அதற்கு மேல் திரவியத்தை கவனிக்கவேண்டும் என்ற எண்ணமும் எழுந்ததில்லை ஆராத்தியாவிற்கு.
வேறு யோசிக்க, கவனிக்க மெனக்கெட்டதில்லை. அதைவிட அவனை தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டவும் இல்லை.
இவனது விஷயங்கள் தனக்கெதற்கு என்பதை போல தான் கடந்து சென்றுவிடுபவள்.
புக் ஷெல்ப் அருகில் அத்தனை பாடல்களின் தொகுப்பு சிறிய ஷெல்ப் போல இருந்ததில் பார்த்தாள்.
தன்னையும், பூமிகாவையும் அழைக்க செல்ல வருகையில் எப்போதும் அவனின் காதில் ப்ளூடூத் இருக்கும்.
அது மட்டுமே பெரிதாய் தெரிந்தது. அவனின் மற்ற சில பொதுப்படையான விஷயங்கள், உணவு பழக்கவழக்கங்கள் என வீட்டில் சீதாவினால் தெரிந்துகொண்டது.
இப்படி ஒவ்வொன்றாய் பார்த்து வந்தவள் மனதில் அவனுக்கு வேறு என்ன பிடிக்கும் என எண்ண ஆரம்பித்திருந்தாள்.
கொண்டுவந்த பேக், ட்ராலி எல்லாம் அப்படியே இருக்க அவனின் அறையை ஆராய்வதில் தொலைந்து போனாள் பெண்.
அவனின் வாட்ரோபை திறந்து பார்க்க, வேறு என்ன உள்ளது என்று ஒவ்வொன்றும் பார்க்கவே நேரம் கடந்தது.
அவன் அணியும் வாசனை திரவியத்திலிருந்து, சூயிங்கம் வரை எல்லாம் இருந்தது அங்கே.
மீண்டும் புத்தக அலமாரிக்கு வந்தாள். அரசியலில் இருந்து ஆங்கில புத்தகங்கள், வணிகம், பொருளாதாரம், குடும்ப நாவல், காமிக்ஸ் வரை எல்லா வகையான புத்தகங்களும் அவனிடத்தில் இருந்தது.
இவனுக்குள் இத்தனை ரசனையா என ஆச்சர்யம் மேலிட அவற்றை பார்த்தவள் ஒரு புத்தகத்தை எடுத்து மேலோட்டமாக வாசிக்க ஆரம்பித்தாள்.
அருகிருந்த திவானில் வந்து சாய்ந்து அமர்ந்தவள் அதனை படிக்க படிக்க சிறிது நேரத்தில் உறக்கம் கண்களை தழுவியது.
புத்தகத்தை வைத்துக்கொண்டே கண்ணை மூடியவள் அங்கேயே கால்களை மடக்கி சுருண்டு படுத்தபடி உறங்கிவிட திரவியம் வருகையில் அயர்ந்த உறக்கத்தில் ஆராத்தியா.
கதவை திறந்து பூட்டும் சத்தத்தில் கூட அவள் எழும்பாதிருக்க இளம் முறுவலுடன் அவளருகே வந்து புத்தகத்தை உருவி அதனிடத்தில் வைத்தான்.
“புக்ஸ் படிக்கிற பழக்கமெலாம் இருக்குதா உனக்கு?…” என அவனாக கேட்டுக்கொண்டே இரவு உடை எடுக்க போக அலாரம் அடித்ததை போல அவனின் பேச்சு சத்தத்திற்கே எழுந்தமர்ந்தாள்.
“வந்துட்டீங்களா?…” என கண்ணை துடைத்துவிட்டு கேட்க,
“உனக்கு அலாரமே வேண்டாம் போல. என் வாய்ஸ் போதும். சட்டுன்னு எழுந்துட்ட?…” என சாதாரணம் போல சொன்னாலும் தான் பதறி எழுந்ததில் அவன் கடுப்பாகிவிட்டான் என புரிந்துபோனது.
