புது இடம். யாருமில்லாத தனிமை இரவு. தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு புரண்டுப் படுத்தாள் திவ்யா. பதினொரு மணிக்கு மேல் வருண் அழைக்க, முகத்தில் மின்னல் மின்ன எழுந்து அமர்ந்தவள், கைப்பேசியைக் காதில் வைத்தாள். வருணின் குரல் கேட்ட அடுத்த நொடி ‘ஓ’ வென்று அழத் தொடங்கினாள். அவன் சமாதானம் செய்தும் நிற்காமல் அழுதப் பிறகே ஓய்ந்தாள்.
அவளின் அழுகைச் சத்தம் நின்றதும், “திவ்யா! என்னை மன்னிச்சிரு. இதுவரை நடந்தது நடந்து போச்சு. இனிமேல் நடக்கப் போறதைப் பார்ப்போம். எங்கப்பா என்னை அறைக்குள்ள வைத்துப் பூட்டிட்டார். அதை மீறி வர முடியாம இல்லை. தங்கச்சி ரெண்டு பேருக்கும் என்மேல் நம்பிக்கை இல்லாம ஆகிடக் கூடாதுன்னு இருந்தேன். நீ என்னைத் தப்பா புரிஞ்சிக்கமாட்டேன்னு நினைக்கிறேன்” என்றான்.
“என்மேல் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா வருண்? எனக்குக் கைக்கொடுக்க வேண்டிய நேரத்தில் வராம, இப்ப அதுக்குக் காரணம் சொல்லிட்டு இருக்கீங்க. நான் உங்களை இப்பவே கல்யாணம் செய்துக்கோங்கன்னு சொல்லலை. இக்கட்டான சூழ்நிலையில்கூட நீங்க வரலைன்னா எப்படி வருண்?” எல்லோரும் கேட்டக் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் நின்றவள், அத்தனை கேள்விகளையும் வருணிடம் கேட்கத் தொடங்கினாள்.
“திவ்யா, எல்லாம் தெரிஞ்சும் கேட்டா நான் என்ன பதில் சொல்ல? நீ எதிர்த்துப் போராடி வந்திருவன்னு தெரியும். அந்தத் தைரியத்தில் நானிருந்தால், நீ இப்படிக் கேள்விமேல் கேள்வி கேட்கிற?”
“என்ன வருண் பேசுறீங்க? எதிர்த்துப் போராட முடியும்தான். இல்லைன்னு சொல்லலை. கை மீறிப் போகும்போது என்னைக் காப்பாற்ற நீங்கதானே வரனும். எல்லாத்துக்கும் சூழ்நிலையைக் காரணம் சொன்னா எப்படி? எனக்கு இருக்கிற தைரியம் உங்களுக்கு இல்லையா? நந்தினி, சுபா இல்லைன்னா ஒரு அயோக்கியன் என் கழுத்தில் தாலி கட்டியிருப்பான். அவனைக் கட்டிக்கிறதுக்கு உங்க காதலை மறந்துட்டு நான் ராகுலையே கல்யாணம் பண்ணியிருக்கலாமே. ஆனால், நீங்கதான் வேணும்னு நினற எனக்குத் துணையா நீங்க இல்லாத என் சூழ்நிலையை யோசிச்சீங்களா வருண்?” என்று சற்றுக் காட்டமாகவே கேட்டாள்.
இருவரிடமும் எந்தப் பேச்சுமின்றிச் சற்று நேரம் அமைதியாக இருக்க, “என் நிலைமையைச் சொல்லித்தான் உன் காதலை ஏத்துக்கிட்டேன். எல்லாத்துக்கும் நீதான் சம்மதம் சொன்ன. நான் வரலைன்னு தெரிஞ்சதும், நான் எதுக்கும் இலாயக்கு இல்லைன்னு, நீ ராகுலை கல்யாணம் பண்ணியிருக்க வேண்டியதுதானே. எதுக்கு எல்லாத்தையும் உதறிட்டு வந்து என்னிடம் மல்லுக் கட்டுற?”
