இவ்வளவு பேசுவானா? இதனை எல்லாம் பேசுவானா? தன்னிடம் பேசுகிறானா? என விழிவிரித்து, வேடிக்கை பார்த்து ஆச்சர்யப்பட்டே அவனிடம் வகையாய் மாட்டிக்கொண்டாள் ஆராத்தியா.
அவளிடமிருந்து எதையும் பெற நினைக்கவில்லை அவன். தான் தருவதையும் நிறுத்தவில்லை.
திரவியம் அவளிடம் தன்னுடைய இன்னொரு பக்கமென்று சொன்னது பெரும் ஆழ்கடலை போல என்று தான் அவனின் ஆளுகையில் உணர்ந்தாள் ஆராத்தியா.
கற்றுவிப்பதற்கும், கற்றுக்கொள்வதற்கும் ஏராளங்கள் அவனிடம் கொள்ளையாய் இருக்க அதில் கூசி சிலிர்த்து அவனுள் தான் தொலைந்து போனாள்.
நினைவுகளில் குப்பென முகம் சிவக்கும் உணர்வை அனுபவித்தவள் அவன் புரண்டு படுக்கவும் சட்டென கதவை திறந்துகொண்டு வெளியே வந்துவிட்டாள்.
வீடு முழுவதும் ஒரு சத்தமில்லை. அத்தனை அமைதியில் கொலுசின் ஓசை படாமல் மெல்ல கீழே இறங்கி வந்தாள்.
தலைவலி, தூக்கமின்மை, அயர்வு என அவளை பிடித்து வாட்ட முற்றிலும் ஓய்ந்துபோயிருந்தது அவள் மனதும், உடலும்.
அடுக்களை பக்கம் வர வெளியே போடப்பட்டிருந்த விளக்குகளின் வெளிச்சம் வீட்டினுள்ளும் ஊடுருவி வெளிச்சத்தை பரப்பியிருந்தது.
வந்ததும் அடுப்பை பற்ற வைத்து வெந்நீரை வைத்தவள் டீ தூள் எங்கே என தேடி எடுத்து ப்ளாக் டீயை போட்டுக்கொண்டாள் தனக்கு.
எடுத்து வந்து ஹாலில் அமர்ந்து குடித்தவளுக்கு தன் வீடு சென்று உறங்கி எழுந்து வந்தால் என்ன என்று தோன்றிய நொடி தலையை உலுக்கி தன்னை சமன் செய்தாள்.
“தியா…” என தோளை தொட்டு அழைத்த அபிராமியை எதிர்பார்க்காதவள்,
“அத்தை…” என பதறி எழ கையிலிருந்த டீ சிந்தியது.
“ஹேய் பார்த்துடா. என்னாச்சு?…” என்று அவளை அமர வைத்து தானும் அமர்ந்தார்.
“ஏன் தனியா வந்து உட்கார்ந்திருக்க?…” என்று கேட்கும் பொழுதே அவரின் முகத்தில் ஆராயும் பார்வையும், உள்ளுக்குள் கலக்கமும்.
எதுவும் பிரச்சனையோ? அதனால் இங்கே வந்து அமர்ந்திருக்கிறாளோ? இருவருக்குள்ளும் சண்டையாக இருக்குமோ? என ஒவ்வொன்றாய் அனுமானம் பிறக்க மனதளவில் பயந்துபோனார்.
ஆனால் மருமகளிடம் வார்த்தையில் கூட அதனை காண்பிக்காமல் பொறுமையாகவே கேட்க,
“ஒண்ணுமில்லைத்தை. தூக்கமில்லை. தலை வலிச்சது. டேப்லெட் இல்லை. அதான் டீ போட்டு குடிப்போம்ன்னு வந்தேன்…” என்றதும் தான் நிம்மதியானது அவருக்கு.
“நான் டேப்லெட் எடுத்துட்டு வரேன். இரு…” என்றவர் பாலையும் சேர்த்து காய்ச்சி கொண்டுவர வாசலில் நின்றிருந்தாள் ஆராத்தியா.
பார்வை அவளின் வீட்டின் மொட்டை மாடியை பார்த்தவண்ணம் இருக்க முகத்தில் சொல்லொண்ணா உணர்வு.
ஆராத்தியா நின்ற விதத்தை பார்க்கும் பொழுதே அபிராமிக்கு தொண்டையடைத்தது.
“தியாம்மா டேப்லெட்?…” என்றதும் திரும்பியவள் கலங்கிய கண்களை துடைத்துவிட்டு திரும்பி வாங்கிக்கொண்டாள்.
“பால்…” என நீட்ட,
“ஹ்ம்ம், சரி…” என்றாள்.
