“இவ்வளோ சீக்கிரம் போகனுமா? இன்னும் ஒரு ஒரு வாரம் இருந்துட்டு போகலாம் தானே?…” என கேட்க,
“வேலை இருக்கும்மா…” அவ்வளோ தான்.
இத்தனை தூரம் பொறுமையாக பதில் சொல்வதே பெரிது என நினைத்துக்கொண்டார் அவர்.
ஏற்கனவே அத்தனைபேரும் நான்கு நாளில் கிளம்புவதா என அவனை கேட்டிருக்க சற்றே கோபத்தில் தான் இருந்தான் திரவியம்.
“தியா நீ சொல்லவேண்டியது தானே?…” என்றும் சொல்லி பார்த்திருக்க தயாளனுக்காக அவனிடம் பேசி வாங்கி கட்டிக்கொண்டாள்.
“ஒருவாரம் இங்க இருந்து? என்ன பண்ண? பகல்ல நான் சும்மா தான் இருக்கனும்? உனக்கு வீட்டுல இத்தனை பேர் இருந்தா என்னை தெரியாதே?…” என்றிருந்தான் அவளிடம்.
‘இத்தனை வருடங்கள் அப்படித்தானே இருந்தேன்’ என ஆராத்தியா நினைத்தாலும் மனைவி என்று வரும் பொழுது திரவியம் தனக்கென்று அவளை மிகவும் எதிர்பார்த்தான்.
அவன் பேச்சு கோபம் போலில்லை. ஆனால் அத்தனை கோபத்தையும் கண்களில் மட்டுமே காட்டியிருக்க முகத்திலோ, குரலிலோ வெளிப்படவில்லை.
‘ஆக தான் தான் இப்போது இப்படி கிளம்புவதற்கு காரணமோ?’ என அவனின் பேச்சில் கண்டுகொண்டவள் அடுத்து வாயை திறக்கவில்லை.
“அத்தான்கிட்ட கேட்டேன் மாமா, வேலை இருக்காம்…” என்றுவிட்டாள் தயாளனிடம். அவன் மற்றவர்களிடம் சொல்லியதை அப்படியே சொல்லி.
மனதில் சிணுங்கலுக்கு குறைவில்லை. கோவை சென்றால் அவனுடன் மட்டுமே தான் இருக்கவேண்டும்.
அவன் நல்லவிதமாக நடந்துகொண்டாலும் மனதிற்கு என்னவோ புலி குகையில் தான் மாட்டிக்கொண்டதை போல தான் உணர முடிந்தது.
அவள் நினையாமலே தானாகவே அந்த எண்ணம் அவளை சூழ்ந்துகொள்ள அதிலிருந்து வெளிவரும் வழிவகை தான் தெரியவில்லை.
இத்தனைக்கும் அவனுடனே வளர்ந்து, அவன் பார்க்க வளையவந்தவள் தான். ஆனால் அதுவே தான் முரண்டு பிடிக்க செய்தது.
வெளியே மற்றவர்களுக்கு பதில் சொல்லமுடியவில்லை பெரியவர்களால். ஏன் அதற்குள் செல்லவேண்டும் என்ற கேள்விகளில் அபிராமி நொந்துகொண்டார்.
“தாலி பிரிச்சு கோர்த்துட்டு அனுப்பலாம்ன்னு இருந்தேன். இவன் இப்படி பன்றானே? இங்க இருந்தா தியா இன்னும் கொஞ்சம் நல்லா இருப்பான்னு பார்த்தேன்…” அபிராமி சொல்ல,
“இருக்கட்டும் அண்ணி. இங்க கோயம்புத்தூர்ல தானே இருக்காங்க. பண்ணிக்கலாம்…” என சமாதானம் செய்தார் சீதா.
அவருக்கு மகள் மருமகனுடன் ஒன்றாக ஒற்றுமையாக இருந்தால் போதுமென்றிருந்தது.
தாய் அறியாத சூலா என்பதை போல சீதாவினால் மகளை புரிந்துகொள்ள முடிந்தது.
மகள் பகலெல்லாம் அவன் இருக்கும் திசைக்கு கூட செல்லாமல் என்று சொந்தங்களுடன் பேசியபடி நேரத்தை கடத்திக்கொண்டிருக்க எத்தனை முறை அவளுக்கு சொல்வதென முழி பிதுங்கியது அவருக்கு.
மற்றவர்களிடம் சொன்னாலும் அது மகளின் இந்த மனநிலையையும் பாதிக்குமோ என்று யோசித்து அவ்வப்போது எதையாவது கொடுத்து மருமகனை கவனிக்க அனுப்பவும் அவள் சில நேரம் கவனிக்காமலும் இருக்க நொந்து கொண்டார்.
அதனை கொண்டே திரவியம் கிளம்பவேண்டும் என்றதும் அவரும் உடனே எந்தவித மனத்தாங்கலும் இல்லாமல் சரி என்றது.
அங்கே சென்றால் அவர்கள் இருவர் மட்டும் தான். திரவியம் மகளை பார்த்துக்கொள்வான் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
இருவரை மட்டும் தனித்துவிட்டால் அவர்களுக்கான புரிதல் இன்னுமே கூடும் என்று இதற்கு முழுதாய் சம்மதித்திருந்தார் சீதா.
அபிராமியிடம் கூறினால் வருந்துவாரோ என அங்கேயும் சொல்லாமல் சமாளித்தார் சீதா.
யார் எத்தனை தான் சொன்னாலும் அபிராமி முகம் வாட்டத்துடனே தான் இருந்தது.
