“அதை நீங்க எங்களை வர சொல்றதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கனும். நீங்க பேசறது என்னவோ தப்பா இருக்குங்க…” என தயாளன் பேச,
“இன்காருங்க நான் பொண்ணோட சித்தப்பா பேசறேன். மத்தவங்களை மாதிரி பூசி மொழுகல. உடைச்சே சொல்லிடறேன். எங்களுக்கு சந்தேகமா இருக்கு…” என்றார் இன்னொருவர்.
“புரியலை. என்ன சந்தேகம்?…” அபிராமி கேட்க அங்கே மறுமுனையில் ‘பொறுமையா பேசுப்பா’ என யார் யாரோ சத்தம் கூட்டினார்கள்.
“எனக்கு தெரியும். என்னத்துக்கு பம்மிக்கிட்டு? வசதியான இடம்ன்னா உடனே பொண்ணை தூக்கி குடுத்திடனுமா? நாமளும் இருக்கப்பட்டவங்க தானே? நமக்கு தோணுறதை கேட்க தானே செய்வோம்…” என்றார் பெண்ணின் சித்தப்பா அங்கே சத்தம் போட்டு.
“இங்க பேசுங்க. என்ன சந்தேகம் சொல்லுங்க…” என தயாளன் மீண்டும் கேட்க,
“இங்க பாருங்க. நாங்க உங்க நெருங்கின வட்டத்துலையே விசாரிச்சோம். உங்க மக கல்யானத்தப்பவே அடுத்த கல்யாணம் அந்த பொண்ணோட தான்னு பேசிக்கிட்டாங்களாம். நீங்களும் ஆமான்ற மாதிரி தான் இருந்தீங்களாம். அதான் கேட்கிறோம்…” என்றவர்,
“இவ்வளோ பாசக்கார அண்ணன் தங்கச்சி குடும்பத்துல பொண்ணை எடுக்கலைன்னா ஒன்னு உங்க மகன் மேல குத்தம் குறை இருந்து உங்கண்ணன் பொண்ணை குடுக்காம இருந்திருக்கனும்…” என அவர் சொல்ல அத்தனைபேரும் ஸ்தம்பித்தனர் இங்கே.
“இல்லைன்னா அந்த பொண்ணு சரிவராதுன்னு நீங்க வேண்டாம்ன்னு வெளில பார்த்திருக்கனும். ஆனா அடுத்த கல்யாணம் இவங்களுக்குன்னு தான் உங்க சொந்தபந்தங்களே உறுதியா நினைச்சாங்களாமே?…” என்று சொல்லிவிட்டார்.
இங்கே அபிராமி முதற்கொண்டு அனைவருமே உறைந்து போய் தயாளனின் போனையே வெறித்து பார்க்க,
“அதான், யோசிச்சு வீட்டுல திரும்ப கலந்து பேசிட்டு சொல்றோம். பொண்ணோட கல்யாணம் பாருங்க. அதனால பொண்ணு பார்க்க அப்பறமா…” என்றபொழுதே,
“நீங்க வேற இடம் பார்த்துக்கோங்க…” என்றுவிட்டார் தயாளன் உடனே.
“என்ன?…” என மறுமுனையில் இருந்தவர் திகைக்க,
“நிஜமா தான். இப்படிப்பட்ட ஒரு இடம் எங்க குடும்பத்துக்கு சரிப்பட்டு வராதுங்க…” என்று தயாளன் சொல்லிவிட்டார் பட்டென்று.
“நீங்க கோவமா இருக்கீங்கன்னு நினைக்கறேன். கல்யாணம்ன்னா விசாரிக்க தானே செய்வாங்க. எங்க வீட்டாள் பேசினதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கறேன். பொறுமையா பேசுவோம்…” என பெண்ணின் தாய்மாமா சமாதானமாக சொல்ல,
“மாமா என்னத்துக்கு அந்தாள்கிட்ட போய் கெஞ்சிகிட்டு. நம்ம பொண்ணுக்கு பையனா கிடைக்காது?…” என மீண்டும் பெண்ணின் சித்தப்பாவின் அகம்பாவமான குரல்.
