“இங்க இந்த பிரச்சனை, அதெல்லாம் சரியாகட்டும். விசாரணைன்னு வீட்டுக்கு வருவாங்க. அதான் நீ தியாவை அனுப்பி வச்சன்னு சொன்னேன்…” ஆதவன் சொல்ல,
“யாரு நான்?…” என்றான் பல்லை நறநறவென கடித்து.
“ஆமா, கூட்டிட்டு போறேன்னதும் போன்னு நீ தான சொன்ன?…” என்ற பேச்சில் இன்னுமே நிதானம் இழப்பதை போலிருக்க ஆதவனை முறைத்துவிட்டு தன்னறைக்குள் நுழைந்து கதவை சாற்றிக்கொண்டான் திரவியம்.
அதன் பின் அந்த பிரச்சனையில் இருந்து விடுபடவே இரண்டு நாட்களுக்கு மேலானது.
வண்டியை ஓட்டிவந்த ட்ரைவரும், அதில் உதவி கேட்டு ஏறி வந்த குற்றவாளியும் கண்விழித்த பின்னர் தான் அதற்கொரு முடிவும் வந்தது. ஒருவாரமாகிவிட்டது அதற்கே.
தினமும் ஆராத்தியாவிடம் பேசிவிடுபவன் வா என்று அவனாக அழைக்கவில்லை.
ஆனால் பேச்சுக்கள் மட்டும் குறையவில்லை. அத்தனை நாட்கள் அங்கே அவனுடன் தொழிலில் சிறிதளவாவது அவள் பங்குபெற்றிருக்க அதனை கொண்டே ஒரு நாளில் பாதி நேரம் அவனுடனே செலவிட வைத்தான்.
“உன்னோட பொறுப்புல இருக்கறது உனக்கு தான தெரியும். ஊருக்கு போய் சொகுசா இருந்துட்டா இங்க யார் அதை பன்றது?…” என சில நேரம் காய்ந்து தள்ளினான் அவளிடம்.
அவனின் எரிச்சலுக்கும், கோபத்திற்கும் அவளிடம் அமைதியான பதில், அதுவும் கேட்டதற்கு மட்டுமே என வந்தது ஆராத்தியாவிடமிருந்து.
அத்தனை பேசுபவன் ‘வா’ என்று மட்டும் அழைப்பதில்லை. ஆனால் அவள் சென்றுவிட்டதை மட்டும் நாளுக்கு நூறுமுறை சொல்லி காண்பித்துவிடுவான்.
மீண்டும் முருங்கைமரம் ஏறியதை போல கேட்டதற்கு மட்டுமே ஆராத்தியாவிடமிருந்து பதில்.
ஒருவேகத்தில் அத்தனை பேசிவிட்டோம், அதற்கும் சேர்த்து கோபப்படுவானோ என அவள் அளந்து அளந்து பேச, தான் பேசியதில் இன்னும் மனம் சோர்ந்து இருக்கிறாள் என அவனுமே ஒருசில நேரம் மட்டும் அளவாய் பேசினான்.
வீடியோ காலில் குறுகுறுவென அவளை மொய்க்கும் அவனின் விழிவீச்சில் இருந்து தப்பும் வகை தெரியாது அவன் முகம் பார்க்கவே அவள் தவித்து தவிர்க்க அவள் மீதான திரவியத்தின் தேடல் கரையுடைக்க பார்த்தது.
இருவரும் ஒருவரை மாற்றி ஒருவர் நினைத்தபடி அந்த ஒரு வாரத்தையும் நெட்டி தள்ளியிருக்க பொறுமையிழந்தான் திரவியம்.
அன்று காலையே ஒரு முடிவுடன் ஸ்டோருக்கு வந்தவன் ஆதவனுக்கு வந்ததும் அழைத்துவிட்டான்.
“ஆதி, எப்ப தியா இங்க வரா?….” என கேட்க,
“என்கிட்ட கேட்டா?…” அலட்சியமாய் பதில் வந்தது அவனிடம்.
“நீ தான கூட்டிட்டு போன?…”
“ஆனா தியாவா கிளம்பறேன்னு சொல்லனுமே? அவ சொல்லாம அனுப்ப மாட்டேன்…” என சொல்லிவிட,
“ஓஹ்…” என்ற திரவியம் அழைப்பை துண்டித்துவிட்டான்.
ஒருவேளை அவளுக்கு வர விருப்பமில்லையோ என ஒரு நொடி யோசித்தவன் மனைவிக்கே அழைத்துவிட்டான் இப்போது.
“சொல்லுங்கத்தான்…” என்றதும் கண்ணை மூடி அவள் குரலை அனுபவித்தவன் தலையை கோதியபடி சுழல் நாற்காலியில் சுழன்றான்.
“ஹலோ அத்தான். லைன்ல இருக்கீங்களா?…” மீண்டும் கேட்க எதுவும் சொல்லவில்லை.
அதுதானே வேண்டியது. அதை தானே விரும்பியது. அதை மட்டும் தானே எதிர்பார்த்தது.