அதனை அறிந்தும் திரவியம் பெரிதுபடுத்தவில்லை. கவனிக்காததை போல இருந்துகொண்டான்.
“கொஞ்சம் இங்கயும் பாரேன் தீரா…” ஆதவன் சொல்ல,
“போய் சில வேலைகளை முடிக்கனும். புதுசா ரெண்டு அதர் ஸ்டேட் ஆடர்க்கு காண்டேக்ட் பண்ணிருந்தேன். அதையும் பார்க்கனும்….” என்ற திரவியம்,
“இவங்க சொல்ற மாதிரி பதினைஞ்சு நாள் இங்க இருந்தா ஹனிமூன் யார் போக?…” என கேட்க ஆதவனுக்கு நெஞ்சு வலிக்காத குறை தான்.
“சத்தியமா நீயாடா தீரா? இங்க எல்லாம் நீ ரொம்ப அமைதி, ரஃப் அப்படின்னு வதந்தியை கிளப்பி விட்டிருக்காங்க ஊட்டி முழுக்க. இதுல எங்கண்ணனுக்கு வார்த்தைக்கும், வாய்க்கும் வாய்க்கா தகராறுன்னு பெருமை பேசறா பூமி…” என்று புலம்ப திரவியம் முகத்தில் அடக்கப்பட்ட சிரிப்பு.
“சிரிக்காதடா. வெளில இருந்தெல்லாம் ஹனிமூனுக்கு இங்க வராங்க அப்படி இப்படின்னு சொல்லி எங்களை ஏமாத்தியே வளர்த்து ஹனிமூன் ஸ்பாட்ல இருந்துட்டு எதுக்கு தனியா ஹனிமூன்னு சொல்லி எங்களை பாழாக்கிட்டாங்கடா…”
“ஏன் ஆதி, அதான் வருஷத்துக்கு ரெண்டு ட்ரிப் அடிக்கறீங்க தானே எல்லாரும்?…”
“என்னது? அந்த ரெண்டு குடும்பமும் சேர்ந்து பெரிய பஸ் புடிக்காத குறையா போய்ட்டு அந்த ஊர்ல இருக்கற சொந்தங்களையும் ஒரு எட்டு பார்த்துட்டு வரதுக்கு பேர் உனக்கு ஹனிமூனா?…” என பல்லை கடித்தவன்,
“ஆனா என் தங்கச்சி பாவம்டா. வீட்டுக்குள்ளயே உன் திசைக்கொரு கும்பிடுன்னு ஓடறா. உனக்கு பாவப்படவா, அவளுக்கு பாவப்படவான்னு இருந்த என்னை போய் இப்ப எனக்கே பாவப்பட்ட வச்சிட்ட…” என்று சொல்ல,
“சரி சரி. கண்ணை துடைச்சுக்கோ…” என்றதும் நிஜமாவே கண்ணீர் வந்துவிட்டதோ என தொட்டு பார்த்த ஆதவன்,
“நீயெல்லாம் மனுஷனே இல்ல தெரியுமா?…” என்று சொல்ல,
“அண்ணா, என்ன இது வீட்டு மாப்பிள்ளையை போய்…” என வந்துவிட்டான் ரகு.
இங்கே ஆதவனும், ரகுவும் மரியாதை பற்றி பேசிக்கொண்டிருக்க திரவியம் உள்ளிருந்து ஹேன்ட் பேக்குடன் வந்த ஆராத்தியாவின் கையை பார்க்க அவளின் ப்ளைண்ட் மாஸ்க்.
அவன் விழிகள் அவளிடம் சரிந்திருக்க லேசாய் சுவற்றில் சாய்ந்து நின்றவன் பார்வை அவளிடம் மட்டுமே நிலைத்திருந்தது.
புடவையின் மடிப்பை தூக்கி விட்டபடி இன்னொரு கையால் நீவி விட்டுக்கொண்டே நிமிர திரவியம் தென்பட்டான்.
பார்த்ததும் அவன் புருவங்கள் உயர்ந்து என்னவென்பதை போல அவளிடம் கேட்க,
“ஒண்ணுமில்லைத்தான்…” என்றாள் வாய்மொழியாகவே.
“என்ன தியா ரெடியா?…” என இந்துவும் வந்துவிட,
“முடிஞ்சது அண்ணி. இந்த சில்க் காட்டன் தான் கீழே மடிப்பு நிக்கவே மாட்டுது…” என சொல்ல,
“பேசாம சுடிதார் போட்டிருக்கலாம் நீ. ட்ராவல்க்கு அது தான் பெஸ்ட்….”
“அம்மா கேட்கலையே அண்ணி. தனி குடித்தனம், அங்க கல்யாணம் முடிஞ்சு முதல் தடவையா போற. புடவை கட்டுன்னுட்டாங்க…”
“சரித்தான். அதுவும்…” என இந்து மேலும் பேசும் முன்,
“இன்னும் என்ன பேசிட்டே நிக்கறீங்க? இப்ப போனா தான் நல்ல நேரத்துக்கு ஊருக்கு போய் வீட்டுக்கு போனதும் விளக்கேத்த சரியா இருக்கும்…” என்றார் சீதா.
“சரி இன்னும் நின்னா எதாச்சும் சொல்லுவாங்க. வா வா…” என்றாள் ஆராத்தியாவுடன்.
“நாங்க போன வேகத்துல வேற ரிட்டர்ன் வரனும். உன் கூட ரெண்டுநாள் இருக்கலாம்ன்னா இங்க வேலையை யாரா பார்க்கன்னுறாங்க…” என்றபடி அனுவை தூக்கிக்கொண்டு சென்ற இந்து,