அவன் கோபமாக அழைப்பை வைத்த அடுத்த நொடி மீண்டும் அழைப்பு வர ஆதவன் என நினைத்து அதனை ஏற்றான் திரவியம்.
“அதான் போன்னு உன் தங்கச்சிட்ட சொல்லிட்டேன்ல. இன்னும் என்ன ஆதி?…” என்ற திரவியம்,
“உங்க பாசமலரை கிளம்ப சொல்லியாச்சே? திரும்ப ஏன் கால் பன்ற?…” என்று எரிந்துவிழுந்தான்.
“நான் தியா…” என்றதும் சட்டென வார்த்தைகள் அணைக்கட்டிக்கொண்டது திரவியத்திற்கு.
அவளின் குரலே அவளின் மனநிலையை எடுத்துக்காட்ட போதுமானதாக இருக்க திரவியத்தின் மனதை அறுத்தது.
தன்னிடம் அதிகம் பேசமாட்டாள் தான். ஆனால் பேசும் சொற்ப பேச்சுக்களும் எப்போதும் அவனின் மனதை குளுமையாக நனைப்பவையாகவே இருந்திருக்கிறது.
மெல்லிய கோபம், சின்ன சிணுங்கல், கொஞ்சமாய் அச்சத்துடனான புன்னகை, துளி பதட்டம் என அவளின் ஒவ்வொன்றும் அவனை ஆகர்ஷிக்கவே செய்திருந்தது.
ஒவ்வொரு உணர்வுகளும் அவனின் கண்களுக்கு மட்டுமல்ல உணர்வுகளுக்கும் தப்பியிருக்கவில்லை.
ஆனால் இந்த நொடி அவள் பேசியது முற்றிலும் வெறுமையை மட்டுமே சுமந்திருக்கும் வார்த்தைகளாக அவனிடம் வந்து சேர்ந்தது.
“கொஞ்சம் பேசனும் அத்தான், பேசலாமா?…” என்றவளிடம் அவன் மௌனத்தை காட்ட அவளும் அவன் பதில் சொல்லும் வரை அமைதியாகி போக
“என்னன்னு சொல்லு தியா. எனக்கு வேலை இருக்கு…” என்றான் வேண்டுமென்றே அவள் கிளம்பும் கோபத்தில்.
“இப்ப பேசலைன்னா எனக்கு தோணுறதை சொல்லமுடியாதோன்னு தான். பேசிட்டு வச்சிடறேன் த்தான்…” என்று அனுமதி கேட்பதை போலிருக்க கேட்டுக்கொண்டிருந்தவன் நிலை தான் இன்னும் மோசமானது.
“ஏன்டா உனக்கு இத்தனை கோபம்?’ என தன்னை தானே கேட்டுக்கொண்டவன் நடு நெற்றியை அழுத்தமாய் தேய்த்துக்கொண்டான்.
ஆராத்தியாவின் உறுதியான நம்பிக்கையில் தன்னிச்சையாக திரவியம் இதழ்கள் லேசாய் புன்னகையில் நெளிந்தது.
“நைட்ல சரக்கு வண்டி கவிழ்ந்திருச்சு. அந்த டென்ஷன்ல நீங்க இருந்தீங்க. நீங்க சொல்லாம எனக்கு தெரிய வாய்ப்பில்லை தான். ஆனா வந்ததுமே நானும் என்னன்னு கேட்டு பதட்டப்படுத்த வேண்டாமேன்னு. அவ்வளோ படபடப்பும், என்ன செய்யன்னு உங்க முகத்துல யோசனையும். அதான் உடனே கேட்கலை…”
“வீட்டுக்கு வந்ததுல இருந்து உங்களுக்கு அத்தனை போன் கால்ஸ். வந்ததுமே எனக்கு என்னன்னு தெரியலை. நானும் கேட்டு உங்களை இன்னும் கஷ்டப்படுத்த வேண்டாம்ன்னு தான் பேசி முடிக்கட்டும்ன்னு அமைதியா இருந்தேன். உங்ககிட்ட எனக்கு வேற எந்த ஒதுக்கமும் இல்லை…”
“ரொம்ப கோவமா வேற இருந்தீங்க. அதான் நீங்க கொஞ்சம் அமைதியாகவும் பேசிக்கலாம்ன்னு இருந்தேன். ஆனா பேசவே கூடாதுன்னு எல்லாம் நான் சத்தியமா நினைக்கவே இல்லை…” என சொல்ல திரவியத்திற்கு தலையில் அடித்துக்கொள்ளலாம் போலிருந்தது.
