ஒருவேளை திரவியம் எதுவும் சொல்லியிருக்கவில்லையோ? தன்னை பேசியதை பற்றி சொல்லியிருந்தால் நிச்சயம் இப்பெண்கள் பேசியிருப்பார்களா?
பூமிகா கூட வகுப்பில் எப்போதும் புன்னகைக்கும் விதமாக தான் சகஜமாக இருந்தாள்.
எதையும் தன்னிடம் கேட்கவில்லை. அதே நேரம் தியாவை வைத்துக்கொண்டே திரவியத்திடம் தன் விருப்பத்தை சொல்லியிருக்க அவன் எதுவும் பேசியிருக்க கூடுமோ என தெரிந்துகொண்டே ஆகவேண்டிய உணர்வு வந்தனாவை அலைகழித்தது.
“வந்தனாக்கா, என்னனு சொல்லுங்க. இல்லைன்னா நான் க்ளாஸ்க்கு போறேன்…” ஆராத்தியா சொல்லவும்,
“இல்ல தனியா பேசனும்…” என வந்தனா சொல்லவும் ஆராத்தியாவுடன் இருந்த இரு பெண்களும் கிளம்பிவிட்டனர்.
“சொல்லுங்கக்கா…”என்றவள்,
“ஒரு நிமிஷம்…” என சொல்லிவிட்டு அருகிருந்த கேண்டினில் இரு பன்னீர் சோடாக்களை வாங்கி வந்தாள்.
“இந்தாங்கக்கா…” என நீட்ட,
“இல்ல தியா, எனக்கு ஏன்?…”
“இன்னைக்கு சாப்பாடு கொஞ்சம் ஹெவியாகிருச்சு. அதான். உங்களையும் விட்டுட்டு குடிக்க முடியாதுல…” என்றவள் அவளிடம் கேட்காமல் அங்கிருந்த கல்பெஞ்சில் அமர்ந்து குடிக்க ஆரம்பித்தாள் ஆராத்தியா.
வந்தனா அவளை பார்ப்பதும், கையிலிருக்கும் சோடாவை பார்ப்பதுமாக இருக்க,
“அக்கா குடிச்சி முடிங்க. கேஸ் போயிரும்…” என்று சொல்ல வேறு வழியின்றி குடித்தாள் வந்தனா.
மனதிற்கு அந்த இயல்பான பேச்சும், பழக்கமும் சற்றே ஆசுவாசத்தை கூட்டினாலும் இவை எல்லாம் ஆராத்தியாவின் கண்களை எட்டாத ஒரு உணர்வு வந்தனாவிற்கு.
யோசனையுடன் குடித்து முடித்தவள் ஆராத்தியாவை பார்க்க அவளும் அதற்கு காத்திருந்ததை போல,
“சொல்லுங்கக்கா, என்ன கேட்கனும்?…”
“இல்ல அன்னைக்கு அப்படியே கிளம்பிட்டேன். அதான்…” என்றவளை சிரிப்புடன் பார்த்தவள்,
“ஏன் என்னோட அத்தான் என்ன சொன்னாங்கன்னு தெரியனுமா?…” என்று கேட்டதும் வந்தனாவின் முகம் மாறிவிட்டது.
“அதில்லை தியா…” என்றவளுக்கு அவன் என்ன சொன்னான் என்பது நன்றாக தெரிந்திருந்ததே.
ஹப்பா, என்ன ஒரு ரௌத்திரம் அவனின் முகத்திலும், பேச்சிலும். அவன் மொழிந்த ஒற்றை வார்த்தை எத்தனை நடுக்கத்தை கூடவே அவமானத்தையும் தந்திருந்தது.
முகம் கன்றி போக எப்படி இவளிடம் கேட்பதென்று ஒருபுறம், சிறுபெண் இவளிடம் எல்லாம் கேட்கவேண்டி உள்ளதே என்று ஒருபுறம்.
திரவியம் மறுத்து, தன்னை அவமதித்தது எல்லாம் அவன் பக்கம் திரும்பவே கூடாதென்று மனது கங்கணம் கட்டியது.
அதே நேரம் இத்தனை நிமிர்வான ஒருவனை வாழ்க்கையில் இழப்பதா என காதல் கொண்ட மனது அவனின் ரௌத்திரத்திலும் கூட மையல் கொண்டது.
‘காதல்ன்னு சொன்னா தானே கோபம் வருது. இது அரேஞ்ச் மேரேஜாகிட்டா?’ என்று ஒரு ஆசை. தீராத ஆசை.
மனதின் திசைக்கேற்ப அவளும் உடன் பறக்க ஆராத்தியாவின் கை கொடுத்த அழுத்தத்தில் தரையிறங்கினாள் வந்தனா.
“என்னக்கா? பேச வந்துட்டு கனவா?…” என ஆராத்தியா புன்னகைக்க,
“கனவு தான்…” என்ற வந்தனாவும் சிரிப்புடன்,
“இல்லை அன்னைக்கு உங்க யார்கிட்டையும் சொல்லாம கிளம்பிட்டேன். கால் பண்ணவும் இல்லை நான். அதான் எதுவும் தப்பா நினைச்சிட்டியோன்னு…”
“இதை நீங்க பூமி அண்ணிட்ட தான் கேட்கனும். அவங்க தான் உங்களை இன்வைட் பண்ணினாங்க. நானில்லை…” என்றாள் தெளிவுடன்.