“ஓ! அப்போ நீங்க என்னைக் காதலிக்கவே இல்லையா வருண்? என்னுடைய கட்டாயத்தில்தான் காதலை ஏத்துக்கிட்டீங்களா? நான்தான் முட்டாள் மாதிரி பைத்தியம் பிடிச்சு உங்க பின்னாடி அலையுறேனா?” பெற்றவர்களின் ஆதரவு இல்லாமல் அனாதையாக நின்றதே, காதலித்தவன் கைக்கொடுப்பான் என்ற நம்பிக்கையில் அவனிடமிருந்து எதிர்பாராத வார்த்தைகள் வர விசும்பத் தொடங்கினாள்.
திவ்யாவின் கேவல் ஒலி காதில் கேட்கவும், “ஐயோ! உனக்கு எப்படிப் புரிய வைக்க? நீ ரொம்பக் குழப்பத்தில் இருக்க. இப்ப நான் என்ன பேசினாலும் அது தப்பாயிரும். நீ போய்த் தூங்கு காலையில் பேசலாம்” என்றவனுக்கு உரலுக்கு ஒரு பக்கம் இடி மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி. பெற்றவர்களுக்கும் காதலிக்கும் இடையில் மாட்டிக் கொண்ட விரக்தியில் வார்த்தைகளை விட்டுவிட்டான்.
“குழப்பம் எனக்கில்லை வருண். நீங்க தெளிவா இருந்திருந்தா, உங்களை நம்பி வந்ததுக்கு என்னை இப்படிப் பேச மாட்டீங்க. ஆபீஸில் உங்க நல்ல குணத்தைப் பார்த்துதான் காதலித்தேன். ஆனால், மேலோட்டாமா பார்த்ததால் உங்க உண்மைக் குணம் தெரியாம போச்சு. காதல்னு உங்க பின்னாடிச் சுத்தின எனக்கு இது தேவைதான்.” என்றவள் கைப்பேசியைத் துண்டித்துவிட்டுப் படுக்கையில் விழுந்ததும் தலையணை நனைய ஆரம்பித்தது.
தனிமையின் விரக்தி சுற்றி சுற்றி வர, ஆபத்து நேரத்தில் வர வேண்டியவன் வராமல் கைவிட்டானே என்ற இயலாமை, ஆறுதலாகப் பேசுவானென நினைத்தவளுக்கு, அவனிடம் தனக்கான காதல் இல்லையோ? என்ற எண்ணம் மூளையை மழுங்கச் செய்தது. மீண்டும் கைப்பேசியை எடுத்தவள் வருணை அழைத்து ஆத்திரம் தீரச் சுனாமி அலையாகப் பாய நினைத்து வருணை அழைத்தாள்.
வருண் கைப்பேசியை எடுக்காமல் இருந்ததால், வானதி ஒலிப்பானை இயக்கி மேசையில் வைக்க, அமைதியின் சுரூபமாக இருந்த திவ்யா பத்ரகாளியாக மாறும் காட்சியை அறிந்திராதவன் ஆடிப் போய்ச் சிலையாக அமர்ந்திருந்தான்.
திவ்யாவின் ஆட்டத்தைக் கண்டு இருவருக்கும் உள்ள காதல் நம்மால் கரை சேராமல் மூழ்கிவிடுமோ என்று வானதியும், பவந்தியுமே பயந்து போனார்கள். இருவரையும் எப்படிச் சமாதானாம் செய்வது? இருவருக்கும் இடையில் நாம் செல்வது சரியாகுமா? என்ற யோசனைப் புழுவாகக் குடைந்து கொண்டிருந்தது.
