அந்த குரலிலேயே அதுவரை நிமிராமல் பூமிகாவின் கையை பிடித்துக்கொண்டு இருந்தவள் உடல் தூக்கி போட நிமிர்ந்தாள்.
“யார் கூப்பிட்டாலும் கையை பிடிச்சிட்டு யார் முன்னாடியும் போய் நிக்க கூடாது. புரியும்ன்னு நினைக்கறேன்…” என்று சொல்லியவன் எழுந்து சென்றதும் ஆராத்தியா முகத்தை மூடிக்கொண்டாள்.
‘அழுகிறாளோ’ என கதவு வரை சென்றவன் திரும்பி பார்க்க ஆராத்தியாஅசையாமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.
மூடிய விரல்களுக்கு மத்தியில் அவன் கால்களை கண்டுகொண்டவள் மூச்சை இழுத்து பிடித்தவளை பார்த்துவிட்டு திரவியம் வெளியேறி கதவை அடைத்தான்.
அந்த அறைக்குள் மழையடித்து ஓய்ந்ததை போலிருந்தது மகிழ்திரவியம் வந்து சென்றது.
இப்படி யாருமின்றி தனியே சிக்கிகொள்வோம் என இருவருமே நினைக்கவில்லை.
அபிராமிக்கோ, வீட்டில் வேறு யாருக்குமோ தெரிந்தால் நிச்சயம் இதைவிட பெரிய பேச்சுக்கள் தான் வாங்கவேண்டி இருக்கும் என நினைத்தனர்.
அதுவும் இன்று என்று பார்த்தா இவ்வளவு பேச்சையும் வாங்கவேண்டும் என ஒருபுறம் பூமிகாவிற்கு அன்றைய நாளின் மகிழ்ச்சியே குறைந்ததை போலிருந்தாலும் இதோடு முடிந்ததே என்றும் தோன்றியது.
“ஹப்பா…” என்று நெஞ்சில் கை வைத்துக்கொண்டாள் பூமிகா.
“நீங்கலாம் எனக்கு அண்ணி…” என ஆராத்தியா கோபமாக எழுந்துகொண்டாள்.
“நானே இப்பத்தான் நிம்மதியா இருக்கேன். நீ வேற…” என அவளின் கை பிடித்து அமர சொல்லிய பூமிகா,
“அண்ணி, உங்களை திட்ட கூட முடியலை இன்னைக்கு. நானா ஏன் போறேன்? எனக்கு தெரியாதா?…”
“சரி சரிடா. என்னன்னு சொல்லு…” பூமிகா கொஞ்ச,
“ப்ச், போங்க…” என கையை தட்டி விட்ட ஆராத்தியா,
“வந்தனாக்கா நம்ம வீட்டுல எல்லாரையும் அறிமுகப்படுத்திவைக்க சொன்னாங்க. உங்கம்மாவை இந்து அண்ணியை எல்லாம் இங்கயே பார்த்துட்டாங்க. அம்மா, அப்பாவை எல்லாம் பார்க்கனும்னு சொல்லவும் கூட்டிட்டு போனேன்…”
“ஹ்ம்ம்…” பூமிகா கதை கேட்க,
“எனக்கு அந்நேரம் சிரிப்பா தான் இருந்துச்சு இவ்வளோ பன்றாங்களேன்னு ஒருபக்கம் பாவமாவும் கூட. மண்டபம் நல்லாயிருக்குன்னு அப்படியே வெளிப்பக்கமும் வந்தோம். கடைசில நான் பாவமாகிட்டேன்…” என ஆராத்தியா சொல்ல,
“அண்ணா அங்க தான் இருந்தாங்களா?…” என்றாள் பூமிகா முக்கிய கேள்வியாக.
“ஹ்ம்ம், அப்ப தான் உள்ள வந்திட்டு இருந்தாங்க. அதுக்கு முன்னாடியே வந்தனாக்காட்ட சொன்னேன். மண்டபத்தில இல்லை. வெளில போயிருக்காங்கன்னு…”
ஆராத்தியாவுக்கு தூக்கிவாரி போட பார்வை சட்டென திரவியத்திடம் செல்ல அவனுக்குமே அதிர்ச்சி தான்.
