பூவனம் – 24
வரும் வழியில் மௌனம் மட்டுமே இருவரிடத்திலும். கோவை வந்ததும் படுக்க சென்றவளை பிடித்து சாப்பிட அமர வைத்தான்.
தானும் உண்டுவிட்டு வர அறைக்குள் இருந்து வேகமாய் வெளியே வந்தவள் அவனை மோதி நிற்க,
“ஹேய் என்ன இது? என்ன அவசரம் தியா?…” என அவளை நிறுத்தியவன்,
“எங்க போற?…” என்றான்.
“இப்ப வந்திடறேன் த்தான்…” என்றவள் கையில் ஜீப் சாவி இருந்தது.
“தியா…” என்றதற்கு பதிலளிக்காமல் அவனை தாண்டிக்கொண்டு சென்றவள் முகத்தில் ஏகத்திற்கும் பரபரப்பு.
தானும் அவளின் பின்னே செல்ல ஜீப் முழுவதும் எதையோ தேடிக்கொண்டிருந்தாள்.
“இந்த நேரம் ஜீப்க்குள்ள என்ன பன்ற தியா? டைமாகுது. தூங்க வேண்டாமா? வெளில வா…” என திரவியம் சத்தம் போடவும் வெளியே வந்தாள்.
“உள்ள போ. லாக் பண்ணிட்டு வரேன்…” என்றவன் ஜீப்பை பூட்டிவிட்டு உள்ளே வந்து கதவை பூட்டி அறைக்குள் சென்றான்.
கோவை வரவுமே வீட்டிற்கு அழைத்து தாங்கள் வந்துவிட்டதாய் சொல்ல ஆராத்தியாவுக்கு அத்தனை குற்ற உணர்வு.
எப்படி இனி குடும்பத்தினரிடம் பேச, அவர்களை பார்க்க என்று எப்படி செல்ல என யோசித்துக்கொண்டிருந்தவளுக்கு அடுத்ததாய் தலைவலி.
“இப்படி பண்ணிட்டேனே?…” என அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாய் நடக்க உள்ளே வந்தவன் விழிகள் இடுங்கியது.
இத்தனை தூரம் டென்ஷனாக இருக்க என்னவாக இருக்கும் என்று யோசித்தவன் அணிந்திருந்த டிஷர்ட்டை கழற்றிவிட்டு வெஸ்ட்டை எடுத்து அணிந்துகொண்டான்.
“தியா இங்க வா…” என்றதும் அவனின் முன்னே உடனே வந்து நிற்க அவளின் முகத்தையே ஆராய்ந்து பார்த்தான்.
ஒருவேளை வீட்டில் இப்படி பேசிவிட்டு வந்ததனால் இப்போது யோசிக்கிறாளோ என்று.
“உட்கார்…” என அமர சொல்ல,
“ம்ஹூம்…” என்றாள்.
அவளுக்கு இப்போது திரவியத்திடம் சொல்லவேண்டும். ஆனால் எப்படி என தலையை பிய்த்துக்கொண்டு இருந்தாள்.
பரிசோதித்தது இருந்திருந்தால் அதனை அவனிடம் காண்பித்துவிட்டு தெரியப்படுத்த தான் அவள் நினைத்திருக்க எல்லாம் மாறிவிட்டிருந்தது தன்னாலேயே.
“என்ன உன் பிரச்சனை? வீட்டுல பேசினதை நினைச்சு ஃபீல் பன்றியா?…” என்று கேட்க நொடியில் அந்த நினைவில் விழிகள் கலங்கியது.
“ப்ச், என்ன இதுக்கு போய் அழுதுட்டு?…”
“தப்பு தானே த்தான் நான் பேசினது. எல்லாரையும் எவ்வளோ ஹர்ட் பண்ணிட்டேன்?…”
“ஓகே, பேசியாச்சு. இனி ஃப்ரீயா இருப்ப தானே? எதுவும் சொல்ல முடியலை, பேச முடியலைன்னு தானே உனக்குள்ளையே டம்ப் பண்ணி வச்சிருந்த. இனிமே நார்மலாகிருவ தானே?…” என்றான் அவளின் கன்னம் தட்டி.
“தெரியலை…” என்றவள்,
“அத்தான் வரப்போ நான் என் ஸ்லிம் பேக் எடுத்துட்டு வந்தேனா?…” என,
“ஸ்லிம் பேக்கா?…” என்று யோசித்தவன்,
“இல்லையே. நீ ஹால்ல இருந்த மாதிரியே தான் வந்திட்ட…” என்றான்.
“ஓஹ்…” என கட்டிலின் ஓரத்தில் அவள் அமர்ந்துகொள்ள நகர்ந்து வந்து அவள் முகவாயை பற்றி தன் பக்கம் திருப்பினான்.
