“ஈஸிடா தியா…” என்றவன் அரவணைப்பில் இன்னுமே அவனின் பக்கம் அவளின் மனம் சாய்ந்தது அந்த மழை வேளையில்.
மனதின் நெருக்கங்கள் இன்னும் சற்று முன்னேற்ற பாதைக்கு செல்ல திரவியம், ஆராத்தியாவின் பேச்சுக்கள் இன்னும் இலகுவாய் வந்தது.
மூன்று நாட்கள் சிக்மகளூரிலும், அடுத்த மூன்றுநாட்கள் தான்தேலி பகுதிக்கும் என திட்டமிட்டிருந்தான் திரவியம்.
ஆனால் மழையின் தீவிரம் காரணமாக வெளியிலேயே செல்ல முடியாமல் சிக்மகளூரிலேயே கழிக்கவேண்டியதாகி இருந்தது.
வீட்டிலிருந்து அத்தனை அழைப்புகள் வேறு. மழை நேரம், பாதுகாப்பான இடமா என கேட்டு அவர்களை கவனித்துக்கொண்டார்கள்.
மழை குறைந்ததும் கிளம்பி கோவைக்கு தான் வந்து சேர்ந்தார்கள் திரவியமும், ஆராத்தியாவும்.
“இங்கருந்து தான்தேலி ஏழு மணி நேரம் தான். ஃபுல்லா வாட்டர் ஆக்ட்டிவிட்டீஸ் அன்ட் பால்ஸ் தான். நல்ல பிளேஸ். பட் மழைன்றதால அங்கயும் நம்மால என்ஜாய் பண்ண முடியாது. இப்படி ரூம்ல தான் இருக்கனும்…” என சொல்லியவன்,
“கண்டிப்பா இன்னொரு டைம் அங்க போகலாம்…” என்றான் ஆராத்தியாவிடம்.
“ஏற்கனவே போயிருக்கீங்களாத்தான்?…” என்றவளுக்கு,
“ஹ்ம்ம், மெனி டைம்ஸ். உன் அண்ணனோட…” என சிரித்தவன்,
“உன்னோட ஒரு அட்வெஞ்சர்க்கு ப்ளான் பண்ணினா மழை. பட் இந்த ட்ரிப் ஐ லவ்ட் இட்…” என கண் சிமிட்டி புன்னகைத்தான்.
திரவியத்தின் அந்த சிரிப்பு அவளிடமும் ஒட்டிக்கொள்ள தானும் புன்னகைத்தாள் ஆராத்தியா.
அவள் சொல்லாமலே தன்னிடம் அவளின் பிடித்தங்கள் என்னவென்று திரவியம் ஒவ்வொன்றாய் கவனித்துக்கொண்டே தான் இருந்தான்.
அவளாக எதார்த்தமாக நெருங்கும் சமயங்களில் அதனை சுட்டிக்காட்டாமல் அப்படியே அள்ளிக்கொள்வான்.
கோவை வந்ததுமே இயல்பு வாழ்க்கை திரும்பியிருந்தது திரவியத்திற்கு. ஆனால் ஆராத்தியா தான் அடுத்து என்ன என செய்வதறியாது திகைத்தாள்.
இரு நாட்கள் அவளை வீட்டில் ஓய்வெடுக்க விட்டிருந்தவன் மூன்றாம் நாளே ஸ்டோருக்கு அழைத்துவிட்டான்.
“நான் எதுக்கு ஸ்டோருக்கு?…”
“அதான் காலேஜ் போகலையே இந்த வருஷம். இங்க இருந்து நீயும் வாட்ச்மேனுக்கு துணையா செடிகளுக்கு பதியம் போட போறியா?…” என்றுவிட்டான்.
அந்த பண்ணை வீட்டில் வேலை செய்யும் காவலாளியும், அவர் மனைவியும் சேர்ந்து அந்த தோட்டங்களை பராமரிப்பதுடன் பூச்செடி, மர கன்றுகளை பதியமிட்டு வியாபாரமும் செய்து வருகின்றனர்.
காவல் காப்பதுடன் இந்த செயல்களுக்கான சம்பாதனையை அவர்களையே வைத்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டான் திரவியம்.
காவல் காக்கும் சம்பளமும், அவர் மனைவி வீட்டை பராமரிப்பதற்கான ஊதியத்துடன் அவர்களுக்கு அது கைத்தொழிலுமாகிற்று.
வெளியிலிருந்து அங்கே செடிகள் வாங்கிச்செல்ல அத்தனை பேர் வந்துசெல்வார்கள்.
அந்த வீட்டில் கேட்டின் அருகே முன்னடியில் சிறு பந்தல் போலமைத்து அதனை வியாபாரம் செய்து வருகின்றனர்.
அதனை சொல்லி திரவியம் கிண்டலாக கேட்கவும் ஆராத்தியா முகம் கூம்பிவிட்டது.
