முதல்நாள் இரவு கல்லூரி விடுதி வரை காரில் சென்று அவனை அல்லோலகப்படுத்தியிருந்தான் திரவியம்.
“ஏன்டா இந்த அக்கப்போர் பன்ற?…” என ஆதவன் கதறாத குறை.
இப்போது கிளம்பி சென்றிருக்க அது தங்கையை சந்திக்கத்தான் என தோன்றியது. என்ன நடக்குமோ, தங்கை என்ன சொல்வாளோ என்றிருந்தது.
“ஓகே, நான் பிஸி. அப்பறமா கூப்பிடறேன்…” என வைத்துவிட்டான் திரவியம்.
தன் அறைக்குள் அமர்ந்திருந்த ஆராத்தியாவிற்கு கீழே இறங்கி செல்லவே கால்கள் ஒத்துழைக்கவில்லை.
வந்துவிட்டேன் என திரவியத்திடமிருந்து குறுஞ்செய்தி வந்து பத்து நிமிடங்களாகிறது.
எப்போதும் அவனுடன் கிளம்புவதாக இருந்தால் அத்தனை வேகமாக கிளம்பிவிடுபவள்.
அவளின் மனதெல்லாம் ‘கடைசியில் அந்த பெண் நானாக இருந்துவிட்டேனே’ என நினைத்து மருகியது.
இப்போது அவன் வந்தும், தான் கிளம்பியும் கூட செல்ல மனமின்றி அமர்ந்திருக்க திரவியம் மீண்டும் அழைக்கவில்லை.
ஆராத்தியாவின் மனநிலை உணர்ந்து அவளாக வரட்டும் என ஜீப்பில் காத்திருந்தான் திரவியமும்.
மேலும் ஐந்து நிமிடம் கடந்திருக்க வார்டன் ஒரு பெண்ணிடம் சொல்லி அனுப்பிவிட்டார்.
“தியா, உன்னை தேடி உன் ரிலேட்டிவ் வந்திருக்காங்களாம். வெய்ட் பன்றாங்கன்னு வார்டன் சொன்னாங்க….” என்றதும் தான் எழுந்துகொண்டாள் ஆராத்தியா.
“ஹாங், இதோ போறேன்…” என்று அறையை விட்டு வெளியே வர அந்த பெண்ணும் கிளம்பவும் அறையை பூட்டிக்கொண்டு கீழிறங்கினாள்.
உடன் தங்கியிருக்கும் பெண் ஊருக்கு சென்றிருக்க அந்த அறையில் அவள் மட்டுமே.
அறையை பூட்டி சாவியை கையில் வைத்தபடி வெளியே வந்தவள் வார்டனிடம் சொல்லிவிட்டு கேட்டை தாண்டி வந்தாள்.
திரவியம் காதில் ப்ளூட்டூத்துடன் வந்துகொண்டிருக்கும் ஆராத்தியாவை தான் கண்ணெடுக்காது பார்த்தபடி இருந்தான்.
அவள் அணிந்திருந்தது அவனுக்கு சுத்தமாய் பிடிக்காத நிறத்திலான உடை. பார்த்தவனுக்கு கண்களும் சிரித்தது.
‘சேட்டையை பாரேன் இவளுக்கு?’ என உள்ளுக்குள் சொல்லிக்கொண்டான் திரவியம்.
அவனின் பார்வையை கவனிக்காமல் கையிலிருந்த சாவியை திருகியபடி என்னவோ போல் நடந்துகொண்டிருந்தவள் முகத்தில் மலர்ச்சி இல்லை.
பார்க்கவே பாவமாக இருந்தது திரவியத்திற்கு. ஒரு திருமணம் எத்தனை மாற்றங்களை விதைக்கிறது என நினைத்தான்.
ஜீப்பை நெருங்கிவிட்ட பின்பு தான் ஆராத்தியா அவனை பார்த்திருக்க கண்களில் கூலர் அணிந்திருந்தவன் தன்னை தான் பார்க்கிறான் என அவளுக்கு தெரியவில்லை.
வழமை போல பின்பக்கம் ஏற ஆராத்தியா கதவை திறக்க அது லாக்கில் இருந்தது.
மீண்டும் திறக்க இரண்டுமுறை முயன்றவள் பின்னரே முன்னிருந்தவனை ஏறிட்டு பார்த்தாள்.
“அது ஓபன் ஆகாது. நீ முன்னாடி வந்து உட்கார் தியா…” என்றதும் ஒன்றும் சொல்லாமல் வந்தமர்ந்துவிட்டாள்.
‘சும்மாவே நிமிர மாட்டா. இதுல இந்த பேச்சும் தெரிஞ்சு சுத்தம்’ என மனதிற்குள் சொல்லியபடி ஜீப்பை கிளப்பினான்.
எங்கே செல்கிறோம் என எதுவும் சொல்லிகொள்ளவில்லை அவளிடம். அதை பற்றி அவளும் கேட்கவும் இல்லை.
அந்த ரெஸ்டாரென்ட் வரும் வரை கூட இருவரிடமும் பேச்சில்லை. வழியில் எதற்கும் என திரவியமும் பேசவில்லை.
ரெஸ்டாரென்ட்டை பார்த்ததும் ஆராத்தியா புருவங்கள் உயர்ந்து நெரிந்து இறங்கியது.
அவளின் விருப்பமான உணவகம். பூமிகாவுடன் பலமுறை அங்கே வந்திருக்கிறாள்.
அதுவும் திரவியத்திடம் பூமிகா தான் பர்மிஷன் கேட்பாள். அத்தனை சத்தம் போடுவான் அவனும்.