“அத்தான்…” என மீண்டும் மீண்டும் அழைத்தவள் அழைப்பை துண்டித்துவிட்டு தானே அழைத்தாள்.
“மை ஸ்வீட் வொய்ப்…” என தன் மொபைலுக்கு முத்தமிட்டவன் அதனை ஏற்று காதில் வைக்க,
“அத்தான் கேட்குதா? ஹலோ…” என்றாள் பரிதவிப்புடன்.
“ஹ்ம்ம்…” என்று மட்டும் சொல்ல,
“ஹப்பா, பயந்தே போய்ட்டேன். என்னவோன்னு…”
“ஏன்? என்னாகிடும்?…” என்றவனின் அசட்டையான குரலில்,
“நீங்க கால் பண்ணிட்டு பேசாம இருக்கவும்…”
“ஹ்ம்ம், இங்க தான் இருக்கேன். ஆனா பேச தோணலை…”
“என்ன?…”
“அதான் சொன்னேனே? பேச தோணலை…”
“அப்ப ஏன் கால் பண்ணுனீங்க?…”
“சும்மா தான். வேற ஒண்ணுமில்லை…” என்றதும் பல்லை கடித்தவள்,
“ஒன்னுமில்லையா? அப்ப ஓகே, வச்சிடறேன்…” என்று அழைப்பை துண்டித்துவிட,
“திமிரை பாரேன்…” என ரசித்து சிரித்துக்கொண்டவன்,
“இதுக்கு மேல தாங்காது…” என்று எழுந்துகொண்டவன் ஜீப் கீயை விரலில் சுழற்றியபடி மேனேஜரை அழைத்து பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான் ஊட்டிக்கு.
“மச்சானுங்களா எனக்கா ஆட்டம் காட்டறீங்க?…” என சிரித்தபடி ஊட்டி நோக்கி வந்தவன் டீ ஸ்டாலை பார்த்து ஜீப்பை நிறுத்திய நொடி ஆராத்தியா அழுதபடி அமர்ந்திருந்த பிம்பம் தான் மனதில் எழுந்தது.
முதன் முறையாக அதனை கடந்து கிளம்பிவிட்டான் திரவியம். கடையை பார்த்துக்கொண்டே ஜீப் மெல்ல நகர அந்த கடையிலிருந்தவர் பார்த்துவிட்டு,
“தம்பி டீ குடிக்காம போறீங்க?…” என்றார்.
“வொய்பை கூட்டிட்டு வரேன். வந்து குடிக்கறேன்…” என சொல்லிவிட்டு கிளப்பினான் மகிழ்திரவியம்.
தன் வீட்டுக்கு சென்றவன் அபிராமியும், தயாளனும் பேக்டரிக்கு சென்றிருக்க மீண்டும் மாமனின் வீட்டுக்கு கிளம்பிவிட்டான்.
“எப்படி ண்ணா? நீ பெரிய ஆள் தான்…” என ரகு திரவியம் வந்ததை பார்த்துவிட்டு சிரிக்க ஆதவன் வாசலில் வந்து நின்ற ஜீப்பை முறைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான் போர்ட்டிகோ இருக்கையில்.
“பக்கத்துல இன்னைக்கு கோவில் கும்பாபிஷேகம். அதுக்கு போயிருக்காங்க. வந்திருவாங்கப்பா…”
“ஓஹ், எந்த கோவில்?…” என திரவியம் கேட்டதும் ஆதவன் முழிக்க சீதா பதில் சொல்ல,
“ஓகே ஓகே. இப்ப நான் கிளம்பனும். தியா வந்தா கூட்டிட்டு கிளம்பலாம்ன்னா…” என்றன நேரத்தை பார்த்து.
“இப்ப பத்து நிமிஷத்துல வந்திருவா. சாப்பிட்டு போகலாம்…” என்று சொல்லிவிட்டு அவர் குக்கர் சத்தத்தில் அவசரமாய் உள்ளே செல்லவும் திரவியம் எப்படி என்பதை போல ஆதவனை பார்த்து புருவமுயர்த்தினான்.
சொல்லியதை போல வெளியே பேச்சுக்குரல் கேட்க ஜன்னலின் வழியே வந்துகொண்டிருந்தவளை பார்த்த திரவியத்தின் முகத்தில் மின்னல் பளிச்சிட்டது.
அவள் கட்டியிருந்த அந்த புடவை பூமிகா, ரகுவின் நிச்சயத்திற்கு திரவியம் எடுத்து தந்தது.
அந்த நாளில் சில நிமிடங்கள் மட்டுமே கட்டியிருந்தவளை அன்று கவனித்து பார்த்திராதவன் இன்று கண்ணெடுக்காது பார்த்து வைத்தான்.
“அண்ணனுங்க நாங்க இருக்கோம்…” ஆதவன் சொல்ல,
“ஆமா, ஆமா…” என்றான் ரகுவும்.
“கெட் லாஸ்ட்…” என்ற திரவியம் தன்னை பார்த்ததும் அவள் முகத்தில் வந்துபோகும் உணர்வுகளுக்காக உயிர் தவிக்க காத்திருந்தான்.