எதற்கோ பயந்து ஒளிவதை போல போர்வையை இழுத்து முகத்தோடு சேர்த்து போர்த்தியவள் கண்களை இறுக்கமாய் மூடி அவள் உலகத்தை இருட்டாக்கினாள்.
‘அவசரப்பட்டு சரி என சொல்லிவிட்டோமோ?’ என திரவியத்திடம் பேசிவிட்டு வந்ததிலிருந்து அவ்வப்போது யோசிப்பதும் அந்த எண்ணத்தை துரத்துவதுமாக இவள் ஓட ஓட மூச்சு வாங்கியது.
மறுநாள் வளைகாப்புக்கு மண்டபத்திற்கு சென்றவள் விழிகள் அவ்வப்போது அவளறியாமல் திரவியம் இங்கே இருப்பானோ என பதறி தேடியது.
முந்தைய நாள் பார்வை அவன் சாதாரணமாக பார்ப்பதை போலிருந்தாலும் எப்போதும் இருக்கும் அந்த குரலில் அழுத்தம் மட்டுப்பட்டிருந்த வேறுபாட்டினை அவளால் உணர முடிந்தது.
திருமணம் போல இதற்கும் ஒரு சொந்தத்தினையும் விடவில்லை தென்னரசும், தயாளனும். விழாவை அத்தனை பெரிதாகவே செய்திருந்தனர்.
அதிலும் கூடுதல் சந்தோஷமாக தங்கள் வீட்டின் அடுத்த திருமணமும் கூடி வந்திருக்க அதன் மகிழ்ச்சியும் அவர்களை துள்ள செய்தது.
அவர்களின் சந்தோஷம் எல்லாம், எல்லாமே ஆராத்தியாவின் விழிகளில் இருந்து தப்பவில்லை.
விஷயம் தெரியாமல் இருந்திருந்தால் கூட தானும் சேர்ந்தே அந்த கொண்டாட்டத்தில் இருந்திருப்போம் என்று தான் நினைத்தாள்.
வளையல்கள் எல்லாம் அடுக்கிக்கொண்டிருக்க ஆராத்தியா விழிகள் சுழன்று மீண்டும் திரவியத்திடம் சென்று நின்றது.
அவனை பார்த்தவளுக்கு தனக்குள்ளேயே அத்தனை ஆராய்ச்சி, இவனை பிடிக்குமா? பிடித்து ஒரு வாழ்க்கை இருக்குமா? என பல்வேறு சிந்தனை.
முதலில் சாதாரணம் போல நினைத்தவன் மீண்டும் மீண்டும் அவள் தன்னை தொடர்வதை உணர்ந்து புருவங்கள் உயர அவளை பார்த்தான்.
யோசனைகள் இருந்தாலும், பார்வை மட்டும் அவளில் பதிவதும் மீள்வதுமாக இருக்க திரவியம் அவளை கண்டுகொண்டதை கூட ஆராத்தியா உணரவில்லை.
“என்ன பன்றா இவ?…” என திரவியத்திற்கு தான் அவஸ்தையில் முடிந்தது.
‘இப்படி பார்க்கறதை யாராச்சும் பார்த்தா போச்சு, இப்பவே ஆரம்பிச்சிடுவாங்க’ என நினைத்தபடி அங்கிருந்து நகர்ந்தவன் அவள் கண்கள் படாமல் நிற்க ஆராத்தியா முகத்தில் தேடல்.
“பார்க்கவே மாட்டா. இப்ப எங்கன்னு தேடறா. புதுசா இருக்கே?…” என முணுமுணுப்பாய் சொல்லியவன் விறுவிறுவென அங்கே மேடைக்கு சென்றான்.
அதற்குள் வளைகாப்பு முடிந்து பூமிகாவை அழைத்துக்கொண்டு சாப்பிட சென்றுவிட்டாள் ஆராத்தியா.
எல்லாம் நிறைவு பெற்று பூமிகாவை தாய் வீட்டிற்கு அழைத்து செல்ல கூடவே ஆராத்தியாவும் இந்துவும் உடன் சென்றனர்.