“அப்ப இதுவரை ஜீப் ட்ராவல்ல பிளைன்ட் மாஸ்க் போட்டு சும்மா தூங்கற மாதிரி ஏமாத்தியிருக்க? அப்படித்தானே?…” என்றதும் திருதிருவென விழித்தாள் அவள்.
பிடிபட்ட பாவனையில் அவள் நின்றிருந்த விதத்தில் மீண்டும் முகத்தில் புன்னகை அரும்பியது திரவியத்திற்கு.
“ஏன் இன்னும் உன் திங்க்ஸ் அப்படியே இருக்கு. எடுத்து வைக்கலையா தியா?…” என்று கேட்டவன்,
“ரெப்ரஷ் பண்ணிட்டு வரேன்…” என சொல்லி வாஷ்ரூம் சென்றுவிட்டான்.
“எல்லாத்துக்கும் கேள்வி, ஒன்னொன்னும் அதட்டிட்டே இருந்தா பதறாம?…” என புலம்பியவள்,
“இதுல ட்ரெஸ் எடுத்து வைக்கலையாம்…” என முனுமுனுத்துக்கொண்டே தானும் இன்னும் புடவை மாற்றாமல் இருக்க தனக்கும் உடை எடுக்க பெட்டியை திறந்தாள்.
அதற்குள் திரவியம் வந்துவிட ஒன்றும் பேசாம உடை எடுத்து மாற்ற சென்றவள் கையை பிடித்தவன்,
“சாப்பிட்டியா தியா?…”
“கோவில்ல இருந்து வந்ததுமே சாப்பிட்டேனே த்தான்…”
“வாவ், குட்…” என்றவன்,
“ஆனா நான் இன்னும் சாப்பிடலை…” ‘என்னை நீ கேட்கவில்லை’ என்ற தொனியில்.
“நான் போய் எடுத்துட்டு வரேன்…” என சொல்லி கையிலிருக்கும் உடையை இருக்கையில் போட்டுவிட்டு நகர,
“அட நில்லும்மா…” என மீண்டும் பிடித்து தூக்கிக்கொண்டான் திரவியம்.
“பார்க்க தான் கொஞ்சம் புஸ்ஸுன்னு இருக்க. ஆனா தூக்கினா காத்துமாதிரி இருக்கியே?…” என்று கூற,
“அத்தான், சாப்பாடு…” அவனின் கையிலிருந்து இறங்குவதில் தான் அவளின் கவனம்.
“அதெல்லாம் அப்பவே முடிஞ்சிருச்சு. நான் டைம்க்கு சாப்பிடுடுவேன். தெரியாதா?…” என கேட்க,
“ஹ்ம்ம், ம்ஹூம்…” என்றாள் தலையசைத்து.
“இட்ஸ் ஓகே. இனி தெரிஞ்சுக்குவ நீ…” என்றவன் அப்படியே திவானில் அவளுடன் அமர,
“தூங்கலையா நீங்க?…” என்றாள்.
“ம்ஹூம், சரி என்ன புக் படிச்ச? ஃபுல்லா படிச்சியா?…” என கேட்க ஆரம்பிக்க இதென்னடா என்றானது ஆராத்தியாவிற்கு.
புத்தகத்தை பற்றி அவன் பேச பேச மீண்டும் தூக்கம் கண்களை சுழற்ற அவனின் வாயை கைவைத்து மூடிவிட்டாள் பொறுக்கமாட்டாமல்.
