பூமிகா அதன் பின் பேசும் போதெல்லாம் அவளிடம் ஒரு சுரத்தின்றியே தான் பேசினாள் ஆராத்தியா.
“தியா ப்ளீஸ், இதை மைண்ட்ல இருந்து எடுத்திரு. எக்ஸாம்ல கவனத்தை வை…” என பூமிகா சொல்ல,
“ஏன்? நான் நல்லா தான் இருக்கேன் அண்ணி. உங்களுக்கு ஏன் டல்லா தெரியுது?…” என எதிர்கேள்வி கேட்டாள் அவள்.
இப்படி சொல்பவளிடம் எதுவும் பேச முடியவில்லை. திரவியம் கண்டித்து சொல்லியிருந்தான் பூமிகாவிடம்.
“இன்னொருதடவை இந்த பேச்சை தியாக்கிட்டையோ, என்கிட்டையோ எடுக்கவே கூடாது நீ. அவளோட பரிட்சை முடியட்டும்…” என சொல்லியிருந்தான்.
இப்போது முன்பை போல ஆராத்தியாவிடம் அந்த கலகலப்பு குறைந்துவிட்டதாக தோன்ற வளைகாப்புக்குமே வர யோசிப்பாளோ என்றிருந்தது பூமிகாவிற்கு.
இந்துவிடம் கூட பகிர முடியவில்லை. தான் செய்துவைத்த முட்டாள்த்தனங்கள் போதும் என தன்னை தானே நிந்தித்தபடி இருந்தாள்.
அதுவே சற்று ரத்த அழுத்தத்தை அவளுக்கு ஏற்றியிருக்க திரவியம் தான் அழைத்து பேசி இருந்தான்.
“உன் உடம்பையும் பார்த்துக்கமாட்டியா நீ? எதுக்கு இதை நினைக்கிற? உன்னால எனக்கும் டென்ஷன். கொஞ்சம் ப்ரீயா விடு பூமி…” என்று சொல்லியிருந்தான் அவன்.
வருவாளா வருவாளா என யோசித்திருக்க ஆராத்தியாவே முதல்நாளே ஆதவனுக்கு அழைத்து வருவதாய் சொல்லவும் ரகு சென்று அழைத்து வந்தான் ஆராத்தியாவை.
திரவியம் வருவான் என நினைத்தவளுக்கு அவன் வராமல் ரகு வந்தது ஆச்சர்யத்தை தந்தது.
“என்னை கூப்பிடவெல்லாம் வர நீ?…” என கிண்டல் பேசினாள் ஆராத்தியா.
“ஹ்ம்ம், இப்பத்தான் உனக்கு பேச முடியுதா தியாக்குட்டி? ஒருவாரமா பூமி நீ சரியா பேசலைன்னு புலம்பிட்டே இருந்தா…” என்றதும் தன் சிரிப்பை மறையாமல் பார்த்துக்கொண்டாள் ஆராத்தியா.
“செமஸ்டர் வருதுலன்னா. அதான் டைமே கிடைக்கலை…” என சமாளிக்க அதன் பின்னர் வளைகாப்பு பற்றி பேசிக்கொண்டு வந்தான் ரகு.
திரவியம் போல எப்போதும் டீ குடிக்கும் அந்த கடையில் ரகு காரை நிறுத்தவில்லை.
ஆனால் அவ்விடத்தை கடக்கையில் நொடிபொழுதில் அவள் நினைவு அவனில் தொலைந்து மீண்டது.
வீடு வந்ததும் தங்கையை இறக்கிவிட்டவன் மறுநாள் விசேஷத்திற்கு தேவையானவற்றை கவனிக்க சென்றுவிட்டான்.
மறுநாள் விசேஷம் மண்டபத்தில் தான் ஏற்பாடாகி இருந்தது. அங்கே அலங்கார வேலைகளை கவனிக்க ஆதவனும், திரவியமும் இருக்க ரகு வந்து சேர்ந்தான்.
கையில் நோட்பேடை வைத்திருந்த திரவியம் பேனா நுனியை பற்களால் கடித்தபடி எதையோ முணுமுணுத்தான்.
“என்னடா? புரியலை…” என ஆதவன் கேட்க,
“ப்ச், ஒண்ணுமில்லை. இதுல இருக்கற தேங்காய் எண்ணிக்கையும், வந்து இறங்கிருக்கற தேங்காய் மூட்டையையும் பார்த்தா இன்னும் வரவேண்டி இருக்கும் போல? நீ தானே இருந்த. கவனிச்சியா?…” என்றான் திரவியம்.
