உச்சி பொழுதை நெருங்கும் நேரம் அனைத்து சமையல் வேலைகளையும் முடித்து விட்டு வீட்டுக்குப் பின்புறம் வர. ஒரு மூட்டை துணியை அசராமல் துவைத்து கொண்டிருந்தாள் போதும் பொண்ணு.
“இவ என்ன கண்ணாலம் ஆகி வந்ததுல இருந்து வண்ணாத்தி கணக்கா துணி முக்கிகிட்டு கிடக்கா”முனகியவாரே பொண்ணை நெருங்கிய வாசுகி.
“இந்தாரு பொண்ணு” என்றதும் தலையை உயர்த்திப் பார்த்தவள் சினேகமாகச் சிரித்து வைத்து “என்னக்கா?”
“என்ன புள்ள நீ வந்த நாளுல இருந்து துணி கூட மல்லுகட்டுற”
“உம்ம கொழுந்து எமக்காக வேண்டி வருஷ கணக்கா சேர்த்து வச்ச மூட்ட அதேன் கொஞ்ச கொஞ்சமா வெளுத்து வைக்கிறேன்”
பொண்ணு சாதாரணமாகச் சொல்ல. வாசுகிக்கு தான் எதோ போல் இருந்தது “அவருக்கு உடுப்பு சரியா துவைக்க வராது”
“ஹ்ம்ம்!…”
“எனக்கும் பாப்பா இருக்குல்ல ஐயித்தக்கும் மூட்டு வலி” எதற்கு இந்த விளக்கம் என்று தெரியவில்லை ஆனால் சொல்ல வேண்டி வார்த்தை முட்டியது போலும்.
“சரிதான் அவர் என்ன சின்னக் குழந்தையா? நம்ப சோலிய நம்ப தேன் பார்த்துக்கிடனும்” என்றதும் அவளையே பார்த்து கொண்டிருந்தாள் வாசுகி.
வாசுகியை பொறுத்தவரையில் நான், என் கணவன் என் பிள்ளை என்று தான் இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு செய்யும் வேலை என்றால் அது மதிய வேளை சமையல் மட்டுமே.
பேச்சு இயல்பு போல் என்றாலும் எடுத்து கட்டி செய்யவெல்லாம் கை வராது, ஆனால் இந்தப் பத்து நாட்களில் இந்தச் சின்னப் பெண் சிறு சலனத்தை விதைத்து விட்டாள்.அது சரி ஆடி தீர்த்த வள்ளியே அடங்கி நிற்க. வாசுகி எல்லாம் எந்த மூலைக்கு.
போதும் பொண்ணை பார்த்தால் தோன்ற கூடிய வார்த்தைகள் சில வெள்ளந்தி, எதார்த்தம் பக்குவம், பதிவிசு என்று பல பரிமாணத்தைக் கொடுக்க தனித்து நின்றது பெண்.
தம்பிரான் மச்சான்களின் தேர்வு மெச்சுதலை கொடுத்தது அவ்வீட்டு பெண்களுக்கு.
வள்ளிக்கு பேச்சுக் குறைவு என்றாலும் கண்ணும் கருத்தும் மருமகளிடம் தான் சுற்றியது.சின்னப் பெண் சிரித்துக் கொண்டே சாட்டையைச் சுழட்டி சிலவற்றை கற்பிக்க. .தம்பிரானுக்குத் தவறவிட்ட செயல்கள் வெகுவாக குற்ற உணர்வை தூண்டியது.
முதலில் வேலன் பேச்சை கொண்டு முரண்டு நின்றாலும் இப்போது யோசிக்க ஆரம்பித்து விட்டார் வள்ளி.அந்த அளவிற்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகுப்பெடுத்தது பெண் எடுத்துக்காட்டாக.
திருமணம் முடிந்து சரியாக மூன்று நாட்கள் கடந்த நிலையில் அன்று மெதுவாகச் சமையல் அறைக்கு வந்த பெண்ணிடம் வாசுகி சிறு சிறு வேலைகளைக் கொடுக்க.
அதனைச் செய்து கொண்டிருந்தாள் போதும் பொண்ணு.வள்ளியும் அங்கே அமர்ந்து தான் கீரை ஆய்ந்து கொண்டிருந்தார்.
