ஆனால் எப்படி இது நடைபெற முடியும் என்று இரவெல்லாம் அத்தனை முறை பல விதமாய், பல கோணங்களில் யோசித்து பார்த்தவளுக்கு எப்படி சிந்தித்தாலும் ஒரே விடை தான்.
‘ஸ்டே ஸ்ட்ராங் தியா’ என தனக்கு தானே சொல்லிக்கொண்டவள் தனது ஒரு கையால் இன்னொரு கையை நன்றாக கிள்ளிக்கொண்டாள்.
“எஸ், இப்போ நான் ஓகே. தெளிவா தான் இருக்கேன்…” என சொல்லிக்கொண்டவள் தண்ணீரில் அலம்பியதில் ஆங்காங்கே சிலிர்த்து முகத்தில் ஒட்டி நின்ற கேசத்தை ஒதுக்கியபடி வெளியே வந்தாள்.
இப்போது கண்களில் கூலர் இன்றி ஆராத்தியாவை நேரடியாகவே பார்த்தான் திரவியம்.
வந்தமர்ந்தவள் திரவியம் பேசும் முன் தானே பேசுவது என முடிவுக்கு வந்துவிட்டிருக்க,
“தியா…” என திரவியம் ஆரம்பிக்க,
“எனக்கு நேத்து பூமி அண்ணி சொல்லிட்டாங்க. வீட்டுலயும் எல்லாருக்கும் சந்தோஷமாம். சோ எனக்கு ஓகே….” என்றாள் படபடவென்று ஒப்பிப்பதை போல.
இதை தான் சொல்லுவாள் என அவனுக்கும் நன்றாக தெரியுமே? அதனால் தான் யாரையும் பேசவேண்டாம் என்றும், தானாக கேட்பதை போலிருக்கட்டும் என்றும் நினைத்திருந்தான் திரவியம்.
இப்போது ஆராத்தியா இப்படி பேசவும் பூமிகாவின் மேல் கணக்கில்லாத கோபம் பெருகியது திரவியத்திற்கு.
“சூர் தியா?…” என கேள்வியாய் கேட்க,
“ஹ்ம்ம், சூர்…” என்றவள் முகத்தில் மலர்ச்சியும் இல்லை. அதே நேரம் வருத்தமும் இல்லை.
“ஓகே, கல்யாணம் பண்ணிக்கலாம். நெக்ஸ்ட்…” என்று அவன் கேட்கவும் கேள்வி புரிந்ததும் விதிர்த்த பார்வையுடன் அவள் விழிகள் அலைபாய்ந்தது.
“கல்யாணம் பண்ணிக்க போறோம்ன்னு ஆகிடுச்சு. பேசிடலாம் எல்லாமே. இந்த கல்யாணம் நம்ம குடும்பத்துக்காகவா?…” என திரவியம் கேட்டதும் ஆராத்தியாவின் இதயத்துடிப்பு அவனுக்கே கேட்டுவிடும் போலிருந்தது.
விரல்கள் எல்லாம் நடுங்க நெற்றியில் பொட்டு பொட்டாய் வியர்வை அரும்பியது.
தான் இப்போதே இதனை கேட்டது அதிகம் என உணர்ந்தவன் தன்னிரு விரல்களையும் கொண்டு நெற்றியை தட்டினான்.
“தியா, தியா. உனக்கு எப்படி புரிய வைக்க? கல்யாணம் யாருக்காகவும் பண்ணிக்க முடியாது. பண்ணிக்கவும் கூடாது…” என்றவன்,
“யோசிச்சுக்கோ….” என கூற மீண்டும் அவளிடம் அமைதி.
“ரெண்டுவருஷம் போகட்டும். நீயும் படிச்சு முடி. நம்ம லைஃப்ல எவ்வளவோ சேஞ்சஸ் வரும். நமக்குள்ளயே இன்னும் நல்ல அண்டர்ஸ்டேண்டிங் வரலாம். அப்ப கல்யாணம் செஞ்சுக்கிட்டா லைஃப் இன்னும் ஸ்மூத்தா போகும்…” என்றான் பொறுமையாக.
