“போகனும்…” என்று சொல்ல தலையசைத்து படியை நோக்கி நடக்க,
“தியா…” என்றழைத்தான்.
“ஹ்ம்ம், சொல்லுங்கத்தான்…” என திரும்பி பார்த்து அவனிடம் கேட்க,
“உன் கை குடு…” என தன்னுடைய வலது கையை அவளை நோக்கி நீட்ட மீண்டும் திகைத்து பார்த்தாள் அவள்.
“உன் கையை குடுன்னு கேட்டேன். ஏன் இவ்வளோ ஷாக்?…” என கேட்டுக்கொண்டே அவளின் அருகே வந்து நிற்க,
“எதுக்கு?…” என்றாள் உதறலுடன்.
“நாளைக்கு நமக்கு கல்யாணம்…” என்றவன் கையை நீட்டியபடி நிற்க மெதுவாய் தன் கையை உயர்த்தினாள் ஆராத்தியா.
அதற்கே அத்தனை நொடிகள் பிடித்தது. அவள் முகம் பார்ப்பதும், அவளின் கையை பார்ப்பதுமாய் இருந்த திரவியம் அவள் விரல்கள் தன்னை நோக்கி நீளவும் தானே பிடித்து கோர்த்துக்கொண்டான்.
வெகுநேரம் குளிரில் நின்றவள் விரல்கள் பனியில் அத்தனை சில்லிட்டு பனிக்கட்டியை போல் குளிர்ந்து.
அந்த குளிரிலும் அவனின் கைகளின் சூடான கதகதப்பு ஆராத்தியாவால் உணர முடிந்தது.
“குட் நைட் தியா. பை…” என்று சொல்லியவன் இன்னொரு கரம் அவளின் கன்னத்தை லேசாய் தட்டி தான் ஆராத்தியாவை பிடித்திருந்த இன்னொரு கையை விட்ட நிமிடம் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பென கீழே இறங்கி ஓடிவிட்டாள் அவள்.
மகிழ்திரவியத்தின் இந்த அணுகுமுறை புதிது, அருகாமையும் புதிது, பார்வையும் புதிது, தொடுகையும் புதிது.
முகத்தை மூடிக்கொண்டவள் அப்படியே மடிந்து அமர்ந்துவிட்டாள் செய்வதறியாமல். இன்றைக்கே இப்படி என்றால் மறுநாள்?
கண்ணை கட்டிக்கொண்டு வர அதற்கு மேல் அமர முடியாமல் எழுந்து சென்று படுத்துவிட்டாள் ஆராத்தியா.
மெல்ல திறந்திருந்த கண்களின் வழியே இந்து இதை எல்லாவற்றையுமே பார்த்துக்கொண்டு தான் இருந்தாள்.
ஆராத்தியாவின் இந்த பதட்டம், அமைதி, முன்பை போல துள்ளலின்மை எல்லாவற்றையும் பார்க்கவே பாவமாக இருந்தது.
இத்தனை அவஸ்தைக்கு இந்த பெண் திருமணத்தில் விருப்பமில்லை, வேண்டாம் என்றே சொல்லியிருக்கலாமே என நினைத்தாள் இந்து.
கட்டிலில் வந்து படுத்தவள் அவ்வப்போது மொபைலில் நேரத்தை பார்க்கவும், கண்ணை மூடவுமாக இருக்க சுத்தமாய் உறங்கவில்லை ஆராத்தியாவும், இந்துவும்.
மூன்று மணிக்கெல்லாம் எழுந்து தயாராகவேண்டும். அன்றைக்கு முகூர்த்தம் அந்த நேரத்தில் தான் அவர்களின் ராசிக்கு நன்றாக இருப்பதாக சொல்லியிருக்க அப்படியே தலையாட்டினார்கள் வீட்டினர்.
முதல்நாள் இல்லாத உறக்கமெல்லாம் அலங்காரம் செய்யும் பொழுது தான் வந்து தொலைத்தது ஆராத்தியாவுக்கு.
அவ்வபோது லேசாய் உறங்கி விழுவதும், பின் சுதாரிப்பதுமாகவே இருக்க ஒருவழியாய் மணமகளாய் தயாராகி மணமேடைக்கு வந்தாகிற்று.
முகூர்த்த புடவை அவளின் பிடித்தமான நிறத்தில் பிரத்யேகமாக வரைய செய்து, நெய்ய சொல்லியிருக்க அத்தனை அழகாய் அவளுக்கு பொருந்தி இருந்தது.
மேடையில் வந்தமர்ந்தவள் தோள் மகிழ்திரவியத்துடன் உரச மெல்ல யாருமறியாமல் நகர்ந்து அமர்ந்துகொண்டாள்.
இதழ்களுக்குள் அதக்கப்பட்ட புன்னகையுடன் எல்லாம் கவனித்தும் கவனிக்காத பாவனை தான் திரவியத்திடம்.
திருமாங்கல்யம் மண்டபத்திலிருந்தவர்கள் ஆசிர்வாதம் பெற்று மேடைக்கு வர ஆராத்தியாவின் பார்வை அதில் தான் நிலைத்தது.
இதோ தன் வாழ்க்கை மொத்தமும் மாற போகிறது. தான் வேண்டாமென்ற ஒன்றினுள் இப்போது தானாகவே தொலையவிருக்கிறோம் என பார்த்தபடி இருந்தவள் விழிகள் அதிலிருந்தாலும் உதட்டில் புன்னகை அப்படியே உறைந்திருந்தது.
“வா தியா…” என மனைவியை அழைத்துக்கொண்டு அந்த அறைக்கு சென்றான் திரவியம்.
படுத்திருந்தவர் முகமெல்லாம் சோர்ந்திருக்க வயோதிகம் முகத்தில், உடலில் இன்னுமே சோர்வை தந்திருந்தது.
“தாத்தா…” என அழைத்ததும் விழித்தவர் பார்வையில் பளிச்சென்று ஒரு சந்தோஷம்.
“டேய் கண்ணா, வா வா வா…” என அழைத்தார்.
அவரை எழுப்பி தலையணையை முதுகிற்கு கொடுத்து சாய்ந்து அமர வைத்தவன்,
“தியா…” என அழைத்ததும் அவனருகே வந்து நின்றாள் ஆராத்தியா.
“ஆசிர்வாதம் பண்ணுங்க தாத்தா…” என காலை தொட்டு வணங்க இந்து தன் கையிலிருந்த விபூதி, குங்குமத்தையும், அட்சதை மலர்களையும் நீட்டினாள்.
“பதினாறு பெத்து சந்தோஷமா இருக்கனும்ய்யா. உங்க கல்யாணத்த தான் பார்க்க அம்புட்டு ஆசைப்பட்டேன். ஆனா பாரு, முடியலை…” என சொல்லி இருவருக்கும் மலர்கள் தூவி நெற்றியில் இட்டுவிட்டார்.
“ஹ்ம்ம், வீடியோ எடுத்திருக்கு, பாருங்க…” என்றான் திரவியம். அவரின் உடல்நிலை பற்றி பேசிக்கொண்டிருக்க,
“இந்த பூமர் தாத்தா மட்டும் கம்முன்னு இருந்திருந்தா இந்நேரம் உங்கண்ணன் மதுரக்கார மாப்பிள்ளையாகிருப்பார். நான் தப்பிச்சிருப்பேன்….” என அவளறியாமல் ஆராத்தியா சொல்ல இந்து கவனித்துவிட்டாள்.