“தியா…”
“ஆமா, நீங்க வந்தது பங்க்ஷனுக்கு. நான் உங்களை இன்வைட் பண்ணவே இல்லையே. அதுக்கு போய் நான் தப்பா நினைச்சிட்டேன்னு நீங்க சொல்றது சிரிப்பு தான் வருது…” என்றாள் ஆராத்தியா.
இவள் இத்தனை தூரம் பேசுவாள் என எதிர்பார்க்காத வந்தனா ஒருவித சங்கடத்துடனும், அடக்கப்பட்ட கோபத்துடனும் அமர்ந்திருந்தாள்.
“தப்பா நினைச்சேன்னா நீங்க நினைக்கிற மாதிரி இல்லை. ஆனா நீங்க செஞ்சது எனக்கு பிடிக்கலை…”
“நானா? நான் என்ன பண்ணேன் தியா?…”
“ப்ச், போதும்க்கா. கொஞ்சம் ப்ராங்கா பேசுவோமா?…” என்றவள் முகத்தில் மெல்லிய சிரிப்பு இன்னும் மிச்சமிருக்க விழிகளில் அவ்வளவு தீட்சண்யம்.
“தியா திரவியம் எதாச்சும் சொன்னாரா? சொல்லு…” என வந்தனா எழுந்துவிட்டாள்.
தங்களை சுற்றிலும் வேறு யாரேனும் உள்ளனரா என பார்த்தபடி அவளிடம் வந்தனா கேட்க அப்போதும் முகம் மாறாமல் தானும் அவளுடன் நின்றாள்.
“அவங்க என்ன சொல்லனும்? அப்படியே சொன்னாலும் அதை நான் ஏன் உங்களுக்கு சொல்லனும்?…” என ஆராத்தியா.
“தியா நான்…”
“இங்க பாருங்க வந்தனாக்கா நீங்க என்கிட்ட என் அத்தானோட நேச்சர் என்னன்னு கேட்டதுக்கு ஜஸ்ட் என்னோட ஒரு தாட், உங்களுக்கு அவங்க செட்டாக மாட்டாங்கன்னு சொன்னேன். அதுவும் நிஜமா இருந்தாலும் அந்த நிமிஷம் எனக்கு தோணினதை சொன்னேன். நீங்க கேட்டதனால மட்டும்…” என்ற தியா,
“ஆனா, நீங்க பண்ணினது என்ன? என்னையும் சேர்த்து கூட்டிட்டு போய் பேசினது என்னால சுத்தமா ஏத்துக்க முடியாது. அது உங்க பர்ஸனல். என்னை இன்வால்வ் பண்ணிருக்க கூடாது நீங்க…”
“இல்ல தியா, அந்த நிமிஷம் ஒரு சப்போர்ட்க்கு…”
“எதுவாவும் இருக்கட்டும் வந்தனாக்கா. உங்க இஷ்டம் போல என்னை எப்படி இழுக்கலாம் நீங்க? உங்க ப்ரப்போசல் பத்தி எனக்கு எந்த கவலையும் இல்லை. அக்கறையும் இல்லை. என்னை நடுல வச்சு பேசினது…” என்றவள் ஒரு ஆழ்ந்த மூச்செடுப்பின் பின்,
“என்னை விட பெரியவங்க நீங்க. இதை கூடவா புரிஞ்சுக்க முடியாது? இந்த தூது போறது, கூட நிக்கிறது இதெல்லாம் எனக்கு செட்டாகாது. ம்ஹூம், நான் ஒத்துவர மாட்டேன்…”
“திரவியம் எதாச்சும் அதுக்கு சொன்னாரா?…” மீண்டும் வந்தனா அதிலேயே தான் இருந்தாள்.
என்ன சொல்லியிருப்பான்? தன்னை விரட்டியடிப்பதை போல வெளியேற சொன்னவனாகிற்றே.
என்னவாக இருக்கும் என தெரிந்துகொண்டே ஆகவேண்டும் என்பதை போலிருந்தது நிமிடத்திற்கு நிமிடம் வந்தனாவிற்கு.
“என்ன சொன்னா உங்களுக்கு என்ன வந்தனாக்கா?…” எரிச்சல் மிகுந்த குரலில் ஆராத்தியா கேட்டுவிட்டாள்.
“இல்லை தியா? என் மேல உள்ள கோவத்துல உன்னை…” வந்தனா திணற,
“என் சம்பந்தப்பட்டதை நான் உங்ககிட்ட சொல்ல முடியாது. அதுவும் என் மேல தப்பு இருந்தா என் அத்தானுக்கு என்னை கண்டிக்க எல்லா உரிமையும் இருக்கு. நீங்க தெரிஞ்சுக்க நினைக்க வேண்டாம்…” என்றவள்,
“இப்பவுமே நான் பேச வந்தது இதுக்காக தான். இன்னொருதடவை இது மாதிரி என்னை இழுக்க வேண்டாம். உங்க பர்சனல் அது. உங்க விருப்பம், அத்தானோட இஷ்டம். அதுல நான் தலையிட போறதில்லை. என்னை ஊடால கொண்டுவராதீங்க…” என்று பட்டென்று சொல்லிவிட்டாள் ஆராத்தியா.