அப்பாவை மீறிச் செல்ல ஐந்து நிமிடம் ஆகாது. காதலுக்காகத் தங்கைகளை விட்டுவிட்டானே என்ற எண்ணம், தங்கை இருவரின் மனதிலும் பதிந்துவிடக் கூடாது. அப்படியொரு நிலை வந்துவிட்டால் திவ்யா இங்குச் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்வது கடினமாயிற்றே என்ற குழப்பம். இருவருக்கும் எதையும் தெளிவாகப் பேச முடியாத மனநிலை வார்த்தைகள் முற்றிவிட்டது.
வருணின் கலக்கத்தைக் கண்ட வானதி, அவன் கைப்பேசியை எடுத்து, “அண்ணி, நான் வானதி பேசுறேன்” என்ற குரலைக் கேட்டதும் எழுந்தமர்ந்தாள். அழுது அழுது சோர்ந்திருந்தவளின் குரல் பாதாளத்திலிருந்து ஒலிக்க,
“ம்” என்பதற்கு மேல் பேச முடியாமல் தொண்டை அடைப்பதைப் புரிந்த வானதி தானே பேச, “அண்ணி, அண்ணன் உங்க கல்யாணத்தை நிறுத்தக் கிளம்பினான். ஆனால், அப்பாவும் அம்மாவும் உங்களைக் கல்யாணம் பண்ணிக் கூட்டிட்டு வந்திருவான்னு, அவனை அறைக்குள்ள வைத்துப் பூட்டிட்டாங்க. எங்களாலும் அவங்களை மீறி என்ன செய்ய முடியும்? வேற வழி இல்லாமத்தான் தேவன் அண்ணாவை அனுப்பினாங்க.” வானதி சொன்னதைக் கேட்டதும் கலங்கிப் போனாள். ஆத்திரத்தில் அவசரப்பட்டுப் பேசிட்டோமே என்ற எண்ணம் அலைக்கழித்தது.
வானதியிடமிருந்து கைப்பேசியை வாங்கிய பவந்தி, “அண்ணி, உங்க கஷ்டம் அண்ணனுக்குப் புரியாம இல்லை. எங்களுக்காக அண்ணன் கஷ்டப்படுறதைப் பார்க்க முடியலை. உங்களுக்காகவே அண்ணன் சீக்கிரம் வருவான். அதுவரைக்கும் பொறுத்துக்கோங்க.” பவந்தியின் வார்த்தைகளைக் கேட்டதும், இதழ்கள் துடிக்கக் கண்ணாடியாகச் சில்லு சில்லாக உடைந்து போனாள் திவ்யா.
இருவருக்கும் பதில் கூற முடியாமல் அவசரப்பட்டதை நினைத்து உடைந்த அணைப் பெருக்கெடுத்துப் பாயும் வெள்ளமாகக் கண்ணீர் வழிந்தோடியது. அவளால் இப்போது பேச முடியாது என்பதைப் புரிந்தவர்கள் கைப்பேசியை அணைத்தார்கள்.
மேசையின் மீது கையை ஊன்றி நெற்றியில் முட்டுக் கொடுத்த வருணின் உடல் அசைவதை வைத்து, அவன் அழுவதை உணர்ந்த வானதியும், பவந்தியும் தலையையும் முதுகையும் வருடிவிட்டு அவனைச் சாமாதானம் செய்தனர்.
திவ்யாவின் இடத்திலிருந்து அவளுடைய கஷ்டத்தையும் எடுத்துச் சொல்லி, இருவரும் கேட்டுக் கொண்டதற்காகத் தன் கண்களைத் துடைத்துவிட்டு சரியென மெல்லத் தலையை அசைத்தான் வருண்.
******
வீட்டில் காலையில் எழுந்ததிலிருந்து பரபரப்பாக வேலைக்குப் புறப்படுவாள் திவ்யா. ஆனால், விடுதியில் எந்த வேலையும் இல்லாததால் ஒன்பது மணி அலுவலகத்திற்கு, பதினைந்து நிமிடம் முன்னாடிப் புறப்பட்டு நடந்து போனாலே, ஐந்து நிமிடத்தில் அலுவலகம் சென்றுவிடலாம் என்று நத்தை ஊர்வது போல் புறப்பட்டு முடித்துக் கதவைத் திறக்க, வெளியில் நின்றிருந்தவனைக் கண்டு மின்னல் வெட்டியது போல் அதிர்ச்சியில் நின்றாள்.
