“ஹ்ம்ம் தெரிஞ்சது. நீங்க போயிருந்தா இந்த கலர்லையே எத்தனை ட்ரெஸ்ன்னு எனக்கு எடுத்திருக்கவே மாட்டீங்க…” என்று சொல்லியவள் முகம் மாறியது.
“இது நிச்சயத்துக்கா?…” என்றாள்.
“ஆமா…”
“அப்ப நம்ம வீட்டுல நீங்க எடுத்துட்டு வந்தது…” என கேட்க,
“ஆரம்பிச்சிட்டியா? உனக்கு நல்லா இருக்கும்ன்னு தானே எடுத்திட்டு வந்திருக்காங்க. இதையே நிச்சயத்தப்போ கட்டிக்கோ. கொஞ்ச நேரத்துல ட்ரெஸ் மாத்தும் போது நாம எடுத்ததை போடுவியாம்…” என்று சொல்ல ஆராத்தியா அமைதியாக இருந்தாள்.
“புரிஞ்சுக்கோடா. அப்பறம் அப்பா மனசு கஷ்டப்படும். பார்த்துக்கோ…” என்று சொல்லிய சீதா,
“சரி, தூங்கு…” என சொல்லிவிட்டு செல்லவும் அமைதியாக அதனை எடுத்து வாட்ரோப்பில் வைத்துவிட்டு வந்து படுக்க உறக்கம் வரவில்லை.
நிச்சயதார்த்தம் பற்றி யோசித்தபடி உருண்டு புரண்டு ஒருவழியாய் உறங்கி போனாள் ஆராத்தியா.
அடுத்த மூன்று நாட்களும் சென்ற வேகம் தெரியவில்லை. மழை நேரம் என்பதால் நிச்சயத்தை காலையிலேயே வைக்க முடிவு செய்திருக்க நிச்சயத்தன்று வந்தனாவின் வரவு அத்தனை ஆச்சர்யமூட்டியது ஆராத்தியாவை.
வந்ததுமே துள்ளலுடன் சென்று அவளின் கையை பற்றிக்கொண்டவள் சந்தோஷமாக உள்ளே அழைத்து சென்றாள்.
வந்த வந்தனாவிற்கோ பார்வை எல்லாம் திரவியத்தை தேடியே அலைபாய நமுட்டு சிரிப்புடன் அதனை பார்த்தவள்,
“இங்க இல்லையாம். யாரையோ அழைச்சிட்டு வர போயிருக்காங்க…” என்றாள் வந்தனா கேட்காமலே ஆராத்தியா.
“தேங்க்ஸ் டியர்…” என ஆராத்தியாவை அணைத்து விடுத்த வந்தனா,
“சேரில பெரிய பொண்ணா அழகா இருக்கடா. இவ்வளோ நாள் உன்னை குட்டி பொண்ணுன்னே நினைச்சுட்டேன் பாரேன்…” என சொன்னாலும் உள்ளுக்குள் அதுவே புகைச்சலை தந்தது வந்தனாவிற்கு.
இவ்வளவு அழகாய், துருதுருவென்று பட்டாம்பூச்சியாய் வளைய வந்தால் யாருக்கு தான் ஆராத்தியா மேல் ஆசை வராது என்று தோன்றாமலில்லை.
இந்த மூன்று நாட்களும் திரவியம் நினைவுகள் வந்தனாவை அமைதியாக இருக்கவிடவில்லை.
அவன் ஒப்புக்கொள்கிறானோ இல்லையோ, அவனிடமே பேசிவிடுவது என்ற நிலைக்கு தள்ளப்பட வீட்டினரிடம் பேசி இன்னும் ஒருநாள் அங்கிருப்பதை கூட்டிக்கொண்டவள் தோழியின் நிச்சயம் என வந்துவிட்டாள்.
‘என்னை இவ்வளோ தூரம் கொண்டுவந்து ட்ராப் பண்ணிருக்காங்க. அவங்க இன்வைட் பண்ணும் போது போகாம இருந்தா நல்லா இருக்காதுல’ என வீட்டினரிடம் சொல்லியே கிளம்பி வந்திருந்தாள்.
இதோ குடும்பம் மொத்தத்திலும் வந்தனா அவர்களுக்கு தன்னை அறிமுகப்படுத்தியாகிற்று.