“வீட்டுல கேட்கும் போது நான் ஓகே சொல்லிடுவேன். அதுக்கு மேல அவங்க இஷ்டம், அவங்க முடிவு….” என்றாள்.
“அப்போ நீ நல்லா யோசிச்சிட்டன்னு சொல்லு…” என்றான் தன் பேச்சை கேட்கவேமாட்டாளா என்னும் விதமாக ஆற்றாமையுடன்.
இப்படி தான் கல்யாணம் செய்ய வேண்டுமா என்றிருந்தது திரவியத்திற்கு. என்னவோ ஒரு உணர்வையும் காண்பிக்காமல் எங்கோ பிடிக்கவில்லை.
“என்னை பார்த்து கூட இதை நீ சொல்லலை. இதுல உனக்கு சம்மதம்ன்னு நான் நம்பனுமா?…” என்றான் கேலி சிரிப்புடன்.
“நிஜமாவே சம்மதம் தான்…” அதே போலவே அவள் கூற,
“ஒஹ், ஓகே, இது என்கிட்டே மட்டும் இருக்கட்டும். வீட்டுக்கு சொல்ல வேண்டாம்…” என்றான் அவன்.
“ஏன்?…”
“நீ பிஜி பண்ணு. ரெண்டு வருஷம் போகட்டும். அப்பவும் உனக்கு இதே தாட் இருந்தா பிரோசீட் பண்ணுவோம். அதுவரை நமக்குள்ள இருக்கட்டும்…”
“ம்ஹூம், ஊருக்கு போனா வீட்டுல கேட்பாங்க. நான் சொல்லிருவேன்…”
“சொல்லி இந்த லீவ்லையே என்னோட உனக்கு மேரேஜ் பண்ணி வச்சிருவாங்க. வாழ்ந்திருவியா நீ என்கூட?…” என்றான் அடக்கப்பட்ட அழுத்தமான குரலில்.
அதிலேயே உடல் லேசாய் நடுங்கிவிட எச்சிலை விழுங்கியவள் விழிகள் அலைபாய்ந்தது.
“ஆன்ஸர் மீ தியா…”
“வீட்டுல அப்பாம்மா முடிவுக்கு மீறி நான் எதுவும் நடந்துக்க போறதில்லை…”
“பூமி என்ன சொன்னா உன்கிட்ட? வீட்டுல எல்லாரும் ஆசைப்படறாங்க, எங்கப்பாவுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை. அண்ணனுக்கும் வேற பொண்ணு கிடைக்கலை. அதனால கல்யானம் பண்ணிக்கோன்னா…”
அப்பட்டமான அதட்டலே மிதமிஞ்சி இருந்தது திரவியம் குரலில். அவள் இதை தான் சொல்ல போகிறாள் என்று தெரிந்திருந்தாலும் அவளிடமிருந்து கேட்கையில் இன்னுமே உணர்ச்சிவசப்பட்டான் அவன்.
“எனக்கு எல்லாம் தெரியும். எனக்கு ஓகே தான்…” ஆராத்தியா தான் சொல்லியதையே சொல்ல,
“அப்ப என்னை பிடிச்சு தானா சரின்னு சொல்ற?…” என்றதற்கும் பதிலில்லை.
“பதில் சொல்லு. பேசாம இருந்து சாதிக்க பார்க்காத. என்னை பிடிச்சு தான்…”
“உங்களுக்கு மட்டும் என்னை பிடிச்சிருக்கா?…” என்றுவிட்டாள் பட்டென்று ஆராத்தியா.
“எஸ், அப்கோர்ஸ். உன்னை எனக்கு எப்பவுமே புடிக்குமே…” என ஒரு நொடி தாமதிக்காமல் அவன் சொல்லவும் திகைத்தவள்,
“அது, அந்த புடிக்கிறது இல்ல. கல்யாணம்…” என்றவள் வார்த்தைகளை தடுமாற்றத்துடன் தேட அதில் மீண்டும் திரவியம் முகத்தில் மென்மை மீண்டிருந்தது.