மனைவியின் முடிவுகள் எல்லாம் அவன் வசமே. ஆராத்தியாவும் மறுப்பதற்கில்லை.
தயாளன், அபிராமிக்கு மகன் வயிற்று பிள்ளை. தென்னரசு, சீதாவிற்கு ஒரே மகள்.
உடன் வைத்திருந்து பார்க்க முடியாததால் இங்கே வந்து பார்க்க, செல்ல என இருந்தனர்.
“ஊர் உலகத்துல எல்லாம் யாரும் பிள்ளையே பெத்துக்கலையா? இவன் ரொம்ப பன்றான்டா. ஏன் ஊட்டில இருக்கறவங்க கீழே இறங்கி வரதில்லையா இந்த மாதிரி நேரத்துல?…” ஆதவன் ஒரே புலம்பல்.
மாதத்தில் பாதி நாள் சீதா வந்து இருந்துகொள்வார் மகளை கவனிக்கிறேன் என்று.
மீதி நாட்கள் அபிராமி வந்துவிடுவார். இவர்களுடன் இந்துவும், பூமியும் மாற்றி மாற்றி வர ரகுவும், ஆதவனும் தான் புகைந்து போனார்கள்.
“நீ வேணும்னே திரும்ப திரும்ப பன்ற. மெல்ல மெல்ல மலையில ஏற முடியாதா? நீ அப்படியே இருந்துட்டு போ. எதுக்குடா இவங்களும் வராங்க…” என்றான் ஆதவன் தன் மனைவியை பார்த்து.
பூமிகாவிற்கு எத்தனையானாலும் அண்ணன் என்று வந்துவிட்டால் மற்றவர்கள் இரண்டாம்பட்சமே.
‘அடுத்த தென்னரசு, அபிராமி’ என அத்தனை கிண்டல் செய்து ஓட்டுவான் அவர்களை ரகு.
ஆராத்தியாவை யார் பார்க்க வந்தாலும் அவர்களுடன் வந்து இருந்துவிட்டு தான் வருவாள் பூமிகா.
“என்னம்மா எப்ப பார்த்தாலும் இவளையும் கூட்டிட்டு போறீங்க?…” என சீதாவிடம் தான் பேசுவான் ரகு.
“இதுக்கு நீ சந்தோஷப்படனும் ரகு. அதுவுமில்லாம பூமிக்கு தனியா இருக்க வெறுக்குன்னு இருக்கும். உனக்கு தெரியாதா?…” என சொல்லிவிட வேறு வழியின்றி அமைதியாகி போவான்.
இதோ வளைகாப்பும் முடிந்து வந்திருந்தவர்கள் எல்லாம் கிளம்பிக்கொண்டிருக்க தாத்தா வந்துவிட்டார் சொல்லிக்கொண்டு செல்வதற்கென.
“சொவமா பிள்ளையை பெத்து குடுத்தா. அதுவும் பொம்பளை பிள்ளையா பெத்துக்க. அப்பத்தான உங்கண்ணன் மவனுக்கு கட்டி வைக்க முடியும். உறவு விட்டு போவாதுல…” என்றவரின் தலையில் எதையாவது போட்டால் என்னவென்று வந்தது ஆராத்தியாவிற்கு.
உடன் இன்னும் சில உறவுகள் இருக்க அத்தனைபேரையும் வைத்துக்கொண்டு பேசமுடியாமல் பொங்கிய உணர்வை கட்டுக்குள் வைக்க முயன்றவள் எல்லோரும் கிளம்பிய அடுத்த சில நிமிடங்களில் மயங்கி சரிந்தாள்.
அத்தனைபேரும் பயந்து அப்படியே மருத்துவமனைக்கு ஓடினார்கள் ஆராத்தியாவை தூக்கிக்கொண்டு.
“என்னண்ணி இது? திருஷ்டி பட்ட மாதிரி ஆகிருச்சு…” சீதா அழுது கரைய,
“பிபி அதிகமாகி ரொம்ப ஸ்ட்ரெஸ் பண்ணிருக்காங்க. அதான் மயக்கம்…” என்றார்.
“நாங்க போய் பார்க்கலாமா?…” சீதா கேட்க,
“மயக்கம் தெளியவும் ஒவ்வொருத்தரா பார்க்கலாம். கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க…” என சொல்லிவிட்டு திரவியத்திடம்,
“நீங்க என்னோட வாங்க…” என்று நகர்ந்தார்.
அதுவே அவனை அச்சமூட்ட அவருடன் பின்னே சென்றவன் திரும்பி ஆதவனை பார்த்தான்.
“இந்து நீ பார்த்துக்கோ வந்திடறேன்…” என ஆதவன் திரவியத்துடன் செல்ல,
“டாக்டர் இவர் தியாவோட அண்ணா…” என அறிமுகப்படுத்தியவன்,
“சொல்லுங்க டாக்டர்…” என்றான்.