ரகுவை அன்று அங்கே வரவேண்டாம் என சொல்லிவிட மற்ற சொந்தங்கள் எல்லாம் அபிராமி இல்லத்தில் தான்.
மண்டபத்தில் வைத்து தான் திரவியத்தை பார்க்கமுடிந்தது ஆராத்தியாவால். காணும் திசையில் எல்லாம் இருந்தான் அவன்.
வீட்டிற்கு வந்த பின்பு எங்கும் தென்படவில்லை. மதியம் அனைவரும் சிறிது ஓய்வெடுக்க தயாளனும் அவரறைக்கு சென்றார் அபிராமியின் அந்த பெரியப்பாவுடன்.
பூமிகாவின் நிச்சயத்தன்று திரவியம், ஆராத்தியா திருமணம் பற்றி ஆரம்பித்தவர் அன்றும் அதனை பேசினார்.
“பெரியப்பா அது நடக்கும் போது நடக்கட்டும்…” என அபிராமி இப்போதைக்கு யாருக்கும் சொல்லவேண்டாம் என்று தயாளனுக்கு கண்ணமர்த்தினார்.
“என்னம்மா நீ பேசற? மதுரையில ஒரு இடம் உன் மகனை பேசலாம்ன்னு விசாரிக்க சொல்லி என்கிட்டயும், நம்ம முனியாண்டிகிட்டையும் வந்தாங்க…” என்றதுமே அபிராமி முகம் மாறியது.
“என்ன பெரியப்பா சொல்றீங்க?…” என அபிராமி கேட்க தயாளனும் இவர் அதை தான் சொல்கிறாரோ என பார்த்தார்.
“ஆமாங்கேன், நான் தான் இதெல்லாம் சரிப்பட்டு வராது. உங்க கூட்டத்துக்கு எங்க குடும்பத்து புள்ளையான்னு கேட்டுவிட்டுடேன். கொஞ்சம் அடாவடி பேர்வழி அந்த கூட்டம்…” என்றவர்,
“அதுவும் எங்க வீட்டுலையே சொந்தத்துல பொண்ணு இருக்க வெளில எல்லாம் எடுக்கமாட்டாங்க. அவங்க வீட்டளவுல கல்யாணத்துக்கு பேசியாச்சுன்னு சொன்னேன். அப்பறம் தான் கம்முன்னு போனானுவ…” என்றார்.
“வீட்டளவுல பேசியாச்சா? என்ன பெரியப்பா?…” கோவிக்க கூட முடியாமல் அபிராமி அவரிடம் கேட்க,
“என்னம்மா நீ? அதான் பூமி நிச்சயத்தன்னைக்கு பேசினோமே? நீ கூட பூமி கல்யாணத்தப்போ நடந்தா ரொம்ப நல்லது. நடக்கறப்போ நடக்கட்டும்ன்னு சொன்னியே. அதான்…” என்றதும் அபிராமி முகம் பரிதாபமானது.
“நான் சரியா தானே பேசியிருக்கேன். நீ எப்படி வெளில எடுப்ப? எனக்கு தெரியாதா என்ன? அவங்க தான் நம்ம குடும்பத்தை தெரியாம பேசறாங்க, அவங்க ஆசைப்பட்டா போதுமா?…”
பெரியப்பா பேசிக்கொண்டே இருக்க விட்டால் இப்போதே அத்தனைபேரையும் வைத்து இதனை பேசுவாரோ என்று நினைத்த தயாளன்,
“சரி நீங்க தூங்குங்க. நைட் பஸ் இருக்கு உங்களுக்கு. அதுல தூங்க முடியுமோ என்னவோ?…” என்று சொல்லிவிட்டு அபிராமியையும் அழைத்துக்கொண்டு வெளியே வந்துவிட்டார் தயாளன்.
ஹாலில் மற்றவர்கள் பேசிக்கொண்டிருக்க சற்று நகர்ந்து அடுக்களை பக்கம் வந்த தயாளன் அபிராமியிடம்,
“அப்ப அந்த சம்பந்தம் நின்னதுக்கு இந்த மாமா தான் காரணம். சத்தமில்லாம இவர் என்ன வேலையை பார்த்துவிட்டிருக்கார் பாரு…” என்றார்.
