இவர்களின் பேச்சுக்கள் இங்கே ஆராத்தியாவை தங்களருகிலேயே வைத்து பார்த்துக்கொள்ள நினைக்க அங்கே அவளின் பேச்சுக்கள் இந்துவிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தது.
“எவ்வளோ பேச்சு அந்த தாத்தாவுக்கு. காலையில போன் பண்ணியும் அப்பாட்ட அதை தான் ஆரம்பிக்கிறார். கல்யாண வேலை எல்லாம் எப்படி போகுதுன்னு கேட்க போன் பண்ணினா அதை மட்டும் பேச வேண்டியது தானே?…” என சொல்லிக்கொண்டிருக்க,
“மெதுவா பேசு தியா…” என்றாள் இந்து தன் மகளுக்கு உணவை ஊட்டிக்கொண்டே.
“அதுவும் அபிராமி அத்தை அப்படி பார்த்துப்பான்னு பாராட்டு வேற. எனக்கு இப்பத்தான் பிச்சுக்கோன்னு போக தோணுது. ஊட்டியே வேண்டாம். எனக்கு கல்யாணம் பன்றதா இருந்தா வெளிநாட்டுல பாருங்க…” என பேச்சோடு சொல்ல,
“தியா…” என திகைப்புடன் இந்து சொல்ல,
“ப்ச், பின்ன என்ன அண்ணி. இப்ப இதெல்லாம் தேவையா? இவங்க பண்ண பண்ண எனக்கு தூரமா போய்ட்டா என்னன்னு தோணுது. இங்க இருந்து ஒன்னொண்ணுக்கும் அவங்க கமென்ட் பண்ணுவாங்க. நானும் பொம்மை மாதிரி தலையாட்டுவேன்…”
“நீ ஏன் தலையாட்டற? வேண்டாம்ன்னு சொல்லு. உனக்கு பிடிச்சதை செய்…” இந்து கூற,
“அட போங்கண்ணி. நான் நோன்னு சொல்ல வாய் திறக்கறதுக்கு முன்னாடி என்னோட பாடிலாங்க்வேஜ் அவங்க சொல்றதுக்கு சடனா ப்ராசஸ் பண்ணுது. யோசிக்கிறதுக்குள்ள அவங்க சொன்னதை தான் செஞ்சிட்டு நிக்கறேன். அதான் இங்க வேண்டாம்ன்னு…”
“ப்ச், தியா….” என்று அதட்டிய இந்து,
“என்ன நீ? அப்பா, அம்மா அண்ணா எல்லாரையும் யோசிக்கவே மாட்டியா? என்னவோ நீயும் அவங்களை விட்டுட்டு இருக்கற மாதிரி தான்….”
“கஷ்டம் தான். ஆனா இங்கயே இருந்தா அம்மாவும், நீங்களும் இருக்கற மாதிரி தான். உனக்கு இந்த கலர் சூட்டாகும். இதுதான் செட்டாகும். என்ன இதை சாப்பிடற? இந்த நேரம் இதெல்லாம் வேண்டாம்ன்னு காலையில் எழுந்துக்கறதுல இருந்து ஒன்னொண்ணுக்கும் ஒரு பாடம். ப்ரோக்ராம் பண்ணி என்னை ரோபோவாக்கிருவாங்க…”
படபடவென ஆராத்தியா பேச இந்துவிற்கு சிறு பெண் என்று ஒருபக்கம் அவளின் பேச்சில் சிரிப்பு வந்தாலும் இன்னொருபுறம் கவலையாக இருந்தது.
திருமணமாகி வந்ததில் இருந்து பார்க்கிறாள் தானே? சாதாரணமான விஷயங்கள் கூட அவள் மனதில் பதிந்துபோயிருக்கும் அதிருப்திகளால் வேறு பிம்பத்தை அவளுக்கு வழங்கிக்கொண்டிருந்தது.
அபிராமி நல்லதற்கு சொல்வது கூட ஆராத்தியாவிற்கு தங்களின் விருப்பங்களில் மூக்கை நுழைப்பதாகவே தோன்றியது.
எல்லாம் பார்க்கும் விதத்தில் தான் இருக்கிறது என சொன்னாலும் ஆராத்தியா சொல்லும் சில விஷயங்களும் சரியாகவே தோன்றும்.