மறுக்காமல் வாங்கி குடித்தவளை பார்த்துக்கொண்டிருக்க பாதிக்கு மேல் குடிக்க முடியாமல் வயிற்றை பிரட்டியது.
அதையும் வாய் திறந்து சொல்லாமல் முகமே வாடி இருக்க பார்த்த அபிராமிக்கு இன்னும் கஷ்டமாகி போனது.
“முடியலைன்னா வச்சிடுடா. வெறும் வயித்துல மாத்திரை போட வேண்டாம்ன்னு தான் பால் எடுத்துட்டு வந்தேன்…” என அதனை வாங்கிக்கொண்டவர்,
“கொஞ்ச நேரம் போகட்டும். நானே கூட்டிட்டு போறேன். என்ன?…” என கேட்க,
“தியா இந்நேரம் இங்க என்ன பன்ற?…” என வந்துவிட்டான் திரவியம்.
“என்னப்பா நீயும் எழுந்திட்ட இப்பவே?…” என அபிராமி மணியை பார்க்க நான்கை தொட்டு பத்துநிமிடமாகி இருந்தது.
“தியாவை காணுமேன்னு வந்தேன்ம்மா. நீங்க தூங்கலையா?…” என்று ஆராத்தியாவின் அருகே வந்து நின்றான்.
“தாத்தாவுக்கு டெம்பரேச்சர் செக் பண்ண எழுந்தேன். அதான் தியா இருக்கறதை பார்த்தேன். தூங்காம தலைவலின்னு சொன்னா. அதான் டேப்லெட் குடுத்தேன்…” என்றார்.
“ஓகே, நான் பார்த்துக்கறேன் ம்மா. நீங்க தூங்குங்க…” என்றவன்,
“தியா வா…” என்று நகர பொம்மையாய் அவனுடன் சென்றது பதுமை.
இருவரிடமும் எந்தவித மாற்றமும் இல்லை. எல்லாம் நல்லவிதமாய் நடந்ததா? இல்லை எதுவுமே நடக்கவில்லையா? குழப்பத்தில் மிச்சமிருந்த உறக்கத்தையும் இழந்தவருக்கு இருவரையும் எண்ணி மனது தவிக்க தொடங்கியது.
“அதுக்கு நீ தூங்கனுமே?…” என்றதும் அவள் திடுக்கிட்டு பார்த்தாள்.
“ஹேய் பதறாத…” என்றவன் அவள் திகிலடைந்ததில் இதழ்விரியா புன்னகையுடன்,
“அந்த மீனிங்க்ல சொல்லலை…” என அவளை அணைத்துக்கொண்டவன்,
“நீ தூங்கினா தான் தலைவலி வராதுன்னு சொல்லவந்தேன்…”
“நீங்க தூங்க விடுங்க. தூங்கிருவேன்…” என முணுமுணுக்க,
“கஷ்டம் தான்…” என்றவன்,
“கொஞ்சம் சிரிச்சிட்டே சொல்லு. நல்லாயிருக்கும்….”
“ஹ்ம்ம்…” என்று அவள் மெலிதாய் புன்னகைத்தாள்.
“படுத்துக்கோ…” என சொல்லியவன்,
“இது என் ரூம்ன்னு உனக்கு தூக்கம் வரலையா தியா?…” என்றான்.
“இருக்கலாம்…” என்றவள் கண்ணை மூடி என்னவோ சொல்ல,
“வாட், கம் அகைன்…”
“இல்ல ஒண்ணுல இருந்து நூறுவரை பேக்ல எண்ணிட்டு வந்தா சீக்கிரம் தூக்கம் வரும்ன்னு…” என்று சொல்லியவள் கண்ணை மூடிக்கொண்டாள்.
சிறிது நேரத்திலேயே உறக்கத்தில் தொலைந்தவளின் அருகாமையில் அமர்ந்திருந்தவன் தானும் சரிந்து படுக்க உறக்கத்தில் அவளின் கைகள் தானே அவனின் மீது மாலையாய் விழுந்தது.
அவளின் மென்கரத்தை எடுத்து இதழ்களில் பதித்துக்கொண்ட திரவியம் தானும் உறங்கி போனான்.
அமைதியான கடலென வாழ்க்கையின் ஆரம்பம் இனிதாகவே அவர்களுக்கு அமைந்திருந்தது.
திருமண உறவில், அந்த நாளுக்கான மிளிர்வில் பரஸ்பர உணர்வுகள் பல்சுவையுடன் பரிமாற்றப்பட்டிருந்தாலும் மிச்சமிருக்கும் பகிரப்படாத பிரியங்கள் பசித்து காத்திருந்தது பிரிதொரு நாளுக்காக.