ஓர கண்ணால் அவ்வப்போது பொண்ணை அளந்து கொண்டே செயல் பட “அக்கா என்ன குழம்பு”
“கத்திரிக்கா மொச்சை போட்டு கருவாட்டு குழம்பு”
“ஓ!…”
“செந்தில் மாமாக்கு ரொம்பப் புடிக்கும்” கணவனது பிடித்தம் என்பதை ஆசையாக சொல்லினால் வாசுகி.
‘வேற எதுவும் செய்யலையாக்கா?’ என்றதும் வாசுகி திரும்பி அவளை முறைத்து விட்டு.
‘ஏன் நீ கருவாடு திங்க மாட்டியா?’ என்க அவளைத் தொடர்ந்து வள்ளியும் சூடாக.
‘ஏழு வகையெல்லாம் செய்ய முடியாது அவ புள்ள காரி எம்புட்டு வேலை செய்வா? இது செய்யறதே பெருசு’ படப் படவென பொரிய.
தலையைக் குனிந்து சில நொடிகள் மௌனமாக இருந்த பொண்ணு. பதமாக அதே நேரம் நாவை சட்டையாகச் சுழட்டினால் அடித்தாலும் வலிக்காது, ஆனால் வலி இருக்கும் அந்த வகையான பேச்சு.
நான் வந்த நாளுல இருந்து புளிப்பு வகையும் கத்திரிக்கா எண்ணெய் கருவாடும் அதிகம் பொழங்குது அதேன்.
இந்த மூணுமே கரப்பானுக்கு ஆகாதுல.நாந்தேன் ஆகாத பொருளை விலக்கி புடலாம்னு…என்ன கொடுத்தாலும் குறை படிக்காம சாப்பிடுற மனுஷன் வேற…
இந்த இடத்தில நிறுத்தியவள் தலையை உயர்த்தி இரு பெண்களையும் பார்த்து சிறு புன்னகையுடன் ‘நானும் எது கொடுத்தாலும் தின்னுகிடுவேன் கொடுக்காட்டியும் கண்டுக்கிட மாட்டேன்” என்க.
பெண்களுக்கும் ஒரு மாதிரி ஆகிவிட்டது.புளி சேர்த்து வைத்தால் செழியனுக்குப் பிடிக்கும். கருவாடு கத்திரிக்காய் சேர்த்தால் செந்திலுக்குப் புடிக்கும்.
வாசுகி, வள்ளி, வேலனும் எதுவென்றாலும் உண்டு கொள்வார்கள். அந்த வகையில் தான் தம்பிரானும் என்பது போல் அவர்கள் எண்ணிக் கொள்ள,
இப்படி ஒரு விடயத்தை யோசிக்க வில்லை.வள்ளி கூட ‘ஏன் இத்தினி நாள் நம்ப கண்ணுல அம்புடல’ கவலையாக எண்ணி கொண்டார்.
அன்று மட்டும் அல்ல அடுத்த வந்த நாட்கள் எல்லாம். இது போல் பல விடயங்களைப் பெண் அவரை யோசிக்க வைத்து விட்டது.
அந்த ஒரு நாள் பேச்சுக்கு பிறகு வாசுகியும் வள்ளியும் இது போல் சுள்ளெனப் பேசுவதில்லை.அதற்காக நெருங்கியும் பழக வில்லை. அவரவர் குணத்தோடு வழமையாக இருந்து கொண்டனர்.
காலையில் இருந்து வேலை செய்து கொண்டிருந்த பொண்ணை பார்க்க பாவமாக இருக்க மனம் பொறுக்காமல் “இப்படி ஒட்டுக்கா வேலை செஞ்சா உடம்பு நோகும் புள்ள”
“இதெல்லாம் பழக்கந்தேன்”
“சரி அந்த அலசின துணிய குடு நான் காயப் போடுறேன்”
“அதெல்லாம் வேணாம் புள்ள தூங்கும் போதே செத்த படுத்து கிடுங்க” உரிமையாக சொல்ல என்ன பெண் இவள் என்று வாசுகிக்கு இளகி விட்டது.