“என்னவாம்?…” என்றதும் அவள் சொல்வதா வேண்டாமா என யோசித்தபடி விழித்தாள்.
இன்னொருபுறம் பூமிகாவிற்கு அழைத்து அதை போட்டோ எடுத்து அனுப்ப சொல்லி காட்டுவோம் என்றால் அதற்குள் அங்கே அத்தனைபேரிடமும் காட்டிவிட்டு தான் இங்கே விஷயம் வரும் என அதையும் கைவிட்டாள்.
“என்ன தியா? பேக்ல என்ன?…” மீண்டும் திரவியம் கேட்க,
“நாளைக்கு என் ஸ்லிம் பேக்கை அங்கருந்து யார்டையாச்சும் குடுத்துவிட சொல்றீங்களா?…” என்றாள்.
“அதான் ஏன்?…” என்றவன்,
“ஓஹ், உன் மொபைல் எல்லாம் அங்கயே விட்டுட்டு வந்ததாலையா?…” திரவியம் கேட்க இல்லை என்றவள் பின் உடனே சுதாரித்து ஆமாம் என்றாள்.
“நீ பொய் சொல்றியா தியா?…” அவன் முறைக்க அவனிடம் அதற்கு மேல் முடியவில்லை.
எழுந்து கண்ணாடியின் அருகே வந்து நின்றுகொண்டாள் ஆராத்தியா. அவளின் இந்த பாவனைகள் மறைக்க முயற்சிக்கும் வெட்கம், அதையும் மீறி முகத்தில் புதிதாய் ஒன்று.
சிரித்துக்கொண்டே அவளை பின்னிருந்து அணைத்தவன் அவளின் தோளில் தாடையை ஊன்றினான்.
“என்னவாம்? வெட்கப்படற, யோசிக்கிற. என்னன்னு சொல்லு…” என கேட்க,
“பேக்ல தான் இருக்கு. அதான் காமிக்கனும் த்தான்…”
“ஓகே, நான் பூமிட்ட சொல்லி என்னனு அனுப்ப சொல்றேன். காமி…” என தனது மொபைலை எடுக்க,
“அச்சோ வேண்டாம். வேண்டாம்…” என தடுத்தாள்.
“அப்ப இப்பவே சொல்லு…”
“ம்ஹூம், சொல்லவெல்லாம் மாட்டேன்…” சிணுங்கலாய் அவனின் முதுகில் ஒண்டிக்கொள்ள,
“ஹேய் தியா என்னடா பன்ற? சத்தியமா முடியலடி. சொல்லிடு…”
“காமிக்கனும்…”
“அடிங், முன்னாடி வா. என்ன காமிக்கனும்? சொல்ல முடியாததா என்ன?…” என்றான் திரவியம்.
நகர்ந்ததில் மீண்டும் அவன் கண்ணாடி முன் வந்து நிற்க ஆராத்தியா அவனின் இடையை கட்டிக்கொண்டபடி முதுகில் முகம் பதித்திருந்தாள்.
தன்னை சுற்றி வளைத்திருந்த அவளின் கரத்தை பற்றிக்கொண்டவன் கண்ணாடி வழியே அவள் முகம் பார்க்க ஒருபக்கம் தான் தெரிந்தது அவள் சாய்ந்திருந்ததில்.
“தியா இப்ப நீ சொல்லலைன்னா நான் பூமிக்கு கால் பண்ணி உன் பேக்ல என்னன்னு பார்க்க சொல்லிருவேன்…” என்றான் அதட்டலும் கொஞ்சலுமாக.
“ப்ளீஸ் அத்தான்…”
“அப்போ சொல்லு…” என்றவன்,
“வேண்டாம், எழுதி காமியேன்…” என கேட்க சிரித்துக்கொண்டே லேசாய் நகர்ந்தவள் அவனின் முதுகில் எழுத புருவம் சுருங்க யோசித்தவன்,
“நோ நோ, திரும்ப எழுது தியா…” என்றான்.
கண்ணாடியில் பூரண நிலவாய் அவள் முகம், அவர்களின் பூரணத்துவத்தை அவனுக்குமே வடிவமில்லா எழுத்துக்களால் உணர்த்தியவள் அவன் அமைதியில் கண்டுபிடித்துவிட்டான் என உணர்ந்து மீண்டும் அவன் முதுகில் சாய்ந்துகொண்டாள்.
இருவரிடமும் அந்த சில நொடிகள் மௌனம் மட்டுமே. அசையாமல் நின்றிருந்தவன் தன்னையே உருவகப்படுத்தினான் மனதிற்குள் சிறிதாய், குழந்தையாய், சிசுவாய்.
