நல்லநேரம் முடியும் முன் பூமிகாவையும், ரகுநந்தனையும் வீட்டிற்கு அழைத்து செல்ல வேண்டும்.
எல்லோரும் வீட்டிற்கு கிளம்ப ஆயத்தமாக தீனதயாளன் மகனுக்கு அழைத்துவிட்டார்.
“எங்கயிருக்க தீரா?…”
“இங்க பக்கத்துல தான். சொல்லுங்கப்பா…”
“கிளம்பனும்ப்பா. நேரமாகுது பாரு…”
“ஓகே, டென் மினிட்ஸ்ல வந்திருவேன்…” என்றவன்,
“இல்லைன்னா நீங்க புறப்படுங்க. நான் மண்டபத்துக்கு போய் மத்ததை பார்க்கறேன்…” என்றான் திரவியம்.
“இதை நீ இங்க இருந்தே செஞ்சிருக்கனும். நீ கிளம்பி போய் ஒருமணி நேரமாகுது. அட்லீஸ்ட் கால் பண்ணி கேட்டிருந்திருக்கனும் எப்போ கிளம்பறோம்ன்னு…” என்றதும் அவன் அங்கே அமைதியாக இருந்தான்.
“இங்க எல்லாம் முடிச்சாச்சு. மிச்சத்தை ஆதி பார்த்துப்பான். நீ வா. கூட அண்ணனா இருக்க வேண்டாமா?…” என்றதும் என்னவோ போலானது திரவியத்திற்கு.
“ப்ச், என்னால அங்க இருக்க முடியலை. அதான் சட்டுன்னு கிளம்பிட்டேன்…”
“புரியுது தீரா, ஆனா கோபப்படறதுல என்னாகிடும்? நமக்கு தெரிஞ்சு ரெண்டுபேர் பேசறாங்க. தெரியாம எவ்வளவோ? இன்னைக்கு நிச்சயத்துக்கு வந்தவங்கள்ல முக்கால்வாசி இதை தான் பேசினாங்க, என்கிட்ட நேராவே அம்மாட்ட கேட்டாங்க…”
“நம்ம ரகுவோட பூமி மூணு வயசு வித்யாசம் தான். ஆனா எனக்கும் தியாவுக்கும்? ப்ச், நாம ஒருவிஷயம் எதிர்பார்க்கும் போது நம்மக்கிட்டையும் அந்த எதிர்பார்ப்பு இருக்கும். சும்மா பேசிக்கிட்டு…” என்றான் கடுப்புடன்.
“பார்க்கறவங்க கல்யாண வயசுல இருக்கற பொண்ணா தான் பார்ப்பாங்க. அதுவும் இந்த வயசுன்னு சொன்னேனா…” என்றவர்,
“அதை விடு, நீ என்ன போன்லயே பேசிட்டிருக்கலாம்ன்னு இருக்கியா?…”
“கிளம்பிட்டேன். வந்துட்டே தான் இருக்கேன்…”
“பைக் ஓட்டும் போது பேச கூடாதுன்னு தெரியாதா? உங்கம்மாவுக்கு தெரிஞ்சா?…”
“ப்பா, ப்ளூடூத் தான். இதை அம்மாட்ட சொல்லிட்டிருக்காதீங்க…”
“ஹ்ம்ம், வா வா…” என்று போனை வைத்துவிட்டார்.
“என்னவாம்? கிளம்பிட்டானா?…” அபிராமி கேட்க,
“பக்கத்துல வந்துட்டானாம்…”
“ஹ்ம்ம், சரி. நீங்க உட்காருங்க. காலையில இருந்தே ரொம்ப வேலை உங்களுக்கும். நான் அதுக்குள்ளே எல்லாம் எடுத்து வைக்கறேன்…” என நகர்ந்துவிட்டார் அபிராமி.
இப்போதும் மகனிடம் பேசி முடித்துவிட்டு ஓரிடத்தில் அமர்ந்துகொள்ள அங்கே அறையிலிருந்து பொருட்கள், உடமைகள், நகைகள் எல்லாம் அடங்கிய பைகள் ஆளுக்கொன்றாய் தூக்கியபடி வர கடைசியில் ஆராத்தியாவும் வந்தாள்.
திரவியம் கிளம்பி செல்லும் முன் அறைக்குள் நுழைந்த பெண். அப்போது தான் வெளியே வர தயாளனின் பார்வை அவளிடம் தான்.
“என்னப்பா என்ன யோசனை? நான் சொல்றதை தானே யோசிக்கிற?…” என சற்று முன் பேசிய பெரியவர் வாயெல்லாம் சிரிப்போடு கேட்க,
“மாமா, ஏன் நீங்க வேற? இப்ப இந்த பேச்சு எதுக்கு?…” என்று கத்தரிக்க பார்த்தார்.
“என்ன எதுக்கு? மகனுக்கு எப்படியும் அண்ணன் மகளை தான அபிராமி எடுப்பா? அதை ஏன் தள்ளி போடனும்? ஒரே மேடையில முடிச்சிட வேண்டியது தானே?…” என்றவர்,
“அதுவும் ஆதவனுக்கு அடுத்து உன் மகனுக்கு தான் முடிப்பன்னு நினைச்சேன். ஏனா ஆதவனுக்கு மூணுவருஷம் கழிச்சு பிறந்தவன் திரவியம். அடுத்து மூணு மாசத்துல தான் ரகு பிறந்தான். சொல்ல போனா ரெண்டுபேருக்கும் ஒரே வயசு. ரகுவுக்கே இப்ப கல்யாணம்ன்னும் போது?…” என்றும் கேட்டார் அவர்.
