கர்நாடகாவின் சிக்மகளூர் மலைப்பகுதி சாலை முழுவதும் மழைநீர் ஆறென ஓடிக்கொண்டிருக்க தனது ஜீப்பை நிதானமாக அதில் செலுத்திக்கொண்டிருந்தான் திரவியம்.
முல்லயாநகரி மலைத்தொடர் அடிவாரத்தில் அமைந்துள்ள சிக்மகளூர் சிறந்த மலைவாழிடம்.
காபி அதிகளவில் உற்பத்தி செய்யப்படும் அப்பகுதியின் சீதோஷண நிலை இப்போது அதிகளவில் மழையை கொண்டிருந்தது.
“தியா அங்க பார்…” என ஜீப்பின் வேகத்தை குறைத்த திரவியம் சுட்டி காண்பித்த இடத்தில் மெல்லிய நீரோடை.
ஆனால் பெய்த மழையின் காரணமாய் வெள்ளம் போல காட்சியளிக்க அழகாய் தோன்றுவதற்கு பதில் ஆபத்தாய் தான் தோன்றியது.
“மழை ரொம்ப அதிகமா இருக்குத்தான். இப்படி நிக்க வேண்டாம். கிளம்பலாம்…” என சொல்ல,
“ஹனிமூனுக்கு சூட்டான சுட்சுவேஷன் தான். என்ஜாய் பண்ணு…” என சிரிப்புடன் கூறியவன் மீண்டும் ஜீப்பை வேகப்படுத்த மெதுவாய் அவனின் இடது கையை பற்றிக்கொண்டாள் ஆராத்தியா.
குறுஞ்சிரிப்புடன் பார்த்தவன் ஜீப்பின் வேகத்தை மீண்டும் கூட்ட இன்னும் அவனை நெருங்கியவள் தலையை தோளில் சாய்த்து,
“ப்ளீஸ், ப்ளீஸ் அத்தான் பழைய வேகத்திலயே போங்க…” என கெஞ்ச,
“வேகம் போக போக தான் பக்கம் வர நீ. திரும்ப ஸ்லோவானா தூரம் போவியே?…” என்றதும் கடுப்பானவள்,
“அதுக்குன்னு உங்க மடில உட்காரவா நான்?…” என்று கேட்டேவிட சட்டென ஜீப்பை நிறுத்திவிட்டு அவளை பார்த்தான்.
“அச்சோ போச்சு…” என வாயை கைகொண்டு மூடியவள்,
“வேணும்னு பேசலை…” என்றாள் இன்னொரு கையை உதறி.
“பேசிட்டு வேணும்னு பேசலையாம். எவ்வளோ நாள் இப்படி நேர்ல நேரடியா பேசனும்னு நினைச்சிட்டிருந்த?…” என அதட்டல் போல கேட்க,
“ஜீப்பை எடுங்கத்தான். இந்த பாதையே ஒருமாதிரி இருக்கு. எப்ப என்ன உருளுமோன்னு…” என வெளியே எட்டி பார்த்துவிட்டு அவன் புறம் பார்க்க மழைநீர் திவலைகள் ஆராத்தியா முகத்தில்.
“இட்ஸ் லைக் பெய்ண்டிங் தியா….” என்றவன் அவளின் முகத்தில் படிந்திருந்த நீரை தன் விரலால் கோலமிட்டான்.
“அச்சோ அத்தான்…” என மீண்டும் அவள் முகத்தை அவனின் தோளில் சாய்க்க,
“ஓகே, ஓகே. இன்னும் ஒன் ஹவர் தான். போய்டலாம்…” என சொல்லி ஜீப்பை கிளப்பினான்.
“கொஞ்சம் நல்லா உக்கார்ந்துக்கட்டுமா? ஒருமாதிரி சாய்ஞ்சிட்டு பெய்னா இருக்கு…” என விழியை மட்டும் உயர்த்தி கேட்க அவளின் உச்சந்தலையில் இதழ் பதித்தவன்,
“உட்கார்ந்துக்கோ…” என சொல்லிவிட்டு சாலையில் கவனம் செலுத்தினான்.
கிளம்பும் பொழுதே சிக்மகளூரின் தட்பவெப்பநிலையை பார்த்துவிட்டு தான் கிளம்பினான் மகிழ்திரவியம்.
தேனிலவு சென்ற மாதிரியும் இருக்கவேண்டும். அதே நேரம் ஆராத்தியாவுடனான மனதளவிலான நெருக்கம் இன்னும் அதிகமாக வேண்டும் என நினைத்தபடி தான் திட்டமிட்டிருந்தான்.
அதன்படியே வீட்டிலிருந்த சொந்தங்கள் ஊட்டி கிளம்பியதும் அன்று நள்ளிரவில் கோவையிலிருந்து கிளம்பியவர்கள் மைசூர் வழியே சிக்மகளூர் வந்திருந்தனர்.
