“வலி இருக்கத்தான் செய்யும். நீ மருந்து போடு. நீ சொல்லியும் கேட்காம போய் நின்னேன்ல. இட்ஸ் ஓகே…” என்றான் திரவியம்.
மருந்தை மெதுவாய் பூசிவிட்டவள் விரல்கள் காயத்தில் பட்டதும் காற்றை இழுத்து ஊதினாள்.
“எரியும், பொறுத்துக்கோங்க…” என சொல்லி சொல்லியே அவள் மருந்தை போட்டுவிட திரவியம் மனதிற்குள் சாரல் மழை.
“போட்டாச்சு…” என சொல்லிவிட்டு எழுந்தவள் கையை பிடித்து தனக்கு முன் அமர வைத்தவன் அணைத்துக்கொள்ள அசையாமல் இருந்தாள்.
“கொஞ்சம் கட்டிக்கோயேன் தியா…” என ஒரு கையால் அவளின் கையை தனது கழுத்தை சுற்றி போட்டுக்கொண்டவனின் அணைப்பில் கட்டுண்டு இருந்தவள் பார்வை கதவிலும் இருந்தது.
“நிச்சயத்தன்னைக்கு கன்னத்துல சந்தனம் வச்சிருந்தியே? செம ஸ்மெல். நெத்தில இருக்கா?…” என அவள் நெற்றியை நிமிர்த்தியவன் அந்த சந்தனத்தை முகர்ந்து முத்தம் பதித்தான்.
“இன்னும் கொஞ்சம் இட்டுக்கலாம் நீ…” என மீண்டும் அவள் கன்னத்தில் அழுத பதிய,
“வெளில எல்லாரும் இருக்காங்கத்தான். ஒருமாதிரி இருக்கு…” என முணுமுணுத்தாள் காற்றாய் போன குரலில்.
“போகனுமா? சரி போ…” என பட்டென்று விட்டான் தன் அணைப்பை.
சொல்லியதே போதும் என அவன் விட்ட வேகத்தில் வெளியே வந்ததும் தான் தான் கேட்டதில் கோபமாக அனுப்பினானா, இல்லையா என்றே யோசிக்க முடிந்தது.
“சொதப்பிட்டே இருக்கேன்…” என தலையில் அடித்துக்கொள்ள,
“என்ன தியா? என்னாச்சு? ஏன் தலையில அடிச்சிக்கற?…” என ஆளாளுக்கு கேட்க ‘ங்கே’ என்ற பார்வை தான்.
இதுவரை பகலில் அவனுடன் தனியாய் அமர்ந்து கூட பேசவில்லை. இப்போது இத்தனைபேரின் முன்பு எப்படி அறையில் இருக்க என வெளியே வந்திருக்க என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறானோ என்னும் எண்ணம் தான் மனம் முழுவதும்.
மாலை வேறு உடையை மாற்றிக்கொண்டு வந்தவனின் முன்னால், முன்னால் சென்று பார்க்க அவளின் அவஸ்தை கவனித்தாலும் திரவியத்தால் தனியே கூட அழைத்து பேச முடியவில்லை.
நெருங்கிய உறவுகள் கிளம்புகிறோம் என அவனுடன் பேசிக்கொண்டிருக்க கூடவே தயாளன், தென்னரசு என அனைவரும் இருந்தனர்.
இரவு உணவு முடிந்தும் கிளம்பி செல்லவே தாமதமாக அறைக்குள் வந்ததுமே மனைவியை எதிர்பார்த்தான்.
பூமிகாவின் மகன் அழுது ஊரை கூட்ட அவனை சமாதானம் செய்யவென்று மொத்த குடும்பமும் பன்னிரெண்டு மணி வரையிலும் மாற்றி மாற்றி பார்த்துக்கொள்ள ஆராத்தியா வரவே நேரமெடுத்தது.
இருமாதமேயான குழந்தைக்கு உடம்புக்கு எதுவுமோ என வீட்டினரிடம் அத்தனை பதட்டம் வேறு.
ஒவ்வொருவரிடமுமாய் குழந்தை சினுங்கிக்கொண்டிருக்க மாற்றி மாற்றி தூக்கி வைத்து தட்டிகொடுத்து தூங்கவைத்தனர்.
ஒருவழியாய் ஆராத்தியா வந்த பொழுது உறக்கத்தில் திரவியம் இருக்க வந்தவளுக்கு காயம் எப்படி இருக்கிறதோ என்னும் யோசனை தான்.
சட்டையை கழற்றாமல் கூட அவன் படுத்திருக்க மருந்தும் போடாமலிருக்க அப்படியே விடமுடியாமல் யோசனையுடன் நின்றாள் கையில் மருந்துடன்.
“ம்ஹூம், இப்போதைக்கு எழுந்துக்கற மாதிரி இல்லை. நாமலே போட்டுட வேண்டியது தான்…” என்று மெதுவாய் அவனின் உறக்கம் கலைக்காமல் மொபைலில் டார்ச்சை ஆன் செய்தாள்.
கவிழ்ந்து படுத்திருந்தவனின் சட்டையை மெதுவாய் உயர்த்த பாதி கூட சுருளவில்லை சட்டை.
“மருந்து எப்படி போட? மத்ததுக்கெல்லாம் திட்ட தெரியுது? இதுக்கு கூப்பிட்டா என்னவாம்?…” என சத்தமில்லாமல் முனங்கியவளின் கை இழுக்கப்பட்டு பொத்தென விழ,
“ம்மா..” என அலறிவிட்டாள்.
“எதுக்கு கத்தற தியா?…” என மீண்டும் வழக்கம் போல அவனிடமிருந்து அதட்டல்.
“இது நம்ம ரூம் மாதிரி இல்லை. சின்ன சத்தம்னாலும் வெளில வரை கேட்குது. மெதுவா கத்திக்கோ…” என சொல்ல,
“இல்ல நீங்க சடனா இழுத்ததும்…” என்றவள் மூச்சுவாங்க அவனை பார்த்து மருந்தை காண்பித்தாள்.
“பன்னெண்டு மணிக்கு யார் மருந்து போடுவா?…” என்றான் சின்ன சிரிப்புடன்.