தனது தமக்கையைப் பார்த்த கையோடு தம்பிரானை பார்த்து பேசி விடும் நோக்கத்தில் பயணக் களைப்பையும் மீறி மீனாட்சி கோவிலை நோக்கி நடையைக் கட்டினால் போதும் பொண்ணு.
பாண்டி ராணியைத் தரிசிக்கக் கழுத்து முட்டும் ஆசை இருந்தாலும்.பொழுது சாய்வதற்குள் வீட்டில் இருக்க வேண்டும் என்பதற்காக வழமை போல் ஆசையை அடக்கி கொண்டு பெருசு, சிறுசு கடையை நோக்கி நடந்தாள்.
கடையை நெருங்கியவள் “ஏலேய்! சிறுசு அரக்கு கலரு வளவி ஒரு டஜன் எடுத்து அக்காக்கு குடு” என்று பரபரப்பாக வியாபாரம் செய்து கொண்டிருக்க.
அவர்களை எப்படி அழைப்பது என்று தெரியாமல் கையில் உள்ள மஞ்ச பையை மணிக்கட்டில் சுற்றி திருகி கொண்டிருந்தாள்.
சிறு மல்லிகை மொட்டில் பட்ட நீர் துளி போல் முகத்தில் முத்து முத்தாக வேர்வை அரும்பி நின்றது பெண்ணுக்கு.
வேலன் அடிக்கடி மாப்பிள்ளை கடைக்கு வருவது வழமை. தொழில் ரீதியாகப் பொருள் தட்டுப்பாடு வந்தால்,
இருவரும் உதவி செய்து கொண்டு கணக்கு வைத்துக் கொள்வார்கள். அது போல் இன்றும் மஞ்ச கிழங்கு தட்டு பாடு வர பெருசு கடைக்கு வந்தவர் தவிப்பாக பார்த்து கொண்டிருந்த பெண்ணைப் பார்த்துவிட்டு.
“என்னம்மா வேணும் எட்டி எட்டி பார்த்தா பொருள் கிடைக்காது வாய் விட்டு கேளு என்றதோடு இல்லாமல் சின்ன மாப்புள புள்ளைக்கு என்ன வேணுன்னு கேளுக. அப்படியே விரலி மஞ்சள் ஒரு கிலோ ராவிகிட்டு வாக” என்றதும்,
வேலை முனைப்பில் அவருக்குச் சரி என்ற பதிலை மட்டும் கொடுத்த விட்டு வேலையைத் தொடர சிறுசு பெருசு இருவருமே பெண்ணைப் பார்க்க வில்லை.
வேலனுக்கு இது தான் மகனுக்கு பேசி முடித்த பெண் என்று தெரியாது. அவர் பெண் பார்க்க வரவில்லை, தங்கை குடும்பத்தை வைத்தே திருமணத்தைக் குறித்து விட்டார்.
அதனால் தான் யாரோ கடைக்கு வந்த பெண் என்று எண்ணி கொண்டார்.இருக்கும் பதட்டத்தில் போதும் பொண்ணுக்கும் அவரை அடையாளம் காண முடியவில்லை. மேலும் சில நொடிகள் கடந்து மஞ்சளை மாமனாரிடம் கொடுத்த சிறுசிடம்.
“மாப்புள புள்ள ரொம்ப நேரம் நிக்குது என்னானு கேளுக” என்றவர் பையை வாங்கிக் கொண்டு திரும்ப, அப்போது தான் அவளைக் கண்ட சிறுசு.
“வா! வாம்மா! என்ன கூப்பிட வேண்டியது தானே என்றவன் தமயனிடம் திரும்பி.. அண்ணே போதும் பொண்ணு வந்திருக்கு பாரு” என்றதும் சில அடிகள் எடுத்து வைத்த வேலன் வேகமாகத் திரும்பி பெண்ணைப் பார்த்தார்.
சிறு நொடிகளுக்குள் பெண்ணைக் கொண்டவருக்குச் சில பல உணர்வுகள் படம் காட்டி சென்றது. வேகமாகப் பெண்ணை நெருங்கி “அப்புச்சி மகளா?” என்று கேட்க
“ஆமாங்க ஐயா!”
