அன்று காலை ஆராத்தியா எழுந்து வரும் பொழுதே வீட்டில் கணவன் இல்லை.
முதல்நாள் தான் அனுவின் பிறந்தநாள் முடிந்திருக்க கொண்டாட்டம் எல்லாம் ஓய்ந்து வீடு வர நள்ளிரவானது.
கடந்த இரு நாட்களாக அவள் உணரும் அசௌகரியம் அன்றும் அவளை புரட்டியது.
தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தவள் மனது திரவியத்தை தேட அதற்கு மேல் இருக்க முடியாமல் குளித்து கீழே வந்தாள்.
அபிராமி இன்னும் பேக்டரிக்கு கிளம்பியிருக்கவில்லை. தயாளன் மட்டும் சென்றிருக்க மருமகளுக்காக காத்திருந்தார்.
“வாடா தியா, என்ன முகமெல்லாம் வாடி இருக்கு? இன்னும் கொஞ்ச நேரம் தூங்க வேண்டியது தானே?…” என்றார் அவள் வரவுமே.
“இல்லை த்தை, சும்மா கண்ணை மூடி படுத்திருந்தா தலை வலிக்கும். அதான் எழுந்து வந்துட்டேன்…” என்றாள்.
“அதுவும் சரிதான். உட்கார் சாப்பிடலாம்…” என அவளுடன் தானும் அமர்ந்தவர்,
“காலையிலையே சீதா போன் பண்ணிட்டா. நீ எழுந்ததும் பேச சொன்னா…”
“சரிங்கத்தை…”
“மத்தியானம் கிளம்பனுமாமே? தீரா சொல்லிட்டு போனான். பேக்டரிக்கு தான் போயிருக்காங்க எல்லாரும். இன்னைக்கு காபி பேக்டரிக்கு புது மிஷின் வருது….” அபிராமி பேசிக்கொண்டே இருக்க அது ஏற்கனவே திரவியம் சொல்லியிருக்க கேட்டுக்கொண்டாள்.
“உன்கிட்ட சொல்லிருப்பானே?…”
“ஹ்ம்ம், நேத்து தான் சொன்னாங்க த்தை…”
“நல்லது தான். சரி மத்தியானம் சீதா சாப்பாடு செய்யறேன்னு சொல்லிட்டா. இப்ப ப்ரேக்பாஸ்ட் சாப்பிட்டு அங்க போவோம்…” என்றவர்,
“நானும் அதான் பேக்டரிக்கு கூட போகலை…” என சொல்லிவிட்டு அவள் உண்டு முடிக்கும் வரை பேசிக்கொண்டிருந்தார்.
இருவருமாய் கிளம்பி தென்னரசு வீடு வர அனு பள்ளிக்கு சென்றிருக்க இந்துவும், பூமிகாவும் பேசிக்கொண்டிருந்தார்கள் சீதாவுக்கு உதவியபடி.
“என்ன சமையல் வேலை எல்லாம் இப்பவே ஆரம்பிச்சாச்சா?…” என்ற அபிராமி,
“பூமி எங்க உன் மகன்?…” என்றார்.
“இப்பத்தான் தொட்டில்ல போட்டு தூங்க வச்சேன் ம்மா. இவ்வளோ நேரம் அங்க தான் இருந்தோம்…”
ஆராத்தியா வந்ததும் தன்னறைக்கு வந்துவிட்டவள் நேராக சென்றது மாத நாட்குறிப்பிற்கு தான்.
நாட்களை விரல்விட்டு எண்ணியவளுக்கு எப்படி உணர்கிறாள் என்றே விளங்கவில்லை.
ஒருவிதமாக சந்தோஷமும், புல்லரிப்பும் சிலிர்க்க செய்ய கூடவே மனதில் எழுந்த அச்சமும் சேர்ந்துகொண்டது.
