அபிராமி முகத்தில் கொஞ்சமும் இலகு தன்மை இல்லை. மனதெல்லாம் அத்தனை வலித்தது.
திருமண பேச்சு ஆரம்பித்த வேகத்தில் நின்றுவிட்டது கூட ஏற்றுகொள்ளலாம். ஆனால் அதனை கொண்டு தயாளனுக்கு முடியாமல் போனதில் ஆட்டம் கண்டிருந்தது அவரின் மனது.
“என்னம்மா அபி?…” என தென்னரசு கேட்க,
“தெரியலை ண்ணா. அவன் சொல்லிட்டான். ஆனா என்னமோ மனசு சரியா இல்லை…” என சொல்லிக்கொண்டிருக்க மீண்டும் திரவியம் வெளியே வந்தான்.
“ம்மா அப்பா முழிச்சாச்சு…” என்றவன்,
“அழாம பேசுங்க…” என அனுப்பினான்.
சற்று நேரத்தில் தயாளனை அழைத்துக்கொண்டு பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு சென்றனர்.
எல்லா பரிசோதனைகளும் முடிந்து வீடு திரும்ப இரவாகிவிட்டது. ஆராத்தியாவிற்கு ஒருவரும் இதனை தெரிவிக்கவில்லை.
எப்போதும் பேசுபவள் அன்றும் அழைத்திருக்க இந்து தான் பூமிகா அசதியில் தூங்குவதாக சொல்லி சாமாளித்திருந்தாள் ஆராத்தியாவை.
அதன் பின்னர் அவளுக்குமே படிக்க இருக்கிறதென வைத்துவிட்டாள். வைக்கும் முன் பெண் பார்க்க வருவதை பற்றி கேட்க இந்து மறுநாள் சொல்வதாக சொல்லி வைத்துவிட்டாள்.
அதுவே மூச்சு வாங்கியது அவளுக்கு பதில் சொல்லி முடிக்கும் முன். இல்லையென்றால் இங்கே என்னவோ என யோசித்துக்கொண்டே தான் இருப்பாள் என எதையும் சொல்லவில்லை.
அன்று இரவு பூமிகாவுடன் ரகு அங்கேயே தங்கிவிட ஆதவனும், இந்துவும் மட்டும் தங்கள் வீடு வந்தனர்.
தென்னரசுவிற்கும், சீதாவிற்கும் அப்படியே விட்டுச்செல்ல மனதில்லை. தயாளனுடன் பொதுவாக பேசிக்கொண்டிருக்க மற்றவர்கள் உறங்க சென்றதும் பெரியவர்கள் நால்வர் மட்டுமே இருக்க பேச்சு திரவியத்தின் திருமணம் பற்றியே தான் இருந்தது.
அபிராமி, தயாளன் இருவரும் எதிர்பார்ப்பும், யோசனையுமாய் தென்னரசுவை பார்க்க சீதாவால் கண்டுகொள்ள முடியவில்லை.
“என்னம்மா? அண்ணன்கிட்ட எதாச்சும் சொல்லனுமா?…” என தென்னரசுவே கேட்டுவிட்டார்.
விளைவு மறுநாள் திரவியத்திடம் தயாளனே பேச இதனை அவன் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை.
“என்னப்பா? என்ன பேசறீங்க? நீங்க பேசறதை பார்த்தா எனக்கென்னமோ கல்யாணமே நடக்காதுன்னு பயப்படற மாதிரி இருக்கு…” என்று சிரித்துவிட்டான்.
இப்போது தான் உடல்நிலை சரியில்லாமல் தேறி வந்திருக்கிறார். தானும் மனகஷ்டத்தை தரவேண்டாம் என்று பொறுமையாக சிரித்தபடியே பேசினான் திரவியம்.
“நிச்சயமா இது உனக்காக மட்டுமில்லைப்பா. நம்ம தியாவுக்காகவும் தான்…”
“அப்பா நீங்க அதிகமா யோசிக்கறீங்க?…” என்றவனுக்கு உள்ளுக்குள் எழுந்த பெரும் அதிர்வை உணர முடிந்தது.
“இல்ல தீரா. சரியா தான் யோசிச்சேன். முதல்ல நானே வேண்டாம்ன்னு தான் இருந்தேன். ஏனா உன்னை பார்த்தாலே தியா ஓடி ஒளிஞ்சுக்கறா…”
“அவளுக்கு எது புடிக்கும்ன்னு தெரியும். என்ன செஞ்சா சந்தோஷமா இருப்பான்னு தெரியும். எதெல்லாம் அவளோட விருப்பம்ன்னும் தெரியும். இதெல்லாம் ஒரு கல்யாணத்துக்கான பிடித்ததுல வருதுன்னா பிடிக்கும் தான்…” என்றான்.