“ஹ்ம்ம், எனக்கும் அவ்வளோ ஸ்ட்ராங்கா அவங்க எப்படி பேசினாங்கன்னு புரியாம இருந்துச்சு. நம்மக்கிட்டையே இவ்வளோ பேசறவர் அவங்ககிட்ட சண்டைக்கு நின்னாலும் நின்னிருப்பார் எப்படி சம்பந்தம் பேச நினைப்பீங்கன்னு…” என்றார் அபிராமி.
“அவங்களும் நாம கேட்டதை சொல்லலை போல. அவங்களா பார்க்கறது போல சொல்லியிருப்பாங்க போல. அதான். இல்லைன்னா அப்பவே நம்மகிட்ட இப்படி கேட்டியான்னு சண்டைக்கு வந்து நின்னிருப்பார் உன் பெரியப்பா…”
“ஹ்ம்ம், எப்படியோ என் அண்ணன் மகளே எனக்கு மருமக. தீராவை மாதிரி தியாவும் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டா போதும்….” அபிராமி கை கூப்பி சொல்ல,
“அதான் அவன் பேசற வரைக்கும் நம்ம யாரையும் பேச வேண்டாம்ன்னு சொல்லியிருக்கானே. அவனே தியாகிட்ட பேசட்டும்…” என சொல்லியவர்,
“இதோ போடறேன், வெளில யாருக்காச்சும் டீ வேணுமான்னு கேட்கனும். ஒருவார்த்தை கேளுங்களேன்…” என சொல்லி அனுப்பிவிட்டு உள்ளே வந்து பார்க்க அங்கே இந்துவின் அருகே ஆராத்தியா.
ஒன்றும் பேசாமல் அவள் நின்றிருக்க இந்துவிற்கு மட்டுமல்ல அபிராமிக்கும் பதட்டமானது.
“அண்ணி நான் வீட்டுக்கு போறேன்…” என்றவள் அபிராமியை கடந்து செல்லும் பொழுது,
“போச்சு…” என தலையில் கை வைத்தபடி அபிராமி இந்துவை பார்க்க,
“நான் சொல்ல நினைச்சேன்ம்மா. பதட்டத்துல சட்டுன்னு பேச முடியலை…” என்றாள் இந்து.
“அபி என்ன தியா உள்ள இருந்து வரா?…” தயாளன் அங்கே வந்து கேட்க,
“எல்லாம் கேட்டுருச்சு. இன்னைக்கு உங்க மகன் எல்லாரையும் பேச போறான்…” என்று பயந்துகொண்டே இருந்தார் அபிராமி.
“சரி எல்லாமே நல்லதுக்குன்னு நினைச்சுக்கோ. ஒரு விசேஷத்துல தான் இன்னொன்னு ஆரம்பிக்குது. பேசலாம்…” என்ற தயாளன்,
“இந்து, நீ வீட்டுக்கு போய் தியாவோட இரு. நான் பேசிட்டு வரேன்…” என்றவர் தென்னரசுவிற்கு அழைத்து விஷயத்தை சொல்ல மண்டபத்திலிருந்து புறப்படுவதாய் கூறினார்.
மண்டபத்தில் ஏற்கனவே வேலைகள் எல்லாம் முடிந்த நிலையில் வீட்டிற்கு தான் கிளம்பிக்கொண்டிருக்க தென்னரசுவிற்கு அழைப்பு வரவும் அதனை திரவியத்திடமும் அவர் கூறினார்.
“சரி நீங்க கிளம்புங்க மாமா. நான் முடிச்சுட்டு வரேன்…” என்றான் வெகு சாதாரணமாக.
“தீரா…” ஆதவன் கேட்க,
“கிளம்பு ஆதி. நானும் பத்து நிமிஷத்துல வரேன். அதான் எல்லாம் செட்டில் பண்ணியாச்சே…” என அனுப்பி வைத்தான்.
மீண்டும் திரவியம் வீடு வந்து சேர ஆராத்தியா ஹாலில் இல்லை. சீதாவிடம் எங்கே என கேட்க அறையில் இந்துவுடன் இருப்பதாக கூறினார்.