மொத்த குடும்பம் மட்டுமல்லாது, சொந்தங்களும் இருக்க உடனே இந்த பேச்சை ஆமோதிப்பாய் சில்லாகித்து ஆளாளுக்கு பேச ஆரம்பித்துவிட்டனர்.
அதில் கோபமுற்ற திரவியம் அபிராமியை ‘என்ன இது பேச்சு?’ என்பதை போல பார்த்தவன் எழுந்து செல்ல முயல தென்னரசு அவனின் கையை பிடித்து அமர வைத்துவிட்டார்.
“பொறுமையா இருப்பா தீரா. இல்லைன்னா ஆளாளுக்கு என்னவோன்னு பேசுவாங்க…” என்று அவனிடம் மெல்லிய குரலில் சொல்லிய தென்னரசு,
“இப்ப எதுக்கு பெரியப்பா இந்த பேச்சு? பொண்ணு படிப்பை முடிக்கட்டும். அப்பறம் பார்ப்போம்…” என்று சூழ்நிலையை சமாளிக்க முயன்றார்.
“அப்பறம் இன்னைக்கு இருந்துட்டு நாளைக்கு போகவேண்டியது தானே பெரியப்பா? வரப்பையே டிக்கட் புக் பண்ணிட்டு வந்திருக்கீங்க அடுத்தவங்க வீட்டு விசேஷம் மாதிரி?…” என அபிராமி அவரிடம் பேச்சை மாற்ற பேச்சு அதன் திசையில் சென்றது.
பேச்சு மாறினாலும் அங்கிருந்த உறவுகளான மற்றவர்களுக்குள் இந்த பேச்சு தொடர தான் செய்தது.
அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல் ஆராத்தியா முகம் கறுத்துவிட சேரிலிருந்து எழுந்துவிட்டாள்.
“என்ன தியா?…” என பூமிகா கேட்க,
“இல்ல, ட்ரெஸ் சேஞ்ச் பண்ணலாமேன்னு. இந்த நகை எல்லாம்…” என்ற பொழுதே,
“பூமி நீயும் கூட போ. ஆனா வீடு போற வரைக்கும் நீ இப்படியே தான் இருக்கனும். தியா மாத்திக்கட்டும்…” என்றார் அபிராமி.
சரி என எழுந்து செல்ல பூமிகாவும், இந்துவுமே அவளுடன் துணைக்கு அறைக்கு வந்தனர்.
அந்த பேச்சுக்களின் தாக்கம் ஆராத்தியாவின் மனதிற்குள் பயத்தின் ரேகைகள் விருட்சமாய் கிளை பரப்ப ஆரம்பித்தது.
விவரம் தெரிந்ததில் இருந்து இப்படி ஒரு பேச்சை காதில் வாங்கியதில்லை அவள்.
இன்று இப்படி அதுவும் கூடியிருக்கும் சபையில் அத்தனைபேர் மத்தியில் அந்த பெரியவர் போட்டுடைத்திருக்க சமைந்துபோனாள் ஒரு நொடி.
பேச்சிற்கு கூட அந்த பேச்சுக்கள் தாங்க முடியவில்லை. ‘அய்யோடா, வாய்ப்பே இல்லை. அதெல்லாம் முடியவே முடியாது’ என மனது அவளுக்கு மத்தளம் வாசித்தது.
அவர்கள் செல்லும் வரை அமைதியாக இருந்த திரவியம் நெற்றியை நீவியபடி தந்தையிடம்,
“வெளில போய்ட்டு வரேன்…” என்று சொல்ல,
“என்ன தீரா, இப்ப நாம வீட்டுக்கு கிளம்பனுமே?…”
“அதுக்குள்ள போய்ட்டு இப்ப வந்திடறேன் ப்பா…” என சொல்லிவிட்டு மண்டபத்திலிருந்து வெளியே வந்தான்.
“ஊஃப், நான்சென்ஸ்…” என்று பல்லை கடித்தவன் தனது பைக்கை நோக்கி சென்றான் மகிழ்திரவியம்.