தம்பிரான் பெரும் களிப்பில் அமர்ந்திருக்க. அவனைச் சுற்றி அன்பர்கள் குழு பாலு, சின்னராசு, பெரியராசு. மற்ற நண்பர்கள் எல்லாம் சற்று முன் தான் விருந்தாடி சென்றனர்.
திருமணம் முடிந்த கையோடு சில மணி நேரம் மட்டுமே கோவிலில் இருந்தனர். நல்ல நேரத்தை கணக்கில் கொண்டு தம்பிரான் வீட்டுக்கு தம்பதிகளை அழைத்து வந்தனர்.
பாலுவும் அவனது தாயாரும் நேராக தம்பிரான் வீட்டுக்கு வந்து விட்டனர்.ராணியை ஒரு பிடி பிடித்து விட்டு வீட்டுக்கு வந்த வள்ளியின் கண்களில் பாலுவின் தாய் பட இன்னும் கோபம் வர ஒரு மூச்சு ஆடி தான் தீர்த்தார்.
“வாங்க அக்கா நீகளும் இந்தப் புள்ளைக்கு உறவு தானே? கண்ணாலம் முடிகிற புள்ளைக்கு தலைக்கு ஒரு பூ கூடவா வைக்க மாட்டிக. அசந்து கூட ஒரு சனமில்ல.
இவ அக்கா கிட்ட கேட்டா கதை படிக்கிறா செல்வி பேச்சுக்கு வருது. நீ தானே வூடு தேடி வந்து பொண்ணு கேட்டேன்னு.வூடு தேடி வந்தா இப்படி தேன் பொண்ணை அனுப்புவீகளோ?” என்றதும் பாலுவின் தாய் பதறி.
“வள்ளி!… வள்ளி!… செத்த இப்படி உட்காரு கையை பிடித்து தன் அருகில் அமர வைத்துக் கொண்டார்.
ஒரே ஊர் சுற்றி முற்றிச் சொந்தமாக வர பாலுவின் தாய்க்கும் வள்ளிக்கும் நல்ல பழக்கம் இருந்தது செல்வியைக் கூடத் தெரியும்.
“நான் சொல்றதை பொறுத்து கேளுப்பா ஆயி இல்லாத புள்ள. அப்பனும் தள்ளாடி நிக்குது இதுவும் சின்னப் புள்ள விவரம் பத்தாது.
அக்காளுங்க கூடப் போக்கு வரத்து இல்ல போல. ராணி தேன் நேரம் கிடைக்கும் போது. அது புள்ளைங்க புருசனுக்குத் தெரியாம செஞ்சுபுட்டு போகும்”
“என்னக்கா இது?” ஆற்றாமையாக வள்ளி கேட்க
“என்னப்பா செய்ய?”
“அப்போ மறு வூடு சடங்கு எதுவுமே இல்லையா? எல்லாம் அவன் தலையெழுத்து” என்றதும் அதுவரை நடக்கும் கூத்தை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த போதும் பொண்ணுக்கு மாமியாரின் பேச்சில் புருவம் சுருங்கியது.
வந்ததில் இருந்து பெண் அவீட்டின் ஒவ்வொரு செங்களையும் அலசி கொண்டு தான் இருக்கிறது.இப்போது வள்ளியின் பேச்சில் சிறு குழப்பம் பெண்ணுக்கு அதனை மறைத்துக் கொண்டு நின்றது.
பெண்ணைப் பொறுத்தவரை இவர்களது குடும்ப அரசியல் தெரியாது அல்லவா. வள்ளியின் பேச்சில் பிடிபட்ட செய்தியை கொண்டு சில காட்சிகள் கண் முன் விரிந்தது.
முதல் நாள் சிறுசு பெருசு வந்து பேசியது. பிறகு கோவிலில் வேலன் வாழ்த்தும் பேச்சும் குறிப்பாக அந்த வார்த்தை ‘வெரசா வாங்க காத்து கிடக்கோம்’
அது போகப் பூ வைக்கும் போதுக் கூட வள்ளியும் வீட்டு மக்களும் வரவில்லை. ஏன் வேலன் கூட வரவில்லை.
