“ஆமா தான் அத்தை. ஆனா கால் அட்டன் பண்ணலைன்னாலும் கிளம்பி வந்திருவாங்க…” என்று சொல்லிய இந்து பூமிகாவின் முகத்தை துடைத்தபடி இருந்தாள்.
பயத்தில் பூமிகாவின் முகம் வெளிறி இருந்தது. அபிராமி வேறு எத்தனை சத்தம் போட்டுவிட்டு சென்றிருந்தார் மகளை.
“இந்த அண்ணி வேற மாசமா இருக்கற பொண்ணுன்னு பார்க்காம திட்டிட்டாங்க. அவ என்ன வேணும்ன்னா செஞ்சா?…” என சீதா பூமிகாவுக்கு ஆதரவாய் பேச இன்னுமே கண்களை கரித்தது அவளுக்கு.
“இப்ப இதை ஏன்த்தை பேசறீங்க? விடுங்க…” என இந்து சொல்லிவிட்டு,
“என்னங்க, ரகு தம்பிக்கு கால் பண்ணி அனுவை ஸ்கூல்ல இருந்து கூட்டிட்டு வர சொல்லிருங்க. நான் போக முடியாது இப்ப…” என்றதும்,
“நீ பார்த்துக்கோ. நான் போய்ட்டு வரேன்…” என்றான் ஆதவன்.
“என்ன நீங்க, இங்க யாராச்சும் இருக்க வேண்டாமா? பேசாம நில்லுங்க…” என்றதும் ரகுவை அழைத்து பிள்ளையை அழைத்து வரும்படி கூறினான் ஆதவன்.
மீண்டும் திரவியம் அழைக்க பேசாமல் இருக்க முடியாதென அழைப்பை ஏற்றுவிட்டான் ஆதவன்.
“என்ன ஆதி? எவ்வளோ நேரம் கால் பன்றேன். யாருமே கால் பட்டன் பண்ணலை?…” என்று எடுத்ததும் கத்தியவன்,
“பூமி அப்பாவுக்கு முடியலைன்னு அழுதுட்டே சொன்னதோட கட்டாகிருச்சு. என்னன்னு சொல்லுங்க. அப்பா இப்ப எப்டி இருக்காங்க?…” என வேகமாக கேட்க,
“அதெல்லாம் ஒண்ணுமே இல்லை. இப்ப டாக்டர் வந்து செக் பண்ணிட்டிருக்காங்க தீரா. நீ பொறுமையா இரு. எப்பவும் வர வீசிங் தான். பிபி கொஞ்சம் ஹைல இருக்கு…”
“நிஜமா அவ்வளோ தானா? ஒன்னும் இல்லையே?…” இன்னும் குறையாத பதட்டத்துடன் திரவியம் பேச,
“ஆமா, ஆமா. டாக்டர் கிளம்பவும் நானே வீடியோ கால் பன்றேன். நீ பார்த்துட்டே பேசு…” என்றதும் தான் திரவியம் சமாதானமானான்.
“கூப்பிடுங்க…” என்று அவன் வைத்ததும் மருத்துவர் வெளியே வந்தார் அபிராமியுடன்.
“பூமி நீ அப்பாகிட்ட இரு…” என அவளை அனுப்பிவிட்டு அதன் பின்பே மருத்துவரிடம் பேசினார்.
“ஏன் இவ்வளோ ப்ரஷர் எடுத்துக்கறார்? கொஞ்சம் கவனிச்சுக்கோங்க. ஹார்ட் பேஷன்ட்கிட்ட எப்படி இருக்கனும்னு தெரியும் தானே?…” என்று மருத்துவர் அபிராமியிடம் சொல்ல,
“மகனோட கல்யாண விஷயம். அதுல கொஞ்சம் டென்ஷன். வேறொன்னுமில்லை…” என்றார் தென்னரசு.
“ஓகே, இப்ப நார்மலா தான் இருக்கார். எதுக்கும் ஈவ்னிங் கிளினிக் கூட்டிட்டு வாங்க. இன்னொரு ப்ராப்பர் செக்கப் பண்ணிருவோம்…” என்று சொல்லிவிட்டு கிளம்பவும் ஓய்ந்து போய் அமர்ந்தார் அபிராமி.
“அபிம்மா, என்னம்மா?…” என தென்னரசு தங்கையின் தோளை தொட்டதும் கண்ணீர் வந்துவிட்டது.
“ஒன்னுமில்லைண்ணே, நான் ஓகே தான்…” என கண்ணீரை துடைத்துக்கொண்டே தான் இருந்தார் அபிராமி.
அபிராமி அழுது முதல் முறை அனைவரும் பார்க்கின்றனர். பார்த்தவர்களுக்கு அத்தனை வேதனை.
“அத்தை, இப்ப என்னாகிருச்சு? அந்த இடம் தகையலைன்னா வேற இடமே அமையாதா? ப்ரீயா விடுங்க. இதை மாமாவுக்கு சொல்லி சியரப் பண்ணுங்க….” என்றான் ஆதவன்.
“சரிங்கப்பா, பார்த்துக்கறோம். ஆனா அந்த இடமே வேண்டாம். அவங்க பேசினதால தான் அவர் கொஞ்சம் டென்ஷனாகிட்டார். சரியாகிடும்…” என தனக்கும் சேர்த்து சொல்லிக்கொண்டார் அபிராமி.
உள்ளே பூமிகா படுத்திருந்த தயாளனின் நெஞ்சை நீவியபடி அழுதபடி இருந்தாள்.
