“கல்யாண பேச்சு வரை நாம சாதாரணமா பேசிக்கிட்டது கூட இல்லை. நான் நினைச்சே பார்க்காத ஒரு பந்தம் உங்களோட கல்யாணமானது. உங்களோட பேச்சு, பார்வை, தொடுகை எல்லாமே என்னை எவ்வளோ…”
“தியா ஸ்டாப் இட், போதும்….” என்றான் அவள் பேசவே சிரமப்படுவதை கண்டு.
இப்போதும் அவன் நிறுத்த சொல்லியதும் சற்று முன்னர் வாழ்வே போய்விட்டதை போல பேசி சென்றது என எல்லாம் சேர்ந்து அவளை தற்சமயம் நிதானமிழக்க செய்துகொண்டிருந்தது.
“போதும் போதும்ன்னா? இப்பதான் என்னை நீங்க பொம்மையாக்க பார்க்கறீங்க? நான் பேசனும்னு இப்ப நினைக்கேன். இப்ப போய் நீங்க ஸ்டாப் பண்ண சொன்னா?…” என சட்டென வெடித்தவள்,
“பேசு பேசுன்னு சொல்றது. பேசினா போதும்ன்னு சொல்றது. அப்போ உங்க கோபத்தை காட்டனும்ன்னா நான் அமைதியா இருந்திடனுமா? எனக்கு சொல்ல எதுவும் வேண்டாமா?…” என இப்போது அவள் குரல் உயர திரவியம் புருவங்கள் நெரிந்தது.
“ஆனா ஒன்னு, இதுவரை நான் உங்களோட என்ன வாழ்ந்தேன்னு எனக்கு காமிச்சிடுச்சு உங்க வார்த்தை மூலமா…” என்னும் பொழுதே அவள் குரலை போல இவனுள்ளமும் தவித்தடங்கியது.
“தியாடா…” என்றவன் குரல் அவனுக்கே கேட்கவில்லை.
முதன் முறையாக சட்டென்று அவனிடம் பேசியவளுக்கு குப்பென்று வியர்த்துவிட்டது அடுத்த நொடி.
அந்த ஷணம் அவனிடம் ‘தானா இப்படி பேசினோம்’ என அவளறியாமலே மீண்டும் பதட்டம்.
ஆழ்ந்த மூச்சை இழுத்துக்கொண்டவள் தன்னை சமன் செய்ய நொடி பொழுதை மௌனத்திற்கு இரையாக்கியவள்,
“ஓகே, எவ்ரித்திங் ஓகே. பாஸ்ட் இஸ் பாஸ்ட். ஆனா இன்னைக்கு நான் அப்படி இருந்ததுக்கான காரணம் நான் சொல்லிட்டேன்…” என்றவள்,
“இப்படி ஒவ்வொன்னுக்கும் காரணம் சொல்லி சொல்லி என்னால முடியாது. எனக்கு தெரியும் உங்களை. பேசினா தானா? கேட்டா தானா? அப்ப அதுமட்டுமே போதுமா? புரிஞ்சுக்கறதுன்ன என்னவாம்?…” என எதிர்கேள்வி கேட்க திரவியம் மலைத்து போனான்.
“என்னால முடிஞ்சளவு உங்களை நான் கொஞ்சம் புரிஞ்சிருக்கேன். நான் வீட்டுல, ப்ரெண்ட்ஸ் இப்படி எல்லா இடத்திலையும் நிறைய பேசுவேன். ஆனா உங்ககிட்ட பேசறதை விட இதுதான் பிடிச்சது…”
“அது உங்களை என்கிட்ட தொங்கிட்டே இருக்க விடனும்னு எல்லாம் இல்லை. நான் உங்களோட பேசறதை விட நீங்க என்கிட்ட பேசறது எனக்கு பிடிக்க ஆரம்பிச்சது. நான் உங்களோட மத்தவங்கக்கிட்ட இருக்கற மாதிரி இருப்பேனான்னு தெரியாது…”
“நீங்க சொன்னீங்களே மத்தவங்கட்ட இருக்கற திரவியம் வேற. உன்னோட புருஷனா வேறன்னு. அதே தான் எனக்கும். உங்களுக்கு அதை புரிஞ்சுக்க முடியலைன்னா ?…” என நிறுத்தியவள்,
“கல்யாண பேச்சை என்கிட்ட வரைக்கும் நீங்க கொண்டு வந்திருக்கனும்னு அவசியமே இல்லை. உங்களுக்கு இஷ்டமில்லைன்னா நீங்களே இதை ஸ்டாப் பண்ணிருப்பீங்க. ஆனா என் முடிவு, என் இஷ்டம்ன்னு எதுக்கு கதை விட்டீங்களாம்?…” என்று பொரிந்தாள்.
“அடிங், இப்ப நான் கிளம்பி வரேன். நீ இரு…” அவன் மிரட்ட,
“நான் போறேன். நான் போனப்பறம் நீங்க தனியா இந்த வீட்டுல மிச்ச மீதி இருக்கற பொருட்களை எல்லாம் உடைக்கலாம்…” என்று சொல்லி வைத்துவிட்டாள்.
சத்தியமாய் தன்னாலேயே நம்ப முடியவில்லை தான் பேசியதை. அதுவும் திரவியத்திடம்.
ஒருநிமிடம் கண்ணாடியின் முன்பு தன்னை பார்த்துக்கொண்டே அவள் நின்றிருக்க கதவு தட்டப்படும் ஓசை.
“தியா ரெடியா?…”
“வரேண்ணா…” என்றவள் பெயருக்கு இரண்டு உடைகளை மட்டும் ஒரு பேக்கில் திணித்துக்கொண்டு கிளம்பிவிட்டாள்.
