ஊட்டி செல்லும் வரை பேசிக்கொண்டே தான் இருந்தாள் பூமிகாவும். அங்கே சென்றதும் சிறிது நேரம் இந்துவுடன் பேச என இப்படியே அன்றைய நாள் கழிய அதன் பின்னான நாட்களில் அதனை பழகிகொண்டாள் ஆராத்தியா.
பரிட்சையில் கவனம் செலுத்த இதோ எப்போதடா முடியும் என்றிருந்த இறுதி தேர்வும் முடிந்துவிட்டது.
காலையிலேயே போனும் வந்துவிட தனது பேக்கை தயார் செய்துவிட்டு வந்திருந்தவள் வீட்டிற்கு கிளம்ப போகிறோம் என்ற உற்சாகத்தில் வெளியே ஓடி வந்தாள்.
அதே கருப்பு நிற ஜீப். திரவியத்தினுடையது. பார்த்ததும் நடையை நிறுத்தியவள் மனது ஜெர்க்கானது.
“இனிமே இவங்க கூட தான் நாம தனியா போய் வரனுமா?…” என நொந்தபடி சட்டென ஒட்டிக்கொண்ட சோர்வுடன் பேக்கை இழுத்துக்கொண்டு நடக்க,
“தியாக்குட்டி பேக் தூக்க முடியலையாடா?…” என்ற ஆதவனின் சத்தத்தில் நிமிர்ந்தவளுக்கு அப்படி ஒரு சந்தோஷம்.
“அண்ணா…” என பேக்கை விட்டுவிட்டு ஓடி வந்து அவனின் கையை பிடித்துக்கொண்டவள் குதூகலித்து சிரிக்க,
“டேய் குட்டிம்மா, என்ன இவ்வளோ சந்தோஷம்?…” என்றான் சிரிப்புடன் ஆதவன்.
“நீ என்னை கூப்பிட வருவன்னு நான் நினைக்கவே இல்லை. அதான், அதான்…” என சொல்லி இன்னும் முகமெல்லாம் புன்னகை மலர வாஞ்சையுடன் பார்த்தான் ஆதவன்.
“ஹ்ம்ம், அப்படி சொல்லு. யாரையோ சொல்ற மாதிரி இவங்கன்ற. என்கிட்டே பேசறது, வீட்டுல பேசறது தான் வெளிலையும் உன்னையறியாம வந்திரும்…” என்று ஆதவன் சொல்ல ஒன்றும் சொல்லாமல் ஜீப்பில் ஏறி அமர்ந்துவிட்டாள்.
“ரோட்ல அதுவும் காலேஜ் முன்னாடி இப்படித்தான் மரியாதை இல்லாம உன் அண்ணனை நீன்னு பேசுவியா தியா?…” என்றான் திரவியமும்.
அவ்வளவு தான், ஆராத்தியா அடுத்து வாயும் திறக்கவில்லை. தன் அண்ணனையும் பார்க்கவில்லை.
ஆதவனும் வந்தவன் திரவியத்தின் அருகே சென்று அமர்ந்துகொள்ள ஜீப் கோவையில் அவர்களுக்கென்று இருக்கும் பண்ணை வீட்டின் முன் சென்று நின்றது.
மறுநாள் சீருக்கான நகையும், முகூர்த்த புடவையும் எடுக்க இருக்க குடும்பத்தினர் அங்கே தான் வந்து தங்கியிருந்தனர்.
ரகுநந்தன், தென்னரசு, தீனதயாளன், அபிராமி தவிர்த்து மற்றவர்கள் எல்லாம் கோவை இல்லத்தில் தான்.
ஆராத்தியா செல்லவுமே ஓடி வந்து அணைத்துக்கொண்டார்கள் பூமிகாவும், இந்துவும்.
சீதா மகளுக்காக ஸ்பெஷலாக சமைத்திருக்க மதிய உணவு நேரமும் கலகலப்பாக சென்றது.
திரவியமும், ஆதவனும் அவர்களின் ஸ்டோருக்கு சென்றுவிட பெண்களின் ராஜ்ஜியம் தான் அங்கே.
மறுநாள் என்னென்ன எடுக்க வேண்டும் என்று அன்று ஒருமுறை லிஸ்ட் போட்டுகொண்டார்கள்.