ஒன்று தொட்டு ஒன்று என்று கோர்த்து நிற்க பெண்ணுக்கு அழகாக விளங்கியது அவ்வீட்டின் சூழ்நிலை.
ஆக பிடித்தம் இல்லாத திருமணம் தம்பிரானுக்கு மட்டுமே விருப்பம். அதுவும் எதற்காக இந்தப் பிடித்தம்? ஏன் பிடித்தம்? எந்த அளவில் பிடித்தம்? என்று பெண் யோசித்துக் கொண்டிருக்கும் போதே வாசுகி வந்து,
சற்று முன் கணவர்களிடம் பேசி அடுத்து என்ன? என்று முடிவு செய்து கொண்டனர். எப்படியும் வள்ளி இருக்கும் மனநிலையில் எடுத்துச் செய்யப் போவதில்லை.வள்ளி செய்யாமல் வாசுகி செயல்படப் போவதில்லை.
அதனைக் கருத்தில் கொண்டு நால்வரும் செயல் பட்டனர். அல்லி தனது தாயிடம் சென்று “ம்மா ராவுக்குப் பொண்ணு மாப்புள்ளைய எங்கன வைக்க” என்று கேட்க.
வெடுக்கென எதுவோ சொல்ல போனவர் போதும் பொண்ணைப் பார்த்து சற்று நிதானித்து.
“மெத்தையில உள்ள அறைய கொடுத்துப்புடு” என்றதும் இவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டே வந்த வேலனுக்குக் கோபம் வந்து விட்டது.
தம்பிரான் உழைப்பில் சில மாதங்களுக்கு முன் கட்டிய வீடு. ஆறு அறைகளைக் கொண்ட வீட்டில் உற்றவனை உறியில் ஏறி படுக்கச் சொன்னால் அவருக்கு கோபம் வராதா?.
“இந்தாரு!… எம்ம மவேன் ஏண்டி மெத்தைக்குப் போகணும்? அவன் கட்டுன வூடு” என்றதும் அங்கே நின்ற வாசுகிக்கு முகம் சுருங்கி போனது வள்ளிக்கும் கோபம் வர,
“யோவ் நீ இந்த வூட்ட கூறு போடாம போக மாட்டாயா? வந்த நாளுல அவ முன்னாடி உரிமை பேசி வைக வில்லங்கமாகி போகட்டும்.
மாமியார் மருமவ சண்டை ஓரகத்தி சண்டைனு வூடு ரெண்டா போகட்டும்” என்றதும் வேலன் சற்று பதறி
“அதுக்கு வேண்டி இல்ல…”
“நீர் எதுக்கு வேண்டியும் சொல்ல வேண்டாம் சாமி. எம்ம மவனுக்கு அங்க படுத்தா தேன் ராவுக்குத் தோது படும்.
இல்லையா அது நடுச் சாமமா இருந்தா கூட தோட்டத்துக்குப் போயிடுவான். நான் கீழ படுக்கச் சொல்ல அவன் தோட்டத்துக்குப் போறேன்னு மொட்ட காட்டுல அவளையும் கூட்டிகிட்டு போகட்டும்.
நீக பேசுறது பத்தாதுன்னு வந்த நாளே மருமவள பத்தி விட்டா மவ ராசினி ஊரே பேசட்டும். நல்ல காதுக்குக் குளிர்ச்சியா இருக்கும்” என்று மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்கி நிற்க.
தெரியாம வாய் கொடுத்துட்டோம் மனதுக்குள் முனகியவர். அங்கனம் வரிந்து கட்டிய வேட்டியை இறுக்கி விட்டு வந்த வேகத்திற்குத் திரும்பி சென்றார்.
அவரது செயலில் போதும் பொண்ணுக்கு சிறு புன்னகை மலர்ந்தது.கூடவே தாய் அறியா சூழ் போல் தம்பிரானை பற்றி வள்ளி சொன்னதைக் குறித்துக் கொண்டாள்.
இப்போது ஒரு அளவு அந்த வீட்டின் நிலை பிடிபட்டது பெண்ணுக்குப் பிடிபட்ட செய்தியில் ‘மீனாட்சி ஆட்சி தேன் போல’ மெல்லமாக முனகியும் கொண்டாள்.
