ஷேஷா வீட்டிற்கு வரும் பொழுது வழக்கம் போல அறையின் சிட்டவுட்டில் தான் அமர்ந்திருந்தாள் ஷக்தி. (இனி ஷக்தி ஷக்தியாகவே)
ஒன்று லாபி, இல்லை என்றால் அறையோடு ஒட்டி இருக்கும் சிட்டவுட். வேறு எங்கும் அவள் செல்வதில்லை.
ஷேஷாவும் அவளை வெளியே வர சொல்லி வற்புறுத்தவில்லை. முடிந்தளவு உணவு நேரம் அவளுடன் இருக்க முயன்றான்.
ஓரளவு இருக்கவும் செய்தான். பேச்சுக்கள் கூட விரல் விட்டு எண்ணக்கூடிய விதத்தில் தான் இருந்தது.
இன்னும் ஷக்தி அவளின் நிலைப்பாட்டில் இருந்து மாறுவதாக இல்லை. தன்னை இங்கிருந்து அனுப்புமாறு கேட்டுக்கொண்டிருப்பதிலும் மாற்றமில்லை.
திருமணம் முடிந்த முதல் நாள் போலவே தான் அனுதினமும் உறக்கத்தில் எழுவதும், பின் ஏதோ கொஞ்சம் தூங்குவதுமாகவே இருந்தாள்.
சின்ன சத்தம் கேட்டால் கூட ஜன்னல் பக்கம் சென்று யாரேனும் பார்க்கிறார்களா என விழிகளால் துழாவுவதை ஷேஷா மனதில் எழும்பும் வலியுடன் தான் கடந்துவருகிறான்.
அன்றும் அவளை தேடி அவன் வந்த நேரம் அப்போதுதான் இரவு உணவும் வந்திருக்க ஷேஷாவும் உள்ளே வர இவை எதையும் உணராதவளாக அமர்ந்திருந்தாள்.
“ஷக்தி…” என்றவனது அழைப்பு அவளை அணுகினாலும் தலையை திருப்பவில்லை.
அன்று காலை அத்தனை பேசியிருந்தாள் அவனை. அங்கிருக்க முடியாதென்று சொல்லி.
“ஷக்தி உன்னை தான்…” என அருகே வந்து நின்றவனை ஏறிட்டும் பார்க்காமல்,
“என்னால இப்படியே ரூம்க்குள்ள இருக்க முடியலை ஷேஷா. ப்ளீஸ். புரிஞ்சுக்கோங்க…” என்றாள் அப்போதும்.
“நான் காலையில சொன்னது தான் இப்பவும். நீ இந்த டாப்பிக் எடுத்தா அதிகபட்சம் நான் என்னோட ஹஸ்பண்ட் அப்படின்ற உரிமையை நிலைநாட்டனும்னு யோசிக்கனும். இல்லை குறைஞ்சபட்சம் உனக்கு பதில் சொல்லாம இருக்கனும்…”
காலை இதை சொல்லும் போதே ஷக்திக்கு உதறல் தான். ‘என்ன இவன் பேசுகிறான்?’ என மிரட்சியுடன் தான் பார்த்தாள்.
இப்போது அவனை பார்க்கவும் தோன்றாது வெறுமனே கண்ணை மூடி இருக்க ஷேஷா அவளின் கைபிடித்து எழுப்பி உள்ளே கூட்டிக்கொண்டு வந்தான்.
எப்போதும் போல அறையில் மெல்லிய வெளிச்சம் மட்டுமே இருக்க திரைகளை எல்லாம் இழுத்து மூடியவனாக விளக்குகளை எல்லாம் போட்டு அறையை பளீரிடசெய்தான்.
“இவ்வளோ வெளிச்சம் எனக்கு வேண்டாம்…” என முகத்தை மூடிக்கொண்டாள் ஷக்தி.
“சாப்பிட்டு லைட் ஆஃப் பண்ணிக்கலாம். வா…” என்றவன் தானும் இரவு உடைக்கு மாறி வந்தான்.
“நீ செர்வ் பன்றியா ஷக்தி?…” என கேட்டதும் மறுக்க தோன்றாமல் ஷக்தியே அவனுக்கு ப்ளேட்டில் எடுத்து வைத்தாள்.
“உனக்கு வச்சுக்கோ. சாப்பிட்டு பேசனும்…” என சொல்ல என்னவாக இருக்கும் என்ற யோசனையில் மறுக்காமல் வைத்துக்கொண்டாள்.
மிக மிக குறைவான அளவான உணவு தான். அவனும் இங்கே வந்ததில் இருந்து கவனித்துகொண்டு தான் இருக்கிறான்.
சுவை கூடிய அவளுக்கு பிடித்தமான உணவாக இருந்தாலும் சாப்பிடும் அளவை விட கால் வயிறு இல்லை அரை வயிற்றுக்கு உண்ணுவதை போலவே தான் அவள் வழக்கமாக்கி இருந்தாள்.