சட்டென்ற படபடப்பும், பதட்டமும் தோற்ற இதனை எப்படி உறுதி செய்வதென யோசித்துக்கொண்டே நகத்தை கடித்தபடி அமர்ந்திருந்தாள்.
சரியா, இல்லை வேறு எதுவுமா ஒன்றும் புரியவில்லை. வெளியில் அனைவரின் பேச்சுக்குரலும் கேட்க வீட்டில் சொல்லி பெரிதாக்க வேண்டாம் என்று நினைத்தவள் யோசித்து வெளியே வந்தாள்.
“என்ன தியா இன்னும் தூக்கம் போகலையா உனக்கு?…” என இந்து சிரித்தபடி கேட்க,
“எங்கம்மாவுக்கு நான் தூங்கினா தான் பிரச்சனை. மருமக தூங்கினா இல்லை…” என பூமிகாவும் சொல்ல பதில் சொல்லமுடியாமல் நின்றாள் ஆராத்தியா.
அவளுக்கு இங்கிருந்து கிளம்ப என்ன சொல்ல என்ற யோசனை. கூகுளில் அவள் பார்த்த அனைத்துமே அவளுக்கு சாதகமாக இருக்க உள்ளத்துடன் சேர்ந்து உள்ளங்கைகள் கூட குறுகுறுத்தது.
“கிண்டல் பண்ணாதீங்க ரெண்டுபேரும். அவளுக்கு என்னவோ அசதி, நைட்டும் இங்க இருந்து வர ஒரு மணிகிட்ட ஆகிடுச்சு. அதான் தூங்கிட்டா…” அபிராமி ஆராத்தியாவிற்கு சார்ந்துகொண்டு வர,
“இங்க வா தியா, ஏன் அங்கயே நிக்கிற?…” என்றதும் தான் சீதாவின் பின்னால் இருந்த கீ போர்ட் கண்ணில் விழ சட்டென்று ஒரு யோசனை.
“ம்மா, ப்ரெண்ட் ஒருத்தியை பார்த்துட்டு வந்திடறேன். ஒரு அரைமணி நேரம்…” என ஆராத்தியா சொல்ல,
“என்ன எந்த ப்ரென்ட்? யாரா இருந்தாலும் வீட்டுக்கு வர சொல்லு…” என்றார் சீதா.
மற்றவர்கள் ஆராத்தியாவை ஆச்சர்யமாக பார்த்தனர். இதற்கு முன்பு எல்லாம் இப்படி ஒருமுறை கூட அவள் சென்றதில்லை.
யாராக இருந்தாலும் வீட்டிற்கு வர சொல்லிவிடுவாள். இல்லையேல் பூமியுடன் சென்றுவருவது தான் வழக்கம்.
தனியே செல்லவேண்டும் என்றதும் அனைவருக்குமே வியப்பாக இருக்க ஆராத்தியா முகத்தில் மறைக்கமுடியாத அந்த தவிப்பையும் கவனிக்க,
“என்ன தியா? யார் ப்ரென்ட்?…” என்றார் அபிராமி.
“ப்ரென்ட் அத்தை. ஸ்கூல் மேட். இங்க வந்திருக்கா. இப்ப தான் கால் பண்ணினா. அதான்…” என ஆராத்தியா சொல்ல,
“இருக்கட்டும் தியா. வீட்டுக்கு வர சொல்லேன். ஏன் தனியா போற?…” என சீதா.
“ஆமா தியா. ஊருக்கு வேற கிளம்பனும். உன் புருஷன் வந்தா சத்தம் போடுவான்…” அபிராமி கூற பதட்டத்தில் ஆராத்தியா முகமும் மாற,
“எனக்கு போய்டு வரனும். நான் வந்திடறேன் கால் மணி நேரத்துல…” என்றவள் குரலில் பிடிவாதம்.
திரவியம் வரும் முன்பே இதனை தெரிந்துகொள்ள வேண்டும். உண்மை என்றால் அவனிடம் முதலில் சொல்லவேண்டும்.