காலை தயாளனை தவிர்த்து மற்றவர்களும் ஊட்டியிலிருந்து வந்துவிட நல்ல நேரத்தில் புடவை எடுக்க வந்துவிட்டார்கள்.
முகூர்த்த புடவை எடுத்து முடிக்கவும் மற்றவர்களுக்கான உடைகளை பார்க்க ஆராத்தியா தனக்கு பிடித்தமானவற்றை எடுத்து வைத்து பார்த்துக்கொண்டிருந்தாள்.
“ம்மா இதை எடுத்துக்கவா?…” என்று அப்போது புதிதாய் வந்திருக்கும் பட்டுப்புடவையை காண்பிக்க அழகாய் இருந்தது.
காப்பர் கலரில் மின்னிய புடவை மகள் வைத்து காண்பித்த பாவனை என்று சீதா தலையசைக்க,
“அப்ப கல்யாணம் நடக்கும் போது இதை கட்டிக்கறேன். அடுத்து…” என வேறு பார்க்க ஆரம்பிக்க சற்று தள்ளி அபிராமி புடவையை பார்த்துக்கொண்டு இருந்தார்.
“ம்மா, தியாக்கிட்ட இந்த கலர் இருக்கு. வேற பாருங்க…” என்றிருந்தான் திரவியம் மெல்லிய குரலில் தன் தாயிடம்.
“சொல்ற, நீ தான் நல்லா செலெக்ட் பண்ணுவியே. வந்து சூஸ் பண்ணு தீரா…” என்றார் சத்தமாக சொல்லி நகர்ந்து அமர்ந்து.
இதனை கவனித்தபடி சீதா மகளை பார்க்க அவள் கையில் வைத்திருந்த புடவையை அப்படியே பிடித்தபடி இருந்தவள் ஒன்றும் சொல்லாமல் அமைதியாகி போனாள்.
“நிச்சயத்துக்கு உன்னோட செலெக்ஷன் நல்லா இருந்தது. என்ன ஒன்னு அவளால அதை கட்டிருக்க முடியலை. கல்யாணத்துக்கு நாம எடுத்து குடுக்கறது தானே முறை…” என சொல்லிய அபிராமி மகனின் தேடலில் புன்னகையுடன் அமர்ந்திருந்தார்.
அதற்குள் தீனதயாளனிடமிருந்து அழைப்பு வர எழுந்து சென்று பேசிவிட்டு வரும் பொழுது தென்னரசு தள்ளி நின்றுகொண்டிருந்தார்.
“என்னண்ணே இங்க நின்னுட்டீங்க? ட்ரெஸ் எடுக்கலையா?…” என தன் அண்ணனிடம் கேட்க,
“முதல்ல பிள்ளைங்களுக்கு எடுக்கட்டும் ம்மா…” என்றவர் தன் குடும்பத்து மக்களை பார்த்தபடி இருந்தார்.
“நம்ம காலத்துக்கப்பறமும் நம்ம பிள்ளைங்க இப்படியே இருக்கும்ண்ணே. எனக்கு அது தான் ஆசை…” என அபிராமி சொல்ல,
“எனக்கு உன்னை தெரியாதாடா? எனக்கும் அது தான். நம்ம பசங்க ஒன்னுக்குள்ள ஒன்னா இருந்தாலே போதும்…” என்றார் தென்னரசு நெகிழ்ந்து போய்.
அதற்குள் திரவியம் சில புடவைகளை தேர்ந்தெடுத்திருக்க அபிராமி வந்துவிட்டார் அங்கே.
மகன் தேர்வு செய்த புடவைகளில் ஒன்றை எடுத்தவர் ஆராத்தியாவை அருகில் அழைத்து,
“பிடிச்சிருக்கா தியா?…” என்றார் அபிராமி.
“ஹ்ம்ம்…” என்று மட்டும் சொல்லியவள் சீதாவிற்கு பின் வந்து நின்றுவிட்டாள்.
“நான் வந்திருக்கவே வேண்டாம் இதுக்கு…” என்ற முணுமுணுப்பு தாயின் காதையும் எட்டியது.
வேண்டாம் என்று விலக விலக விதி அவளிடம் அதை தான் சேர்ப்பிக்க நினைத்தது. புடவையாகட்டும், புது உலகையாகட்டும்.