“உம்ம பேசி முடிக்கும் போது எம்புட்டு எதிர்ப்பு தெரியுமா? ஐத்த, நானு, ஏன் எங்க அப்பாரு கூட வேற இடம் பார்க்க சொன்னாரு,ஆனா சின்ன அண்ணனும் பெரிய அண்ணனும் பிடியா இருந்து சண்டை கட்டி உம்ம முடிச்சு வச்சாய்ங்க”
“ஓ!” செய்தி போல் கேட்டு கொண்டாள்.
“அடமா நிண்டு கட்ட இந்தப் புள்ள கிட்ட என்ன இருக்குனு ஓசுச்சேன். இப்போதேன் கொஞ்சம் கொஞ்சமா செய்தி விளங்குது. உம்ம வேண்டி தேன் தம்பி மாமாக்கு வந்த வரனெல்லாம் தட்டி போச்சு போல.
செழியனுக்குப் பார்த்த புள்ள இருக்குல்ல. அதை முதல தம்பி மாமாக்கு தேன் பரிசம் போட முடிவு” என்றதும் துணியை அலசி கொண்டிருந்த பொண்ணு கைகள் சில வினாடிகள் நிறுத்தம் செய்து விட்டது.
மீண்டும் விட்ட வேலையைத் தொடர்ந்து கொண்டே “ஏன்?”
“தட்டு மாத்த போன நேரத்துல தம்பி மாமாவ புடிக்கலைனு சொல்லி புடுச்சு… அந்தப் புள்ள அப்பாவும்”
“ஓ! இதைப் பேச்சு வார்த்தை அப்போ சொல்லி இருக்கலாமே”
“நாங்களும் அதேன் கேட்டோம் மழுப்பி புட்டாய்ங்க”
“அப்புறம் எப்படி செழியன் மாமாக்கு முடிச்சீக” பட்டென கேட்க.
அவள் கேட்பதின் உட்பொருள் விளங்க பெரும் தயக்கம் கொண்டு “நல்ல குடும்பம் அதேன்” என்றதும் இப்போது பற்கள் தெரிய சிரித்துக் கொண்டாள் பெண்.
“என்ன புள்ள பல்ல காட்டுற”
“ஒன்னும் இல்லக்கா நம்ப தோதுக்கு நியாத்தை மாத்திக்கிட வேண்டியது தேன்”
சட்டையான பதிலடி குத்தினாலும் பேச்சை மாற்றும் பொருட்டு “உம்ம கிட்ட தம்பி மாமா இந்தச் செய்திய சொல்லலையா?”
தலை மட்டும் இல்லை என்ற தோரணையில் ஆட்டியது பெண். இவர்கள் பேசி கொண்டிருக்கும் போதே வாசுகியின் மகள் முழித்து அழுக “புள்ள முழுச்சுகிச்சு போல”
“வெரசா போங்க” என்ற போதும் பொண்ணு. மீதம் உள்ள வேலையை முடித்து விட்டு. அடுக்கலைக்குள் சென்று சோற்றை தூக்கில் எடுத்துக் கொண்டு தம்பிரானை பார்க்க தோட்டத்துக்கு நடையை கட்டினாள்.
திருமணம் பற்றி தினம் ஒரு செய்தி என்பது போல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செய்து வந்து விழுந்தது பெண்ணுக்கு.
தம்பிரான் தன்னை மனம் முடிக்க என்ன காரணம் என்ற வினாக்கு விடையாக பல செய்திகள் கிட்டியது. அது போக அவ்வீட்டு மக்களின் குணமும் தம்பிரான் நிலையும் அக்குவேறு ஆணி வேறாக உணர்ந்து கொண்டாள்.
வள்ளி – வேலன் அருமையான தாய் தந்தை.அம்பிகை அல்லி வேலனை போலச் சூது வாது இல்லாத மென்மையான பெண்கள்.
செந்தில் செழியன் தான், தன், தனக்கு என்ற கொள்கையைக் கடை பிடிக்கும் அண்ணன் தம்பிகள் வாசுகி முகம் காட்டும் கண்ணாடி. நீ காட்டிய விம்பம் கொண்டு என் செயல் என்பது போல்.
சிறுசு- பெருசு நேர்மையான உள்ளம் கொண்ட தூய்மையான அன்பர்கள். வாசுகியின் மகள் ஒரு வயதை எட்டி பிடிக்கும் தேவதை பெண்.
