“நீ ஓகே தானே?…” என கேட்க வெட்கம் வேறு ஒருபக்கம் அவளை சுழற்றியடித்தது.
“தூங்கவா அத்தான்?…” என்றாள் கேள்வியாக.
அவள் குரலே வித்தியாசமாக இருக்க என்னாகிற்றோ என பதறி டேபிள் லைட்டை போட்டவன் எழுந்து பார்த்தான் ஆராத்தியாவை.
“என்ன பண்ணுது தியா?…”
“ம்ஹூம், ஒண்ணுமில்லை….” என்றாள் சுருண்டு படுத்து.
குரலில் சுத்தமாய் சுரத்தில்லை. தலையை தூக்கி பார்க்க விழிகள் முழுதாய் திறக்கவும் முடியவில்லை.
“தியாம்மா? என்னடா?…” என மீண்டும் அவளை எழுப்பி அமர்த்தி தண்ணீரை தர மெல்ல விழுங்கினாள்.
“என்ன பண்ணுதுன்னு சொல்லுடா. ஹாஸ்பிட்டல் போவோமா?…” என்று கேட்டவனுக்கு தன் மீதே கோபம் பிறக்க அவன் குரலே அடங்கி போனது.
“எனக்கொன்னுமில்லை, ப்ளீஸ். அத்தான் நான் தூங்கறேன்…”
“தியா…” என்றவன் அவளை எழுப்பி நிறுத்த போக,
“அச்சோ அத்தான்…” என்றவள் அவன் நெஞ்சில் சாய்ந்துகொண்டவள் வேகமாய் அவன் கண்களையும் சேர்த்து மூடினாள்.
“பசிக்குது. வேற ஒண்ணுமில்லை. சரியா சாப்பிடலை. இப்பவும் ரொம்ப டயர்ட். அதான்…” என்று சொல்லவும் தான் நிம்மதியானது அவனுக்கு.
“பயந்துட்டேன் நான்…” என அவள் முகம் நிமிர்த்தி பார்த்தவன்,
“ஓகே, நீ படுத்திரு. வரேன்…” என எழுந்து செல்ல அவனை பார்த்தபடியே கண்களை மூடி உறங்க முற்பட்டாள்.
மீண்டும் திரவியம் வர கையில் பிளேட்டும் இன்னொரு கையில் ஒரு பிளாக்ஸும் இருந்தது.
அவன் வரும் பொழுது உடை மாற்றி முகம் கழுவிவிட்டு அமர்ந்திருந்தாள் ஆராத்தியா.
“எழுந்து உட்கார். இதுதான் இருந்தது. சாப்பிடு…” என்றான் திரவியம்.
இரவு வந்திருந்த இட்லி மூன்றும், கூடவே பொடியும் இருந்தது. இருந்த பசிக்கு அதுவே பெரிது என எழுந்தமர தடுமாறினாள்.
“மயக்கம் வர அளவுக்கு பசி. சொல்லமாட்டியா நீ? இங்க இவ்வளோ ப்ரூட்ஸ் இருந்ததே?…” என கேட்டுக்கொண்டே அவளுக்கு எடுத்து ஊட்டிவிட நீட்ட வாங்காமல் விழித்தாள்.
“என்னடி எல்லாத்துக்கும் பார்க்கற நீ? அட்லீஸ்ட் நான் தூங்கறப்போ கையை, காலை போடறதை தாங்கவாச்சும் தெம்பு வேண்டாமா? சாப்பிடு…” என அவனே திணிக்க ஒன்றும் சொல்லாமல் உண்டு முடித்தாள்.
“டின்னர் வந்ததே, அதுவுமா சாப்பிடலை?…”
“எல்லாரும் கிண்டலா பேசிட்டே இருந்தாங்க. அது… அது அதான், என்னால சாப்பிட முடியலை…” என தயக்கத்துடன்.
“ப்ளாஸ்க்ல பால் சூடா இருக்கு. டிப் டீ பேக் கொண்டு வந்திருக்கேன். இந்த பிஸ்கட் கூட சாப்பிடு…” என்றவன் இருவருக்குமான டீயை கப்பில் ஊற்றினான்.
கூச்சத்துடன் முகத்தை சாய்த்துக்கொண்டவள் டீயை குடித்து முடிக்க முகம் தெளிவாகி இருந்தது.
“இதை நான் வச்சிட்டு வரேன்…” என்று எழுந்து சென்றான் திரவியம்.
மீண்டும் வரும் பொழுது உறங்க ஆரம்பித்திருந்தாள் ஆராத்தியா. அவளருகே வந்தவன் தன் கை வளைவில் அவளை இழுத்துக்கொள்ள அதன் பின்னர் கொஞ்சமிருந்த உறக்கமும் பறந்துவிட்டது.