கண்களில் நீர் தேங்க வேகமாகச் சென்று இரு கைகளையும் மாலையாகப் போட்டு வருணின் மார்பில் முகம் புதைத்து விசும்பினாள் திவ்யா. அவளை இறுக அணைத்த வருண், விடுதியில் எல்லோரும் இவர்களை வேடிக்கை பார்ப்பதைக் கண்டு, அவளைத் தள்ளிக் கொண்டு உள்ளே சென்று கதவை மூடினான்.
திவ்யாவின் காதருகே குனிந்து, “இரண்டு பேரும் தனியா வேற இருக்கோம். நீ இப்படியே இருந்தா எனக்கு மூடு மாறிடும் பரவாயில்லையா?” எனக் கிசுகிசுக்க, முகம் சிவக்க அவனிடமிருந்து விலகி நின்றவளை, தன்னிடம் இழுத்து அவள் நெற்றியில் மெல்ல இதழ் பதித்து, கண்களின் ஈரத்தைத் துடைத்துவிட்டான்.
திவ்யாவின் முகத்தையே பார்த்திருந்தவனை நெஞ்சில் கைவைத்து மெல்லத் தள்ளிவிட்டுத் தானும் விலகி நின்றாள். அவள் எண்ணம் புரிந்தவன் தானும் விலகிச் சென்று டவலை எடுத்து முகம் துடைக்கக் கொடுத்தவன்,
“நீங்க மட்டும் ஓடி வந்து கட்டிப்பிடிக்கலாம். ஆனால், நாங்க வரக் கூடாதா? இது என்னடா நியாயம்?” என்றுஅவளைச் சீண்ட,
“வருண்!” எனச் செல்லமாக முறைத்தவள், “இரண்டு நாளா நான் பட்டக் கஷ்டத்தை உங்க மேல சாய்ந்து ஆறுதல் படுத்திகிட்டேனே தவிர, உங்களை மாதிரி வேற எந்த எண்ணத்திலும் வரலை” என்று அவன் மூக்கைப் பிடித்து ஆட்டியவள், “நீங்க எப்படி இங்க வந்தீங்க?” சிறு அணைப்பிலும், இதழ் தந்த வெதுவெதுப்பிலும் தன் மனதின் கனம் குறைவதை உணர்ந்து சகஜ நிலைமைக்கு மாறியிருந்தாள் திவ்யா.
தன்னைக் கண்டதும் கலையிழந்திருந்த திவ்யாவின் முகத்தில் பிரகாசம் தெரிந்ததில் மகிழ்ச்சியாகிப் போக, “ராகுலைக் கேட்டுத் தெரிந்து கொண்டு வந்தேன். நீ கிளம்பிட்டியா? உன்னை ஆபீஸில் விட்டுட்டுப் போறேன். போற வழியில் எல்லாம் சொல்றேன்” என்றதும் அறையைப் பூட்டிக் கொண்டு இருவரும் புறப்பட்டார்கள்.
தங்கைகள் இருவரும் இரவு முழுவதும் செய்த அர்ச்சனையில் காலை எழுந்ததும், ராகுலை தொடர்பு கொண்டு விபரங்கள் எல்லாம் கேட்டுவிட்டு, ராகுலின் சிபாரிசோடு விடுதி காப்பாளரிடம் ஒரு நாள் மட்டும் என்று அனுமதி கேட்டு அறைவரைக்கும் வந்திருந்தான்.
“அப்போ வானதியும் பவந்தியும் சொன்னதால்தான் வந்தீங்க. நீங்களா எனக்காக வரலை. அப்படித்தானே?” வருண் பின் அமர்ந்து அவன் முதுகில் அடித்தபடிக் கேட்டாள்.