இன்னும் எடுத்துக்கொள் என்றால் இதையும் குறைத்துவிடுவாளோ என்று ஷேஷாவும் வாயை திறப்பதில்லை.
ஆனால் பேச்சின் இடையே கொஞ்சம் தன்னால் முடிந்தளவு இரண்டுகவளம் அளவிற்கேனும் தானே அவளுக்கும் வைத்து தனக்கும் வைத்துவிடுவான்.
உணவின் அருமையும், பசியின் கொடுமையும் கடந்த ஐந்து வருடங்களில் அறிந்திருந்தவள் அதை வீணாக்க மனமின்றி விருப்பமில்லாமல் விழுங்கி வைப்பாள்.
அன்றும் இரண்டாம் தடவை வைக்கும் போது ஷேஷா ஷக்திக்கு வைத்து பின் தனக்கு போட்டுக்கொள்ள,
“எனக்கு போதும்ன்ற அளவுக்கு நான் வச்சுப்பேன் தானே? வேணும்னா எடுத்துக்கமாட்டேனா? என்னால சாப்பிட முடியலை…” என்றாள் கோபத்துடன்.
“ஓஹ், நான் எனக்கு வைக்கறப்போ உனக்கும் சேர்த்து வச்சுட்டேன். கொஞ்சம் தானே. பேசிட்டே சாப்பிடு…” என சாதாரணமாக சொல்ல ஷக்திக்கும் வேறு வழி இருக்கவில்லை.
இங்கு வந்த இத்தனை நாட்களில் தன்னில் ஏற்படும் மாற்றங்கள் அவள் விரும்பாதது.
மனதளவிலும் சரி, உடலளவிலும் சரி அந்த மாற்றங்களை அறவே வெறுத்தாள். பழைய ஷக்தியாக மாற அவள் ஒருபோதும் தயாராக இல்லை.
இந்த கவனிப்பு, வெயில் படாத ஆடம்பர அறை, நேரத்திற்கு சத்தான ஆகாரங்கள் என ஒவ்வொன்று அவளை பழைய ஷக்தியாக மீட்டுவிடுமோ பயந்துகொண்டே இருந்தாள்.
ஆனால் இன்னும் இரண்டு நாளில் அவள் ஷக்தியாக பொறுப்பேற்க செல்ல வேண்டுமே. அதை இன்னும் ஷேஷா அவளிடத்தில் சொல்லவில்லை.
சாப்பிட்டு முடித்து பேசலாம் என நினைத்திருக்க இங்கே அதற்குள்ளும் முறைத்து நிற்கிறாளே?
கையை கழுவிவிட்டு வந்து அமர்ந்தவன் ஷக்தியை அழைத்தான். மீண்டும் அவள் அதே இடத்தில் சென்று அமர்ந்திருக்க,
“உள்ள வா ஷக்தி….” என்றான்.
“இல்லை. எனக்கு தூக்கம் வரலை. நீங்க தூங்குங்க…”
“உன்னை தூங்கறதுக்காக கூப்பிடலை. உன்கூட முக்கியமான விஷயம் பேசனும்…” என சொல்லியவன் குரலின் மாறுபாட்டில் அவனை திரும்பி பார்த்தாள்.
தன்னை சென்னை அழைத்து வரும் போதிருந்த ஒருவித ஆளுமையுடன் கூடிய கடுமை.
மீண்டும் அந்த கடுமையும், முகமும் அடுத்து என்னவோ என்று ஷக்திக்கு தோன்றவைத்தது.
“இந்த தடவை நீங்க பேசறதை நான் கேட்கமாட்டேன்…” என்றாள் முன்கூட்டியே எச்சரிக்கையுடன்.
பதில் சொல்லாமல் ஷேஷா திரும்பி படுக்கைக்கு செல்ல ஷக்திக்கு அதற்கு மேல் அங்கே அமர்ந்திருக்க முடியவில்லை.
“இந்த லைட்ஸ் எல்லாம் ஆஃப் பண்ணுங்க. அப்பத்தான் உள்ள வருவேன்…” என நின்ற இடத்தில் இருந்தே சொல்ல அடுத்த நொடி ரிமோட்டால் விளக்குகள் ஒவ்வொன்றாக அணைக்கப்பட்டது.
உள்ளே வந்தவள் கதவை சாற்றிவிட்டு அவனுக்கெதிரே வந்து அமர்ந்தாள். டேபிள் லேம்ப் மட்டும் எரிந்துகொண்டிருக்க அதற்கு மேல் உள்ள விளக்கை மட்டும் ஒளிரவிட்டான்.
அண்ணார்ந்து பார்த்தவள் பதில் சொல்லும் முன்னர் ஒரு பைலை நீட்ட எச்சிலை விழுங்கியபடி அவனிடமிருந்து அதனை வாங்கினாள்.
“பொறுமையா படிச்சுட்டு லாஸ்ட்ல பேசு…” என சொல்லி சாய்ந்து அமர்ந்துகொண்டவன் அவளின் முகத்தில் வந்துபோகும் உணர்வுகளை படிக்க துவங்கினான்.