“இப்பலாம் அடிக்கடி ஹோட்டல்? ஏற்கனவே ஹாஸ்டல் சாப்பாடே ஹோட்டல்ல இருக்கற மாதிரி தான். இதுல இதுவேறையா?…” என சத்தம் போட்டாலும் அனுமதிக்கவும் மறுப்பதில்லை அவன்.
அதன் பின் இத்தனை நாட்களுக்கு கூடாதென்று ஹோட்டல் உணவிற்கு தடா விதிப்பான்.
முடியும் பொழுது ஊரிலிருந்து வீட்டு உணவை வாங்கி வந்து தந்துவிட்டு செல்வான் இருவருக்குமாக.
இப்போது அவனே அந்த உணவகத்திற்கு அழைத்து வந்திருக்க ஆச்சர்யம் அங்கே ஆரம்பித்தது ஆராத்தியாவிற்கு.
“வெளிலையே நின்னா இங்க டேபிள் போட மாட்டாங்க. உள்ள போ…” என சொல்லியவன் முன்னே கை காண்பிக்க விழித்தாள்.
“இங்க வருவன்னு தெரியும். ஆனா நான் வந்ததில்லை. நீ முதல்ல உள்ள போ…” என சொல்ல இத்தனை இதமாக கூட இவன் பேசுவானா தன்னிடம் என வியந்த மனதை அடக்கியபடி உள்ளே சென்றாள்.
செல்லும் பொழுதே இன்னொருபக்கம் ஒரு பதட்டமும் கூடியது. அங்கே சென்று என்ன பேசுவானோ என ஒருபுறமும், தான் பேச வந்தது ஒருபுறமும் என மனதை படபடக்க செய்தது.
உள்ளே வந்த ஆராத்தியா தாங்கள் எப்போதும் அமரும் ஒரு இடத்தை தேடி செல்ல,
“இங்க வேண்டாம் தியா. பேச முடியாது. பர்ஸ்ட் ஃப்ளோர் போய்டுவோம்…” என காண்பித்தவன் முன்னே நடக்க அவனுடன் சென்றாள்.
அங்கே வேறு யாரும் இருக்கவில்லை. விரைவிலேயே வந்திருந்ததால் அத்தனை அமைதியாக இருக்க பேரர் வரவும் ஆராத்தியாவிடம் திரும்பினான்.
“இங்க என்ன நல்லா இருக்கும்ன்னு எனக்கு தெரியாது. நீயே ஆடர் பண்ணு…” என சொல்ல நடப்பது கனவா நனவா என்று பார்த்தபடி அசையாது பார்க்க,
“தியா உன்னை தான்…” என்றதும் மெல்லிய குரலில் பேரரிடம் தேவையானதை ஆடர் செய்துவிட்டு தண்ணீரை பாட்டிலை எடுத்து திறந்து குடித்தாள்.
“ஹ்ம்ம், ஆடர் பண்ணினது வர வரைக்கும் பேசலாம்…” என்று இருக்கையின் பின்னே சாய்ந்தமர்ந்தவன் விரல்கள் அங்கிருந்த ஸ்பூனை எடுத்து சுழற்ற ஆரம்பித்தது.
“நைட் தூங்கினியா தியா?…” என கேட்க,
“ஹ்ம்ம்…”
“சத்தமா சொல்லனும். எனக்கு கேட்கலை. இல்லை அந்த பக்கம் உன்கிட்ட வரட்டுமா?…” என்றதும் தூக்கிவாரி போட்டது.
“எதுக்கு இவ்வளோ ஷாக்? எனக்கு கேட்கலை. அதான் நீ மெதுவாவே பேசு. நான் அங்க வந்து கேட்கறேன்னு சொன்னேன்…” என்றான் விளக்கமாக.
குரலும், முகமும் எப்போதையும் போல மாற்றமில்லா அதே தோரணையும், ஆளுமையும் தான்.
ஆனால் அவனின் பேச்சின் தன்மை மட்டும் மென்மையை தூக்கி நிறுத்தியது அவளின் முன்பு.
“தூங்கிட்டேன்…” என்றாள் மீண்டும் சத்தமாக.
“ஓஹ், எப்போ?…”
“எப்போவா?…” என யோசிக்க அவளின் விழிகள் உருண்டு யோசிக்க அதனை கண்டு லேசாய் சிரித்தான்.
“ஓகே, சுத்தி வளைச்சு பேச வேண்டாம். நேராவே பேசுவோமே…” என்றவன் முன்னால் அமர்ந்து கைகளை மேஜை மேல் வைத்துக்கொண்டவன்,
“உன்னோட ப்ளான் என்ன?…” என்று கேட்க,
“என்ன ப்ளான்?…” அவனின் கேள்விக்கான கேள்வியை அதே வார்த்தையை கொண்டு தான் நிறைத்தாள் ஆராத்தியா.
“பி.ஈ முடிச்சிட்டு நெக்ஸ்ட்? எம்.ஈ ப்ளான்?…” என கேட்கவும் யோசனையுடன் ஆராத்தியா பார்க்க,
“பூமி ஆசைப்பட்டா. சொல்லிட்டே இருந்தா. ஆனா நீ அப்படி சொன்னதில்லை. அதான் கேட்டேன்…” என்றான் திரவியம்.
“ஹ்ம்ம், யோசிச்சேன். ஆனா…” என்றவள் மேலும் பேசும் முன் சூப் வந்துவிட்டது இருவருக்கும்.
“குடி…” என கப்பை சுழற்றி பெப்பரை எடுத்து அதில் தூவினான் அதில்.