“இன்னும் யாருமே பேசலை தீரா. இந்து தான் பேசிட்டிருக்கா. ஆனா தியா ரொம்ப நார்மலா இருக்கற மாதிரி இருக்கு…” என சீதா சொல்ல,
“இருக்கட்டும்த்தை. இன்னைக்கு எதுவும் பேச வேண்டாம். கெஸ்ட் எல்லாம் கிளம்பட்டும். பேசலாம்…” என்று சொல்லிவிட்டான் திரவியம்.
அவன் சொல்லியதை போலவே மறுநாள் தென்னரசு மகளிடம் பேச உங்க விருப்பம் என்று அனைவரையும் அதிர வைத்தாள் ஆராத்தியா.
நம்பமுடியாமல் அவர்கள் பார்க்க அவளிடம் மாற்றமில்லை. நீங்கள் கேட்ட, எதிர்பார்த்த பதில் என்பதை போல மெல்லிய புன்னகையுடன் தான் இருந்தாள்.
“உனக்கு முழு சம்மதம் தானேம்மா?…” தென்னரசு தான் மீண்டும் மீண்டும் கேட்டார் மகளிடம்.
“அவளே சரின்னு சொல்லிட்டா. சும்மா இருங்களேன்…” என கெஞ்சாத குறையாக சீதா சொல்ல அவரின் பதட்டத்தில் இன்னுமே லேசாய் சிரித்தாள் ஆராத்தியா.
குடும்பம் மொத்தமும் திருவிழாவை போல அத்தனை சந்தோஷமாய் திருமண வேலையை ஆரம்பிப்பதை பற்றி தீவிரமாகினர்.
அதன் பின்னர் ஆராத்தியாவை ஆதவன் கல்லூரிக்கு அழைத்து செல்ல பரிட்சை முடியும் வரை திருமணம் பற்றி எதிலும் ஆராத்தியா பங்குகொள்ளவில்லை.
பரிட்சை என்பதனால் அவளை தொந்தரவு செய்யவேண்டாம் என்றிருந்தார் அபிராமி.
திரவியம் சொல்லியதை போல இரண்டு வருடம் படிப்பை முடிப்போமா என்று எழுந்த யோசனையில் சீதாவின் பேச்சு இடைமறித்தது.
“தீரா உனக்கு பிஜி பண்ண சொல்லி பேசிட்டிருந்தான். எப்போவேணா படிக்கலாம். கல்யாணம் இப்ப கூடி வரும் போதே பண்ணிருவோம். அதுக்கப்பறம் எவ்வளோ வேணா படிக்கட்டும்…” என்றுவிட்டார்.
மீண்டும் மீண்டும் திரவியத்துடன் தன் வாழ்க்கை எப்படி இருக்குமோ என்னும் அச்சத்தை எல்லாம் வலுக்கட்டாயமாக மனதின் அடியில் அமிழ்த்த முயன்றவள் மனதை தேர்வின் பக்கம் திசை திருப்பினாள்.
படிப்பை முடித்து மீண்டும் ஊட்டிக்கு வர ஆராத்தியாவை வரவேற்றது அவளின் திருமண பத்திரிக்கை அடிக்க கொடுக்கவிருக்கும் மாதிரி பத்திரிகை தான்.
அதனை பார்த்தவளுக்கு எந்த உணர்வும் எழவில்லை. பூமிகாவின் திருமணத்தின் பொழுது எவ்வளவு கேலி, கிண்டல்.
முன்பை போல கலகலப்பும், துள்ளலும் கொஞ்சம் குறைந்திருந்தது அவளிடம். அதற்காகவே அவளுடன் எப்போதும் யாராவது இருந்துகொண்டே தான் இருந்தனர்.
நினைத்து பார்க்க தனக்கு ஏன் எதுவும் தோன்றவில்லை என்று யோசித்தே களைத்து போனாள்.
மனதின் களைப்புடனே குறித்த தேதியில் திருமதி மகிழ்திரவியமாய் மாறியிருந்தாள் ஆராத்தியா.