“ஆமா, தலையை தடவி தடவியே தூங்க வச்சு இவ பழக்கி என்னையும் அதே செய்ய சொல்றான்…” என்றாள் பூமிகா தன் மகனை பார்த்து.
“அண்ணி முதல்ல இந்த ஜ்வெல்ஸ் கழட்ட ஹெல்ப் பண்ணுங்க…” என ஆராத்தியா அழைத்ததும் அவளுக்கு உதவ சற்று நேரத்தில் வேறு புடவைக்கு மாறி வந்து படுத்துவிட்டாள்.
உண்மைக்கும் உறக்கமும், களைப்பும் அவளை அமரவும் விடாமல் அப்படி அசத்தியது.
படுத்தவள் அருகே பூமிகா அரை உறக்கத்திலிருந்த தன் குழந்தையையும் கிடைத்த இருவருமாக ஒரு ஆழ்ந்த உறக்கம்.
இருமுறை அபிராமி வந்து பார்த்துவிட்டு சென்றார். மருமகளை எழுப்பவும் மனதில்லை.
இப்படி எல்லாம் அங்கே வந்து ஆராத்தியா உறங்கியது அவள் விவரமறியா வயதில் தான்.
அதன் பின் இப்போது தான் அவள் இங்கே தங்க போவதும், இப்படி உறங்குவதும்.
அன்று கிளம்பவிருக்கும் சொந்தங்கள் ஆராத்தியாவிடம் சொல்லிக்கொண்டு செல்ல நினைக்க அபிராமி தானே சொல்லிவிடுவதாக சொல்ல திரவியம் இருவருக்கும் சேர்த்தே விடைகொடுத்தான்.
விருந்திற்கு அழைப்பதாகவும், தோது பார்த்து வரும்படியும் சொல்லிவிட்டு கிளம்பினார்கள்.
மற்றவர்கள் தென்னரசுவின் வீட்டிற்கு சென்றுவிட பத்துபேர் போலவே தான் அங்கே இருந்தனர்.
ஆராத்தியா எழுந்துகொள்ளும் பொழுதே ஏழு மணியாகி இருந்தது. அறையில் யாருமில்லை.
அவள் மட்டுமே இருக்க எழுந்து முகத்தை கழுவிவிட்டு வெளியே வர அங்கே இந்துவும், அபிராமியும் பேசிக்கொண்டு இருந்தனர். வீட்டில் மற்றவர்கள் இருப்பதை போல தெரியவில்லை.
“அண்ணி…” என அழைத்ததுமே அபிராமி பார்த்ததும் முகம் மலர்ந்தார்.
“வாடா தியா…” என புன்னகையுடன் அழைத்தவர்,
“காபி வேணுமா? டீயா?…” என்று கேட்க ஆராத்தியாவிற்கு அப்படி ஒரு பசி.
ஆராத்தியா அபிராமி கேட்டதும் அதனை சொல்லாமல் டீ சொல்லிவிட்டு இந்துவுடன் அமர்ந்துகொண்டாள்.
கால்மணி நேரத்தில் ஆராத்தியா ரெடியாகி அமர்ந்திருக்க இந்துவிற்கு எப்படி பேச என்று யோசனையாக இருந்தது.
“தியாக்குட்டி, நான்…”
“நான் நார்மலா தான் இருக்கேன் ண்ணி…” என ஆராத்தியா தெளிவுடன் கூறினாலும் அவள் விழிகளில் மிரட்சி மிதந்தது.
அதற்குள் சீதாவும் வந்துவிட்டார் அங்கே. மகளை பார்த்ததுமே பெற்ற மனது குளிர்ந்து.
அவளை அணைத்து கொஞ்சிக்கொண்டவர் கண்கள் சிரிப்பும், கண்ணீருமாய் இருக்க,
“நல்லாருக்கனும்டா. சந்தோஷமா இரு…” என கன்னம் வழித்து நெட்டி முறித்தார்.
“சாமி கும்பிடலாம். வாங்க த்தை…” என இந்து சீதாவிடம் சொல்லிவிட்டு ஆராத்தியாவை அழைத்து செல்ல மனதில் ‘இதுதான் உன் வாழ்க்கை, உன் வாழ்க்கை’ என மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே சென்றாள்.
வந்துவிட்டது மகிழ்திரவியம் அறை. இனி அவளின் அறையும் கூட அதுவே தான்.
அதன் முன்னின்றவளுக்கு அதுவரை இருந்த ஒரு மன தைரியம் எங்கோ சென்று ஒளிர்ந்துகொள்ள சட்டென படபடப்பு.
வலது கை விரலால் இடது கையிலிருந்த கண்ணாடி வளையலை கோர்த்து பிடித்துக்கொண்டாள் ஆராத்தியா.
“உள்ள போ தியா…” இந்து சொல்ல கால்கள் முன் செல்லவே அஞ்சியது.
“தியா…” என்று இந்து மீண்டும் அழைத்து முதுகில் கை வைத்து லேசாய் உந்த,
“ஹாங், அண்ணி…” என திசையறியாத குழந்தையாய் அவள் முகம் பாவமாகி போனது.
“என்ன தியா?…” இந்து கவலையுடன் கேட்க,
“ஒண்ணுமில்லை. போறேன்…” என கதவில் கை வைக்க லேசாய் தான் சாற்றப்பட்டிருந்தது அது.
கை வைத்ததும் பாதியாய் திறந்துகொண்டது. அதன் வழியே அங்கே திரவியம் அமர்ந்திருப்பதும் தென்பட்டது.
கட்டிலின் அருகிருந்த சோபாவில் அமர்ந்திருந்தவன் கையில் புத்தகம் ஒன்றிருக்க எதிரிருந்த டீப்பாயில் காலை நீட்டி அமர்ந்திருந்தான்.
வெளியே கேட்ட சலசலப்பில் அவள் வந்துவிட்ட அரவம் உணர்ந்தவன் பார்வை உயர ஆராத்தியா நிற்பதும் தெரிந்தது.
தன் கையில் வைத்திருந்த புத்தகத்தை நெஞ்சில் சாய்த்தவன் அவள் வருகிறாளா என பார்த்தபடி இருக்க உள்ளே அடியெடுத்து வைத்தாள் திருமதி. மகிழ்திரவியம்.