அடக்கப்பட்ட சிரிப்புடன் மெல்லிய முறைப்புமாய் அவளை பார்க்க பதிலுக்கு அவனை முறைக்கவும் முடியாமல் உடை மாற்ற சென்றாள் அவள்.
மீண்டும் வரும் பொழுது இரண்டு பெரிய பைகள் ஹாலில் இருந்தது அவளுக்கு கொடுத்தனுப்ப.
“இதுல இட்லி பொடி, மசாலா பொடி எல்லாம் இருக்கு. ஸ்நாக்ஸ் செஞ்சிருக்கேன். நானே அடுத்தவாரம் நீ வரும்போது குடுத்தனுப்ப இருந்தேன். நல்லவேளை இப்பவே கொண்டு போய்டலாம்…” என்றார்.
“அனுவோட பர்த்டே…” மீண்டும் ஆராத்தியா பாவமாய் கேட்க,
“முதல்ல சாப்பிட உட்கார். உனக்காக உன் வீட்டுக்காரரும் சாப்பிடலை…” என்று சொல்ல,
“ம்மா, அதென்ன என்கிட்ட மட்டும் உன் வீட்டுக்காரர். உன் வீட்டுக்காரர்ன்னு. எனக்கு தெரியாதா? சும்மா இப்படி சொல்லாதீங்க….” என்றாள் உட்சகட்ட கடுப்புடன்.
“வாய்லையே போடுவேன் பார்த்துக்கோ. போய் முதல்ல சாப்பிட்டு கிளம்புங்க. வேலை இருக்காம் உன்…” என்றவரை கை நீட்டி தடுத்து,
“போதும், போறேன்…” என்று வேகமாய் டைனிங் டேபிளுக்கு வந்தவள் திரவியம் அருகே அமர்ந்தாள்.
அவளின் கோபம் புரிந்து திரவியம் எதுவும் சீண்டவில்லை. அமைதியாக சாப்பிட,
“ஏன் தீரா அனுவோட பர்த்டே வருது. தியா வந்ததும் வந்திட்டா. அதுவரைக்கும் இருக்கட்டுமே? பாரு, கிளம்பனும்ன்னதும் முகமே வாடி போய் இருக்கு…” என்று சொல்ல,
“அதான் எனக்கும் சரின்னு தோணுது. அங்க இந்த ஒருவாரமும் தீராவுக்கு தனியா எவ்வளோ கஷ்டம். இன்னும் ஒருவாரம் தானே? வந்திருவாங்க…” என தென்னரசுவும் சொல்ல அதற்கு மேல் அங்கே எந்த பேச்சும் இல்லை.
எப்போதும் அந்த இரு குடும்பத்திலும் அபிராமியின் பேச்சு தான் இறுதியாக இருக்கும்.
ஆனால் மகன் திருமண விஷயத்தில், அவனின் முடிவுகளும், அவனுக்கு சாதகமான முடிவுகளும் மட்டுமே தான் செயலாகிக்கொண்டிருந்தது.
ஒன்றும் பேசாமல் இருவரும் உண்டுமுடிக்க மற்றவர்களிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினாள் ஆராத்தியா.
சொந்த வீட்டில் கூடுதலாக நான்கு நாட்கள் இருந்து வரவுமா உரிமை இல்லாது போனது தனக்கு என தோன்ற அழுகைக்கு பதிலாக எரிச்சலும், ஆற்றாமையும் தான் கூடியது.
அவளின் முகத்தையே பார்த்தபடி இருந்த அபிராமியின் மனதில் எதுவோ சரியில்லை என்று தோன்ற,
“நான் வேணும்னா உன் கூட வரவா தியா?…” என்றார் மருமகளிடம்.
“ம்மா, அவளை என்ன காட்டுக்கா அனுப்பறீங்க? என்னோட அதுவும் நாங்க இத்தனை மாசம் இருந்த வீட்டுக்கு தானே?…” கடுப்பை மறைத்துக்கொண்டு தாயிடம் திரவியம் சொல்ல அவன் முகம் கண்டு பின்வாங்கிவிட்டார் அபிராமி.
கொண்டுவந்த பேக்கை கூட எடுக்கவில்லை ஆராத்தியா. அப்படியே அணிந்திருந்த உடையுடனே கிளம்பிவிட்டாள்.
“தியா மொபைல் மறந்துட்டு போற பாரு…” என்று பூமிகா எடுத்து தர வாங்கிக்கொண்டவள் ரகுவின் கையிலிருந்த அவன் மகனை தூக்கி முத்தமிட்டாள்.
“அனுவை கூட பார்க்கலை நான்…” என இந்துவை பார்த்து ஆராத்தியா சொல்ல,
“அடடா அவ ஸ்கூல்ல இருந்து வரவும் சொல்லிருவேன். ஈவ்னிங் வீடியோ கால் வா….” என சீதா சிரிக்கவும் அனைவருமே அதில் சிரித்துவிட்டனர்.