“இப்போதைக்கு பயப்படற அளவுக்கு எதுவுமில்லை. டெலிவரி வரை கொஞ்சம் கவனமா பார்த்துக்கோங்க. இவ்வளோ பிரஷர் ஏறிருக்கு. அதுவும் இந்த மந்த் டெலிவரி ஆகிடும்ன்ற நிலமையில…” அவரின் முகத்தில் அதிருப்தி.
மேலும் சில அறிவுரைகளை சொல்லிவிட்டு அவர் முடிக்கவும் ஆதவனுடன் எழுந்துகொண்டவனுக்கு என்ன திடீர் பிபி என யோசிக்க மயங்கும் முன் இறுதியாக என்ன நடந்ததென யோசித்து பார்க்க தாத்தா பேசியது ஞாபகம் வந்தது.
“ஷிட்…” என தலையில் அடித்துக்கொண்டான் திரவியம்.
“என்ன தீரா?…” என்றதும் ஒன்றுமில்லை என தலையசைத்தவன் ஆராத்தியா இருக்கும் அறைக்கு வந்தான்.
அவள் ஏற்கனவே விழித்திருக்க ஒவ்வொருவராய் அவளிடம் பேசிக்கொண்டிருந்தனர்.
“உள்ள போ தீரா. நாங்க எல்லாரும் பார்த்துட்டு வந்துட்டோம்…” என தென்னரசு சொல்ல உள்ளே இந்துவும் பூமிகாவும் பேசிக்கொண்டிருந்தனர்.
வளைகாப்பில் கட்டியிருந்த பட்டுப்புடவை சகிதம் கையில் பழச்சாறுடன் நகைகள் கழற்றப்பட்டு தலையில் இருந்த அலங்காரமும் கலைக்கப்பட்டு சோர்ந்த ஓவியமாய் அமர்ந்திருந்தாள்.
இந்து சொல்வதற்கு எல்லாம் தலையசைத்துக்கொண்டிருந்தவள் பேசியபடியே ஜூஸை குடிக்க சட்டென புரையேறியது அவளுக்கு.
“ஹேய் பார்த்து தியா…” என்ற பூமி அவளின் தலையில் லேசாய் தட்டி நெஞ்சை நீவி விடவும் திரவியம் அவளை பார்த்துக்கொண்டே உள்ளே வந்தான்.
“வாங்கண்ணா…” என்ற பூமி,
“நீங்க பேசிட்டிருங்க…” என்று எழுந்து வெளியேற இந்துவும் சென்றுவிட்டாள்.
“ஏன் தியா இப்படி பன்ற?…” என மெல்லிய குரலில் கேட்க ஆராத்தியா முழித்திருந்தாலும் விழிக்கவே இல்லை.
அதன் பின்னர் இரவு வீடு வந்து சேர பத்து மணியானது. ஆளாளுக்கு அத்தனை அறிவுரைகள் அவளுக்கு.
மறுநாள் ஊட்டிக்கு கிளம்ப இருந்தவர்களும் இந்த சூழ்நிலையில் கிளம்பும் நிலையிலில்லை.
வீடு வந்து உடை மாற்றி குளித்து முடித்து வர சீதாவும், அபிராமியும் அவளுக்கு திருஷ்டி சுற்றி போட்டனர்.
சீதாவின் மனதில் இன்னும் சஞ்சலம் விலகவில்லை. அதிலும் மகள் விழுந்த கோலம் இப்போதும் அபிராமியிடம் சொல்லி சொல்லி மாய்ந்து போனார்.
“எப்படி விழுந்தா பாருங்க. வயித்து பிள்ளை மட்டும் நெஞ்சுக்கு ஏறியிருந்தா? நினைக்கவே முடியலை அண்ணி…” என விசும்பலுடனே தான் இருந்தார்.
ஒன்று மாற்றி ஒன்று ஏதாவது மகள் விஷயத்தில் நடந்துகொண்டே தான் இருக்கிறது.
பிள்ளை உண்டாகி இருமுறை கீழே விழ இருந்து கடைசியில் நொடியில் சுதாரித்தது, இடையில் ஒருமுறை காய்ச்சல் கண்டு என்று இத்தனை மாதத்தில் ஆராத்தியா அவர்களை படுத்தி வைத்தாள்.
“ஏன்டி இப்படி பன்ற?…” என சீதா தாளமாட்டாமல் கேட்க,
“ம்மா நான் என்ன வான்னா சொல்றேன். தானா நடக்குது…” என்பாள் ஆராத்தியாவும்.
“திருஷ்டி தான். ரெண்டு குடும்பமும் ஒத்துமையா இருக்கறது, பொண்ணை குடுத்து பொண்ணை எடுத்திருக்கறது எல்லாம் திருஷ்டி எல்லாருக்கும்…” என அத்தனை நம்பி பேசினார் சீதா.
“நல்லா நினைச்சு பாருங்க. இந்த தியா கல்யாணம் ஆனதுல இருந்து எவ்வளோ மனஸ்தாபம், பிரச்சனை, இப்ப இப்படி? ஒரு நல்ல நாள் விசேஷம்ன்னு முழுசா சந்தோஷப்பட்டுக்க முடிஞ்சதா?…” என ஓயவில்லை அவர்.