“ஐயா இல்ல மாமன்” என்றதும் பெண் சற்று அதிர்ந்து முழிக்கச் சிறு புன்னகையோடு சிறுசும் பெருசும் இவர்களை பார்த்து கொண்டிருந்தனர்.
சிறுசு “இது தேன் எங்க தாய் மாமன். உம்ம வருங்கால மாமனாரு” என்க சிறு நடுக்கம் பிறக்க என்ன செய்வது என்று தெரியாமல் திரு திருவென விழித்த பெண்ணைப் பார்த்துக் கனிவு பிறக்க
“என்ன சாமி பயந்துகிடாதீங்க என்றவருக்கும் என்ன பேசுவது என்று தெரியவில்லை மகிழ்ச்சி ஊற்று என்பார்களே அது போல் உடலில் இன்ப அதிர்வு.
அங்குமிங்கும் அலை மோதியவரை பார்த்து பெருசு சிரிக்க. அதனைக் கண்டு கொள்ளாமல் கையில் உள்ள பையைக் கீழே வைத்து விட்டு. அதில் உள்ள மஞ்சளை கை கொள்ளாமல் அள்ளி அவளிடம் நீட்ட.
சற்று தயங்கி தனது பையை நீட்டி வாங்கி கொண்டாள். முதல் முறை பார்த்த பெண்ணுக்கு அதுவும் தனது மகனது பிடித்தம் என்ற போது எதாவது கொடுக்க எண்ணியவர்.
மங்கள பொருளாக மனம் நெறைய கொடுத்தார் கூடவே “சின்ன மாப்புள மஞ்சள், பச்சை, அரக்கு வளவி எடுத்து தாய்யா” என்றதும்.
அனைத்து நிறத்திலும் இரண்டு டஜன் எடுத்து உடையாமல் அதனைக் கட்டி பெட்டியில் கொடுக்க அதனைப் பெற்றவர் “இந்தா சாமி எம்ம மவனோட நோய் நொடி இல்லாம நிறைக்க வாழனும்” என்று வாழ்த்தி கொடுக்க.
முதல் முறை உறவு பிணைப்புடன் கூடிய வாழ்த்தில் நெகிழ்ந்து நின்றவள் அவரை வணங்கி கொண்டாள். பேச்சற்ற இனித்த அந்த நொடிகளை நால்வரும் கடந்தனர். பொழுது போவதை எண்ணிய பெருசு,
“பொழுது சாயிரத்துக்குள்ள வாங்க என்றவர் பெண்ணிடம் திரும்பி வெரசா நம்ம வூட்டுக்கு வந்து புடுங்க. நானும் எம்ம மவனும் காத்து கிடக்கோம்” என்றவரை பெண் புரியாமல் பார்க்க சிறுசும் பெருசும் மீண்டும் புன்னகைத்து கொண்டனர்.
அதன் பின் ஆளுக்கு ஒரு வண்டியில் பயணம்.சிறுசு வண்டியில் போதும் பொண்ணு அமர்ந்து கொள்ள. பெருசு அவனுக்கு முன் வண்டியை செலுத்தினான்.
மௌனமான பயணத்தில் பெண் பேச்சு ஒத்திகை நடத்தியது மனதுக்குள்.
தம்பிரான் தோட்டம்…
மூவருமாக தம்பிரான் தோட்டத்திற்கு வர பெரும் தயக்கம் கொண்டு பெண் சில அடிகளில் நின்று விட்டது.
“என்னம்மா? பயந்துக்க வேணாம் வா!” என்றதும் தயங்கி தயங்கி அவர்களுடன் நடந்தால்.
அங்கு வரப்பின் மேல் சில கலைகளைப் பிடுங்கி கொண்டிருந்தான் தம்பிரான். பெண்ணின் கண்கள் அவனைக் கண்ட நொடி மீண்டும் ஆராய்ச்சியில் ஈடு பட்டது.
அவர்கள் குடும்பத்தைப் பற்றி முன்பே தெரியும் என்றாலும்.குடும்பத்துக்குள் இருக்கும் உள்ள பூசல் தெரியாததால் எப்படி இந்தத் திருமணம் என்று உறுதி கொடுத்த நாளில் இருந்து யோசித்துக் கொண்டே இருக்கிறாள் போதும் பொண்ணு.