அதன் பின் வள்ளியின் புலம்பல்களைச் சிறு கோபங்களையும் தாங்கி பொழுது ஓட அல்லியும் அம்பிகையும் போதும் பொண்ணை உண்ண செய்து,
பிறகு குளிக்கச் செய்து புதுச் சேலை கொடுத்து தாயார் செய்து மெத்தையில் கொண்டு போயி விட்டுவிட்டு.
“நீ எம்ம விடச் சிறுசா இருந்தாலும் அண்ணன் பொஞ்சாதி. அதனால எல்லாரும் இருக்கும் போது மட்டும் மதனினு கூப்பிடுதேன் என்ன?” சிறு நட்புடன் அம்பிகை சொல்ல.
“சரிக்கா” என்றால் பெண்.
“பயமா இருக்கா?” அல்லி.
“இல்லை ஆனா புதுசா இருக்கு” பயம்,கூச்சம் வெட்கம் என்று புது பெண் போல் இல்லாமல் பதில் சொல்லிய பெண்ணை ஆச்சிரியமாகப் பார்த்தனர் இருவரும்.
“சொந்த மாமனை கட்டினதுக்கே பயந்து நின்டேன் நீ என்ன தைரியமா இருக்க?” அல்லி கேட்க அதற்குப் பெண் பதில் சொல்லாமல் சிரித்து வைத்தது.
“என்ன புள்ள சிரிக்கிற?” ஒன்னும் இல்லை என்ற ரீதியில் தலையை ஆட்டி வைத்தது பெண்.
“அல்லி நேரம் போகுது வா அப்புறம் பேசிக்கிடலாம்” என்ற அம்பிகை மீண்டும் போதும் பொண்ணைப் பார்த்து.
“அம்மா கொஞ்சம் பேசும் பயந்துக்காத. வாசுகி கிட்ட பேசி பழகிக்கோ போகப் போக இங்கன பழக்கம் பிடிபடும் என்ன?”
“ஹ்ம்!…”
“உமக்கு எதுவும் சங்கடமுனா எம்ம கிட்ட சொல்லு. எங்க வூட்டுக்காரய்ங்க இருக்காக அவுக பார்த்துக்கிடுவாக என்ன?” என்ற அல்லி இப்போது அதிக உணர்ச்சி கொண்டு போதும் பொண்ணு கை பற்றி.
“அண்ணே பாவம் வூட்டுலையே அது ஒரு தினுசு ரொம்பப் பேசி பழகாது பார்த்துக்கோ …. இடைவெளி விட்டவள் நல்ல பார்த்துக்கோ குட்டி மதனி” என்று கண்ணீருடன் சொல்ல இப்போது தான் பெண் பயந்தது.
“என்ன அழுகுறீங்க?…” என்றதும் அம்பிகை,
“அல்லி சின்னப் புள்ள பயம் காட்டாத” என்று சில நொடிகள் மீண்டும் அறிவுரை கொடுத்து அனுப்பி வைத்தனர்.
அங்கே நண்பர்கள் குழுவில் மாட்டி கொண்ட தம்பிரான். அவர்களது கேள்விக்குச் சிரித்துக் கொண்டே இருந்தான் அதில் கடுப்பான பாலு.
“என்ன பேசுனாலும் என்னடா இளிச்ச மேனிக்கு இருக்க”
“வேற என்ன செய்யச் சொல்ற”
“ஒரு வெட்கம், ஒரு கூச்சம், ஒரு ரசனை. அந்த மொவர கட்டையில ஒன்னுமே இல்ல. முதல கண்ணாலம் பண்ண மாதிரி பள பளன்னு இருக்கானு பாரு” பாலு கடும் கடுப்பில்.
“பள பளன்னு இருக்க நான் வெள்ளை அடிச்ச புதுக் கட்டிடமா” என்றதும் பாலு அதிர சிறுசு.
“ஏலேய்!… அது வாங்கியாந்த வரமா இல்ல. அண்ணனும் தம்பியும் வாங்கிக் கொடுத்த வரமா என்றதும் சிறுசு முழிக்க.