“டேய் நீ சும்மாருடா. சலம்பல பண்ணிக்கிட்டு…” என அவனை அதட்டிய தாய்மாமா,
“தப்பா எடுத்துக்காதீங்க. கோவப்படாதீங்க. நான் அவனுக்காக…” என்னும் பொழுதே,
“கோவமில்லைங்க, நீங்க யார் உங்ககிட்ட நான் கோவப்பட? இப்படிப்பட்ட மூணாவது மனுஷங்களை மதிக்க கூட மாட்டேன். வைங்க போனை. இத்தோட நிறுத்திப்போம்…” என்று இரைந்துவிட்டு மொபைலை டீப்பாயில் வீசினார் தயாளன்.
முகமெல்லாம் ஜிவுஜிவுத்து போயிருந்தது அவருக்கு. அவரின் கோபத்தை பார்க்கவே அத்தனை பயமாக இருந்தது மற்றவர்களுக்கு.
“பேசறான் பாரு பேச்சு. இவனையெல்லாம்…” என பல்லை கடித்து வார்த்தைகளை அடக்கினார் தயாளன்.
“அவசரப்பட்டிருக்க வேண்டாமே தயா…” என தென்னரசு அவரருகே வந்தமர,
“இவனை நல்லா கேட்காமவிட்டேனேன்னு சந்தோஷப்படனும். என் பிள்ளைகளை பத்தி எவ்வளோ கேவலமா பேசறான். இதை இவன் வீட்டுல பேசாமலா நம்மட்ட பேசறான்?…” என்றார் கொதித்து போய் தயாளன்.
“சரி விடுப்பா. இப்பவே தெரிஞ்சிருச்சேன்னு சந்தோஷப்படு. அவன் பேசினா எல்லாம் உண்மையாகிடுமா?…” என தென்னரசு.
“அது தான் எனக்கும் தோணுது. இந்த இடம் வேண்டாம். நம்ம பிள்ளைகிட்ட நாம சொல்லிப்போம். நீங்க ரொம்ப டென்ஷனாகாதீங்க…” என்றார் அபிராமி.
“என்ன அபி பேசற? இந்த விசாரணை இத்தோடவா நின்னிருக்கும். அந்த தரகர விடு. மத்தவங்கட்ட எப்படி போயிருக்கும். அதை விட இப்ப நாம கல்யாணத்தை நிறுத்தியிருக்கோம். இதுவும் நாளைப்பின்ன எந்த ரூபத்துல வருமோ?…” என்றவர்,
“வாழ வேண்டிய பிள்ளைங்க. இன்னிக்கில்லைனாலும் இந்த பேச்சு எதிர்காலத்துல வந்திடக்கூடாது. இப்படி ஒன்னு நடந்துச்சுன்னு. அதுவும் நம்ம தியா. பொம்பளைப்பிள்ளை வாழ்க்கை. அவன் வீட்டுலையும் கல்யாணத்துக்கு தானே பேசினாங்க அவங்க பொண்ணுக்கு. யோசிக்கமாட்டாங்களா?…” என்றார் மூச்சு வாங்க.
“ஐயோ ப்ளீஸ், நீங்க கொஞ்சம் அமைதியா இருங்க…” என்று பதறிய அபிராமி,
“பூமி அப்பாவுக்கு வெந்நீர் கொண்டுவாடா…” என்றபடி உடனே டாக்டரின் எண்ணிற்கு அழைத்துவிட்டார்.
ஆதவனும், தென்னரசுவும் எவ்வளவோ சொல்ல சொல்ல தயாளன் பேசிக்கொண்டே தான் இருந்தார் நெஞ்சை பிடித்தபடி.