செவி வழி செய்தியாக அவர்களது வளமை அறிந்தவள் எதுவுமே இல்லாத தன்னை ஏன் மனம் முடிக்க வேண்டும்? ஏதும் குறையோ? அல்லது வேறு எதுவுமா? என்று எண்ணம் ஏணி வைத்து ஏற,
யாரிடம் கேட்பது என்று மருகியது உள்ளம். தள்ளாடும் தந்தையிடம் இதனைப் பகிர முடியவில்லை மற்றவரிடம் பகிரவும் வழியில்லை.
ராணியம்மாவிடம் கேட்கவும் தயக்கம். போதும் பொண்ணை பொறுத்தவரை வீடு தேடி வந்த வரன் என்று சொல்வதை விட.
இயலாமையை, வறுமையை, பாதுகாப்பை கொடுக்க நாடி வந்த வாய்ப்பு என்று தான் இத்திருமணத்தை சொல்ல வேண்டும்.அதற்காக தான் இந்த திருமணத்தை ஏற்றுக் கொண்டாள். பெண் படும் எதார்த்தவாதி போலும்.
தந்தைக்குப் பிறகு என்ன என்று காலம் பயம் கட்டி வைக்க. இது தான் வழியென்று திருமணத்தை ஏற்றுக் கொண்டது பெண்.
இனி இத்திருமண வாழ்க்கை எப்படி இருந்தாலும். எதிர் நீச்சல் போட வேண்டும். தனியாக ஆழ் கடலில் முடியுமா என்ன?
அதற்கு உற்றவன் துணை வேண்டுமே. சரியாக வாழ்வின் நாடியை பிடிக்க எண்ணி இதோ பேச்சு வார்த்தைக்கு வந்திருக்கிறது.
கழுத்தில் துண்டை போட்டு கொண்டு ஒற்றைக் கால்லை மடக்கி அமர்ந்து கலையெடுத்து கொண்டிருந்தவனை அழைத்தான் பெருசு “மச்சான் ஆரு வந்திருக்காங்கனு பாரு” என்றதும்,
அவன் குரல் வந்த திசை பார்க்க. அவனையே நோட்டமிட்டுக் கொண்டே பல யோசனையைக் கேள்விகளாக மனதுக்குள் தொடுத்து, வந்து கொண்டிருந்த போதும் பொண்ணைப் பார்த்தவன் இதழ்கள் அழகாக விரிந்தது.
“வா சிறுசு! வா பெருசு!” அவ்வப்போது மச்சான் என்ற அழைப்பு மறந்து விடும் போலும்.
“வரோம்! வரோம் என்றவன் நேரடியாக தங்கச்சி பார்த்து பேசனுமுண்டு சொல்லுச்சு அதேன் கூட்டியாந்தேன்.
வெரசா பேசிப்புட்டு அனுப்பிவை மச்சான்.நானும் சிறுசும் அங்கன முன்னுக்கு இருக்கோம்” என்றதும் சரி என்றவன். அவர்கள் தலை மறையும் வரை அமைதியாக இருந்து விட்டு.அவர்கள் சற்று தள்ளி மறைவில் அமரவும்.
“வா! எப்படி இருக்க?” என்று நெடு நாள் பழகியவன் போல் உரிமை கொண்டு பேச பெண்ணுக்கு தான் வார்த்தை வம்பு செய்தது.
“ஹ்ம்ம்!…”
“ஹ்ம்ம் னா என்னத்த கண்டேன்” சிறு சிரிப்புடன் கேட்டுக் கொண்டே வரப்பில் அமர.
“நல்லா இருக்கேன்” தலையை குனிந்து கொண்டே பெண்.
“இங்கன உட்காரு” தனது பக்கத்தில் கையை சுட்டி காட்ட அந்த உரிமையில் பெண்ணுக்கு மேலும் அதிர்வு கொண்ட ஆச்சிரியம் தான்.
“என்ன பேசனும்?”
பெண் அமைதி கொள்ள உணர்வற்ற குரலில் “புடிக்களையோ!… சற்று இடைவெளி கொடுத்து எம்ம?” என்றதும் வெடுக்கென அவன் புறம் திரும்பியவள் அதே வேகத்தில்.
“அதுக்காண்டி ஒன்னும் நான் பேச வரல” அவளது வேகத்தில் இப்போது புன்னகையாகப் பார்த்தவன்.