“எந்தப் பக்கம் போனாலும் கதவை மூடினா, நான் என்னம்மா செய்றது? எல்லோரும் சேர்ந்து என்னை வதைக்கிறது போதாதா? நீயாவது என்னைப் புரிஞ்சிக்கோ திவ்யா” என அவள் அலுவலகம் முன் பைக்கை நிறுத்த, மேலும் எதுவும் கேட்டு அவனைக் கஷ்டப்படுத்த வேண்டாமென்று பைக்கிலிருந்து இறங்கியவள்,
“வருண், எனக்கு ஆபீஸ் நடக்கிற தூரம்தான், நீங்க தினமும் இவ்ளோ தூரம் வரனுமா? நாம ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் பார்த்துக்கலாமே.” என்றவளை உற்றுப் பார்த்த வருண் சிறு புன்னகையோடு,
“ஏன் உன்னை ரேப் பண்ணிடுவேன்னு பயப்படுறியா? உங்க வார்டன் படி தாண்டி உள்ள வரவிடமாட்டாங்க. இன்னைக்கு ராகுல் புண்ணியத்தில் வந்தேன்.”
“ஐயோ! நான் அதுக்குச் சொல்லலை. ஏற்கனவே மாமா, அத்தை உங்க மேல நம்பிக்கை இல்லாம கோபத்தில் இருக்காங்க. நீங்க என்னைத் தினமும் பார்க்க வரீங்கன்னுத் தெரிஞ்சா, வாரத்தில் ஒரு நாள்கூட நாம பார்த்துக்க முடியாது.” எனக் கெஞ்ச,
“நானே எப்படிச் சொல்லாம்னு இருந்தேன். வானதிக்கு வரன் வந்திருக்கு. அதைப் பேசி முடிச்சிரலாம்னு இருக்கேன். முடிவாயிட்டா கல்யாண வேலை அதிகமாயிடும். அதனால், என்னாலும் அடிக்கடி வர முடியாது. நல்ல வேளை நீயே வேண்டாம்னுச் சொல்லிட்டே.”
“ஓ! ரொம்ப நல்ல விஷயம். வானதி கல்யாணத்துக்கு என்னைக் கூப்பிடுவீங்களா? இல்லை, மாமா, அத்தைக்குப் பயந்து இருப்பீங்களா?”
“நீ இல்லாம எப்படி? என்னோட மனைவியா முன்னாடி நின்னா எவ்வளவு நல்லா இருக்கும். பரவாயில்லை. என் காதலியா வந்து நில்லு. இது உன் வீட்டுக் கல்யாணம். நான் கூப்பிட்டுத்தான் நீ வரனும்னு இல்லை. புரியுதா? எனக்கு நேரமாச்சுக் கிளம்பறேன்.” எனச் செல்லமாகக் கடிந்துவிட்டுச் சென்றான்.
வருணின் வார்த்தைகள் தந்த மகிழ்ச்சியில் புன்னகையோடு மெல்லப் புது அலுவலகத்துக்கு நடக்க, சிறிது தூரம் சென்ற வருண் பைக்கை நிறுத்தி, அவளைத் திரும்பிப் பார்க்க, அவள் படும் துன்பங்களை நினைத்து மனம் கொந்தளித்தது. ஆனால், அழகரை கண்டதும் எல்லாம் அடங்கிப் போவதை நினைத்து வருந்துவதைத் தவிர வேறு வழி தெரியாமல் புறப்பட்டான்.
படியேறும் முன் வருணை திரும்பிப் பார்த்த திவ்யாவின் மனம் அவன் வந்துவிட்டான் என்ற மகிழ்ச்சி இல்லாமல் சுமையாகக் கனத்தது. ஏன்? என்று புரியாமல் மெல்லப் படி ஏறி வரவேற்பு அறையில் இருந்த பெண்ணிடம் உத்தரவு நகலைக் காண்பிக்க, அவள் காட்டிய சோபாவில் அமர்ந்தாள் திவ்யா.