“வரேன்…” என பொதுப்படையாக சொல்லியவள் ஜீப்பில் ஏறிக்கொள்ள திரவியத்திற்கே அவளின் முகபாவனையில் ஒருநொடி இப்படி அழைத்துக்கொண்டு தான் செல்ல வேண்டுமா என்றிருந்தது.
“பத்திரம் ப்பா. போய்ட்டு கால் பண்ணுங்க…” என தயாளன் சொல்ல ஆதவனும், ரகுவும் திரவியத்தை அழுத்தமாக பார்த்தபடி இருந்தனர்.
டீயை வாங்கிக்கொண்டு வந்தவன் அன்று அவள் அமர்ந்திருந்த இடத்தில் வந்து அமர்ந்துகொள்ள அவனை கேள்வியாய் பார்த்தாள்.
“வந்து உட்கார் தியா…” என்றவன் மௌனமாக இருக்க அவனுக்கு அன்று தானும் இங்கே அமர்ந்திருந்தது தெரிந்திருக்குமோ என நினைத்தபடி வந்தமர்ந்தாள்.
அவள் புறம் கப்பை நகர்த்தியவன் தான் குடித்துவிட்டு அவளை பார்க்க நொடியில் அதனை மொத்தமாய் ஒரேமடக்கில் ஊற்றியவள் ஜீப்பில் சென்று ஏறிக்கொண்டாள்.
“ரொம்ப கஷ்டம்டா திரு…” என தன்னை தானே சொல்லிக்கொண்டவன் வந்து வண்டியை எடுக்க வீடு வந்தவள் பார்வை எல்லாம் அன்று வீட்டை எப்படியெல்லாம் அவன் புரட்டினான் என்பதில் தான் இருந்தது.
அந்தந்த பொருட்கள் அங்கில்லை இல்லை என்றாலும் வேறொன்றை வாங்கி வைத்திருந்தான் திரவியம்.
எல்லாவற்றையும் பார்த்தவள் அறைக்குள் சென்றுவிட கதவை சாற்றிவிட்டு உள்ளே வந்தவனும் ஜீப் சாவியை அதனிடத்தில் கோர்த்துவிட்டு வந்து படுத்துவிட்டான்.
மௌனம் மட்டுமே அங்கே பிரதானமாக இருக்க கனத்து கிடந்தது அவர்களின் நெஞ்சங்கள்.
தன் மீதான தவறும் புரிய அவள் தன்னருகே இருப்பதே போதுமானதாக தோன்றினாலும் கண்ணீரை அடக்கிக்கொண்டு உதட்டை கடித்தபடி திவானில் கால்களை கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தவளை காண காண நெஞ்சம் பொறுக்கவில்லை.
ஒன்றும் பேசாமல் சட்டென்று எழுந்தவன் அவளருகே வந்து கைகளில் அள்ளிக்கொண்டான்.
“நோ, நோ, நோ. அத்தான் நோ. என்னால முடியாது. விடுங்க…” என அவனின் கைகளிலிருந்து துள்ளியவள் அவனின் நெருக்கத்தை தவிர்த்தாள்.
முதல் முறையாக அவனின் அணுகுமுறையை மறுத்து அவள் அவனை விலக்க முயன்றாள்.
“என்னாலையும் தான் முடியாது தியா. நான் தூங்கியே ஒருவாரமாச்சு. புரிஞ்சுக்கோ…” என்றவன் அவளுடன் சரிய நெஞ்சம் அடித்துக்கொண்டது ஆராத்தியாவிற்கு.
“இப்படி பண்ணாதீங்கத்தான். அவ்வளோ பேசினதை விட இப்ப நீங்க செய்ய போறது தான் என்னை இன்னும் கஷ்டப்படுத்தும்…” என சொல்லியவள் குரல் அவளுக்கே கேட்கவில்லை.
ஆராத்தியா வாயை மட்டுமே அசைத்திருக்க அவனுக்கும் கூட கேட்கவில்லை. திரவியம் அவளை அணைத்திருந்தானே தவிர முன்னேறவில்லை.
தன் முதுகில் ஒண்டியபடி கைகளை சுற்றி போட்டிருந்தவனின் முகத்தை பார்க்க முடியாமல் அவள் அசையாமலிருக்க திரவியமும் உறங்கவில்லை என்பது அவனின் இதயத்துடிப்பை உணர்ந்ததிலேயே தெரிந்தது.
“ஏன் அன்னைக்கு அப்படி பேசினீங்க நீங்க?…” என மெல்லிய குரலில் விசும்ப அவளை தன் பக்கம் திருப்பியவன்,
“ஸாரி, அதை தவிர நான் பேசினது சரின்னு நான் சொல்லவே மாட்டேன்…” என்றவன் குரலே கலங்கிவிட்டிருந்தது.
“நான் வேணா உங்களுக்கு வேணாவா த்தான்?…” என்றதும் திகைத்து அவளை பார்க்க,
“அந்த அர்த்தம் தான். உங்களுக்கு மூச்சு முட்டும். இன்னும் லைஃப் லாங் எப்படி?…” என்று கேட்கும் பொழுதே உதடு பிதுங்கிவிட ஆராத்தியா அழுகையை இன்னுமே அடக்க,