ஒவ்வொரு பேப்பர்களாக மாற்றிக்கொண்டே வந்தவள் கடைசியில் அவனை எரித்துவிடுவதை போல பார்க்க அமைதியுடன் அதனை எதிர்கொண்டான்.
“நாளை மறுநாள் எழிலுக்கு செக். வந்து சைன் போட்டு எல்லாம் உங்கிட்ட ஹேண்டோவர் பண்ணனும். நீயும் சைன் பண்ண ரெடியா இரு. உன்னோட பொறுப்பையும் ஏத்துக்க தயாரா இரு…” என்றான் ஷேஷா.
“நான் தான் இது எதுவுமே வேண்டாம்ன்னு சொன்னேன்ல. திரும்ப திரும்ப ஏன் இதுக்குள்ளையே என்னை கொண்டு வரீங்க?…” என்றவளின் சீற்றத்தை அந்த தாள்களில் காண்பித்தாள்.
விசிறியடிக்கப்பட்ட அந்த தாள்கள் அறை முழுவதும் சுழன்று பறக்க ஷேஷாவின் முகத்தில் எந்தவித சலனமும் இல்லை.
“இந்த உரிமை உறவு எதுவும் வேண்டாம்ன்னு தானே ஒதுங்கி இருந்தேன். என் உழைப்பு. என் சம்பாத்தியம்ன்னு நிம்மதியா இருந்தேன். அப்படியே இருந்திருப்பேன். இப்படி என்னை கூட்டிட்டு வந்து திரும்ப அந்த சாக்கடைக்குள்ளையே தள்ள பார்க்கறீங்க?…” என்றாள்.
ஷக்தியின் ஆக்ரோஷ குரல் அந்த அறை முழுவதும் சப்தத்துடன் ஆவேசம் குறையாமல் எதிரொலித்தது.
“இதை ஒரு பிச்சையா தான் அவங்களுக்கு நான் போட்டேன். என்னால இதை மீட்க முடியாதுன்னா நினைச்சீங்க? ஆனா அது எதுவும் வேண்டாம்ன்னு தானே நான் போனேன்…”
“ஏன் நான் அன்னைக்கே உங்களை வந்து பார்த்திருந்தா எனக்கு நீங்க எனக்கு உதவியிருக்கமாட்டீங்களா? கண்டிப்பா செஞ்சிருப்பீங்க. ஆனா நான் ஏன் பண்ணலை? அது ஒரு சாக்கடை. மனுஷங்க உயிரையும், உணர்வையும் பார்க்காம வெறும் சதையை மட்டுமே பார்க்கற சாக்கடை…”
அவள் சொல்லவும் திடுக்கிட்ட மனதை அடக்கியவனாக அசையாமல் அமர்ந்திருந்தான் ஷேஷா.
இப்போது தான் லேசாக வெடிக்க ஆரம்பித்திருக்கிறாள். பழைய ஷக்தி கொஞ்சம் கொஞ்சமாக வெளி வரும் இந்த நேரத்தில் தன் அனுசரணையும் ஆறுதலும் மீண்டும் அவளை நக்ஷத்ராவிற்குள் சுருண்டுக்கொள்ள பார்க்கும்.
“அந்த குடும்பம் பெருமையா சொல்லிப்பாங்க முதல் தாரம். முறையா வந்தவங்கன்னு. ஆனா அசிங்கம். அதை சொல்லி அதுக்கு பின்னால ஒளிஞ்சுட்டு அவங்க பன்ற அராஜகம் இருக்கே? உரிமையை மீட்டறேன்னு உடைகளை கூட விட்டுவைக்காத பிணம் திண்ணி கழுகு கூட்டங்கள்…”
பேசும் போதே கைக்கு கிடைத்த தாள்களை எல்லாம் துண்டுதுண்டாய் கிழித்தெறிந்து அவளின் கோபத்தை வெளிப்படுத்திக்கொண்டு இருந்தாள்.
“என்னோட அப்பாவும் அம்மாவும் அவங்களாவா விரும்பினாங்க, பழகினாங்க, சேர்ந்தாங்க. இல்லையே. விதி, சேர்ந்துட்டாங்க. அதுக்கு நான் என்ன பண்ணுவேன்? எங்கப்பாவுக்கு தெரியாதா என்ன பன்றாங்கன்னு? இல்லை அப்பாவை சேர்ந்தவங்களுக்கு முதல்லையே தெரியாதா?…”
“எல்லாம் தெரியும். தெரிஞ்சும் ஏன் முதல்லையே தடுக்கலை. இல்லை எங்கம்மாவை பேசி அப்பாவை விட்டு விலக்கி வச்சிருந்திருக்கலாமே? அதுக்கு துணிச்சல் இல்லை. என்னதான் நான் எப்படி பிறந்திருந்தாலும் அவர் தானே எனக்கு அப்பா? அதை அவருமே மறுக்கலையே?…”