அப்போது தான் சின்ன சின்னதாய் மழைத்துளிகள் விழுந்துகொண்டிருக்க அனைவரும் கோவிலுக்குள் சென்றுவிட்டார்கள்.
“மழை வரதுக்குள்ள பொங்கலை வச்சு முடிச்சாச்சு அண்ணி…” என சீதா அபிராமியிடம் சொல்ல,
“ஆமா, எல்லாமே சரியா நிறைவா நடக்குது சீதா. பிள்ளைங்க வாழ்க்கையும் நல்லபடியா இருக்கும்…” என தெய்வத்தை பார்த்துவிட்டு அபிராமி சொல்ல பெரியவர்களுக்கு நிம்மதியாக இருந்தது.
கனவுடன் இருந்த கடமை ஒன்று நிறைவேறிவிட்டதில் அத்தனை திருப்தி அவர்களுக்கு.
தங்களின் ஆசை நிறைவேறியதில் சந்தோஷமாக இருந்தாலும் உள்ளுக்குள் ஓரிடத்தில் இந்த வாழ்க்கையை அவர்களும் சரியாக வாழவேண்டுமே என்றிருந்தது.
திரவியம் இயல்பு போல ஆராத்தியாவிடம் பேசினாலும் அவளிடமிருந்து எண்ணி எண்ணி தான் வார்த்தைகள் வந்திருந்தது.
வீட்டினரும் அதை கவனிக்கவும் செய்திருக்க போக போக சரியாகிவிடும் என்று நம்பிக்கொண்டிருந்தனர்.
திரவியத்தை தேடி வந்தவள் அந்த எஸ்டேட்டின் இன்னொரு பகுதியில் சத்தம் கேட்க அங்கே வந்தாள்.
திரவியம் யாரோ ஒருவரின் சட்டையை பிடித்து முறைப்புடன் பேசிக்கொண்டு நிற்க வந்தவள் அப்படியே நின்றுவிட்டாள்.
“திரும்ப ராங்கா எதாச்சும் பண்ணின ஊட்டிலையே இருக்கமுடியாது பார்த்துக்கோ…” என சொல்லி அவனின் முதுகில் பொளீரென ஒன்று போட்டு அனுப்பிவிட்டு திரும்ப அதற்குள் திரும்பி போக பார்த்தாள் ஆராத்தியா.
‘இவனையும் இந்த மிரட்டலையும் கொஞ்சமும் மாற்ற முடியாது’ என தோன்ற வேகமாய் அவ்விடம் விட்டு செல்லும் முன்,
“இங்க என்ன பன்ற தியா?…” என்றவன் குரலில் திடுக்கிட்டு திரும்பியவள்,
“அத்தை உங்களை கூட்டிட்டு வர சொன்னாங்க…” என்னும் பொழுதே அங்கிருந்த ஈர மண் லேசாய் வழுக்க முதலில் தடுமாறினாலும் ஊன்றி நின்றுகொண்டாள்.
“ப்ச், இங்கே டேஞ்சர், அம்மா கூப்பிட்டா எனக்கொரு கால் பண்ணமாட்டியா நீ?…” என அதட்டலுடன் அவளுக்கு முன்னால் வந்து கையை கொடுக்க அவன் கையை பிடிக்காமல் மேலேறி திரவியத்தை கடந்து வந்து நின்றாள்.
“சரி, ஒரு முக்கியமான கால். அதான் தள்ளி வந்தேன். கோவில்ல கொட்டு சத்தம். பக்கத்துல நின்னு பேச முடியலை…” என்றவன் அவளுடன் நடக்க அவனுக்கு முந்திக்கொண்டு செல்ல போனாள் ஆராத்தியா.
“ஹேய் நில்லு…” என அவள் கையை பிடித்து நிறுத்தியவன்,
“நீ என்ன போஸ்ட் வுமனா? தகவலை சொல்லிட்டேன்னு ஓடற?…” என கேட்க,
“விடுங்கத்தான், கோவில்ல இருந்து பார்த்தா இங்க தெரியும்….” என தன் கையை விடுவிக்க முயல,
“சோ வாட்? வா…” என்று அவளுடன் நடந்தான்.
வழக்கம் போல யார் அவன், என்ன பிரச்சனை என்று திரவியத்திடம் எதுவும் கேட்கவில்லை ஆராத்தியா.
அவள் கேட்கமாட்டாள் என்று தெரிந்தும் அவள் முகத்தை எதிர்பார்ப்புடன் பார்த்துக்கொண்டே நடந்தான் திரவியம்.