‘எதுவுமே இல்லையா நான் உனக்கு?’ என்றவனிடம் அந்த எண்ணத்தை தகர்க்க வேண்டும்.
அதற்காக மட்டுமன்றி அவனிடம் பகிரவேண்டும் என அவளின் ஆழ்மனம் பேராசை கொண்டது.
என்னவோ அவனும், அவளும் மட்டுமே அவ்வுலகில் ஜனித்திருப்பதை போல, அவர்களுக்கான புது உலகம் வரவிருப்பதை போல ஒரு உருவகம் தாமதிக்கும் நொடியில் பெரிதாய் வளர்ந்துகொண்டே இருந்தது.
‘கடவுளே நான் போய்ட்டு வந்து செக் பன்ற வரை என்னை தனியா விடு’ என உள்ளுக்குள் வேண்டிக்கொண்டவள் நேராக ஸ்கூட்டி கீயை எடுத்துக்கொண்டாள்.
சீதாவிற்கு மகளை தனியே செல்ல அனுமதிக்கவே முடியவில்லை. மகன்கள் சொல்லவில்லை என்றாலும் அவராகவே மகள் இருந்த அந்த ஒரு வாரத்தையும் கவனித்திருக்க நிச்சயம் பிரச்சனையில் தான் வந்துள்ளாள் என தெரிந்துகொண்டார்.
அதனைகொண்டே திரவியம் வந்து கேட்டதும் உடனே மகளை அனுப்பியும் வைத்துவிட்டார் சீதா.
இப்போது என்னவோ என மனது பதற ஆராத்தியாவை அனுப்பவே முடியவில்லை அவரால்.
“நான் வேணும்ன்னா கூட வரவா தியா?…” என சீதா கேட்க,
“நீங்க இருங்கத்தை. நான் போய்டு வரேன்…” என பூமி சொல்ல,
“குழந்தை தூங்கறான். நீ இரு, நான் போறேன்…” என்றாள் இந்து.
அத்தனைபேரும் நான் நான் என்று முன்னே நிற்க அடுத்து அபிராமியும் எதுவும் சொல்லிவிடுவாரோ என்னும் பயத்தில்,
“நான் எங்க ஓடியா போறேன்? இங்க ப்ரெண்டை பார்த்துட்டு வர இத்தனை போராட்டமா? விடுங்களேன்…” என்றவள் சாவியுடன் வேக நடையிட்டவள் சட்டென நிதானமாகிவிட்டு பின்னால் திரும்பி பார்க்க நினைத்தாள்.
நிச்சயம் அத்தனைபேரும் அதிர்ந்து தான் நின்றிருப்பார்கள் என்பதில் அத்தனை திண்ணம்.
ஆனாலும் வேறு வழியிருக்கவில்லை. அவளுக்கு நேரமும் மிக குறைவாக இருந்தது.
திரவியம் வரும் முன் தெரிந்துகொள்ள வேண்டுமே என்று கிளம்பியவள் நேராக மெடிக்கல் ஷாப் வந்து தேவையானதை வாங்கிக்கொண்டாள்.
‘அத்தனை பெரிய மனுஷியா நீ?’ என மனதும் அவளை எக்களிக்க முகத்தில் ஒரு நிறைவு.
ஆமாம் இனிமேல் அப்படித்தானே இருக்க வேண்டும், பொறுப்பாக, பொறுமையாக என நினைக்கையில் தானாக ஒரு புன்னகை வந்தமர்ந்தது.
நேராக கோவிலுக்கு வந்தவள் மனதார வேண்டிக்கொண்டு வீட்டிற்கு கிளம்பினாள்.
உள்ளே வர ஹாலில் அமர்ந்திருந்த பெண்கள் நால்வர் முகத்திலும் கொஞ்சமும் சிரிப்பில்லை.
அதை பார்த்தாலும் உடனே சென்று பேசும் பொறுமையற்றவள் அவர்களை பார்த்துக்கொண்டே அறைக்குள் நுழைந்துவிட்டாள்.
