“ஓகே, போட்டுக்கோ. ரொம்ப இருக்கமா கழுத்தை ஒட்டி போடாம லேசா தளர்வா போட்டுக்கோ. அப்பத்தான் அழகா இருக்கும் தியா…” என்ற அபிராமி,
“சரி வா சீதா, அண்ணன் உன்னை கூப்பிடறார்…” என்று அழைத்துக்கொண்டு செல்லவும் ஆராத்தியா அந்த நெக்லஸை பார்த்துக்கொண்டே நின்றாள்.
“குடு தியா, நான் போட்டுவிடறேன்…” பூமிகா அதனை வாங்கி போட முகத்தில் சிரிப்பில்லை ஆராத்தியாவிற்கு.
இருவரின் உடையை பார்க்க கிட்டத்தட்ட ஆராத்தியாவுமே மணமகளை போல தான் நின்றிருந்தாள்.
தலையில் அலங்காரம், நெத்திச்சுட்டி இப்படி இல்லாதது மட்டுமே தான் வேறாக காண்பித்தது.
“கொஞ்சம் சிரியேன் தியாக்குட்டி…” என பூமிகா கன்னத்தை கிள்ளி அவளை கொஞ்ச,
“அண்ணி…” என பேச ஆரம்பிக்கும் முன் கதவு தட்டப்படும் சத்தம்.
“ப்ச், இதென்ன யாராச்சும் வந்துட்டே இருக்காங்க?…” என பூமிகா திறக்க போக,
“நான் போறேன். இந்து அண்ணியா தான் இருக்கும். வேற யாரும்ன்னா அப்படியே அனுப்பிட்டு வரேன்…” என்று தானே சென்றவள்,
“இந்த வந்தனாக்கா பத்தி உங்கட்ட சொல்லலாம்ன்னா முடியுதா?…” என சொல்லிக்கொண்டே ஆராத்தியா கதவை திறக்க அங்கே மகிழ்திரவியம்.
“ம்மாஹ்…” என்று நெஞ்சில் கைவைத்தவள் உள்ளே ஓடி வந்து பூமிகாவின் பின்னால் நின்றுகொண்டாள்.
“சத்தியமா நான் நானா போகலைண்ணி. வந்தனாக்கா தான் இழுத்துட்டு போனாங்க. என் கையை புடிச்சிக்கிட்டாங்க…” என பூமிகாவின் காதில் ஆராத்தியாமெல்லிய குரலில் சொல்ல பூமிகாவிற்கு ஒன்றும் புரியவில்லை.
“வாங்கண்ணா…” என்ற பூமிகா திரவியத்தின் முகத்தை வைத்தே அவனின் கோபத்தின் அளவை கண்டுகொண்டாள்.
அவன் வந்து நின்ற தோரணையே நெஞ்சில் நீர் வற்ற வைக்க ஆராத்தியாவால் நிற்க முடியவில்லை அங்கே.
“அண்ணி நான் அம்மாட்ட போறேன்…” என பூமிகாவின் காதருகே முணங்கிய ஆராத்தியா நகர எத்தனிக்கும் முன்,
“நில்லு தியா…” என்றான் திரவியம் அதட்டலாக.
ஒற்றை அதட்டாலே ஆராத்தியாவின் கண்களில் நீர் நிறைய போதுமானதாக இருந்தது.
“உன்கிட்ட மட்டுமா?…” என்றவன் பார்வை ஆராத்தியாவையும் தொட்டு நகர பயத்தில் மயக்கம் வராத குறைதான் அவளுக்கு.
தன்னிடம் பேசியதையும், தான் வந்தனாவிடம் சொல்லியவையும் தெரிந்தால் என்னாகுமோ என நினைக்கும் பொழுதே தலை சுற்ற ஆரம்பித்தது ஆராத்தியாவிற்கு.
“எனக்கே வர வழியில தான் தெரியும்…” பூமிகா சொல்ல,
“அப்பவே சத்தம் போட வேண்டாமா? பார்வையை வச்சே என்னன்னு கண்டுபிடிக்க வேண்டாமா பூமி?…”
“அவ பேரன்ட்ஸ் எல்லாம் முன்னாடியே கிளம்பிட்டாங்க. பஸ்ல தான் போறேன்னு சொன்னா. என்கிட்டே கூட பஸ் டைமிங், பஸ் நம்பர் எல்லாம் கேட்டா. நான் தான் நாங்களும் போறோமேன்னு சொல்லி கூப்பிட்டேன். வரமாட்டேன்னு கூட சொன்னா…”
பூமிகா தன் அண்ணனுக்கு நடந்ததை தெளிவுபடுத்திவிடும் வேகத்தில் சொல்ல இன்னும் முறைத்தான் திரவியம்.
“இல்லைன்னா அவங்கப்பா இங்க ட்ரான்ஸ்பர்ல வந்திருக்காங்களாம். வந்து மூணு வருஷமாச்சு. பிஜில தான் வந்தனா எங்க காலேஜ்ல ஜாயின் பண்ணினா…” என்னும் பொழுதே அண்ணன் கேட்கவருவது ஓரளவு தெளிவானது.
“ஒன்றரை வருஷம். ஹ்ம்ம். அவ்வளோ நாளா ஊட்டிக்கு எத்தனை மணிக்கு, எந்த பஸ்ன்னு அந்த பொண்ணுக்கு தெரியாதாமா?…” என்றதும் தான் ஆராத்தியாவிற்கும், பூமிக்குமே உரைத்தது.
“என்ன?…” என்றான் முறைப்புடன் தங்கையிடம்.
“நான் இதை யோசிக்கவே இல்லை ண்ணா…” என்ற தங்கையை கண்டன பார்வை பார்த்தான் திரவியம்.
“என்ன யோசிக்கலை? இதை கூடவா இன்னொருத்தர் சொல்லி தருவாங்க?…” என்றவன்,
“அந்த பொண்ணு நம்ம வீட்டு பொண்ணை கூட்டிட்டு வந்து மண்டபத்துக்கு வெளில எல்லாரும் பார்க்க என்கிட்டே அப்படி பேசும் போது பார்க்கறவங்க என்ன நினைப்பாங்க? யாருக்காச்சும் கேட்டிருந்தா?…”
“ஸாரி அண்ணா…” பூமிகாவிற்கு என்னவோ போலானது.
“இன்னொருக்க ஸாரி சொல்ல கூடாது. அன்ட் ஒன் திங் இனிமே அந்த பொண்ணுகிட்ட டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் பண்ணியே பழகுங்க…” என்றவன்,