“முன்ன பின்ன பார்க்காதவங்களை பத்தி இப்படி பேசறோமேன்னு ஒரு பேஸிக் சென்ஸ் இல்லாத குடும்பமா இருக்கே? என்ன மனுஷங்க?…” என்னும் பொழுதே கண்கள் சொருக ஆரம்பித்து பலமாய் மூச்சு வாங்கியது.
“பூமி, இன்ஹெல்லர் கொண்டுவா…” என அபிராமி சொல்லவும் இந்துவும் சென்று எடுத்து வந்தாள்.
முதலுதவி செய்யப்பட்டு தயாளனை அறைக்கு அழைத்து செல்ல அதற்குள் அருகிருந்த மருத்துவரும் வந்துவிட்டார்.
தற்செயலாக திரவியம் போன் செய்திருக்க அழுதுகொண்டே பூமி தயாளனுக்கு உடல்நிலை சரியில்லை என்றும், பிரச்சனை என்றும் சொல்லியிருக்க அவன் கிளம்பியிருந்தான் அங்கிருந்து யாரிடமும் சொல்லாமல்.
ஆதவனிடம் பேசும் பொழுதே வந்துகொண்டே தான் பேசிக்கொண்டிருக்க அவனிடமுமே சொல்லவில்லை தான் வருவதை பற்றி.
பிரச்சனை என்று கேட்ட பின்பும், அதனால் தான் தந்தைக்கு முடியாமல் போயிருக்கும் என்று அவனால் இருக்க முடியவில்லை.
திரவியத்தின் ஜீப் சத்தத்திலேயே அவர்கள் அவன் வந்துவிட்டான் என புரிந்துகொள்ள வேக நடையிட்டு உள்ளே வந்தவன் அனைவரையும் பார்த்துவிட்டு தந்தையின் அறைக்குள் தான் சென்றான்.
மருந்தின் உபயத்தால் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார் தயாளன். அருகே பூமிகா தான் அமர்ந்திருந்தாள்.
“எப்படி இருக்காங்க பூமி?…” என அமர்ந்துகொண்டவன் தந்தையின் கையை பிடித்துக்கொண்டான்.
“நல்லாயிருக்காங்க ண்ணா. இப்ப ஒருதடவை வந்து டாக்டர் செக் பண்ணினார். பிபி நார்மலுக்கு வந்திருச்சு. பிரச்சனை இல்லை. தூங்கட்டும்ன்னு சொல்லிட்டு போயிருக்காங்க…” என்றாள் அவனிடம்.
வார்த்தைகளை அளந்து அளந்து பேச இரு கைகளாலும் முகத்தை அழுத்தமாய் துடைத்தவன் தலையை கோதி ஆழ்ந்த மூச்சுவிட்டு பூமிகாவை பார்த்து அமர்ந்தான்.
“என்னாச்சு பூமி? என்ன பிரச்சனை?…” என கேட்க தங்கை அரண்டு பார்த்தாள்.
“ம்ஹூம், எதுவுமில்லை…” என்று சொல்ல அவன் பார்த்த ஒற்றை பார்வையில்,
“ஏன் நான் என்ன சாமியாராவா போய்டுவேன்? எப்படியும் கல்யாணம் பண்ணி தானே வைப்பீங்க? உடனே நடக்கனும்ன்ற இந்த தாட் வேண்டாம். நடக்கும் போது தானா நடக்கட்டும்…” என்றான் திரவியம்.
“அண்ணா டீ…” என்று இந்து கொண்டுவந்து நீட்டவும் எடுத்து குடிக்க ஆரம்பித்தான் மெதுவாக.
“போதும், கொஞ்ச நாளைக்கு இந்த பேச்சை தூக்கி போடுங்க. அப்பறம் பார்க்கலாம்…” என்றான் சாவாகாசமாக.
அபிராமியை பார்த்த தென்னரசு சரி என சொல்லுமாறு தங்கையிடம் பேச அவரும் உடனே சரி என்றார்.
“நம்பற மாதிரியே இல்லை…” என முனங்கியபடி டீ கப்புடன் எழுந்து உள்ளே சென்றுவிட்டான் திரவியம்.