பத்து நிமிடம் கழிந்த நேரம் விக்னேஷ் உள்ளே நுழைந்ததும் திவ்யாவை பார்த்துவிட்டு, “ஷீலா, ஐந்து நிமிஷம் கழித்து அவங்களை உள்ளே அனுப்பு.” என்றவன் மீண்டும் திவ்யாவை பார்த்துவிட்டுச் சென்றான்.
‘இவர் பார்வையில் ஏதோ வித்தியாசம் தெரிகிறதே ஏன்?’ என யோசனையில் இருந்தவளை ஷீலா, விக்னேஷ் அழைப்பதாகச் சொன்னாள். அறையினுள் வந்தவளை நாற்காலியைக் காட்டி அமரச் சொன்னான். ஒரு வார்த்தைக்கூடப் பேசாமல் தன் அருகில் இருந்த பொத்தானை அழுத்தியதும், முப்பது வயது மதிக்கத் தக்க பெண் உள்ளே வர, “சஞ்சு, இவங்க திவ்யா. இவங்களுக்கு நம்ம கம்பெனி பற்றியும் அவங்க வேலைப் பற்றியும் சொல்லுங்க.” என்று தன் முன் இருந்த மடிக்கணியைப் பார்க்கத் தொடங்கினான்.
திவ்யாவிற்கு ஏதோ ஒன்று மனதைக் குடைய, மெல்லத் திரும்பி விக்னேஷை பார்க்க, சலனமற்றபடித் தன் வேலையில் மும்முரமாக இருக்க, ‘இவர் ஏன் ஒரு வார்த்தைக் கூட என்னிடம் பேசலை. இவர் எப்பவுமே இப்படித்தானா? இல்லை, வேற எதுவும் இருக்குமா?’ என்ற சிந்தனையோடு சென்றவள், சஞ்சு நின்றதைக் கவனிக்காமல் அவள்மேல் மோதி நின்றாள்.
“என்ன ஆச்சு திவ்யா? முதல் நாள் என்பதால் குழப்பமா? இல்லை, வேற எதுவுமா?” சஞ்சு கேட்க,
“இல்லை. அதெல்லாம் ஒன்னுமில்லை.” எனச் சமாளித்த திவ்யா அவள்பின் சென்று அவள் காண்பித்த நாற்காலியில் அமர்ந்தாள்.
சஞ்சு வேலையைப் பற்றிக் கூறக் கவனமாகக் கேட்டுக் கொண்டாள் திவ்யா. எல்லாம் கூறி முடித்த சஞ்சு, “நீ உட்கார வேண்டிய நாற்காலி இது இல்லை. சூழ்நிலை உன்னை மாற்றி உட்கார வைத்திருக்கு.” என்று பொடி வைத்துப் பேசிவிட்டுத் தன் வேலையைத் தொடங்கினாள்.
தன்னைப் பற்றித் தெரிந்திருக்கும் என நினைத்தாலே தவிர, ஏன்? எனக் கேட்டுத் தேவையில்லாத பிரச்சனையைத் தலையில் ஏற்றிக் கொள்ள விரும்பாமல், தன் வேலையில் மூழ்க ஆரம்பித்தாள் திவ்யா.
அமைதியாக இருந்த அலுவலகத்தில் சலசலப்புக் கேட்டதும் நிமிர்ந்து பார்த்த திவ்யாவை கண்டு காணாதது போல் விக்னேஷின் அறைக்குள் சென்றான் ராகுல். அவன் கதவை மூடும் வரை அமைதியாக இருந்தவர்கள் மீண்டும் சலசலக்க ஆரம்பித்தார்கள்.
“ராகுல் சாரோட கல்யாணம் நின்றதுக்குக் காரணம், பொண்ணு அவரைப் பிடிக்கலைன்னுப் போயிட்டாளாம்.”
