“வேணும்னே எதுவும் பண்ணலையே நீ?…” என்றார் சீதா தண்ணீர் கொட்டியதை பற்றி கேட்டு.
“வேணும்ன்னே பண்ணிருந்தா ஒவ்வொன்னுலையும் பண்ணியிருப்பேன். ஏன் ம்மா?…” என ஆராத்தியா சலித்ததும்,
“அத்தை நீங்க போங்க. நான் சொல்லிக்கறேன்…” என்றாள் பூமிகா சீதா கை பிடித்து.
“சரி பூமி…” என்ற சீதா,
“கொண்டுவந்த பேக்ல உன்னோட ட்ரெஸ் இருக்கு. எடுத்துக்கோ. மாத்திட்டு ரெடியாகு. முகத்தை கொஞ்சம் பவுடர் போட்டு வச்சுக்கோ. இந்த மழைல, குளிர்ல இப்படி வேர்க்குது உனக்கு…” என கூற,
“ஆமா என்னை ஏன் தேடினீங்க? சொல்லவே இல்லை…” என்றாள் தியா தன்னுடையை எடுத்தபடி.
ஆராத்தியா கட்டியிருக்கும் புடவை அபிராமியின் தேர்வு. அவர் எடுத்து கொடுத்த உடைகள் தான் இன்றைய விழாவில் அனைவரும் அணிந்திருப்பது.
தன் வீட்டில் எடுத்த உடைகள் விசேஷம் முடிந்ததும் மாற்றிக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டார் சீதா.
ஏற்கனவே அந்த மனதாங்கலில் இருந்தவளுக்கு இப்போது பெரும் நிம்மதியானது.
அன்று காலை எழுந்து மண்டபத்திற்கு கிளம்பும் பொழுதே அபிராமி வந்துவிட்டார்.
வந்ததும் சீதாவின் புடவையை பார்த்துவிட்டு யோசித்தபடி நின்ற அபிராமி திருப்தியில்லாத பாவனையுடன்,
“நீ வேற மாத்திக்கோ சீதா. இந்த சேரி என்னவோ அவ்வளோ கிராண்டா இல்லை. எடுக்கும் போது நல்லாருந்துச்சு. இப்ப ரொம்ப ப்ரைட்டா இல்லையே…” என அபிராமி சொல்லவும்,
“அவ்வளோ தானே அண்ணி. மாத்திட்டு வரேன்…” என்று மறுபேச்சில்லாமல் சீதாவும் அபிராமியிடம் எதை கட்டலாம் என கேட்டு மாற்றிவிட்டு வந்துவிட்டதில் கோபமான கோபம் ஆராத்தியாவுக்கு.
அந்த புடவை எளிமையாக இருந்தாலும் அவ்வளவு அம்சமாய் இருந்தது சீதாவிற்கு.
தன்னுடைய தாயின் விருப்பம் என்ற ஒன்று கூட இதில் எதுவுமில்லையா என புகையாத குறை தான் ஆராத்தியா.
அதிலேயே காலையில் இருந்து மண்டை காய்ச்சலுடன் சுற்றியவளுக்கு வந்தனாவின் விஷயம் பூகம்பத்தை கிளப்பியது.
நிச்சயம் இதனை திரவியம் அப்படியே விடமாட்டான். ‘இன்றைக்கு பெரிய மண்டகப்படி தங்களுக்கு இருக்கிறது’ என நினைத்துக்கொண்டு தான் அவனின் பார்வையிலிருந்து தப்பி ஓடிவந்தாள்.
இப்போது புடவையை வேறு மாற்ற வேண்டியதாகியுள்ளது. தன் வீட்டில் எடுத்த உடையை அணிய போகும் சந்தோஷம் இல்லவே இல்லை.
எத்தனை கேள்விகள் இதற்கு வருமோ என கவலையுடன் உடை மாற்றினாள் ஆராத்தியா.
அதுவுமே புடவை தான். அதுவும் அபிராமி சொல்லியதற்காக எடுத்தது அந்த புடவை.
‘அடுத்து கல்யாணம் நம்ம தியாவுக்கு தான். வரவங்க பார்வைக்கு சின்ன பொண்ணாவா இருக்க முடியும்? புடவை எடு. மத்த விசேஷங்களுக்கு அவளுக்கு பிடிச்ச மாதிரி எடுத்து குடு’ என்றுவிட்டார்.
அவரின் பேச்சிற்கு என்றைக்கு மறுப்பிருந்திருக்கிறது தன் குடும்பத்தில்? சிறு விஷயமாக இருந்தாலும் அபிராமி முடிவே இறுதியானது.
தளையில்லை. ஆனால் தளை தான். ஆராத்தியா மற்ற விஷயங்கள் எதையும் தலையிடமாட்டாள்.
ஆனால் குடும்பத்தில் இப்படி சின்ன சின்ன விஷயங்கள், உடை, அணிகலன்கள் என்று எல்லாவற்றிலும் கருத்தை தெரிவிக்கும் அவர் மீது எழும் அதிருப்தியை அவளால் தவிர்க்க முடியாது போகும்.
உள்ளத்து சோம்பலை மறைக்க முடியாமல் உடையை மாற்றி வந்தவள் இன்னும் சீதா நிற்பதை பார்த்துவிட்டு,
“போகலையா நீங்க?…” என்றாள்.
“போகனும்…” என மகளை பார்ப்பதும், கையில் வைத்திருப்பதை பார்ப்பதுமாக இருந்தார்.
“என்னம்மா?…” என்றவள் சீதாவின் கையில் என்ன என பார்க்க சிறிய கல் வைத்த நெக்லஸ்.
புரிந்து போனது பார்த்ததுமே. ஒன்றும் சொல்லாமல் லேசாய் கலைந்திருந்த தலையை சீவியவள் முகத்தை ஒப்பனை செய்துகொண்டாள்.
பூமிகாவிற்கோ ஆராத்தியாவின் முகமே என்னவோ சரியில்லை என்பதை உணர்த்தியது.
அதுவும் வந்தனா சொல்லாமல் கிளம்பி சென்றிருக்க அரண்டுபோய் வந்த ஆராத்தியாவையும், அதனையும் சேர்த்து யோசித்தவள் மனதிற்குள் மத்தளம்.
சீதா சென்றால் மட்டுமே கேட்கமுடியும். மேடைக்கு சென்றுவிட்டால் நிச்சயதார்த்தம் முடியும்வரை எதுவும் பேச இயலாது என்று படபடப்புடன் பார்த்துக்கொண்டு இருந்தாள் பூமிகா.
“தியா, இந்த நெக்லஸ்…” என கையில் இருந்தததை காண்பிக்க,
“இதுவே மைல்ட் கலர். இந்த சேரிக்கு வொய்ட் ஸ்டோன் சூட்டாகாதும்மா. இதுவே போதுமே…” என்று சொல்ல உள்ளே அபிராமியின் வருகை.
ஒன்றும் சொல்லாமல் ஆராத்தியா அமைதியாக பார்க்க அதற்குள் அபிராமி பூமிகா, ஆராத்தியாவை பார்த்துவிட்டு,
“சேரி மாத்திட்டியா தியா?…” என்றார் அவள் வேறு புடவையில் இருப்பதை பார்த்து.