“பொறவு?”
“உங்க குடும்பம் பத்தி அப்பாரு சொல்லிருக்காரு” என்றவள் தனது ஐயத்தை எப்படி வார்த்தைகளைக் கொண்டு வலிக்காமல் கோர்க்க என்று தவிக்க. அவளது தவிப்பை உணர்ந்தானோ என்னவோ.
“என்ன ஓசனை? எதுக்காண்டி பேச வந்த? சட்டுனு பேசிப்புடு நான் எதுவும் நினைக்க மாட்டேன். முகத்துக்கு முகம் பேசுறது உறவுக்குப் பலம்” என்றவன் பேச்சில் சிறு தெம்பு பிறக்க.
“ஆளும் பேரும் இல்லாதா வூட்டுல பொண்ணு எடுக்குறது ஏன்னு கேள்வி வருது” என்று பேச்சை நிறுத்தி கொள்ள. அந்த ஒரு கேள்வியில் அவள் பேச்சின் மொத்த போக்கையும் கண்டு கொண்டவன்.
“பேச்சுன்னு வந்திடுச்சு இப்போதைக்கு மேலுக்கா சொல்லுறேன். கட்டிக்கிட்ட பொறவு சொச்சத்தைத் பார்த்து தெரிஞ்சுகிடு.
தம்பிகளுக்குக் கண்ணாலம் ஆகிடுச்சு இன்னும் எமக்கு பொண்ணு தேடிகிட்டே இருந்தா? வயசு போகுதுல அதேன்… பொறவு விலை போக மாட்டேன்” என்றதும் எதோ போல் ஆகிவிட்டது.
“என்ன பேச்சு இது?”
“கசந்து கிட்டாலும் இத்தேன் உண்மை. இன்னும் எம்புட்டு நாள் தனியா கிடந்து தவிக்க” என்றவன் இயல்பில் தொலைந்து தான் போனாள்.
“சரி அடுத்து?”
“அப்பாருக்கு என்ன வழின்னு தெரியல. பக்கத்து வூட்டு செப்பு தாத்தாவை தேன் துணைக்கு வைக்கனும், ஆனா சோத்துக்கு என்ன வழி?” அவனையே கேட்க அலட்டி கொள்ளாமல்.
“கண்ணாலம் முடியட்டும் வழி சொல்லுதேன் எம்மகிட்ட கேட்ட மாதிரி ஆருகிட்டையும் பேச வேணாம்”
“இல்ல இல்ல அதுக்கு வேண்டி தேன் உங்கள பார்க்க வந்தேன்” மற்றவரிடம் பேச வேண்டும் என்றால் உன்னை ஏன் நான் தனியாகப் பார்த்து பேச வேண்டும் என்பதைப் பெண் நாசுக்காகச் சொல்லியது.
“சரித்தேன் பொறவு”
“வந்த மருமவளும் வர போற மருமவளும் செழிப்பு போல ராணியம்மா சொல்லுச்சு. எம்ம கிட்ட கட்டி கிட கூட நல்ல துணி கிடையாது.
பொறவு சுமைனு எண்ணி வச்சு வார்த்தையாட கூடாது போனகிகிட்டுப் போகக் கூடப் போக்கிடம் இல்ல. அக்காளுங்க ஆரும் கை கொடுக்க மாட்டாய்ங்க சொத்துனு பார்த்தா அப்பாரு வுடு தேன். அதுக்கும் பேச்சு வரும் போல.
மூச்சே விடாமல் என்னிடம் ஒன்றுமே இல்லை இப்போது சரியென்று விட்டு.பிறகு எந்த எதிர்பார்ப்பும் வைத்து கொண்டு பேச்சு கூடாது என்பது போல் அவள் பேசி வைக்க அதில் அவனுக்குச் சிறு புன்னகை பிறந்தது.
“அம்புட்டையும் தெரிஞ்சு கிட்டு தேன் உறுதி கொடுத்தேன். கண்ணாலம் வரைக்கும் தேன் உம்ம நிலை பயம் காட்டும்.
கண்ணாலம் கட்டி பாரு நீ. உம்ம நிலை எம்புட்டு தேவலாம்னு தெரியும்” சூசகமாக தன் நிலை உன்னை விடப் படு மோசம் என்பதைச் சொல்லி வைக்கப் பெண்ணுக்கு தான் புரியவில்லை.