இருந்த கோபத்தில், எரிச்சலில் யாரின் மீது காண்பிக்கவென்று தெரியாமல் அனைத்திற்கும் அவளை வடிகாலாய் பயன்படுத்திக்கொண்ட தன் மீதே ஆத்திரம் தான் மிகுந்தது திரவியத்திற்கு.
மனைவியின் மாற்றமும், பேச்சுக்களும், இணக்கமும் தான் அறியாததா? தெரிந்தும் இப்படி நோகடித்துவிட்டோமென நொந்துகொண்டிருந்தான்.
“தியா…” என அவன் குரல் தழைந்து வர,
“நான் பேசிக்கறேன் த்தான். நீங்க பேசினா நிஜமாவே என்னால பேச முடியாது. அது கோவமோ, பிடிவாதமோ, வேணும்னா இல்லை. என்னவோ தெரியலை. ஆட்டோமேட்டிக்காவே மைண்ட்ல அது ரிஜிஸ்டரான மாதிரி மாறிடறேன். தப்பு தான். ஆனா மாத்திக்க முயற்சியும் பன்றேன்…”
“உங்க மேல பயம் இருந்தது என்னவோ உண்மை தான். பயம் தான்னு என்னை நானே ஏமாத்தியிருக்கேன். ஆனா அந்த பயம் உங்களை விட்டு விலகி ஒதுங்க வச்சது. ஒதுங்கினதும் நிஜம் தான். உங்க பக்கம் வர கூடாதுன்னு ஒரு கோபம், பிடிவாதம்…”
“என்னை அடிச்சீங்க தானே? நீங்க வேண்டாம்ன்னு அப்ப இருந்தே ஒரு முரண்டு. என்னோட எண்ணம் சரின்ற மாதிரி எல்லாரும் விட்டுட்டாங்க. அப்படியே விட்டது என்னோட பிடிவாதம் தப்பில்லைன்னே இருந்துட்டேன்…”
“எப்படி என்னை அடிக்கலாம். அதுவும் அதுவரை யாருமே என்னை அதட்டினது கூட இல்லைன்றப்போ நீங்க என்னை அடிச்சு தள்ளிவிட்டுன்னு செஞ்சது எதுவுமே எனக்கு பிடிக்கலை. அந்த வயசுக்கே ஒரு முரண்டு…”
“இவங்க வேண்டாம், வேண்டாம்ன்ற எண்ணமே எனக்குள்ள பெருசா வளர மத்தவங்களும் அதை அப்படியே விட்டுட்டாங்க. நான் யாரையும் ப்ளேம் பண்ணலைத்தான். என் மேல தப்புன்னு புரியுது. ஆனா…” என்றவளின் விசும்பலை அவளே சரி செய்வதையும் உணர்ந்தான் திரவியம்.
“உங்க வாழ்க்கையை பாழாக்கனும்னு எல்லாம் நான் நினைக்கலை. மாத்திக்க முடியும்ன்னு நினைச்சேன் நான். ஆனாலும் எனக்கும் எல்லாமே சீக்கிரம் சீக்கிரம்ன்னு தோணுச்சு…”
“இத்தனை வருஷமா நினைச்சிட்டிருந்த ஒன்னை உடனே மாத்திக்கனும்னு எப்படி எல்லாரும் எதிர்பார்த்தாங்க. சத்தியமா தெரியலை. இப்ப இதை பேசறது உங்களுக்கு கோபம் கூட வரலாம். வரட்டும். ஆனா எனக்கு தோணும் போது தான் நான் பேச முடியும்…”
“இதையே நேர்ல நான் உங்ககிட்ட பேச முடியுமான்னா தெரியலை. தானாவே ஒரு சிலதை என்னால உங்ககிட்ட சட்டுன்னு கொண்டுவர முடியலை. அது என்னவோ உங்ககிட்ட மட்டும் அப்படியாகிடறேன்…” என தொண்டை அடைக்க அவள் சொல்லவும்,
“தியா போதும். நான் சொல்றதை…” என்ற திரவியத்தை மேலும் பேச அனுமதிக்கவே இல்லை.