“தீரா…”
“அப்பா, ப்ளீஸ். அவ நம்ம வீட்டு பொண்ணு. நான் சின்ன வயசுல என்னவோ கோவமா நடந்துக்கிட்டேன். இப்ப வரைக்கும் அவ எப்படி இருக்கா தெரியும்ல. ஆனாலும் நம்ம வீட்டு பொண்ணா எனக்கு எப்பவுமே தியாவை புடிக்கும்…” என்றதும் தயாளன் முகம் தெளிவில்லை.
“பூமியோட வளர்ந்தவ, அவளுக்கு ஒன்னு வாங்கி தியாவுக்கு வாங்காம எப்படின்னு அவளுக்கும் வாங்குவேன். அவ கோபம் இதுலயாச்சும் குறையுதான்னு தான். பூமியை கவனிச்ச மாதிரி தான் தியாவையும் கவனிச்சேன். பார்த்துக்கிட்டேன்…”
“அப்ப என்ன நம்ம பூமி மாதிரி தான் தியாவையும் நினைச்சேன்னு சொல்ல வரியா?…” என்றார் தயாளன் கோபமாக.
“பூமியோட வளர்ந்தான்னா அதுக்குன்னு பூமி மாதிரியே நினைச்சேன்னு அர்த்தமா? இப்ப என்ன உங்களுக்கு?…” என்றான்.
“நீ சொல்லு. தெளிவா சொல்லு. பேசிடலாமா?…” என்றார்.
“அவசரப்படறீங்கப்பா…” என்றதும் அவர் முகம் சோர்ந்துவிட்டது.
“சரி சரி, அப்படி இருக்காதீங்க. அதான் எல்லாரும் சேர்ந்து முடிவு பண்ணிட்டீங்களே?…” என்றவன்,
“நிச்சயமா தியாவுக்கு புடிக்காது. அவகிட்ட பேசிட்டு எதுவானாலும் முடிவு பண்ணலாம். உங்க விருப்பம் என்னோட சம்மதம்…” என்று சொல்லவும் தான் அவரின் முகமே ஒளிர்ந்தது.
“ஆனா நான் தான் பேசுவேன். எக்ஸாம் முடியட்டும். அப்ப அவ வேண்டாம்ன்னு சொன்னா வேண்டாம் தான். அதுக்கப்பறம் அவளை கட்டாயப்படுத்த கூடாது…” என்றிருந்தான் திரவியம் உறுதியாக.
வீட்டிலும் அனைவருக்குமே இவ்விஷயம் சொல்லப்பட ஆனந்த கூத்தாடாத குறை தான். அத்தனை சந்தோஷம் அனைவருக்குமே.
மறுநாள் பூமிக்கு அழைத்தவள் எப்போதும் பெண் பார்க்க என கேட்டு பூமிகாவை நச்சரிக்க திருமணம் நின்றுவிட்டதை மட்டும் கூறினாள் பூமிகா.
“விடுங்கண்ணி, அதான் உங்க வாய்ஸ் டல்லா இருக்கா?…” என கேட்க,
“ஆமா, ஆமா…” என சாமளித்தாள் பூமிகா.
இதுவரை இருவரிடையே எதுவும் மறைத்து பழக்கமிருந்ததில்லை என்பதால் ஆராத்தியாவிடம் விஷயத்தை மறைத்து பேசவே கடினமாக இருந்தது பூமிகாவிற்கு.
ஆராத்தியா பூமிகாவின் சோர்வான பேச்சிலும், வார்த்தைகள் தடுமாறி வருவதையும் வைத்து திருமண பேச்சு நின்றதனால் உள்ள கவலை என நினைத்தாள்.
“அட இப்ப என்னாகிடுச்சு? வேற பொண்ணா கிடைக்காது. அதெல்லாம் பார்த்துக்கலாம். உங்கண்ணன் வொய்பா வர போற பொண்ணு கொஞ்ச நாள் ப்ரீயா தான் இருக்கட்டுமே?…” என கிண்டலாய் பேசினாள் ஆராத்தியா.
“அந்த பொண்ணே நீ தான்னு பைனல் எக்ஸாம் வரை இவகிட்ட நான் வாயை திறக்காம இருக்கனும் இந்துக்கா…” என்று இந்துவிடம் புலம்பிக்கொண்டிருந்தாள் பூமிகா.