“இவர் அழகுக்குப் பிடிக்கலைன்னுப் போயிருக்கமாட்டா. பெரிய இடத்துப் பிள்ளை. நிறையப் பெண்களோட சகவாசம் இருந்திருக்கலாம். வேற பழக்கங்களும் இருந்திருக்கலாம். அது தெரிஞ்சதும் பொண்ணு வீட்டுக்காரங்க கல்யாணத்தை நிறுத்தி இருப்பாங்க.”
அவர்களின் பேச்சில் திவ்யாவுக்குக் கோபம் சுள்ளென்று ஏற, பேசியவர்கள் பக்கம் திரும்பி, “ஏன் வேற காரணம் இருக்காதா?” என அடித் தொண்டையில் அழுத்திக் கேட்டாள்.
திருமணம் நிற்க இவள்தான் காரணம் என்று அறியாதவர்கள், “வேற என்ன இருக்கும்? ஏதாவது நோய் இருக்குமோ சீக்கிரம் போய்ச் சேர்ற கேசா இருக்கலாம்.” என்று தெனாவட்டாகப் பதில் உரைத்தவர்களைத் துவம்சம் செய்ய எழுந்து நின்றாள் திவ்யா.
திவ்யாவின் முன் சஞ்சு நின்று, “இப்ப நீ வேலையை மட்டும் பார். வேற எதுவும் யாரிடமும் பேச வேண்டாம்” எனக் கட்டளையிடும் தொணியில் கூறினாள். சஞ்சு சொன்னதற்குக் கட்டுப்பட்டுத் தன் நாற்காலியில் உட்கார்ந்தாள்.
மனம் ஏனோ ராகுலை சுற்றி சுற்றி வந்தது. தன்னால்தான் அவருக்கு இப்படியொரு அவப் பெயர் வந்துவிட்டது. அவர் நண்பர் கம்பெனியில் நல்ல பெயருடன் இருந்தவரை, இழிவாகப் பேசக் காரணமாகிவிட்டேனே என்ற குற்ற உணர்ச்சி அவளுக்குள் கரையானாக அரிக்கத் தொடங்கியது.
மதிய உணவு சாப்பிட சஞ்சு அழைக்க, அதற்காகவே காத்திருந்தவள் போல், வேகமாக எழுந்து உடன் சென்று கேண்டீனில் வாங்கிய உணவுடன் மேசையில் அமர்ந்ததும், “சஞ்சு, என்னை ஏன் தடுத்தீங்க? அவங்க மூனு பேரும் பேசினது தப்பு. அதை அவங்களுக்குப் புரிய வைக்க வேணாமா?”
அதைக் கேட்டு மெல்லச் சிரித்த சஞ்சு, “எத்தனை பேருக்கு எப்படிப் புரிய வைப்ப? இந்தக் கல்யாணம் நின்றதுக்குக் காரணம் நீதான்னு சொல்லுவியா?” சாப்பிடுவதை நிறுத்திவிட்டு அதிர்ச்சியில் இருந்த திவ்யாவை பார்த்து, “ராகுல் சாரைப் பற்றிப் பல வருஷமா தெரிஞ்சும் நாக்கில் நரம்பு இல்லாமப் பேசுறாங்க. கல்யாணம் நின்றதுக்குக் காரணம் நீதான்னு தெரிஞ்சா சும்மா இருப்பாங்கன்னு நினைக்கியா?”
திவ்யா சஞ்சுவின் கேள்விகளுக்குப் பதில் உரைக்காமல், “உங்களுக்கு எல்லாம் தெரியுமா!” திகைப்பிலிருந்து மீளாமல் கேட்டாள் திவ்யா.
“இது யாரோட கம்பெனின்னு நினைச்ச? ராகுல் சாரோடது. விக்னேஷ் சார் அவரோட தம்பி. சாரோட கல்யாணத்துக்கு நானும் விக்னேஷ் சாரும் சேர்ந்துதான் எல்லா வேலையும் பார்த்தோம். மண்டபத்தில் நடந்த எல்லாம் எனக்குத் தெரியும். கம்பெனி உழியர்கள் யாரையும் கல்யாணத்துக்குக் கூப்பிடலை. சாயங்காலம் வரவேற்புக்குதான் எல்லோரையும் கூப்பிட்டிருந்தாங்க” என்றாள்.