பக்கெனச் சிரித்து வைத்தான் தம்பிரான் அவனது சிரிப்பை மூன்று ஜீவன்களும் முறைத்து பார்த்துக் கொண்டிருந்த வேளையில் அல்லி வேகமாக வந்து.
“அண்ணே நீ மெத்தைக்குப் போ” என்றவள் தனது கணவனிடம் திரும்பி வூட்டுக்கு கிளம்பலாமா?”
“நீங்க இருக்க வேண்டியது தானே” என்றான் சிறுசு.
”வூட்டுக்கு போயிட்டு விடியல் வரலாம் மாமா” என்றதும் சிறுசு பெருசு திரும்பி தம்பிரானை பார்த்து ‘கிளம்புறோம்’ என்று தலையை ஆட்ட அவனும் சரி என்பது போல் ஆட்டினான். அவர்களைத் தொடர்ந்து பாலுவும்.
“நான் தம்பி… என்றவன் சிறு இடைவேளை கொடுத்து புள்ளைய பார்த்துகிடு” என்க அவனது தோள் தட்டி தலையை ஆட்டினான்.
பாலுவும் விடை பெற்று செல்ல வேட்டியை மடித்துக் கட்டி கொண்டு மடியேறினான் தம்பிரான்.
மெல்ல மாடி கதவை திறந்தவன் அங்கே அமர்ந்திருக்கும் போதும் பொண்ணு பார்த்துச் சிரித்துக் கொண்டே கதவை மூட .
என்ன தான் ‘இது தான் நடப்பு வாழ்க்கையின் எதார்த்தம்’ என்று தைரியமாக இருந்தாலும். சிறு பயம் பெண்ணுக்கு எட்டி தான் பார்த்தது.
பெண் எதார்த்த வாதி திருமணம் என்றால் உறவு சிக்கல், சில அர்த்தமற்ற பேச்சுக்கள்.கணவனது பரிமாணம், அடுத்தக் கட்ட நிகழ்வு, குழந்தை என்று அனைத்தையும்,
இந்நாள் வரை அக்காள்களின் வாழ்வு கொண்டு பெண் கண்ணார கண்டது உண்டது, ஆனால் இந்த உணர்வைகளை எல்லாம் சுவைத்தது இல்லை அல்லவா.
இன்று அந்தத் தருணம் என்பதால் சிறு பயம் … பயம் மட்டுமே அதன் அளவு கூட சிறுது தான் பெண்ணுக்கு.
வந்தவன் வழமை போல் சட்டையை கழட்டி விட்டு வேட்டியோடு தடாலென போதும் பொண்ணு அருகில் அமர சிறு அதிர்வு கொடுத்து நகர்ந்து அமர்ந்தாள்.
“சொல்லு” என்றதும் அவனைப் புரியாமல் பார்த்தவள்.
“என்ன சொல்ல?”
“எதாவது சொல்லு நான் ஒன்பதை தாண்டி முழிச்சிருக்க மாட்டேன் அதேன் பேசு” பேசி வேண்டியதை பேசி விடுவோம். மணி தற்போது எட்டி முப்பது.
நான் ஒன்பது மணிக்கு டான் என்று தூங்கி விடுவேன். இடியே விழுந்தாலும் முழிக்க மாட்டேன்.அதைத் தான் தம்பிரான் சொல்ல அவனது பேச்சு பிடிபடவில்லை பிள்ளைக்கு.
அவன் பேச்சே இப்படித்தான். நாம் தான் அதில் குதித்து தேடி முழு விளக்கம் எடுக்க வேண்டும் இதனைப் போகப் போகப் பெண் பழகி கொள்ளும்…
“புரியல?”
“சரி விடு படுத்துக்கோ” என்றவன் படுத்து கொண்டு படக்கென அவளது கையைப் பிடித்து இழுக்கப் பதறி விட்டாள்.
அவள் பதற்றத்தை கண்டு கொள்ளாமல் அவளை இழுத்து தனது புஜத்தில் படுக்க வைக்க அவளுக்கு அது பெரும் சங்கடத்தைக் கொடுத்தது.