“எங்கம்மாவுக்கு தெரியாதா அவங்களுக்கு எது நல்லாயிருக்கும்ன்னு? இல்ல அவங்களுக்கு நல்லா இருக்கோ இல்லையோ, ஒரு ஆசை இருக்கும்ல. இது வேணும்ன்னு. அதுல கூட தலையிட்டா எப்படி அண்ணி?…” என பொறுமுவாள்.
எத்தனை பேசினாலும் அபிராமிக்கான மரியாதையை என்றுமே ஆராத்தியா தவிர்த்ததில்லை.
அவரின் பேச்சிற்கு எப்போதும் மதிப்பளிப்பவள் தான். என்ன ஒன்று சில நேர உள்ள குமுறல்கள் இப்படி தன்னிடமோ, இல்லை பூமியிடமோ தான் வெடிக்கும்.
பூமிகா எப்போதும் ஆராத்தியாவின் பக்கம் தான். தன் அம்மாவை சொல்கிறாளே என்று தள்ளி வைத்து பார்த்ததில்லை.
“உனக்கு அத்தையா போய்ட்டாங்க. எனக்கு அம்மாவா போய்ட்டாங்க. ஹைபை டா…” என கலகலப்பாள் பூமிகா.
ஆனால் அத்தனை விஷயங்கள் நடந்தாலும் அவர்கள் ஒரு வார்த்தை குற்றமாக சொல்லிவிட கூடாதென்பதில் அத்தனை கவனம் கொள்வாள் ஆராத்தியா.
இப்போதும் ஹாஸ்டலுக்கு செல்ல சொன்ன நேரத்திற்கு முன்பே கிளம்பி வெளியே வந்து அமர்ந்துவிட்டாள் போர்ட்டிகோ பகுதியில்.
“தியா…” என சீதா வர,
“இங்க இருக்கேன்ம்மா…” என்று சத்தம் கொடுத்தாள்.
“ஹ்ம்ம், அதுக்குள்ளே அங்க போயாச்சா? நான் தான் சொன்னேன்ல டைமிருக்குன்னு…” என்று கையில் ஒரு பேக்குடன் வந்தார்.
“என்னதான் பேசுவீங்களோ ரெண்டுபேரும். சரி சரி. டார்க் சாக்லேட் கேட்டிருந்தியாமே ரகுக்கிட்ட? நைட்டே வாங்கிட்டு வந்துட்டான். நீ தூங்கிட்ட. இப்பத்தான் ஞாபகம் வந்துச்சு. இந்தா…” என்று தரவும் அதனை தனது பேக்கில் வாங்கி வைத்துக்கொண்டவள்,
“ம்மா கல்யாணத்துக்கு பர்ச்சேஸ்க்கு வரப்போ நானும் ட்ரெஸ் எடுக்க வருவேன். என் ட்ரெஸ் நான் தான் செலெக்ட் பண்ணுவேன்…” என்றாள் முகத்தை தீவிரமாக வைத்துக்கொண்டு.
“அதுக்கென்னடா, நீ தான் உனக்கு பிடிச்ச மாதிரி எடுக்க போற…” சீதா மகளின் கன்னத்தை பிடித்து கொஞ்ச,
“அப்பறம் அது இதுன்னு உங்கண்ணி காமிக்கிறதை என்னை கட்ட வச்சிட கூடாது. சொல்லிட்டேன்…”
“அண்ணி உனக்கு சேரி செலெக்ட் பண்ணினா கல்யாணம் முடியவும் ஒரு ட்ரெஸ் மாத்துவியே. அதை நீ செலெக்ட் பண்ணுவியாம். அவ்வளோ தானே?…” சீதா சிரித்துக்கொண்டே சொல்ல,
“உங்களை எல்லாம் திருத்தவே முடியாது…” என்று தலையில் அடித்துக்கொள்ளவும் இந்து அடக்கமாட்டாமல் சிரித்துவிட்டாள்.
“பார்த்துட்டே இருங்க, என் கல்யாணத்துக்கு என் விருப்பப்படி தான் ட்ரெஸ், ஜுவெல்ஸ் எல்லாம்…” என்று சொல்ல,
“அடி வாங்குவ. வாயிலையே போட போறேன் பாரு நான். இப்பவே என்ன பேச்சு இது?…” என்று கையை ஓங்கியிருந்தார் சீதா.
சரியாக திரவியம் ஜீப்புடன் உள்ளே நுழையும் பொழுதே இதனை பார்த்துவிட சீதாவும் அப்படியே தான் நின்றிருந்தார்.