“ப்ளீஸ், ப்ளீஸ் அத்தான். நான் பேசி கம்ப்ளீட் பண்ணிடறேன். திரும்ப பேச என்னால முடியுமான்னு தெரியாது…” என்றவள்,
“நான் ஹால்ல இருக்கேன். நம்ம ரூம்க்கு வந்து பேசறேன். வெய்ட்…” என்று சொல்ல சில நொடி அமைதி அவனிடம்.
“ஆசையோட கல்யாணம் பண்ணுனேன்னு சொன்னீங்க. ஆனா நான் நிஜமா உண்மையா ஆசையோட எல்லாம் பண்ணிக்கவே இல்லை. உண்மையை ஒத்துக்கறேன்…” என்ற பொழுதே திரவியம் மனதில் சுருக்கென்ற வலி.
“பயந்துட்டேவும், ஒருமாதிரி எம்பேரிசிங் ஃபீலோட தான் கல்யாணம் பண்ணினேன். இந்த கல்யாணத்தை நீங்க ஈஸியா எடுத்துகிட்டீங்க. உங்களுக்கு என்கிட்ட எந்தவித கோபமோ, ஒதுக்கமோ இல்லை. உங்களால ஏத்துக்க முடிஞ்சது. ஆனா நான்…”
“நான் உங்ககிட்ட பெருசா பேசிக்கிட்டதில்லைன்னாலும் என்கிட்ட உங்க பார்வை, உங்க அக்கறை இதெல்லாம் ஒருநாள் மாறுச்சு. அது அக்சப்ட் பண்ணிக்க முடியலைன்றதை விட எப்படி சட்டுன்னு என்னை அந்த பொசிஷன்ல வச்சு பார்க்க முடிஞ்சதுன்னு ஒரு தாட்…”
“இவங்களோட எப்படின்ற அதிர்ச்சியோட தான் மேரேஜ் பண்ணிக்கிட்டேன். ஏனா என்னால அது சுத்தமா முடியலை. ஆரம்பத்துல என்கிட்ட நீங்க வரப்போ நீங்க என்னோட புருஷன்னு எனக்கு நானே அவ்வளோ டீச் பண்ணிப்பேன். பழக பழக புடிக்குமே? எனக்கும் பிடிச்சது…”
அவள் பேச பேச இங்கிவன் நிலை சொல்வதற்கில்லை. வார்த்தைகளில் கோர்க்காத உணர்வுகளை தாங்கி அமர்ந்திருந்தவன் சிலையாகி இருந்தான்.
“உங்க கண் பார்வையிலேயே இருக்கவேண்டாம்ன்னு நினைச்ச நான் உங்களோட உங்க வொய்பா உங்களோட உங்களோட…” என்றவள் வார்த்தைகளை கொண்டுவர முடியாமல் தள்ளாடினாள்.
அவள் சொல்லவருவது திரவியத்திற்கு புரிய மௌனமாய் அவளின் வார்த்தைகளை உள்வாங்கினான்.
“எனக்கு தெரியலை. நீங்க சொன்னீங்க தான் வேண்டாம்ன்னா சொல்லுன்னு. பிடிவாதமா நான் தான் செஞ்சுக்கிட்டேன். ஆனாலும் எனக்குள்ள அந்த எண்ணம் அது எப்படி உடனே மாறும்? எனக்கு சுத்தமா புரியலை. ஆனா அதே நேரம் வாழமாட்டேன்னு எங்கயும் நான் சொல்லலையே?…”