“திரும்ப எழுது தியா…” என்றவன் குரல் கரகரத்திருக்க விழிகள் லேசாய் கலங்கியிருந்தது.
இதனை சொல்லத்தான் அங்கே அத்தனை தவித்தபடி நின்றிருந்தாளா தன்னுடைய உயிர்ப்பெண்.
மீண்டும் அவளின் விரல்கள் ‘நீங்க அப்பா’ என எழுதி அவனுக்கு உணர்த்த அவ்விரல்கள் வழியே தன் அடுத்த தலைமுறையின் ஜனனத்தை ஸ்பரிசித்தான்.
“தியா…” என அவளை முன் கொண்டுவந்து அணைத்துக்கொள்ள மென்மையாக சிறு நேர அணைப்பு.
“அதான் சொல்லனும்னு சொன்னேன். காமிக்கனும்னு…” என்றாள் மெல்லிய குரலில்.
“எப்போ செக் பண்ணின?…” என்றதும் அதையும் அவனிடம் பகிர்ந்துகொண்டாள்.
அவனருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தாள். தன்னை நிமிர்ந்து பார் என்றோ, வம்பிழுக்கவோ எதுவும் செய்யவில்லை அவன்.
பேசட்டும், தன்னிடம் மனம் விட்டு பேசட்டும். தன்னை மட்டும் அவள் தேடியிருக்க அவளின் இந்தவித அணுகுமுறையே போதுமானதாய் இருந்தது.
அதனை மனதிற்கு பிடித்தமானதாக்கிக்கொண்டான் திரவியம். அத்தனை சந்தோஷம்.
நெஞ்சை முட்டும் ஆர்ப்பரிப்புடன் அவன் இருக்க அவளின் விரல்களை கோர்த்துக்கொண்டான்.
“அதான் எங்க அங்க இருக்க வச்சா உங்ககிட்ட முதல்ல சொல்ல முடியாதோன்னு தோணுச்சு த்தான்…” என்றவள் உச்சந்தலையில் முத்தமிட்டான்.
“ஆனா யாரையாச்சும் நான் கஷ்டபடுத்திட்டே இருக்கேன்ல. முதல்ல உங்களை. இப்ப வீட்டுல எல்லாரையும்…”
“சரியாகிடும். உன்னை கோச்சுக்க மாட்டாங்க…”
“ரொம்ப தப்பா பேசிட்டேன்…”
“தியா இங்க பார். பேசின வார்த்தைகளை அள்ள முடியாது. உன் மனசுல வச்சிருந்தா இன்னுமே ஸ்ட்ரெஸ் தான் உனக்கு. முடிஞ்சதுல. விடு…” என்றான் தன்மையாக,
“ஹ்ம்ம்…” என்றவள் படுக்க நகர்ந்தாள்.
“எங்க போற தியா?…”
“போய் தூங்க…”
“அதுக்குள்ளையா?…”
“அப்பவே தூங்க சொன்னீங்க த்தான் நீங்க…”
“இப்ப வேண்டாம்ன்னு சொல்றேன்…” என்றவன் பார்வையின் சங்கதி உணர்ந்தவள்,
“முதல்ல டாக்டர்கிட்ட கன்சல்ட் பண்ணனும்…” என்றாள் மெல்லிய நாணத்துடன்.
அவள் இமை தாழ்த்தி கொஞ்சம் சிரிப்பும், கொஞ்சும் வெட்கமுமாய் பேச திரவியம் முகத்தில் ரசனை மின்னல்கள்.
“இதெல்லாம் தியாவுக்கு எப்படி தெரிஞ்சது?…”
“கூகுள் பார்த்தேன். அதோட கொஞ்சம், ஹ்ம்ம். தெரியும். கேட்காதீங்க. கேட்காதீங்க…” என்றாள் தலையசைத்து கண்களை மூடிக்கொண்டு.
ஆசைகள் ஆர்ப்பரிக்க அவளின் முகத்தை நிமிர்த்தியவன் கை விரல்களின் சில்லிடல் பெண்ணை சிலிர்க்க செய்தது.
“அதென்ன என்கிட்ட முதல்ல சொல்லனுமாம் தியாவுக்கு? எப்பருந்து அத்தானை பிடிச்சுதாம்?…” என்றான் கள்ளப்புன்னகை சூடி.
“அதெல்லாம் தெரியாது, விடுங்க…” என நழுவ பார்க்க,
“நில்லுடாம்மா…” என்றான் அவளை வளைத்து பிடித்து.
“என்ன கேட்டாலும் தெரியாது. விடுங்க. போறேன். தூங்கனும்…” மனப்பாடம் போல சொல்ல சொல்ல அத்தனை சிரிப்பு திரவியம் முகத்தில்.