“அத்தை கையை இறக்குங்க…” இந்து சொல்லவும் தான் சீதா கையை இறக்கிவிட்டு சிரித்தபடி திரவியத்தை நோக்கி சென்றார்.
“தியா…” பூமிகாவும் இறங்கி வர,
“வாடா பூமி…” என அவளின் கன்னம் பற்றி கொஞ்சினார்.
“எதுக்கு தியாவை கை ஓங்கினீங்க த்தை?…” என பூமிகா சீதாவிடம் கோவிக்க,
“அவகிட்டயே கேளு நீ…” என்றவர் திரவியத்தை பார்த்து,
“உள்ள வந்து உட்காருப்பா தீரா…” என்றார்.
பூமிகாவும், திரவியமும் உள்ளே நுழைய ஆராத்தியா எடுத்து வைத்திருந்த பைகளை எல்லாம் எடுத்து ஜீப்பில் வைக்க சென்றாள்.
தானும் வைக்கிறேன் என கேட்டாலும் தர போவதில்லை. தானே எடுத்து வைக்கத்தான் செய்வாள் என பூமியும் உள்ளே சென்றுவிட சீதா அவர்களுக்கு டீ போட சென்றார்.
“அத்தை ப்ளாக் டீ குடுங்க. பால் டீ இப்ப வேண்டாம்…” என்றவன்,
“டார்க் சாக்லேட்…” என சீதாவிடம் நீட்ட,
“ரகு சொன்னானா…” என்று வாங்கிக்கொண்டார்.
“ம்ஹூம், பூமி தான் சொன்னா. அதான் வாங்கி வச்சிருந்தேன். தியாக்கிட்ட குடுத்திருங்க…” என்றதும் சீதாவும் வாங்கிக்கொண்டவர் அதனையும் பேக் செய்துவிட்டு அவர்களுக்கு டீ போட சென்றார்.
இந்து தன் மகளுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க டீயை கொண்டுவந்து கொடுத்தவர் வெளியே வந்தார்.
ஆராத்தியா போனில் தென்னரசுவுடன் பேசிக்கொண்டிருக்க அதனை பார்த்துவிட்டு நேராக மகளின் பேக்கில் சென்று சாக்லேட்டை வைத்துவிட்டு வர அவளும் கவனித்தபடி தான் இருந்தாள் ஒன்றும் சொல்லாமல்.
டீயை குடித்தபடி வாசலுக்கு வந்தவனும் இதனை கவனித்துவிட்டு மீண்டும் வந்து டீப்பாயில் கப்பை வைத்தவன்,
“வரேன் இந்து…” என்று கிளம்பிவிட்டான்.
மகளுக்கும், பூமிகாவிற்கும் அத்தனை கவனங்களை சொல்லி முடிக்கவும் தான் திரவியம் ஜீப்பை கிளப்பினான்.
“வேற எதுவும் பேசனுமா த்தை?…” என்று வேறு கேட்க,
“இல்லாப்பா, போன்ல சொல்லிக்கறேன்…” என்றதும் சிரிப்புடன் தலையசைத்தவன் சாலையை நோக்கி வண்டியை திருப்பி ஊட்டி மலையிலிருந்து கீழே இறங்க ஆரம்பித்தான்.
வழக்கம் போல் அதே இடம். ஜீப்பை நிறுத்தி டீயை குடித்துவிட்டு பட்டர் பிஸ்கட் வாங்கியவன் அடுத்து நேராக வந்தது ஹாஸ்டலுக்கு தான்.
மறுநாள் தான் கல்லூரி திறக்க முதல் நாளே ஹாஸ்டலுக்கு வந்து சேர்ந்துவிட்டார்கள் மற்ற வேலைகளை எல்லாம் பார்க்க. இருவரையும் இறக்கிவிட்டவன்,
“பூமி, பத்திரம். பார்த்து இருங்க…” என்று சொல்லியவன்,
“எமர்ஜென்சினா கால் பண்ணுங்க…” என இருவருக்கும் பொதுவாக சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான் திரவியம்.
வழக்கம் போல ஆராத்தியா தன்னுடமைகளுடன் உள்ளே செல்ல பின்னோடு வந்தாள் பூமிகா.
இருவருக்கும் ஒரே அறை என்பதால் வந்ததும் மடமடவென அறையை சுத்தம் செய்ய ஆரம்பித்தனர்.
மறுநாள் கல்லூரிக்கு கிளம்பிவிட அங்கே அவர்களுக்காக காத்திருந்தாள் வந்தனா.