“எப்ப அனுக்குட்டி வராளாம்? ரெண்டுநாள் இருக்கட்டும்ன்னு கூட்டிட்டு போனார் உன் மாமனார்….” என்று மகனிடம் பேத்தியை பற்றி கேட்க,
“நாளைக்கு கூட்டிட்டு வரதா சொன்னார்ன்னு இந்து சொன்னாப்பா…” என்றவன் மனதிற்குள் ‘உங்க ப்ரென்ட் தானே? கேட்கவேண்டியது தானே?’ என்றும் தோன்றாமல் இல்லை.
தென்னரசுவின் நண்பரின் மகளை தான் ஆதவனுக்கு அவர் எடுத்திருக்க இதோ இரண்டாம் மகனுக்கு தங்கையின் மகளை பேசி முடித்துவிட்டார்.
வீட்டிற்கு பெரியவர் என்றிருந்தாலும் மொத்த ராஜாங்கத்தின் ஆணிவேரும் அபிராமியிடம் என்பது குடும்பத்தினருக்கு தெரிந்ததே.
அவர் விருப்பமின்றி எதுவும் அங்கே நடந்தேறாது. தங்கையின் முகத்தை வைத்தே சரியா இல்லையா என புரிந்துகொள்வார் தென்னரசு.
பெஸ்ட் & பெஸ்ட் தயாரிப்பு நிறுவனம் இன்னும் முன்னணி நிறுவனங்களுக்கு மத்தியில் தனது இருப்பை கொஞ்சம் கொஞ்சமாக உறுதி செய்துகொண்டு தான் இருக்கிறது.
போட்டிகளின் மத்தியில் சட்டென முன்னணியில் வந்துவிடமுடியவில்லை என்றாலும் தங்களின் தரத்தையும், சுவையையும் கொஞ்சமும் மாற்றிக்கொள்ளவில்லை.
ஆரம்பகட்டத்தில் டீ எஸ்டேட் மட்டுமே வைத்திருந்தவர் தான். தங்கள் தோட்டத்தின் தேயிலைகளை தரம் பிரித்து முக்கிய கம்பெனிகளுக்கு கொள்முதல் விலையில் ஏற்றுமதி செய்து வந்தவர்.
தங்கை அபிராமியை தூரத்து உறவினரான தீனதயாளனுக்கு மணம் முடித்து வைத்திருக்க அவரின் தொழில் காபி தோட்டமும், அதன் தயாரிப்பும்.
இருவரின் குடும்பமும் வருமானத்திற்கு குறையில்லை என்றாலும் சேமிப்பும், கையிருப்பும் என்று எல்லாம் சரியாகவே வந்திருக்க தொழிலை சற்று விரிவுபடுத்த முயன்றனர்.
அதன் முயற்சியில் தாங்களே ஒரு பிராண்டை உருவாக்கி அதன் பெயரில் வியாபார சந்தையில் கால் பதிக்க ஆரம்பிக்க அத்தனை சுலபமில்லை.
அந்த சாம்ராஜ்யத்தில் சிறு இடம் கிடைத்து காலூன்றுவது என்பது கூட எவ்வளவு சிரமம் என புரிந்துகொண்டாலும் சற்றும் பின்வாங்கவில்லை.
பிள்ளைகளின் காலத்திலாவது பெயர்சொல்லும் குடும்பமாக இருக்கவேண்டும் என்பதில் அத்தனை மெனக்கெடல்.
அதில் ஜெயிக்கவும் ஆரம்பித்து பெஸ்ட் & பெஸ்ட் தயாரிப்புக்கென்று தனி பெயரை பெற்றிருந்தனர்.
இப்போது வரை அதனை திறம்பட நடத்தி வர பிள்ளைகளின் தலையெடுப்பில் இன்னும் ஒரு அடி முன்னே சென்றுகொண்டு இருந்தார்கள்.
ஊட்டியில் தங்களுக்கென தனி பெயரும், புகழும் சேர்ந்திருக்க அதனை காப்பாற்றவேண்டிய கடமையை சொல்லி சொல்லி வளர்த்திருந்தார்கள் இருவருமே தங்கள் பிள்ளைகளுக்கு.
இப்போதும் கடிகாரத்தை பார்க்கவும், ஆதவனிடம் பேசுவதுமாகவே இருந்தார் தென்னரசு தங்கையை எதிர்பார்த்துக்கொண்டே.
“நான் வேணும்ன்னா மாமாட்ட பேசட்டுமாப்பா?…” என கேட்டே விட்டான் ஆதவன்.
“இல்லப்பா, வரட்டும். என்ன வேலையோ? நேரமானா அவளே கூப்பிடுவா….” என்று சொல்லிவிட்டார்.
அவர் சொல்லி முடிக்கவும் தென்னரசுவின் அலைபேசி சப்தமிட அதனை எடுத்துக்கொண்டு வந்தார் சீதா.
