுபா அடித்துக் கொள்ள, இரணகளத்திலும் தன்னிலை மறந்து திவ்யா சிரிக்க, அவள் சிரிப்பில் தோழிகள் இருவரின் மனம் சிறிது ஆசுவாசமடைந்தது.
சற்று நேரத்தில் கார் மகளிர் விடுதி முன்பு நின்றதும், அனைவரும் கீழே இறங்கி விடுதியைச் சுற்றி சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், முக மலர்ச்சியோடு ராகுல் தன் காரில் வந்து இறங்கினான்.
“திவ்யா, அவசரத்துக்கு வேற வழி தெரியலை. அதான், மகளிர் விடுதிக்குக் கூட்டிட்டு வரச் சொல்லிட்டேன். உனக்கு எதுவும் பிரச்சனை இல்லையே?”
“இல்லை.” எனத் தலையை ஆட்டினாலும் மனம் கனப்பதை அவள் முகம் காட்டியது. பெற்றோர் கைவிட்ட நிலையில் அடுத்து என்ன செய்வதென்று குழப்பத்தில் இருந்தவளுக்கு, ராகுல் செய்த உதவியை எப்படிக் குறைச் சொல்ல முடியும்.
வீட்டிற்கு வந்ததும் பெற்றோர்களுடன் பெரிய வாக்குவாதப் போரை நடத்திய பிறகுதான் ராகுல் இங்கு வந்தான். ஏற்கனவே தன் நண்பர்கள் இருவரை மண்டபத்தில் நடப்பதை உடனுக்குடன் தெரிவிக்கச் சொல்லியிருந்தான்.
ரஞ்சித்தும், பாலாவும் மண்டபத்தில் நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் ராகுலுக்குத் தெரிவித்துக் கொண்டே இருந்தார்கள். திருமணி அவசரத்தில் வேறு மாப்பிள்ளைப் பார்த்தது தெரிந்ததும் தன் கோபம் முழுதும் பெற்றவர்களிடம் திரும்பியது.
இருவரும் இழுத்து வந்ததால்தானே தன்னால் திவ்யாவுக்குத் துணையாக இருக்க முடியாமல் போனது. நான் அங்கு இருந்திருந்தால் இப்படியொன்று நடக்க விட்டிருக்க மாட்டேன். என்னை மண்டபத்தில் இருந்து இழுத்து வந்து விட்டார்களே என்று அவர்களுடன் மல்லுக்கு நின்றான்.
பார்த்து பார்த்து எல்லாம் செய்தும் மகனை வேண்டாமென்று சொல்லிவிட்டாளே என்ற ஆதங்கத்தில், அவளுக்காக இவன் ஏன் செல்ல வேண்டுமென்ற எண்ணம் ராகுலுக்குத் தடையாக நின்றார்கள். இனிமே அவளுக்கும் இவனுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்ற பிறகு, அவங்க பிரச்சனையை ஏன் இவன் தலையில் ஏற்றிக் கொள்ள வேண்டுமென்று குறுக்கே நின்றார்கள்.
பெற்றவர்களை மீற முடியாமல் தவித்தபடிச் சென்றவனுக்கு நண்பர்கள் மூலம் தகவல்களைத் தெரிந்து கொண்டதும், திவ்யாவைப் பாதுகாப்பாக ஒரு இடத்தில் தங்க வைக்க வேண்டுமென்று தனக்குத் தெரிந்த மகளிர் விடுதியில் பேசி அனுமதியும் வாங்கியிருந்தான்.
“அவசரத்துக்கு உதவி பண்ணதில் எந்தப் பாவமும் இல்லை. வசதி குறைவா இருந்தா என்ன?” என சுபா சொல்ல,
“ஏங்க, நீங்க வம்பிழுக்க வேண்டிய ஆள் அங்க இருக்கான். போய் என்ன பண்ணனுமோ பண்ணுங்க.” என்று ரஞ்சித் நின்ற திசை நோக்கி கையைக் காட்ட,
‘அடப் பாவிகளா! அதுக்குள்ள இவரிடம் எப்படிச் சொன்னானுங்க! முடிவே பண்ணிட்டானுங்களா!’ அதிர்ந்து யோசனையில் நின்ற சுபாவின் முதுகில் நந்தினி தட்ட, சுயநினைவுக்கு வந்தாள்.
“அது சரி. அவ உங்களை வேண்டாம்னுத் தூக்கிப் போட்டுட்டா. அப்புறம் எதுக்கு அவ பின்னாடிச் சுத்திட்டு இருக்கீங்க. சுத்த வேண்டியவர் என்ன ஆனார்னே தெரியலை.” சுபாவுக்கும் திரும்ப திரும்ப அதையே சொல்லிச் சலிப்பானது.