முதல்முறை அவனுடனான இத்தனை தூரம் தனி பயணம். எப்போதும் இரு குடும்பங்களும் எங்காவது கிளம்புவதாக இருந்தாலும் பெரும்பாலும் திரவியம் அதில் இருந்ததில்லை.
படிப்பு, கல்லூரி என அவனின் கவனம் அதிலிருக்க குடும்பத்துடன் சேர்ந்து சென்றதில்லை. சென்றால் ஆதவனுடன் சேர்ந்துகொள்வான்.
ஆதவனும், திரவியமும் நிறைய இடங்களை தனியே தான் பார்த்திருந்தனர். இப்போது மனைவியாக அவனுடன் ஆராத்தியா.
அவன் முகம் பார்த்து பேச ஆரம்பித்திருந்தாள். கேட்காமலே பதில் சொல்ல என்று இருந்தாலும் இன்னும் அவளுக்கான அந்த கூட்டைவிட்டு வரவில்லை.
இலகுவாய் சட்டென தாண்டிவர முடியாமல் பெரும் தடுமாற்றம் அவளை அலைகழித்தது என்னவோ உண்மை.
தன்னுடைய இயல்பில் இல்லாமலும், திரவியத்துடனான அருகாமையில் இயல்பாக இருக்க நினைத்தாலும் ஒரு ஒதுக்கம் தன்னைப்போல வந்து ஒட்டிக்கொள்ளத்தான் செய்தது.
மனதிற்குள் பெரும் பயம். இப்படியே தான் இருந்தால் எதிர்காலத்தில் அவனுக்கு தன்னை பிடிக்காமல் போய்விடுமோ என்றளவில் நினைக்கவே ஆரம்பித்திருந்தாள்.
அவ்வப்போது அவன் காட்டும் சிடுசிடுப்பும், கோபமும் தன்னுடைய ஒதுக்கத்தினால் என்பதை உணர்ந்தவளுக்கு அவனிடம் அதனை உடைத்துவிட்டு வெளிவர வழிவகை தான் தெரியவில்லை.
சட்டென்ற அந்த அச்சம் இப்போதும் நெஞ்சிலேறிக்கொள்ள அதனைகொண்டே திரவியத்தை திரும்பி பார்த்தவள் விழிகள் லேசாய் கலங்கி இருந்தது.
முன்பிருந்த தன்னுடைய துள்ளலும், சிரிப்பும், பேச்சும் எங்கே என அவளே தேடவேண்டியதாக இருக்க தொண்டையில் என்னவோ அடைக்கும் உணர்வு.
“ஹேய் என்ன இது? இங்க அவ்வளோ பயமெல்லாம் இல்லை. மழை பெய்யறப்போ ஹில்ஸ்ல ட்ரைவ் பன்றது என்ன பெரிய விஷயமா? அதுவும் நம்ம நேட்டிவே ஹில்ஸ் ஸ்டேஷன். என்ன நீ குழந்தையா?…” என்றான் அவளின் தலையை பிடித்து லேசாய் ஆட்டியபடி.
இன்னும் ஒன்றும் பேசாமல் அவன் முகத்தை தான் பார்த்துக்கொண்டே வந்தாள் ஆராத்தியா.
இத்தனை வருடங்கள் அவனை நல்லவிதமாய் கவனிக்க தவறி இருந்தோமோ என எண்ணாமல் இருக்கமுடியவில்லை அவளால்.
அவளறிந்தவரை ட்ரைவிங் நேரம் பேசுவது அவனுக்கு அறவே பிடிக்காது. கவனம் சிதறும் என தன் அண்ணன்களுக்கே பாடம் எடுப்பவன்.
இத்தனை நாட்களில் அவளுடன் வெளியே வரும் பொழுது மட்டுமல்ல இங்கே கிளம்பியதிலிருந்து ஒவ்வொரு இடத்தையும் அவளுக்கு சுட்டி காட்டினான்.
தான் அங்கே வந்திருந்தது என சில விஷயங்களையும் அவளுக்கு கதையாக சொல்லியிருந்தான்.
அவளுக்கான சௌகரியங்கள், உணவுகள் என ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து கவனித்தான்.
முன்புமே இவை எல்லாம் அவன் செய்திருக்கிறான். அப்போதெல்லாம் உண்டாகும் எரிச்சல் இப்போது எழவே இல்லை.
உள்ளுக்குள் பிடித்திருந்தது. உணர்ந்தாலும் சட்டென அதனை வெளிப்படுத்த தான் முடியவில்லை.
அத்தனை வருடங்களாய் அவள் மனதிற்குள் முள்ளாய் வளர்த்திருந்த உருவகத்தின் ஆழம் அதனை அனுமதிக்கவில்லை.
சிறுபிள்ளைத்தனமான கோபமும், பிடிவாதமும் தன்னை எங்கே கொண்டுவந்து நிறுத்தியுள்ளது என நினைத்தபடி வந்துகொண்டிருந்தாள்.