“ஆமா த்தை. நாளைக்கு கோவிலுக்கு போறப்போ என்ன ட்ரெஸ்ன்னு அண்ணி கேட்டாங்க. அதான் காமிக்க எடுத்துட்டு வந்தேன்….”
“சேரி நல்லா இருக்குடா…” என்றவரிடம் திரவியம் எடுத்து தந்தது என்று சொல்லும் முன்,
“ஆனா கோவிலுக்கு இது வேண்டாம். ரொம்ப மைல்டா இருக்கும். நைட் மோட்க்கு தான் இந்த மாதிரி ட்ரெஸ் சூட்டாகும். மார்னிங் வேற சேரி கட்டிக்கோ….” என்றவர்,
“ஹ்ம்ம், கல்யாணத்தப்போ குங்கும கலர்ல ஒரு செல்ப் பாடர்ல சாஃப்ட் சில்க் எடுத்தோமே? அதை நாளைக்கு கட்டேன் இன்னும் புதுசாவே இருக்குது தானே?…” என்றார்.
ஒரு நொடி ஆராத்தியாவின் முகம் சுருங்கி மீண்டதை திரவியமும் கவனிக்க இருவரையும் பார்த்தான்.
“சரிங்க த்தை…” என்றவள் அதற்கு மேல் அங்கே நிற்கவில்லை.
அவர்கள் அறைக்கு சென்றவள் புடவையை மீண்டும் பேக்கில் வைத்துவிட்டு உடை மாற்றி படுத்துவிட்டாள்.
சிறிது நாட்கள் அபிராமியின் இந்த தலையீடு இல்லாதிருந்தது. இப்போது மீண்டுமா என தோன்ற மனதில் இருந்த மகிழ்ச்சி மெல்ல வடிவதை போலிருந்தது.
திரவியமும் வந்துவிட்டான். அவன் ஏதாவது கேட்பான் என பார்க்க எதுவும் பேசாமல் உடைமாற்றி அவனும் வந்து படுத்தாகிற்று.
“தியா இங்க பார்…” என்றழைப்பிற்கு உடனே திரும்பியவள்,
“சொல்லுங்கத்தான்…” என அவனை பார்க்க கண்களில் அத்தனை உறக்கம்.
இமைகளை அடித்து உறக்கத்தை விரட்ட முயன்று அவனை பார்க்க மெல்ல அவள் கன்னத்தை வருடியவன்,
“குட்நைட்…” என்றான் முத்தமிட்டு.
“ஹ்ம்ம்…” என்றவள் அவன் கழுத்துத்தடியில் முகம் புதைத்து உறங்கி போனாள்.
அபிராமி சொல்லவும் மாறிய முகபாவனையும், அதில் தொனித்த பிடித்தமின்மை, ஏமாற்றம் என எல்லாம் திரவியத்தின் அகக்கண்ணிலிருந்து தப்பவில்லை.
முன்பும் இதனை எல்லாம் பார்த்திருக்கிறான் தான். ஆனால் அப்போதெல்லாம் அதனை தாயின் ரசனை, மற்றவர்களுக்கு பொருத்தமானதை சரியாக சொல்கிறார் என நினைத்திருக்கிறான்.
அதெல்லாம் அவனுக்கு ஒருவிதத்தில் பெருமையையும் தந்திருக்கிறது. அவரின் தேர்வும் சரி, சொல்வதும் சரி எல்லாமே மிக பொருத்தமாகவே அமைந்திருக்கும்.
ஆனால் மற்றவரின் பிடித்தம் என்ற ஒன்றை அவன் கவனித்திருந்ததில்லை அதுவரை.
இன்றைக்கு மனைவியின் ஆசையும், தாயின் மாற்று கருத்தினால் உண்டான வாட்டமும் என அவனுக்கு எதையோ உணர்த்தியது.