“என்னவாம்? என்ன சொன்னான் உன் புருஷன்?…”
“வேப்பில்லை வாங்கி வைக்கவாம். வரப்ப மந்திரிச்சு விட சொன்னார்…” என்று ஆராத்தியா சொல்லவுமே ஆதவன், ரகு இருவரின் முகத்திலும் புன்னகை மீண்டது.
“தியாம்மா சண்டை போட்டியா?…” ஆச்சர்யமாக ரகு கேட்க,
“என்னை பார்த்தா சண்டை போடற மாதிரியா இருக்கு?…” என்று சிரித்தாலும் திரவியம் பேசிய வார்த்தைகள் மனதிற்குள் சுழன்றுகொண்டே இருந்தது.
‘மூன்று மாதமே இப்படி? இனி வாழ்நாள் முழுவதுமா?’ என்னும் வார்த்தைகள் வாள் கொண்டு துண்டாடியது அவளை.
நினைத்த நொடி கண்ணில் மழுக்கென்று நீர் நிறைய அதனை பல்லை கடித்து உள்ளிழுத்தாள்.
தான் அழுதால் வீட்டினரும் கலங்குவார்கள். அதுவும் இப்போது வீட்டிற்கு செல்ல அங்கே என்ன கேட்பார்களோ என்று வேறு இருந்தது ஆராத்தியாவிற்கு.
திருமணமானதில் இருந்து இப்போது தான் முதல் தடவையாக தனியே அவனின்றி ஊட்டிக்கு வருகிறாள்.
அந்த பயணமே கசந்து போக செய்தது. வழிகள் எங்கும் திரவியம் நினைவும், அவன் பேசியவையும் ஞாபகங்களாய் அவள் மீது படிய மேலும் மேலும் பாரமாய் கனத்தது மனது.
“தியா கண்ணை மூடி சாய்ஞ்சுக்கோ…” என ஆதவன் சொல்ல,
“வேண்டாம்ண்ணா…” என்றாள்.
இதோ திரவியத்தின் பிடித்தமான இடம். அவன் எப்போதும் மறக்காமல் தேநீர் அருந்தும் கடை.
“அண்ணா எனக்கு டீ வேணும்….” என்றவள் அந்த கடையை பார்க்க,
“ஓகே, வா…” என அவளை இறங்க சொல்லி ஆதவன் சென்று டீயை வாங்கி வந்தான்.
ஆராத்தியா இறங்கி நின்று அங்கிருந்த சுவற்றில் அமர்ந்துகொண்டாள். டீயை குடித்தபடி இருந்தவளுக்கு அது கூட முழுதாய் இறங்கவில்லை.
துக்கம் தொண்டையை அடைத்தது. ‘எப்படி பேசிவிட்டான்?’ என எண்ணி எண்ணி குமைந்தவள் விழியில் நிறைந்த கண்ணீரை துடைக்க துடைக்க மீண்டும் பெருகியது.
“போலாம் தியா…” என்றதும் அந்த டீயில் பாதியை கப்புடன் அங்கேயே வைத்துவிட்டு கிளம்பிவிட்டாள் ஆராத்தியா.
அவளின் செய்கைகள், செயல்கள் என தேடலாய் தழுவிய தவிப்புகள் ஒவ்வொன்றும் திரவியத்திடம் சிந்தாமல் சிதறாமல் கொண்டு சேர்ப்பித்திருந்தான் ரகு.
“என்னை மிஸ் பன்றா…” என தன்னறையில் அமர்ந்து சொல்லிக்கொண்டவன் மனமும் வேதனையில் துவண்டது.
தலையில் அடித்துக்கொண்டான் எத்தனை தூரம் வார்த்தையால் அவளை நோகடித்துவிட்டோம் என்று.
“தியாடா…” என சொல்லிக்கொண்டவன் அந்த புகைப்படத்தை இன்னும் பெரிதாக்க அவள் கண்களில் கண்ணீர் துளி கூட தெள்ள தெளிவாய் அவனின் கருவிழிக்குள் பதிந்து போனது.
இமை மூடாமல் அதனை பார்த்திருந்தவனால் அப்போதே கிளம்பி செல்ல முடியாத சூழ்நிலை.
அங்கே அவள் எடுத்து செல்ல வாட்ரோபில் இருந்து எடுத்து போட்டிருந்த சில உடைகள் கட்டிலில் கிடக்க அவற்றை சுருட்டி முகத்தில் அழுத்திக்கொண்டான்.
ஆதவனை பிடித்து வாங்கு வாங்கு என வகையாய் வாங்கியிருக்க எதற்கும் பதில் சொல்லவில்லை ஆதவன்.
“உன் வேலை, உன் கோபம், உன் சந்தேகம் எல்லாம் தீரட்டும். அப்பறம் பார்க்கலாம்…”
“என்ன? சந்தேகமா? ஆதி…” என திரவியம் கத்த,
“என்னடா? என்ன சவுண்டு விடற? என் தங்கச்சி என்னவோ முழுமனசா உன்னோட வாழலைன்னு எவ்வளோ பேசின. அப்ப அது சந்தேகம் தானே? ஏன் உனக்கு தெரியாதா?…” என்றவன்,
“என்னோட லிமிட் தாண்டி உன்கிட்ட பேச முடியாது தீரா. இது என் தங்கச்சி வாழ்க்கை. ஆனா பேசாமலே இருக்கமாட்டேன். உன்னோட பிஸ்னஸ் கோபத்தை அவகிட்ட காமிக்காத. அவ்வளோ தான்…” என்று வைத்துவிட்டான்.
திரவியம் செயலற்று அமர்ந்திருக்க மீண்டும் அவனை அப்போதைய கடினமான சூழ்நிலை இழுத்துக்கொண்டது.