“பேச்சு புடிபடல”
“கண்ணாலம் கட்டுங்க நடப்புப் புடிபடும்” என்றவன் பெண்ணை யோசிக்க விடாமல் வேற எதுவும்? என்று கேட்க.
“ஒன்னுமில்லங்க இதுதேன்… பிறகு தயங்கி தயங்கி உங்களுக்கு?” என்க கண்ணில் சிறு மின்னலை தேக்கி.
“நேரத்துக்கு மூணு வேலை சோறு போடுங்க. இது தேன் முன்னுக்குப் பொறவு …. கண்ணாலம் முடியட்டும் பேசிக்கிடலாம்” என்றவனை மீண்டும் புரியாமல் பார்த்தாள்.
இப்போது தான் நெருக்கத்தில் பார்க்கிறாள் அன்று வீட்டில் பார்த்ததை விட நெருக்கம். அழகு என்ற அளவு கோளை அகட்டி விட்டு. முடி, கண், மூக்கு, கை, கால் என்று பார்த்து கொண்டிருந்தாள். காதுக்குச் சற்று அருகில் ரணமாக இருக்க.
“ஸ்!…ஸ்!… “அவளுக்கே அதனைக் கண்டு வலியெடுத்தது போலும் அவளது சத்தத்தில் பதறி “ஏன்? என்ன ஆச்சு?
“என்னது இது? இம்புட்டு ரணமா அவனது காதை சுட்டிக்காட்டி கேட்க. தனது துண்டை எடுத்து காதை துடைத்துக் கொண்டான் அவனது செயலில் மீண்டும் இரத்தம் வர.
“அப்படி செய்யாதீக தோல் வழுவி மேலும் ரணமாகும்”
“அரிக்கும்… கரையான் அடிக்கடி உடம்பு இடுக்குல வரும்”
“மஞ்சள், வேம்பு, நல்லெண்ணெய் சேர்த்து பத்துப் போட்டா காஞ்சு போயிடும்”
“ப்ச் போட நேரமில்லை. ஒரு நாள் இரண்டு நாள் போடுவேன் மூணாவது நாள் எரிச்சலா இருக்கும் சில நாள் மறந்து புடுவேன்”
“உங்க அம்மா கிட்ட சொல்லி போட சொல்ல வேண்டியது தானே?” பெண் இயல்பாகச் சொல்ல தம்பிரான் புன்னகையோடு நிறுத்தி கொண்டான். சில நொடிகள் மௌனம் கொண்டு.
“நான் பொழுதோடு போகனும் அப்பா பயந்து கிடக்கும்”
“ஹ்ம்ம் போயிட்டு வா” என்றவன் எழுந்து கொள்ள அவளும் எழுந்து கொள்ளப் பார்க்க வரப்பு வழுக்கி விட்டது. கீழ விழ போனவளது கையைப் பிடித்துத் தாங்கி நெருங்கி நின்றவன் பார்த்து என்று விட்டு அவளது கண்களைப் பார்க்க.
அவளும் அவனைத் தான் பார்த்தாள் அழகு, ஆசை ஈர்ப்பு, இளமை, வேகம், காமம், காதல் என்று எதுவுமில்லாத பார்வை இருவருக்கும்.
எதோ ஒரு எண்ணம் கொண்ட பார்வை. மனம் உணர்வு இல்லை சரி!.. ஒருவரது ஒருவர் முகத்தையாவது பதிவு செய்து கொள் என்று கெஞ்ச. அதனைச் செவி கொடுக்காத இருவரும் பார்வையால் பள்ளம் போட.
இன்னும் அவளை நெருங்கி சிறு குரலில் மதியம் கறி சோறு தின்னியா” என்க அதுவரை அவனைப் பார்த்து கொண்டிருந்தவள். அவனது நெருக்கத்தையும் அவனது பேச்சையும் கேட்டு பதறி வெடுக்கெனக் கையை உருவி கொண்டு ஓட்டம் பிடிக்க.
விரிந்த புன்னகையோடு அவள் போன திசையில் நடந்தான் தம்பிரான். பேச வேண்டும் என்று போன பெண் தலை தெறிக்க ஓடி வர.