அதில் பூமிகாவின் மனது தான் இன்னும் காயம்பட்டது. இப்படி அவளிடம் ஆராத்தியா இருந்ததே இல்லை என்பதால்.
உள்ளே வந்தவள் கதவை தாழிட்டுவிட்டு தனது ஸ்லிம் பேக்கில் இருந்து அதனை எடுத்து குளியலறை சென்றாள்.
அந்த பரிசோதனையில் அவள் விழிகள் கொஞ்சம் கொஞ்சமாய் விரிய துவங்க அதற்குள் இதயத்துடிப்பில் அவளின் பொறுமை இன்னும் குறைந்தது.
“ஓஹ் யெஹ்…” என உற்சாகத்தில் துள்ளிக்கொண்டவள்,
“தப்பு தப்பு…” என தன் வயிற்றை பிடித்துக்கொண்டாள்.
முகமெல்லாம் அத்தனை சந்தோஷமும், பரபரப்பும். வீட்டில் சொன்னால் எத்தனை கொண்டாடுவார்கள் என்று இருந்தது.
விரல்கள் நடுங்க அந்த கோடுகளை கைக்குள் எடுத்து வைத்து பார்க்க அத்தனை சிரிப்பு.
“அச்சோ, நிஜமாவே நான் அம்மா. இப்ப என்ன பன்றது நான்?…” என கண்ணாடியின் முன் தன்னை பார்த்துக்கொண்டே சொல்லியவள் வயிற்றையும் பார்த்து லேசாய் வருடினாள்.
திரவியத்திற்கு தெரிந்தால் எப்படி அதனை எடுத்துக்கொள்வான் என நினைத்தவளுக்கு அவன் சொல்லிய அடுத்த வருட கல்லூரி படிப்பும் ஞாபகம் வர இன்னுமே சிரிப்பு.
“பார்ப்போம் இந்த அத்தான் என்ன தான் சொல்றாங்கன்னு…” என சிரித்துக்கொண்டவள் பின் அதனை பேக்கில் பத்திரம் செய்துவிட்டு வெளியே வந்தாள்.
வந்ததும் அவர்களிடம் சொல்வோமா என யோசித்து பின் வேண்டாம் முதலில் அவனிடம் சொல்வோம் என எண்ணியபடி சந்தோஷமாக வெளியே வந்தவள் முகம் மாறியது.
பூமிகாவிற்கு விழிகள் கலங்கி இருக்க மடியில் மகனை வைத்துக்கொண்டு விசும்பிக்கொண்டு இருந்தாள்.
அழுதிருக்கிறாள் என்று புரிந்துபோக மெதுவாய் அவளருகே வந்தாள் ஆராத்தியா.
“அண்ணி…” என அவள் தோளில் கை வைக்க,
“போ அதான் அப்படி பேசிட்டு போய்ட்டியே. இப்பலாம் என்கிட்டே எதுவும் சொல்லனும்ன்னு இல்லை உனக்கு…” என்னும் பொழுதே மற்றவர்கள் முகமும் வாடி இருக்க,
“அண்ணி ப்ளீஸ், எனக்கு தனியா போகனும்னு தோணுச்சு. கூட்டிட்டு போகனும்ன்னா போயிருக்க மாட்டேனா?…” என ஆற்றாமையுடன் கேட்க,
“இதுவரைக்கும் நாம சேர்ந்து தானே போனோம். எப்பருந்து உனக்குன்னு தனியா தோணுச்சு? எனக்கு தெரியும் அண்ணனோட உன் கல்யாணத்துல இருந்தே எங்க எல்லார் மேலையும் உனக்கு கோவம்….”
பூமிகா சட்டென பேசிவிட ஆராத்தியா மட்டுமின்றி அத்தனைபேரும் அதிர்ந்து பார்த்தனர் பூமிகாவை.