‘இது என்ன இந்த ஆளு இப்படி பண்ணுது’ மனதுக்குள் சின்ன முணு முணுப்பு பெண்ணுக்கு தனது பக்கவாட்டில் திரும்பி அவனை அண்ணாந்து பார்த்து முழிக்க.
“உம்ம முகத்துல இந்தக் கண்ணுத்தேன் பெருசா இருக்கு” என்றவன் அவளது கைகளைப் பற்றி எந்த விகல்பமும் இல்லாமல் வருடி குச்சி கணக்கா இருக்க” என்று இதமாகப் பிடித்து விட, அவனது செயலில் பயம் மெல்ல மெல்ல குறைந்தது பெண்ணுக்கு. அதனை அவனும் உணர்ந்தானோ என்னவோ.
“மெல்ல மெல்ல தொட்டுக் கிடலாம் என்ன?” என்றவன் பேச்சில் பெண்ணுக்கு இப்போது இதழ்கள் பெரிதாக விரிந்தது.
சில மணி நேரம் பிடித்து விட்டவன். தனது புண் கொண்ட காதை அவளிடம் நீட்டி “நான் புடிச்சு விட்டேன் தானே நீ சொறிஞ்சு வுடு” என்க
சத்தியமாக இதனைப் பெண் எதிர்பார்க்கவில்லை போலும் அதிர்ந்து எழுந்தே விட்டது.
“என்ன? எதுக்கு இம்புட்டு வேகம்?”
“என்ன? என்ன கேட்டிக??”
“அரிப்பு தாங்கல நீ சொறிஞ்சு கொடுத்தா சொகமாகி போகும் நானும் தூங்கிப்புடுவேன். முடிஞ்சா மருந்து வச்சு விடு, நீ அன்னைக்குச் சொன்ன மாதிரி மருந்து செஞ்சு வச்சிருக்கேன்” என்றதும் பெண்ணுக்கு என்ன உணர்வென்றே தெரியவில்லை.
அவளே ஒரு விதம் இதில் அவள் கட்டியது ஒரு விதமாக இருக்கப் பெண் தலையை உலுக்கி கொண்டது.அவளது யோசனையான முகத்தைக் கண்டு என்ன எண்ணினானோ அவனாகவே.
“உம்ம அப்பார அப்படி பார்த்துக்கிடுவியாமே? உங்க அக்காவும் அவுக கூட்டாளி செல்வியும் சொன்னாக அது போல எம்மயும் பார்த்துக்கிடு”
வெகு இயல்பான பேச்சு. அவனது பேச்சில் பல எண்ணங்கள் படையெடுத்தாலும் காரியமாகப் பெண் அவனைப் பார்த்துக் கொண்டே எழுந்து.
“எங்கன இருக்கு?”
“அந்த ஜன்னல் பக்கம்” என்று தனது பக்கவாட்டில் உள்ள ஜன்னலை காட்ட. அங்கே சென்று மருந்தை எடுத்து வந்தாள்.அதில் நீரின் பசை இல்லாமல் இருக்க.அங்கே குடிப்பதற்கு வைக்கப் பட்டிருந்த நீரை எடுத்து மருந்தை பதமாகக் குழப்பி அவனிடம் நெருங்க.
அவனும் எழுந்து கொண்டு காதை அவளுக்கு வாகாகக் காட்டினான். ஆள் இருக்கும் தோரணை மிரட்டலாக இருந்தாலும்.
சிறு பிள்ளையெனச் செயல் படும் அவனைக் சுவாரசியமாக கண்ணில் களவாடி கொண்டே மருந்திட்டால்.
காது இடுக்கு, முழங்கால், அக்குள் எனக் காட்டியவன் தடாலென எழுந்து அவள் பார்வைக்கு முன்னே வேட்டியை அவிழ்க்க அவனது செயலில் பெண் தடுமாறி திரும்பி கொண்டாள் மிதமான படப் படப்பு வேறு.
நொடியில் துண்டை எடுத்து கட்டியவன். அவள் முன் மீண்டும் மல்லாக்க படுத்துக் கொண்டு எந்த வித கூச்சமும் இல்லாமல் உள்ளாடையை விலகி கவுட்டை காட்டி “இங்கன” என்க
பெரும் அதிர்வு பெண்ணுக்கு இதனைச் சுத்தமாகப் பெண் எதிர்பார்க்கவில்லை பெரும் அதிர்வை கண்ணில் தேக்கி “என்னங்க இது?”