“அத்தான் சத்தியமா தூக்கம் வருது. படிச்சேன் தான். இவ்வளோ ஆழமா இல்லை. இன்னொருநாள் படிச்சு நீங்க கேட்கறதுக்கு பதில் சொல்றேன்…” என அவளாகவே படபடவென்று சொல்ல,
“இதென்ன பரீட்சையா நான் கேள்வி கேட்டு நீ பதில் சொல்ல? அதெல்லாம் அனுபவிச்சு படிக்கனும்…”
“அப்போ இப்ப படிக்கவா?…” வேண்டுமென்றே கேட்டவள்,
“புக் எடுக்கறேன்…” என எழுந்துகொள்ள போக,
“இதுதான் நீ. நிஜமான தியா….” என்ற திரவியம் முகத்தில் மென்மை.
“இப்ப புக் படிக்கிற நேரமா தியா?…” என்று அவளை தன்னோடு அணைத்துக்கொள்ள அவன் கைகளுக்குள் சுருண்டுகொண்டாள் ஆராத்தியா.
அவளிடமிருந்தும் பெற்றுக்கொள்ளும் வேகம் ஆர்ப்பரித்து அவனை அடித்து சென்றாலும் மிக பொறுமையாகவே அவளை கையாண்டான் திரவியம்.
இன்னும் முழுதாய் மனம் திறக்காமல் தன்னுடன் திருமண பந்தத்தில் இணைந்துகொண்டவளுக்கான நேரங்களை இன்னும் நீட்டித்துக்கொண்டே செல்லும் ஆசை தான்.
இந்த தியாவையும் அவனுக்கு அத்தனை பிடித்தது. தன் கண் பார்வையில் இருந்து தப்பிக்கவென அவள் செய்யும் சேட்டைகளை எல்லாம் கவனித்தாலும் உள்ளுக்குள் பொங்கும் அன்புடன் புன்னகைத்துகொள்வான்.
‘எவ்வளோ நாள் பண்ணுவன்னு பார்க்கறேன்’ என நினைத்தாலும் அதுவும் பிடிக்கத்தான் செய்தது.
மெல்ல தன் பிடியை தளர்த்தவும் எழுந்துகொள்ள முயன்றவள் இதழ்களில் தன் கன்னத்தை பதித்தவன்,
“இப்ப போ…” என்று விடுவித்தான்.
தானாக தரவில்லை. அவனாக எடுத்துக்கொள்ள அவன் முகம் காணாமல் குளியலறை சென்றவளின் மனதிற்குள் குறுகுறுப்பு.
தன் அதரங்களை தொட்டுக்கொண்டவள் மனமெல்லாம் வெட்க தூறல் தூவ மெல்லிய புன்னகையுடன் மீண்டும் வந்து படுத்துவிட்டாள் ஆராத்தியா.
“ட்ரெஸ் எடுத்து வைக்கலையா?…” என்றவன் குரலில் மீண்டும் எழுந்துகொண்டவள்,
“நாளைக்கு பன்றேனே?…” என்றாள்.
“நாளைக்கு நான் முக்கியமான வேலையா கிளம்பிருவேன். நீ தனியா பண்ணனும் தியா…” என்றதும் ஆராத்தியா யோசித்தாள்.
“நானும் ஹெல்ப் பன்றேன். அரைமணி நேரம் தான் ஆகும். இன்னைக்கே முடிச்சிடுவோம். வா…” என்று அழைத்துக்கொண்டவன் அவளின் உடைகளை எடுத்து அடுக்க உதவினான்.
அடுத்த மூன்று நாட்கள் சென்ற வேகம் தெரியவில்லை. பகலில் திரவியம் வீட்டில் இருப்பதில்லை.
இரவு முடிந்தளவு இரவு உணவிற்கு முன்பே வந்துவிடுவதை தவறவிடவில்லை அவன்.
அபிராமி அத்தனை முறை சொல்லிவிட்டார். ஆராத்தியா தனியாக இருப்பாள் சீக்கிரம் வந்துவிட வேண்டும் என்று.
குடும்பத்தினர் ஊட்டிக்கு கிளம்பிவிட அன்றிரவே ஆராத்தியாவுடன் தேனிலவு கிளம்பிவிட்டான் மகிழ்திரவியம்.