இதுவரை ஆராத்தியா விஷயத்தில் அபிராமியின் தேர்வுகள் திணிக்கப்பட்டவையாகவே இருந்திருக்குமோ என யோசித்தான்.
ஒவ்வொரு முறையும் அவளுடன் அனைவருமாக எங்காவது செல்லும் பொழுதுகளில் அபிராமி எடுத்து தருவதை அவள் பெரிதாய் ஆர்ப்பாட்டமின்றி வாங்கிக்கொள்வதை ஞாபகத்திற்கு கொண்டுவந்தான்.
உண்மை தானே, எல்லாமே அவள் விருப்பங்களுக்கு மாறாக திணிக்கப்பட்டது தான்.
உடைகளில் இருந்து ஆபரணங்கள் என அணிவகுத்து இறுதியாய் இப்போது தான் முதற்கொண்டு அவளுக்கு திணிக்கப்பட்டவையே.
இப்படி ஒவ்வொன்றாய் அவன் யோசித்துக்கொண்டே வர மெல்ல அவனின் கையிலிருந்து நழுவி நகர்ந்து நன்றாய் உறங்கினாள் ஆராத்தியா.
ராஜாயை கழுத்துவரை போர்த்தியவன் பார்வை அவளிடம் மட்டுமே தான் நிலைத்திருந்தது.
மெல்ல கண்ணயர்ந்தவன் விழிக்கயில் இன்னும் ஆழ்ந்த உறக்கத்தில் ஆராத்தியா.
நேரத்தை பார்க்க எட்டை தாண்டி இருந்தது. இத்தனை நேரம் எல்லாம் உறங்குபவள் இல்லையே.
முதலில் தான் சென்று ஷேவ் செய்துவிட்டு குளித்து வந்து அவளை எழுப்பினான் திரவியம்.
“இல்ல, இல்ல போறேன்…” என்றவள் அவனை தள்ள முயல வலிமையான ஒரு அணைப்பு.
ஆழ மூச்செடுத்து அவளின் வாசம் பிடித்தவன் கைகளுள் அவள் பொடிபொடியாய் உதிரும் முன் விலக்கியவன்,
“சீக்கிரம் வா. வெய்ட் பன்றேன்…” என சொல்லிவிட்டு கீழே செல்லவும் புன்னகையுடன் உடை மாற்றி கீழே செல்ல அங்கே அத்தனைபேரின் ஆர்ப்பாட்டத்தில் தான் திரவியமும், அவளும் ஒரே நிறத்தில் உடை அணிந்திருப்பதே கருத்தில் பதிந்தது.
அபிராமியும் பார்த்துவிட்டு எதுவும் கேட்காததில் அவரின் முகத்தையே நொடிக்கொருதரம் பார்க்க,
“ரொம்ப படுத்தாதடி, அம்மாகிட்ட அந்த புடவை இங்க இல்லைன்னு சொல்லிட்டேன் நான். விட்டா நீயே மாட்டி விட்டுடுவ…” என வலிக்காமல் அவளின் இடையில் கிள்ளியவன்,
“கோவிலுக்கு கிளம்பற நேரத்துல டர்ட்டி திங்க் பண்ண வைக்காத என்னை…” என்று சொல்லவும் இந்துவினருகே சென்று நின்றுகொண்டாள் ஆராத்தியா.
குடும்பமாய் கோவிலுக்கு சென்று அவர்கள் பேக்டரியில் வேலை செய்பவர்களுக்கு இனிப்பு வழங்கிவிட்டு வீடு வந்து அன்று மாலை அனுவின் பிறந்தநாள் அமோகமாய் கொண்டாடப்பட்டது.
அதற்கு மறுநாள் வீட்டில் அத்தனைபேரிடமும் சண்டையிட்டு திரவியத்தை விடாப்பிடியாக அழைத்துக்கொண்டு கோவை வந்து சேர்ந்திருந்தாள் ஆராத்தியா.