“இன்னும் மூணு மூட்டை அடுத்த ட்ரிப்ல அனுப்பறாங்கடா…” என்றதும் ரகு வந்தமர்ந்தான் அவர்களுடன்.
“என்னடா தியா வந்தாச்சா?…” என ஆதவன் கேட்க,
“ஹ்ம்ம், வீட்டுல ட்ராப் பண்ணிட்டு தான் வரேன்….” என ரகு சொல்ல திரவியம் நிமிரவே இல்லை.
ஆதவன் அவனை பார்த்துவிட்டு அவன் முகத்திலிருந்து ஒன்றும் புரியாமல் மண்டை காய்ந்தான்.
தங்கையை பார்த்துவிட்டு வந்த அன்றும் என்னவென்று கேட்டதற்கு பரீட்சையை பற்றி பேசியதாக சொல்லிவிட அப்போதும் ஒன்றும் தெரியவில்லை.
“என்ன? என் முகத்துல எதாச்சும் எழுதி ஒட்டியிருக்கா? இப்படி பார்க்கறீங்க ரெண்டுபேரும்?…” என அவர்கள் இருவரிடமும் திரவியம் கேட்க,
“வீட்டுக்கு வாழைப்பழ தார் கொண்டு போகனும்னு சொன்னாங்க. இங்க தானே வந்து இறங்கி இருக்கு?…” என்றதும் அதற்கும் அவர்களிடம் தலையசைப்பு தான்.
“சரி நான் கிளம்பறேன். எதுவானாலும் கால் பண்ணுங்க. வாழை தாரை நான் கொண்டுபோய் குடுத்திடறேன்…” என்று எடுத்துக்கொண்டு சென்றான் திரவியம்.
“இவனை எந்த கேட்டகிரிலடா சேர்க்க?…” என நொந்துபோனான் ஆதவன்.
“வீட்டுக்கு தியா வரவும் முன்னை விட கூடுதல் கவனிப்பு தியாவுக்கு. அவங்க அப்படி பேசியே சொல்லிருவாங்க போல?…” என ரகு வேறு புலம்பினான்.
ரகு சொல்லியதை போல தான் சீதா ஆராத்தியாவை படுத்திக்கொண்டு இருந்தார்.
“அத்தை என்ன இது?…” என இந்துவே பிடித்து கேட்க அவருக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.
என்னவோ மகள் இப்போதே திருமணத்திற்கு சம்மதம் சொல்லிவிட்டதை போலவே அவர் மகிழ்ந்து மகிழ்ந்து அவளை பார்க்க ஆராத்தியாவிற்கு தான் இன்னுமே தன் முடிவு சரி என்றே பட்டது.
இடையில் ஒருமுறை விடுமுறைக்கு வந்திருந்த பொழுதும் இப்படியான கூடுதல் கவனிப்பு தான்.
ஆனால் அப்போது ஏன் எதற்கு என்று எதையும் யோசிக்கவும் இல்லை, கண்டுகொள்ளவுமில்லை ஆராத்தியா.
சீதாவை போல தென்னரசு எந்த ஆர்ப்பாட்டமும் செய்யவில்லை. ஆனால் மகளை கண்களாலேயே வருடிக்கொண்டிருந்தார் புன்னகையுடன்.
ஆராத்தியா வந்தது தெரிந்ததும் தயாளனும், அபிராமியும் வந்துவிட அவர்களுடன் எப்போதும் போலவே பேசினாள்.
நெருங்கிய சொந்தங்கள் அன்றே வந்திறங்கி இருக்க எல்லாம் இரு வீட்டிலும் தங்கியிருந்தனர்.
இரவு உணவு முடிந்து மறுநாளைக்கு என்ன உடை என்பதை பற்றி சொல்லிக்கொண்டிருக்க இந்து ஆராத்தியாவுக்கு மருதாணியை வைத்துக்கொண்டு இருந்தாள்.
“சீக்கிரமே வந்திருந்தா வச்சிருக்கலாம். நல்லவேளை இப்ப குளிர் அதிகமில்லை. ஒருமணி நேரம் மட்டும் வச்சிட்டு எடுத்திரு தியா. உனக்கு சட்டுன்னு புடிச்சுக்குமே…” என்றபடி வைத்துக்கொண்டிருந்தாள்.