பூமிகா தயாராக ஆரம்பிக்க வந்தனா ஆராத்தியாவுடனே மண்டபத்தை சுற்றி சுற்றி வந்தவள் வெளியே வர அதோ திரவியத்தை கண்டுகொண்டாள்.
யாருக்கோ கையசைத்தபடி கன்னம் குழிய புன்னகைத்துக்கொண்டே நடந்து வந்துகொண்டிருந்தவன் கைகள் மொபைலை சுழற்றியபடி இருந்தது.
மூச்சடைக்கும் உணர்வை வந்தனாவால் தாளமுடியாது போக பிடிப்பிற்கு ஆராத்தியாவின் கைகளை பிடித்தவள் விறுவிறுவென இழுத்துக்கொண்டு திரவியத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
“வந்தனாக்கா என்ன பன்றீங்க?…” என ஆராத்தியா கேட்க,
“என்னோட வா. ப்ளீஸ். எனக்காகடா…” என்று சொல்லி அவளுடன் சென்று திரவியத்தை மறித்தார் போல் நின்றுவிட ஆராத்தியாவின் நெஞ்சு கூடே காலியானது.
கைகள் தானாக அவளின் முன் நெற்றியில் படிய தட்டுப்பட்ட இடத்தில் கோடென சிறிதாய் அழுத்தமான தழும்பு.
‘மண்டை பத்திரம் தியா’ என எச்சிலை கூட்டி விழுங்கியவள் வந்தனாவிடமிருந்து தன்னை பிய்த்துக்கொண்டு ஓட பார்த்தாள் ஆராத்தியா.
தனக்கெதிரே வந்து நின்ற பெண்களை பார்த்தவன் புருவம் சுருங்கி விழிகள் இடுங்கியது.
சற்று முன்னர் குழியும் கன்னத்துடன் மல்லிகை பூக்கள் கொட்டியதை போன்ற பளீர் புன்னகையுடன் வந்தவன் முகத்தில் இக்கணம் அதன் சுவடில்லை.
வந்தனாவை பார்த்தவன் முகத்தில் எச்சரிக்கை படிந்தது. அவன் விழிகள் வந்தனாவிடமிருந்து தன்னை விடுத்துக்கொள்ள முயலும் ஆராத்தியாவின் கைகளில் பதிந்தது.
“மிஸ்டர் திரவியம், உங்ககிட்ட தான் பேசனும்…” என வந்தனாவும் அவசரப்பட,
“வாட்?…” என அவன் கத்தரிக்கும் பொருட்டு.
“ப்ராங்க்கா சொல்லிடறேன். எனக்கு உங்களை பிடிச்சிருக்கு. ஐ திங்க்…” என்னும் பொழுதே,
“ஸ்டாப்…” என்றான் கை நீட்டி சட்டென.
தியாவிற்கு மூச்சே நின்றுவிட்டது. தன் வீட்டில் தெரிந்தால் நிச்சயம் சங்கு தான் என பயத்துடன் வந்தனாவை பார்த்தவள் மறந்தும் திரவியம் பக்கம் பார்வையை திருப்பவில்லை.
பயத்தில் சட்டென விழிகள் கலங்கிவிட பலம் கொண்டு வந்தனாவின் பிடியிலிருந்து தன் கையை உருவிக்கொண்ட ஆராத்தியா வேகமாய் உள்ளே சென்றுவிட்டாள் திரும்பியும் பார்க்காமல்.
அவள் அப்படி ஓடவும் திகைத்து போன வந்தனா திரவியத்தை பார்க்க அவன் தீயாய் முறைத்துக்கொண்டு இருந்தான் வந்தனாவை.
“இதுக்கு தான் இங்க வந்தீங்களா?…” என கடுமையுடன் கேட்க,
“இல்லை, பூமிகா எங்கேஜ்மென்ட். அப்படியே நான் உங்களை, ப்ச் திரவியம்…” என வந்தனா அவன் கோபத்தில் உளற சற்றும் அவளை பேச அனுமதிக்காதவன்,
“கெட் அவுட்…” என்று வார்த்தைகளை கடித்து துப்பிவிட்டு அவளை தாண்டிக்கொண்டு முன்னே சென்றுவிட்டான்.
அவமானப்பட்ட உணர்வுடன் வந்தனா அங்கே நிற்க முடியாமல் ஆட்டோவை பிடித்துக்கொண்டு கிளம்பிவிட்டாள் யாரிடமும் சொல்லாமல்.