“எல்லாம் ரெடியா? அதுக்குள்ள பொங்கல் வச்சாச்சா?…” என அவளிடம் கேட்க,
“ஹ்ம்ம், ஆகிடுச்சு, பூஜைக்கும் ரெடி….” என்றாள்.
அவ்வளவு தான். ஆனால் திரவியத்திற்கு இப்படியே இவளை விட்டால் சரிவராது என்று தோன்றினாலும், எத்தனை நாளைக்கு இப்படி அவளுக்காக தானே பேசுவது என கொஞ்சம் எரிச்சலும் வரத்தான் செய்தது.
இப்போதும் தன்னிடம் சொல்லிவிட்டு முன்னே செல்ல முயன்றவளின் கையை அவன் தான் வலுக்கட்டாயமாக பிடித்திருந்தான்.
பார்ப்பவர்களுக்கு என்னவோ அவன் தான் அவளை அழைத்துக்கொண்டு வருவதை போலிருக்க சங்கடமாக இருந்தது மற்றவர்கள் பார்வை தங்கள் மீது இவ்விதத்தில் படிவதில்.
“கையை விடுவேன். ஓடாம கூடவே வரனும் நீ…” என்றவன் கோவில் அருகே நெருங்கவும் தானே கையை விட்டுவிட்டு நடந்தான்.
“இதுக்கு நான் சொல்லும் போதே விட்டிருக்கலாம்…” என்ற முணுமுணுப்பில் அவளை திரும்பி பார்த்தான்.
“தியா…” என ஆரம்பிக்கும் பொழுதே அவள் கோவிலுக்குள் நுழைந்துவிட பூஜையும் ஆரம்பமானது அவர்கள் வந்ததும்.
சில சொந்தங்கள் மட்டுமே அவர்களுடன் வந்திருந்தனர் அங்கே குலதெய்வ கோவில் பூஜைக்கு.
திருமணம் முடிந்து நான்காம் நாள் அன்று. பூஜை முடிந்து வீட்டில் விருந்து இருவீட்டினர் சார்பாகவும்.
அன்றே மாப்பிள்ளை வீட்டிலிருந்து பெண் வீட்டிற்கு மறுவீடு செல்லும் சம்பிரதாயமும் இருக்க கோவிலில் இருந்து கிளம்பியதும் மணமக்களை அழைத்துக்கொண்டு பெண்ணின் வீட்டிற்கு வருவதாக முடிவு செய்திருந்தனர்.
எல்லாம் வேகம். திருமண பேச்சு ஆரம்பித்ததும் வேகம், முடிந்ததும் வேகம், வாழ்க்கையை ஆரம்பித்ததும் வேகம், இப்போது அவ்வீட்டின் மற்றவர்களை விட அவர்களுக்கான நாட்களும் வேகமாய் நகர்ந்தது.
பூஜை முடிந்து அங்கே கொடுக்கப்பட மாலையை இருவரும் மாற்றிக்கொள்ள சந்நிதானத்தில் தெய்வத்தின் திருவடியில் விழுந்து வணங்கி எழுந்தனர்.
“கொஞ்ச நேரம் உக்கார்ந்துட்டு புறப்படலாம் தீரா…” என்றார் தயாளன்.
அங்கே அமர்ந்தவர்கள் ஐந்து நிமிடம் போலிருந்துவிட்டு கிளம்பி திரவியத்தின் வீடு வந்து சேர அங்கே அவர்களை அழைத்து செல்ல என்று ஆதவனும் இந்துவும் காத்திருந்தனர்.
“அது எனக்கு தெரியாதா? ரிலேட்டிவ்ஸ் எல்லாம் இருக்காங்கன்னு அவங்களோட இருக்கா. இன்னைக்கு கிளம்பிருவாங்களேன்னு பேசறா…” என திரவியம் சொல்ல,
“சமாளிக்காத. நான் என்ன கேட்கறேன்னு புரியுதா இல்லையா? தியா அண்ணனா இல்லை. உனக்கொரு பிரெண்டா…” என்றதும் திரவியம் முகத்தில் முறுவல் படர்ந்தது.
“என்னடா சாமியார் அருள் பாவிக்கிற மாதிரி சிரிக்கிற?…” என்றதும் சத்தமாய் சிரித்துவிட்டான் திரவியம்.
“பிஸ்கட் வச்சவன் அதை ஒரு பாக்ஸ்ல போட்டு வைக்கனும்னு கூட தோணலை. கரெக்ட்டா நான் கவனிச்சேன். இல்லைன்னா க்ரிஸ்பினஸ் போய் பிஸ்கட் நமுத்து போயிருக்கும். உனக்கேன் இந்த வேண்டாத வேலை?…” என்றான் திரவியம் கிண்டலாக.