கையளவு இதயம் எவ்வளவு அதிர்வுகளைத் தாங்கும்? மயக்கம் போட்டு விழாத குறையாக திவ்யா சிலையானாள். சஞ்சுவின் பொடி வைத்தப் பேச்சும் புரிய, அதற்கு மேல் பேச முடியாமல் தொண்டை அடைக்கக் கண்கள் மழையைப் பொழிந்தது.
சொந்த நிறுவனத்தில் ஊழியர்களிடம் ராகுலுக்கு எப்பேற்பட்ட அவமானத்தைத் தேடித் தந்திருக்கிறேன். விக்னேஷ் அவர் தம்பி என்பது கூடத் தெரியவில்லையே. அவர் ஏன் பேசவில்லை என்பது புரிய இதயம் படபடவென்று துடித்தது.
திவ்யாவின் கைகளைப் பிடித்த சஞ்சு, “ஆபீஸ் ஸ்டாஃப் மட்டும் இருநூறு பேர். உற்பத்திப் பணியாளர்கள் ஆயிரம் பேர் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதத்தில் பேசுவாங்க. எத்தனை பேருக்கு உன்னால் விளக்கம் கொடுக்க முடியும்?” என்ற சஞ்சுவின் கேள்வியில் திவ்யாவின் தலைத் தானாகக் குனிந்தது.
வாயில் எடுத்து வைத்த உணவுத் தொண்டைக் குழிக்குள் இறங்க மறுத்து நின்றது. அவளைக் கட்டாயப்படுத்திச் சாப்பிட வைத்து, ஆறுதலாகப் பேசி அழைத்துச் சென்றாள் சஞ்சு. நினைக்க நினைக்க வெடித்துச் சிதறிவிடுமோ என்று கண் மூடி அமர்ந்திருந்தாள்.
“இனிமே இதையெல்லாம் யோசிப்பதால் என்ன ஆகிடப் போகுது? நீ செஞ்சத் தப்பு எதுவும் இல்லை. மனசைப் போட்டுக் குழப்பிக்காம வேலையைப் பார்?” சஞ்சுவின் பேச்சில் ஆசுவாசமடைந்தவள் வேலையில் கவனம் செலுத்தினாள்.
விடுதியிலிருந்து பழகாதவளுக்கு எல்லாம் புதுமையாகத் தெரிய, இந்த வாழ்க்கையும் பிடித்துப் போனது. தினமும் வருண், நந்தினி, சுபா மூவரும் திவ்யாவை அழைத்துப் பேசாமல் இருந்ததே இல்லை. அவர்களின் தினசரிகளில் இதுவும் ஒன்றாகிப் போனது.
எல்லாம் பிடித்துப் போனவளின் உடலுக்கு விடுதி, கம்பெனி உணவு பிடிக்காமல் போக, பத்து நாளைக்குள் தன் வேலையை மெல்லக் காட்டத் தொடங்கியது. சாப்பிடும் எதுவும் வயிற்றில் தங்கவில்லை. மருந்தகத்தில் மாத்திரை வாங்கிச் சாப்பிட்டும் எந்தப் பயனும் இல்லை.
வானதியைப் பெண் பார்க்க வருவதால், வருண் அதில் மும்முரமாக இருக்க, திவ்யாவின் அழைப்பை ஏற்றுப் பேச முடியாமல் இருந்தான். அலுவலகத்தில் முக்கியமான கூட்டம் என்பதால் நந்தினி, சுபா கைப்பேசியை ஓசை இல்லாமல் வைத்திருக்க, திவ்யாவின் அழைப்பை அவர்களும் ஏற்கவில்லை. யாரை உதவிக்கு அழைக்க என்ற தடுமாற்றத்தில் கதவைத் திறந்தவள் தன் சுயநினைவை இழந்து மூர்ச்சையாகி சரிந்தாள்.