“என்னவாம்? மூஞ்சி சுருங்கிருச்சு?…” என்றவனிடம்,
“நான் ஸ்டோருக்கு வந்து என்ன பன்றது?…” என்றவளை முறைத்தவன்,
வரும் வழியில் ஒரு கல்லூரியை தாண்டி ஜீப் செல்ல அதனை பார்த்துவிட்டு இன்னும் முறைப்புடன் முகத்தை உர்ரென வைத்துக்கொண்டான்.
கோபத்தில் இருக்கிறான், அவனாகவே பேசட்டும் என ஆராத்தியா அமைதிகாக்க,
“உன்கிட்ட இது மட்டும் மாறவே செய்யாது இல்லையா தியா?…” என்றான்.
“என்னத்தான்? நான் என்ன பண்ணேன்?…”
“எனக்கு ஏன் கோபம்ன்னு தெரியுது. ஆனா கேட்டுட கூடாது. மத்தது எல்லாம் பேசற தானே? இப்ப பேசறதுக்கு என்னவாம்?…” என பல்லை கடித்துக்கொண்டு பேசினான்.
சொல்லியதை கேட்காதது கூட பொறுத்துக்கொள்பவன் தன்னிடம் எதற்கும் கேள்வி கேட்காமல் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்க வழக்கம் போல கோபம் உச்சத்திற்கு தான் சென்றது.
இதுவல்லவே ஆராத்தியா. அவளை அவனை விட வேறு யார் அத்தனை கவனித்திருக்க முடியும்?
தன்னிடம் அத்தனை பேசி, கேள்வி கேட்கவேண்டும் என அவன் எதிர்பார்க்க அவளால் செய்யமுடியாத நிலையில் நிதானம் தவறினான்.
அவள் மௌனமாக வெளியே வேடிக்கை பார்க்க பல்லை கடித்து வார்த்தைகளை குறைத்து ஸ்டோர் வரை பேசவில்லை.
உள்ளே அழைத்து சென்றவன் மீண்டும் இயல்பாகிவிடுவான் என்று பார்க்க அவள் மீதான கோபம் போய் இப்போது வேலையிடத்தில் உருமாறியது.
அங்கே சென்று ஒருமணி நேரம் ஒவ்வொருவரையும் வாட்டி வதைத்துவிட்டு தான் தன்னிருக்கைக்கே வந்தான்.
அந்த அறையில் இன்னொரு டேபிளும் சேரும் கூட இருக்க அது யாருக்கோ என நினைத்துக்கொண்டே திரவியம் எதிரே அமர்ந்தாள் ஆராத்தியா.
“இனிமே டெய்லி என்னோட ஸ்டோருக்கு வர. எல்லா அக்கவுண்ட்ஸ்ல இருந்து, பிஸ்னஸ் டீலிங் வரை நோட்ஸ் எடுத்துக்கோ. மொத்தமா இன்னைக்கே இல்லை. கொஞ்சம் கொஞ்சமா பாரு…”
“ஹ்ம்ம்…”
“நெக்ஸ்ட் இயர் நீ எம்.பி.ஏ பன்ற…” என்றதும் திகைப்புடன் அவள் பார்க்க,
“உங்கம்மா சொன்னா எல்லாத்துக்கும் தலையாட்டாத தியா. அவங்க இந்த வருஷம் தான் வேண்டாம்ன்னு சொன்னாங்க. நெக்ஸ்ட் இயர் நீ போற. அவ்வளோ தான்…” என்றவன்,
“அது உனக்கான டேபிள் தான். உன்னோட லேப்டாப் கொண்டுவந்து வச்சுக்கோ….” என்று சொல்ல தலையசைப்பதை தவிர வேறு ஒன்றும் சொல்ல முடியவில்லை.
காலை வரும் வழியில் கல்லூரியை பார்த்ததில் இருந்தே அவன் கோபத்தில் உழன்றுகொண்டு இருக்க இப்போது மறுத்தால் என்னென்ன பறக்குமோ என அமைதியாகிவிட்டாள்.
அவளை அந்த இருக்கையில் அமர்த்தியவன் சில புத்தகங்களை, லெட்ஜர்களை எல்லாம் கொண்டுவந்து வைத்தான்.
“சும்மா ஒரு ரெஃபரென்ஸ்க்கு தான். இந்த புக்ஸ் உன்னோட ஸ்டடீஸ்க்கு. அப்பப்ப இதையும் நீ படிச்சுக்கோ. ஈஸியா இருக்கும்…” என்றவன் அவள் யோசனையில் இருப்பதை கண்டு,
“மலைக்காத. உன்னை உடனே எல்லாம் பண்ணனும்னு சொல்லலை. நானே கத்து குடுப்பேன். இந்த மாதிரி அய்யோன்ற மென்டாலிட்டியோட இதை அப்ரோச் பண்ணினா நீ கத்துக்கவே முடியாது…” என்றான்.
“அதெல்லாம் இல்லைத்தான்…”
“ஓகே, லன்ச் நமக்கு இங்க ஸ்டோருக்கே வந்திரும். ஈவ்னிங் நானே உன்னை வீட்டுல கொண்டுபோய் ட்ராப் பண்ணிட்டு வந்திருவேன். திரும்ப நான் வர நைட் டின்னர் டைமாகிடும்…”