தம்பிரான் தனி வகை அதிக எதிர்பார்ப்புக் கொண்டு ஏங்கி நிற்கும் சோம்பேறியான சுயநிலை வாதி. ஆனால் கொள்ளை அன்பு கொண்ட புத்தி சாலி.
இவ்வாறு பெண் தனது குடும்பத்தை கணித்து. அதற்கு ஏற்றவாறு தன்னை தயார் செய்து கொண்டது.குடும்ப அரசியலில் பெண் சாணக்கியன் போலும்
தோட்டத்துக்குள் நுழைந்து தம்பிரானை நெருங்கி கொண்டே “சோறு உண்க வாக மாமா” என்றழைக்க
மனைவியைப் பார்த்த கணத்தில் மத்தாப்பு வெடிக்க “வாடி எழும்பி” என்றான் தம்பிரான். வாய் கொள்ளா வெள்ளை பூக்கள்.
இந்தப் பத்து நாட்களில் பத்தாண்டு வாழ்ந்த நெருக்கம் இருவருக்கும்.குறையும் குறையும் சேர்ந்து நிறைந்து நின்றது போல் இருந்தது இவர்களது வாழ்க்கை.
அது என்னவோ பல வகையில் பட்ட இருவருக்கும் வெகு இயல்பாக நெருக்கம் வந்தது. இதில் கணவனது குணமும் பிடிபட அவளே தன்னைப் புகுத்தி கொண்டாள்.
“வாடி எழும்பி என்ன சோறு?”
“அதே வடி கஞ்சியும் கொத்தமல்லி துவையலும்” என்றதும் முகம் கோண.
“நீயே தின்னு” முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டே செல்ல போனவனை இழுத்து கீழே அமர வைத்தவள்.
“புண் ஆறி போகட்டும் பொறவு என்ன வேணுமோ செஞ்சு தாரேன்”
“இதே தேன் நேத்து சொன்ன”
“எனக்கு என்ன? இன்னைக்குப் புளி குழம்பு தேன் திங்கிறீங்களா?” என்றதும் முகத்தைச் சுளித்தவன் வேணாம் என்ற ரீதியில் தலையை ஆட்ட.
“கஞ்சியோ கூல்லோ வவுரு காயம போட்டு கிட வேண்டியது தேன்” என்றதும் சுள்ளென.
“இம்புட்டு நாள் அப்படித்தேன் போட்டுக் கிட்டேன்”
“வெடுக்குனு பேசுறீக”
“போடி அதாண்ட” முறுக்கி கொண்டவனை தாஜா செய்யும் பொருட்டு.
“நீங்க சொன்ன மாதிரி இங்கன சமைச்சுக் கிடலாம் என்ன? இன்னும் ஒரு வாரம் தேன் நல்லா ஆகிடும். பொறவு எது வேணுமோ செஞ்சு தாரேன்” சிறு குழந்தைக்குச் சொல்வது போல் சமாதானம் செய்ய.
அவனுக்கு இந்த தன்மை பிடிக்க சமத்தாகக் கேட்டு தலையை ஆட்டி கொண்டான். கொஞ்சம் கொஞ்சினால் ஆளை சாய்த்து விடலாம். இதுவும் இரு தினங்களுக்கு முன் படித்த செய்தி பெண்ணுக்கு
தம்பிரான் சில உருண்டைகளை உள்ளே தள்ளியதும் மெதுவாகப் பேச்சை ஆரம்பித்தது பெண் “உம்ம தம்பிக்குப் பார்த்திருக்கப் பொண்ணு தேன் உங்களுக்குக் கட்ட வேண்டியதாமே?” என்று நிறுத்த அடுத்த உருண்டையை வாய்க்குக் கொண்டு சென்ற தம்பிரான் நிதானித்து.
திருமணமாகி வந்ததில் இருந்து வேலன் படிக்கும் பாட்டு இது தான் ‘என் மவன் அப்பாவி, அவனுக்கு நியாயம் செயலை, சூது வாதுத் தெரியாது, பத்திரமா பார்த்துகிடனும்”
நாளுக்கு ஒரு முறை இதே வாக்கியங்களைத் தொடர் மாறாமல் பேசி வைப்பார் போதும் பொண்ணிடம். அதை எண்ணியவளுக்கு என்னோ சிரிப்பு வந்தது.