பூமிகா தான் கேட்கவும் முடியாமல், யாரிடமும் சொல்லவும் முடியாமல் ஆராத்தியா முகத்திலேயே தன் கண்களை வைத்திருந்தாள்.
“தியா…” என பேச ஆரம்பித்தாலே அவளாகவே கல்லூரி பற்றி வளவளக்க துவங்கிவிடுவாள் ஆராத்தியா.
இந்தமட்டிலுமாவது பேசுகிறாளே என பூமிகாவும் அவளின் போக்கிலேயே தான் சென்றாள்.
ஆராத்தியாவின் முடிவென்ன என்று கூட கேட்கவில்லை. எதுவாகவும் இருந்துவிட்டு போகட்டும்.
அவள் என்றைக்கும் போல் தன்னுடன் இருந்தாலே போதும் என்று தான் தோன்றியது பூமிகாவிற்கு.
சொந்தங்களில் ஒவ்வொருவராக சென்று உறங்க ஆரம்பித்திருக்க சீதா மாடியில் அவர்களுக்கு படுக்கையை தயார் செய்ய சென்றிருந்தார் இந்துவுடன்.
ஆராத்தியாவுடன் பூமிகா பேசியபடி ஹாலில் இருக்க தன் கையிலிருந்த மருதாணி குப்பிகளில் காற்றை இழுத்து ஊதியபடி பூமிகாவுடன் பேசிக்கொண்டிருக்க காலிங் பெல் சத்தம் கேட்டது.
“நான் பார்க்கறேன் அண்ணி. அண்ணாவா தான் இருக்கும்…” என்று எழுந்து சென்றாள் ஆராத்தியா.
கதவை திறக்க அங்கே கையில் வாழை தாருடன் நின்றதென்னவோ திரவியம் தான்.
அந்த நேரம் அவனை அங்கே எதிர்பார்க்கவில்லை ஆராத்தியா. திகைப்புடன் நின்றவளுக்கு வழிவிடவேண்டும் என்று கூட தோன்றவில்லை.
இடது கையில் மருதாணியும், வலது கையை கதவின் கைப்பிடியிலும் வைத்தபடி பாவாடை தாவணியில் நின்றவளை பார்த்தவன் இதழ்களில் வரவேற்பாய் மெல்லிய சிரிப்பு.
“வழி விடு தியா…” என்றான் திரவியம்.
“ஹாங், இதோ…” என கதவை நன்றாக திறந்துவிட்டவள் நகர்ந்து வந்து பூமிகாவின் அருகமர்ந்துகொண்டாள்.
“எங்க அத்தையும், இந்துவையும்? மத்தவங்களையும் கூட காணும்?…” என்றான் திரவியம் பூமிகாவின் அருகே வந்து நின்று.
“மாடில இருக்காங்கண்ணா. எல்லாரும் தூங்க போயாச்சு…” என்ற பூமிகாவின் பார்வை திரவியம், ஆராத்தியாவிடமே மாறி மாறி சென்று வந்தது.
“நீ இன்னும் தூங்கலையா? நாளைக்கு சீக்கிரமே விசேஷம் ஆரம்பிச்சிடும் பூமி….”
“இதோ தூங்கத்தான் போறோம். ரகுத்தான் இன்னும் வரலை…” என்றாள்.
“இன்னைக்கு மண்டபத்துல தான் இருப்போம். ஏன் ரகு உங்கிட்ட சொல்லலையா?…” என கேட்டவன் ஆராத்தியாவை பார்க்க அவள் கையிலிருக்கும் மருதாணியை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தாள்.
“ஆமா, மறந்துட்டேன்…” என பூமி சொல்ல மாடியிலிருந்து சீதா வந்துவிட்டார்.
அதன் பின்னர் அவரிடமும் சொல்லிவிட்டு திரவியம் கிளம்பிவிட்டான். அவன் சென்றதும் எழுந்த ஆராத்தியா,
“ம்மா தூங்கறேன்….” என நகர,
“மருதாணியை கழுவிட்டு தூங்கு தியா. மறந்திடாத…” என்று சொல்லவும் தலையாட்டிவிட்டு சென்று படுத்துக்கொண்டாள்.
அப்போது தான் மூச்சே வந்தது. அனைவரின் பார்வையும், அதில் இருந்த எதிர்பார்ப்பும், ஆசையும் அவளுக்கு அப்பட்டமாய் விளங்கியது.