அன்று காலை வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு மெதுவாய் நடக்கிறேன் என்று அடுத்த வீதியில் இருக்கும் தாய் வீடு வரை வந்துவிட்டாள் பூமிகா.
அப்போது தான் மதிய உணவிற்கு அபிராமியும் தயாளனும் கூட வீடு திரும்பி இருக்க மகள் வந்ததும் அவளுக்கும் சேர்த்து செய்ய சொல்லி மூவருமாக பேசிக்கொண்டிருந்தனர்.
பெண்ணின் வீட்டிலிருந்து தயாளனுக்கு அழைப்பு வர பார்த்ததும் முகம் மலர்ந்துவிட்டது.
கோவிலுக்கு சென்று பட்டு சாத்தி சாமியை கும்பிட்டு வந்ததும் அன்றே பெண் பார்க்க வருவதை பற்றி சொல்லியிருக்க அந்த வாரம் நல்ல நாள் இருப்பதாக பெண்ணின் வீட்டில் இருந்து தான் நாளையும் குறித்து தகவல் சொல்லப்பட்டது.
இன்னும் இரு நாட்களில் பெண்ணை பார்க்க செல்ல வேண்டும் என முடிவாகி இருந்தது.
இப்போது அவர்கள் அழைக்கவும் எடுத்து பேச ஆரம்பித்தவர் முகமே மாறிவிட கொஞ்சம் கொஞ்சமாக வியர்க்க ஆரம்பித்தது.
“இப்ப என்ன சொல்ல வரீங்க? என்ன தெரியனும் உங்களுக்கு?…” என்றார் குரலில் கடுமையை பூசி.
“என்னங்க?…” என அபிராமி கேட்க அவரை கையமர்த்தி தடுத்தவர் ஸ்பீக்கரில் போட்டார்.
“இங்க பாருங்க, நாங்களா எதையும் சொல்லலை. தெரிஞ்சுக்க தான் கேட்கறோம்…” என்றது மறுமுனை.
“அதான் என்ன தெரிஞ்சுக்கனும்? எங்க பையன் விவரம் உங்களுக்கு வரும் போதே எங்க குடும்பத்தை பத்தி சொல்லாமலா இருந்தார் தரகர்? அப்பவே ஏன் இது கேட்கலை?…” என்றார் தயாளன்.
அப்போதே அவருக்கு கோபத்தில் லேசாய் வியர்த்து மூச்சு வாங்க ஆரம்பிக்க அபிராமி பயந்து போனார்.
“பூமி, அண்ணன் வீட்டுக்கு வந்திருந்தா உடனே போன் பண்ணி வர சொல்லுடா…” என்றதும் பூமிகா போன் செய்ய வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் வந்துவிட்டனர் உடனே.
“இங்க பாருங்க ஸார் நாங்க பொண்ணை குடுக்கறவங்க. எல்லாமே விசாரிக்க தான் செய்யனும். எங்களுக்கும் எல்லா இடத்திலையும் ஆள் இருக்கு. விசாரிச்சப்ப எல்லாருமே கேட்டது இது தான். அவங்க குடும்பத்துலயே பொண்ணு இருக்க ஏன் வெளில எடுக்காங்கன்னு…”
பெண் வீட்டினர் இப்படி காரணம் சொல்லவும் அபிராமியின் முகமோ முதலில் திகைத்து பின் கோபத்தில் கடுகடுத்தது.
“அதுக்கு என்ன செய்யலாம்ன்னு இருக்கீங்க?…” என்றார் அபிராமி இடையிட்டு.
அவரின் குரல் கேட்டதுமே மறுமுனையில் இருந்தவர்களுக்குள் சிறு அமைதியும், லேசான சலசலப்பும்.
“சொல்லுங்க, என்ன பண்ணனும்னு இருக்கீங்க?…” மீண்டும் தயாளனும் கேட்க,
“இப்போதைக்கு பொண்ணு பார்க்க வரதை தள்ளி வச்சிருவோம். நாங்க வீட்டுல கூடி பேசி ஒரு நல்ல முடிவுக்கு வந்துட்டறோம். அப்பறமா தகவல் சொல்லும் போது நீங்க வந்தா போதும்ங்க…” என பெண்ணை கொடுக்கவிருந்தவர்கள்.
“அதாவது இங்க ஏன் நாங்க என் அண்ணன் வீட்டுல பொண்ணை எடுக்காம வெளில எடுக்கறோம்னு தீர விசாரிச்சிட்டு அதுக்கப்பறமா உங்க வீட்டுக்கு அழைப்பீங்க. அப்படியா?…” என்றதும்,
“என்னங்கம்மா நக்கலா பேசற மாதிரி இருக்கு. எங்களுக்கு யோசிக்கனும்னு தானே சொல்றோம்? இதுல என்ன தப்பு இருக்கு? நாங்க ஒன்னும் சம்பந்தமே வேண்டாம்ன்னு சொல்லலையே?…” என்றவர்,
“உங்க பொண்ணை அந்த வீட்டு பையனுக்கு குடுத்திருக்கீங்க? ஒன்னுமன்னா தொழில் பன்றீங்க. எல்லாத்துக்கும் ஒண்ணா தான் புழங்கறீங்க. அப்படி இருக்க அந்த வீட்டு பொண்ணை மட்டும் எடுக்கலைன்னா யோசிக்க தானே செய்வோம்….” என்றார்.