தலையைக் குனிந்து வாறு உண்டாலும் மனையாளை கணித்தவன் போல் “என்னடி எழும்பி பல்ல காட்டுற” என்றவாறு உணவை முடித்துக் கொண்டு கையைச் சுத்தம் செய்தவன். அவளை நெருங்கி அமர அவனைப் பக்கவாட்டில் திரும்பி பார்த்துக் கொண்டே.
“உமக்கு சூது வாது தெரியாதாம்? அப்பாவியாம்?” என்றதும் வழமையான புன்னகையுடன்.
“வருமுடி வரும் என்றவன் அவளை இன்னும் நெருங்கி நல்லிய கடிச்சுகிடவா” மெல்லிய குரலில் கேட்க அவனைப் பார்த்து முறைத்து வைத்தவளை.
“என்னடி முறைக்கிறவ”
“இது என்ன இங்கன? அதுவும் வெட்ட வெளி”
“கொஞ்சம் பொறுத்துகிடு வெரசா வூடு கட்டி புடுவேன்” என்றவன் கை மெல்ல அவளது கையை பற்ற சிறு கூச்சம் கொண்டு விலக்கி கொள்ள.
“எலும்பி அநியாயம் பண்ணுற புள்ள. கண்ணாலமாகி பத்து நாள் ஆகி போச்சு. பத்த ரெண்டுல வகுத்து இரண்டு நாள் மேனிக்கு பிரிச்சு,
முதல் இரண்டு நாள் மெதுவா தொட்டு, அடுத்த இரண்டு நாள் பதமா உரசி, அப்படிக்கா தேச்சு இப்படிகா பிடிச்சு,கொஞ்சமா கட்டினு பழக்கி வச்சா திரும்ப நீ முன்னுக்குப் போயி நிக்கிற தொட்ட நெளியிற என்னடி நீ?”
அவன் சொன்ன வேகத்திலும் போட்ட கணக்கிலும் சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது “கணக்கு வாத்தி கணக்கா இருக்கு பேச்சு வகுத்து கூட்டி வளைக்கப் பார்க்குறீங்களோ?”
“ஆமாடி எலும்பி மறுவாதியா இறுக்கி கட்டிக்கிடு”
முடியாது என்ற ரீதியில் தலையை ஆட்டியவள். அவன் சுதாரிக்கும் முன்னே வெடுக்கென எழுந்து. சில அடிகள் விலகி அவனைப் பார்த்துக் கொண்டே பின்னால் செல்ல. அவனும் எழுந்து கொண்டு அவளைப் பார்த்தவாறே முன்னேறி
செங்குருவி செங்குருவி
காரை மடை செங்குருவி
சேலை கட்டி மாமனுக்கு
மாலையிட்ட செங்குருவி
ஒத்திகைக்கு போவமா ஒத்துமையா ஆவோமா
வெட்கமெல்லாம் முட்ட காட்டி வச்சா என்ன ஓரமா
கண் அடித்து போதை குரலில் பாட வழமை போல் அவனது குரலில் சொக்கி தான் போனாள் பெண். தம்பிரான் குரலில் மென்மையும் கிராமத்து நெடியும் சற்று தூக்கலாக வீசியது.
“நெருங்கி வாரேன் விலகக் கூடாது” ஒரு மாதிரி குரலில் தம்பிரான்.
“பயம் காட்டுறீகளா?
“பயந்துக்கிடுறவ தேன் நீ” என்றவன் அவளை நெருங்கி பிடித்து விட.
“ப்ச் வெட்ட வெளி”
“எலும்பி” என்று கெஞ்ச உருகி விட்டது பெண்ணுக்கு. தான் கெஞ்சினால் மறுக்க தோணாது பெண்ணுக்கு இது தம்பிரான் படித்தது.
ஒரு முறை சுற்றி முற்றி யாரும் இருக்கிறார்களால் என்று பார்த்தவள். அவனை நெருங்கி கண் பார்த்து வெட்கம் கொண்ட சிரிப்பை சிந்தி இறுக்கி கொள்ள வேக மூச்சுகளோடு அவனும் இறுக்க கட்டி கொண்டான்.
இக்காட்சியைக் கண்ட சிறுசும் பெருசும் நெஞ்சில் கை வைக்காத குறையாக அதிர்ந்து நின்றனர்.