அவளது ஓட்டத்தை பார்த்து சிறுசும் பெருசும் பதறிக் கொண்டு வந்தனர். தனக்கு முன்னால் வந்தவர்களைப் பாராமல் அவர்களை இடித்துத் தள்ளி விட்டுக் கண் மண் தெரியாமல் ஓடியது பெண்.
அவளது செயலில் அதிர்ச்சியாகி அண்ணனும் தம்பியும் நிற்க. வெகு சாதாரணமாக வந்தான் தம்பிரான் அதுவும் அதே புன்னகையோடு. அவனை கண்டு விட்டு ஓடும் போதும் பொண்ணை கண்ட பெருசு.
“என்ன மச்சான் பண்ண புள்ளைய தலை தெறிக்க ஓடுது?” என்றதும்
“அது ஒன்னுமில்ல பெருசு வரப்பு வழுக்கி வச்சுது புடுச்சு தூக்கி விட்டேன்” என்று நிறுத்த தம்பிரான் சிரிப்பை கண்டு பெருசு குறும்பு புன்னகையோடு சிறுசை எப்படி? என்பது போல் பார்க்க.
ஹ்க்கும் மனதுக்குள் நொடித்து கொண்ட சிறுசு சந்தேமாக “ஆமா தூக்கி விட்டதுக்கா அந்தப் புள்ள ஓட்ட பந்தய கணக்கா ஓடுது?”
“இல்ல மச்சான் தூக்கி பக்கத்துல நிறுத்தி வச்சேனா கொஞ்சம் நெருக்கமாகி போச்சு” இப்போது சிறுசே ஆர்வமாக இருவருக்கும் பல கலர் கோலம் கண்ணில். நொடியில் அதனைத் தண்ணீர் ஊற்றி அழித்தது அடுத்து அவன் சொன்ன செய்தி.
“நீ மூச்சை போட்டுக் கண்ணாலம் கட்டி என்னத்த தேற போகுது போ? வாசம் புடிச்சதுக்கே அது தலை தெறிக்க ஓடுது.
இது கண்ணாலம் பண்ண பொண்ணு கிட்ட பேச சொன்னா கறி சோறு தின்னியானு மோப்பம் புடிச்சுகிட்டு அலையுது. இவீங்க கண்ணாலம் பண்ணி எங்கன கரையேறி நிக்க”.
சிறுசு பேச்சுக்கு தம்பிரான் பெரிய நகைச்சுவை கேட்டது போல வெடித்துச் சிரித்து கொண்டே அவர்களைக் கடந்து செல்ல.
“என்ன சிறுசு இப்படி சிரிக்கிறான்!… இவனைக் கொண்டு என்னானு நான் கண்ணாலம் பண்ண” ஏக கடுப்பில் மரியாதை மண்ணைக் கவ்வ பெருசு புலம்ப
“எனக்கு இப்பவே அடிவயிறுல ரயிலு ஓடுது. மண் குதிரைய நம்பி ஆத்துல ஏறுன கதையாகி போச்சு. இந்தக் கண்ணாலத்துல ஒரு சறுக்கல் வந்துச்சு. பேச்சு வாங்கி நிக்கப் போறது நீயும் நானுந்தேன்” சிறுசும் பதிலுக்கு புலம்பியது.
“நெஞ்சே வலிக்குது சிறுசு இதுல கொட்டி கணக்கா சிரிப்பு வேற. ஆமா அந்தப் புள்ள கிட்ட என்ன தினுசுல பேசிருக்கும் எண்ணிக்கவே பயந்து வருதே”
“எனக்கும் தேன் ஓடுன புள்ளைய புடிச்சு செய்தி கேட்டா தேன் உண்டு, ஆனா ஒன்னு உறுதி” சிறுசு தீவிரமாக சொல்ல
“என்ன?”
“பொண்ணு புள்ள பாவத்தை வாங்கிக் கட்ட போறோம்” என்றவனைப் பாவமாகப் பார்த்து வைத்தான் பெருசு.நொடிக்கு நொடி பதற வைக்கும் மாமன் மகன் மரிக்கொழுந்தை எண்ணி கண்ணை கட்டியது சிறுசுக்கும் பெருசுக்கும்.