“ஆறு மாசமா அவ எனக்குன்னு நினைச்சிட்டேன். அதான், அவளை அப்படியே விட்டுட்டுப் போக மனசு வரலை. எப்போ அவ வேறொருத்தருக்குச் சொந்தம்னு சொன்னாளோ அப்பவே என் மனசை மாத்திட்டேன்.” எல்லோரும் அதிர, திவ்யாவுக்கு முள்ளாகக் குத்தியது.
ராகுலின் தோளில் ரஞ்சித் கை வைக்க, “நான் சுத்துறது இருக்கட்டும். இவ்ளோ பேசுற நீ, உன் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போக வேண்டியதுதானே. வாய் மட்டும் ஓய மாட்டேங்குது.” தன் மன வலியை இடம் மாற்றச் சமாளித்தான்.
“எனக்கே போக்கிடம் இல்லை. நானே எங்க அப்பன் ஆத்தாளை அண்டிக் கிடக்கேன். இதில் இவளை எங்க கொண்டு போய்ச் சேர்க்க?” எனச் சுபாவும் அவனுடன் சேர்ந்து சூழ்நிலையை இளகுவாக்கினாள்.
“முடியாதுல்ல. அப்போ உதவி செய்ற எங்களுக்கு உபத்திரவமா இருக்காதீங்க. நீங்க யாரையும் அண்டிப் போக வேண்டாம். அதான், ரஞ்சித் தயாரா இருக்கானே.” என ரஞ்சித்தின் தோளில் கைபோட்டு எள்ளலாகச் சிரித்தான்.
“ஏதேது விட்டாக் கல்யாணமே முடிச்சு அனுப்பிருவீங்க போல. ஐயோடா சாமி நான் உங்க பக்கமே வரலை. அவளாச்சு நீங்களாச்சு. நான் அந்த மரத்தடியில் உட்கார்ந்திருக்கேன். வேலையை முடிச்சிட்டுக் கூப்பிடுங்க.” சுபா விறுவிறுவென நடந்ததைப் பார்த்து எல்லோரும் சிரித்தனர். விடுதியினுள் சென்று விடுதி காப்பாளரிடம் பேசி திவ்யாவுக்கு ஒதுக்கப்பட்ட அறையைப் பார்த்துவிட்டு ஒரு மாதத்திற்குப் பணம் செலுத்திய பிறகே வெளியில் வந்தான் ராகுல்.
“வருண் வந்ததும் பணத்தைக் கொடுக்கிறேன்.” திவ்யா தயக்கத்துடன் சொல்ல,
சிறிது புன்னகையைச் சிதறவிட்ட ராகுல், “இதிலும் என்னோடது இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறியா திவ்யா?” விரக்தியோடு கேட்டான்.
“இல்லை அப்படியெல்லாம் இல்லை. உங்களுக்கு எதுக்குக் கஷ்டம்?”
“வட்டியோட வாங்கிக்கிறேன் போதுமா? பிரச்சனை முடியற வரைக்கும் இங்கயே இரு. வருணோட அட்ரஸ் கொடு. நான் அவரிடம் பேசுறேன். ஏதோ பிரச்சனையில் மாட்டிட்டு இருக்கலாம். என்னன்னு நேரில் போய்ப் பார்த்துட்டு வரேன்.”
திவ்யா முகவரி சொல்ல, தன் கைபேசியில் குறித்துக் கொண்டான் ராகுல். அவளுக்குத் தேவையானவற்றைத் தோழிகள் உதவியுடன் வாங்கிக் கொடுத்த பிறகு, அவரவர் இல்லம் சென்றனர்.
வருண் பிரச்சனையில் மாட்டியிருப்பான் என நினைத்து மனதைத் தேற்றியிருந்தவளுக்கு, எல்லோரும் கிளம்பியதும் தனிமையில் நேரம் செல்ல செல்ல மனம் நிம்மதியின்றித் தவித்தது. விடுதியில் கொடுத்த உணவும் தொண்டைக் குழியில் இருந்து இறங்க மறுத்தது.
திருமணப் பேச்சை எடுத்ததிலிருந்து மூட மறுத்த விழிகள் திருமணம் நின்றதும் அவளை அறியாமலே கண்கள் நித்திரைக்கு அழைத்தது. வருண் அழைக்கும் நேரம் தூங்கிவிட்டால் பேச முடியாமல் போய்விடுமே என்ற எண்ணம் இமைகளை மூடத் தடுத்தது. ஆனால், உடலில் இருந்த அயர்வு தன்னை மறந்த நிலையில் உறங்கிப் போனாள்.