மகன் வரும் நேரம் மீண்டும் அந்த பேச்சு துவங்க தயாளனுக்கு எங்கே திரவியம் வந்து, அவனிடமும் இவர் சொல்லிவிடுவாரோ என பதட்டமானது.
“செலவும் ஒரே செலவா போயிரும், கையோட கடமையை முடிச்ச மாதிரியும் இருக்கும்ல…”
“மாமா, கடமை முடியுதேன்னு முடியற விஷயமா? அடுத்து வாழ்க்கை இருக்கே? பொண்ணு படிக்குது. பையனுக்கு இன்னும் நேரம் கூடி வரலைன்னு ஜாதகம் சொல்லுது…”
“அதுக்கு எவ்வளோ நாள் தள்ளி போட முடியும்? மகனுக்கு முடிக்கனும்ல?…”
“முடிக்கனும் தான். இன்னும் நாலு மாசமாகனும். அதுக்கப்பறம் தான் திரவியம் கல்யாண பேச்சையே எடுக்க முடியும்…” என்றவர்,
“இப்பவே ஏன் மாமா சும்மா குழப்பிக்கிட்டு?…”
“அட ஒன்னுக்குள்ள ஒன்னு குடுத்தா சொத்தும் வெளில போகாதுல…” எனும் பொழுதே,
“இப்ப எதுக்கு பெரியப்பா சொத்து பேச்சு எல்லாம். நிச்சயத்தை பத்தி பேசுங்க. வர போற கல்யாணத்தை பத்தி பேசுங்க. அடுத்த பிள்ளைங்களுக்கு விசேஷம் நடக்கும் போது சொல்லாமலா?…” என வந்தமர்ந்து பேசினார் தென்னரசு.
அவரை பார்க்கவும் தான் தயாளனுக்கு விடுபெற்ற உணர்வே வந்தது. பெருமூச்சுடன் தென்னரசை நன்றி பார்வை பார்த்தார் தயாளன்.
“அதானே நான் இல்லாமலா? மூத்தவன் நான் என் முன்னாடி தான எந்த விசேஷமும்…” என மீசையை முறுக்கிக்கொண்டு சொல்ல பெருமூச்சுடன் அந்த பேச்சின் திசையை மாற்றிவிட்டார் தென்னரசு.
பைக் சாவியை சுழற்றியபடி திரவியம் உள்ளே நுழைய மண்டபமே காலியாகி இருந்தது.
அப்போது தான் கார் வரவழைத்து மற்றவர்கள் கிளம்ப ஏற்பாடு செய்ய அவனும் உள்ளே வந்தான்.
தயாளனுக்கு பெரும் நிம்மதியாக இருந்தது மகனை வைத்து மீண்டும் அதனை பேசாததில்.
அதைவிட நிம்மதி ஆராத்தியாவை வைத்து எதையும் பேசி வைக்காமல் இருந்தது.
“ரெடியாப்பா?…” என வந்தவனிடம் தலையசைத்தவர்,
“நீ அம்மா, பூமியை கூட்டிட்டு போ. நான் ஆதி கூட இருக்கேன். வீட்டுக்கு போனதும் அவங்களை ட்ராப் பண்ணிட்டு வா…” என்றார்.
“மாமா வீட்டுல?…” என தென்னரசுவை கேட்க,
“நீ கிளம்பவும் அவங்களும் கிளம்பிருவாங்கப்பா…” என்றதும் ஜீப் சாவியை எடுத்தவன் தனது வீட்டிற்கு சென்றான்.
இந்துவும் அவர்களுடன் வர கூட சில உறவுகளும் சேர்ந்தே வந்தனர். மீண்டும் மண்டபம் திரும்பிக்கொண்டிருந்த நேரம் எதிரே தென்னரசுவின் கார் கடந்தது.
திரும்பி பார்க்க ஜன்னலோரம் அமர்ந்திருந்த ஆராத்தியாவின் பார்வையை எத்தேர்ச்சையாக சேர்ந்தவன் சட்டென விலக்கிக்கொண்டான் தன் கண்களை.
அதன் பின் மண்டபம் வந்து எல்லாவற்றையும் செட்டில் செய்துவிட்டு ஆதவன், தயாளனுடன் வீடு திரும்பினான் திரவியம்.
இறுதி பரீட்சை முடிந்ததும் தான் திருமண தேதியும் குறிக்கப்பட்டிருக்க விடுமுறை நாட்கள் கழிந்து மீண்டும் கோவை செல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது.
அதுவரை திரவியம் ஊட்டிக்கு இருமுறை மட்டும் வந்து சென்றுவிட்டான். எப்போதும் வாரம் இருமுறை வருபவன் தான்.
இப்போது பூமிகா, ஆராத்தியா இருவரையும் அழைத்துக்கொண்டு கோவை செல்ல வந்திருந்தவன் கிளம்பி தயாராக இருந்தான்.
“தியா ரெடியான்னு கேட்டாச்சா பூமி?…” அபிராமி மகளிடம் பேசிக்கொண்டிருக்க வெளியில் அமர்ந்து ஷூ லேஸை கட்டிக்கொண்டிருந்தான் திரவியம்.
“ரெடியா இருப்பாம்மா. உங்களுக்கு தெரியாதா? லேட்ன்னு அண்ணா எதுவும் சொல்லிட கூடாதுன்னு ரெண்டுமணி நேரம் முன்னாடியே தயாரா இருப்பா பேக்கோட…” என பூமிகா கேலி செய்ய வருத்தமாய் ஒரு புன்னகை அபிராமி முகத்தில்.