“காத்து படாத இடம் அதேன் புண்ணு ஆற மாட்டேன்னு நிக்கிது”
“அதுக்குன்னு இம்புட்டு ரணமாக்கி வைப்பீகளா? என்ன ஆளு நீங்க?” இத்தனை பெரிய மனிதனாக இருந்து கொண்டு உடம்பை பார்த்துக் கொள்ளாமல்.
சிறுவன் தாயிடம் தனது காயத்தைக் காட்டி மருந்திட சொல்வது போல் அவன் செயல் இருக்க மனம் கனக்க அவளுக்குச் சிறு கோபம் துளிர்த்தது.
மீண்டும் காயத்தைப் பார்த்தாள் பார்க்கவே முடியவில்லை. இப்போதும் வெட்கம் கூச்சம் எல்லாம் எங்கோ சென்றது பெண்ணுக்கு.
சிறுதும் தயங்காமல் “அந்த உடுப்ப விலக்கி துண்டை மட்டும் பிடிச்சு வைங்க. நான் சுத்தம் பண்ணி மருந்து போடுறேன்” இப்போது அதிர்வது அவன் முறை ஆயிற்று.
“என்ன சொல்லுற”
“துண்டை கட்டி…”
“அது சரி அப்படி வேணாம்”
“ப்ச் செய்ங்க” என்றவள் அவன் மறுப்பைக் கண்டு கொள்ளாமல் துண்டில் கை வைக்க பதறி அடித்து எழுந்தான்.
“என்னடி” அவனது பதட்டமும் சிறு உரிமையும் அழகாக இருக்க அதனை வெளிக்காட்டாமல் ரசித்து.
“ப்ச் விளையாட்டு பண்ணாதீக துடைச்சுச் சுத்தம் பண்ணி புட்டு தேன் போடனும். உங்க பழைய வேட்டி இருந்தா தாங்க” அன்பு கொண்ட ஏவல் போலும் தயங்கி தயங்கி பழசை எடுத்து கொடுத்தான்.
அடுத்தச் சில வினாடிகளில் அவனுக்குச் சுத்தம் செய்து மருந்திட்டவள். அவனைப் பார்க்க அவனும் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
பார்வைகள் கள்ளம் புரியாமல் ஆறுதல் பேசி கொண்டது.இந்தத் திருமணத்தின் நோக்கம் இப்பொழுது தான் பெண்ணுக்கு இன்னும் நன்றாக விளங்கியது.
உறவுகளுக்குத் தேவையற்ற இருவரும் தேவைக்காக இந்தத் திருமணம் என்று.சரியாகக் கணித்துச் சேர்த்த ஜோடி. அது தான் வரன் வீடு தேடி வந்தது போலும் எண்ணி கொண்டாள் பெண்.
உரிமையும் உறவும் கொடுத்த தைரியத்தில் தடுமாற்றம் இல்லாத இருவரும் நெடு நாள் பழக்கம் கொண்டவர்கள் போல ஒருவர் பிடியில் ஒருவர் பேச்சுகளற்றுக் கண் மூடி கொண்டனர்.
பேசி, பழகி ,கண்ணில் நிறைத்துக் கருத்தில் பதிந்து, உறவுக்குள் ஆழம் சென்று, அலசி உரிமை எடுக்க வேண்டிய இல்லறம்.
இங்கு உன்னைக் கொண்டு நான் என்னை கொண்டு நீ என்ற நம்பிக்கையை மட்டுமே கருத்தில் கொண்டு நின்றது.
உடல் உரசாது தனது கன்னத்தைத் தம்பிரான் புஜத்தில் வைத்து, அவனது கை கோர்த்து, விடியலை பிடிக்க எண்ணி, உறக்கத்தின் துணை நாடினால் போதும் பொண்ணு.
இதோ இங்கனம் இனிதே தொடங்கியது காதலும் குடும்ப அரசியலும்..