“மெதுவா வரவேண்டியது தானேம்மா? இல்லைன்னா நானே வந்திருப்பேனே?…” என்றபடி போனை வாங்கியவர் தங்கையின் எண்ணை பார்த்ததும் அட்டன் செய்தார்.
“சொல்லும்மா அபிராமி…” என கனிந்து பேச மறுபுறம் பேசுவது சரியாக கேட்கவில்லை.
“இரும்மா மழை பெய்யறதுல சரியா கேட்கலை. வரேன்…” என்றபடி எழுந்து உள்ளே சென்றார்.
“மழை சத்தம்ன்னா கதவை சாத்தி வைக்கலாம்ன்னா அதுக்கும் கேட்கமாட்டாங்க…” என ஆதி மெதுவாய் சொல்ல,
“ஹ்ம்ம், தெரியுமே…” என்று சிரித்தவன் தந்தை சென்ற திசையை பார்த்தான்.
“என்ன?…” என்றார் சீதா.
“ஹ்ம்ம், தங்கச்சின்னு வந்துட்டா அப்பா சின்னப்பிள்ளையா மாறிடறார். அதான் சிரிப்பு வந்துச்சு….” என அவன் சொல்ல,
“உங்களுக்கு சிரிப்பா இருக்கு. எனக்கு எண்ணமெல்லாம் எங்க காலத்துக்கு பின்னாடி நீயும், ரகுவும் இப்படி தியாவை பார்த்துக்கனும்னு இருக்கு…” என்றார் ஆசையுடன் சீதா.
“ம்மா, என்ன இது? இப்பத்தான் பூஜை அது இதுன்னு சொன்னீங்க. அதுக்குள்ளே காலம் பத்தி பேசறீங்க…” என்று சொல்ல பலமாய் இடிச்சத்தம்.
“இருப்பா, வெளில வாட்ச்மேன் என்ன செய்யறான்னு பார்க்கறேன். கேட்டை திறக்கனுமேன்னு குடையை பிடிச்சிட்டு நிப்பானாட்டம் இருக்கும். போய் வீட்டுக்குள்ள உக்கார்ந்துட்டு பார்க்க சொல்லுவோம்…” என்று ஓடினார் கையில் குடையுடன்.
“ம்மா, நில்லுங்க. நான் இண்டர்காம்ல சொல்லிடறேன். இதுக்கு நேரா போகனுமா?…”
“சொன்னா மட்டும் கேட்பானா? நான் வாசல்கிட்ட நிக்கறேன். நீ சொல்லு…” என்று கதவு பக்கம் போய் நின்றுகொண்டார்.
சீதாவை பார்த்ததும் அந்த சிறு கண்ணாடி அறைக்குள் இருந்த வாட்ச்மேன் எழுந்து நின்று தன்னை அழைக்கிறாரோ என முன்னால் மழைக்கு வந்தான்.
அதற்குள் ஆதவன் போன் செய்து உள்ளிருந்து பார்க்கும்படி சொல்லிவிட அங்கேயே அருகே இரண்டு அறை கொண்ட வீட்டிற்குள் குடையுடன் சென்று அமர்ந்தான் வாட்ச்மேன்.
“இப்பவாச்சும் உள்ள வாங்கம்மா…”
“ஹ்ம்ம், வரேன்…” என்றவர்,
“அவன் பொண்டாட்டி இந்த மழையில என்னத்தை ஆக்குவாளோ? இன்னொரு போனை போட்டு நைட்டுக்கு இங்கயே சாப்பிட்டுக்க சொல்லேன்…” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.
சிரித்தபடி தனது மொபைலில் ரகுவிற்கு அழைத்தான் எங்கிருக்கிறார்கள் என கேட்க.
“சீதா இன்னும் பத்து நிமிஷத்துல வருவாங்களாம். இப்பத்தான் வீட்டுக்கே வந்திருக்காங்க போல…” என்றார் தென்னரசு.
“சரிங்க…” என்ற சீதா அடுக்களைக்குள் வந்தவர்,
“தியா இந்த சப்பாத்திக்கு மாவை இன்னும் கொஞ்சம் மெல்லிசா தேச்சு குடு…” என்று சொல்லிவிட்டு மடமடவென்று சமையலை பார்த்தார்.
குடையை பிடித்துக்கொண்டு அடுக்களையின் பின் பக்க கதவில் வந்து நின்றாள் ராதா.
“ஒன்னும் வேண்டாம். சமையல் முடிஞ்சது. பாத்திரத்தை மட்டும் தேய்ச்சுட்டு மேடையை சுத்தம் பண்ணு. உனக்கும், பிள்ளைக்கும் இட்லி அவிச்சுட்டேன். சீக்கிரம் முடிச்சிட்டு சூடாறகுள்ள சாப்பிட்டுடுங்க…” என்றார்.